தணலாய் தகித்திருந்தவன் இன்னும் ஆக்ரோஷமானான். தெருவுக்கு போகும் பாதையை மறித்து வாகனத்தை குறுக்காக நிறுத்தி கீழே இறங்க பைரவி கேள்வி கேட்கும் முன்பு ஒரு பெரியவர்,
“தம்பி வண்டிய ஓரமா நிறுத்து ப்பா, போக வர எடோ வேணாமா?” என்றார்.
அவரை பார்த்து சிறிதும் அசாராதவன், “அந்த மேடையை எடு நான் என் வீட்டுல நிறுத்திக்கிறேன்”
நிற்காமல் கூட்டத்தை கடந்து முன்னேறிட அவரிடம் தான் பார்த்துக்கொள்வதாக கூறி தேவாவை பின் தொடர்ந்து சென்றாள்.
பைரவி கொட்டத்தை கடந்து செல்லும் முன்பே அவன் வீட்டினை அடைந்திருந்தான் தன்னுடைய வேக எட்டில்.
“இவளுக்கு கிடைச்ச வாழ்க்கையை பாரு, ஆனா என்ன பண்றது அதையும் ஒழுங்கா வாழ தெரியல போல”
பைரவி காது படவே பேசியவர் அவள் கையை பிடித்து நிறுத்தினார், “என்ன பைரவி உன்னையும் கல்யாணம் பண்ணிக்க ஒரு பையன் கெடைச்சிருக்கான் அவனையும் நீ சரியா பாத்துக்குறதில்ல போல?” என்றார் அக்கறையாக பேசுவது போல்.
முன்னர் இருந்த பைரவியாக இருந்தால் தலையை கவிழ்த்து அழுகையோடு இல்லம் திரும்பியிருப்பாள், இப்பொழுது ஏதோ ஒரு உத்வேகம் பிறந்தது போல் நிமிர்ந்து நின்றாள்,
“வாங்களேன் எங்க வீட்டுக்கு, அவரை நான் எப்படி கவனிக்கிறேன்னு கண்ணாளையே பாத்து தெரிஞ்சுக்கலாம்” அசையாது நின்று கேட்டவள் துணிவு அவரை வாயடைக்க வைத்தது.
“முப்பது வருசமா இங்கன இருக்க உன் வீட்டுக்கே வந்தது இல்லை, இதுல உன் வீட்டுகார வீட்டுக்கு நான் என்னத்த வந்து? என்னமோ போ நல்லா இருந்தா சரி தான்” ஒ
ன்றும் நடவாதது போல் திரும்பி போனவர் இனிமேலும் தன்னை பற்றி தான் பேசுவார் என தெரிந்தும் அமைதியாக வீட்டை நோக்கி நடந்தாள் பைரவி.
கணவன் அர்ஜுனன் வீட்டிற்கு சென்றிருக்க அன்னையிடம் வருகையை காட்டி விட்டு பிறகு அங்கு செல்லலாம் என உள்ளே வர அன்னை கீழ் தளத்தில் இல்லை.
வீடு திறந்திருக்க நிச்சயம் சகோதரனாவது இருப்பான். சிறு சீண்டலோடு அவன் எண்ணத்தையும் கேட்டு நகரலாம் என மாடி ஏரியாவில் செவிகள் கூர்மையாக நின்றன.
“என்னால முடியுமா என்னனு தெரியலடி, ஆனா இது தான் என்னோட வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டு நகரனும். என்னையே நினைச்சிட்டு இருக்காம உனக்கான வாழ்க்கையை பாத்து நீயும் சந்தோசமா இருடி”
வருத்தம் மேலோங்கி சஞ்சலத்தில் ஆடியது அவன் குரல். அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ, “என்னடி நிலா…” என்ற சந்தோஷின் இயலாமை குரலில் பைரவி நெஞ்சே பதைபதைத்தது.
சகோதரன் நெஞ்சத்தினில் இப்படி ஒரு ஆசையா? எதிர் பார்க்கவில்லையே. பெரிய மாமன் மகளை மனதில் நினைத்து சிறிய மாமன் மகளை திருமணம் செய்வதா?
சகோதரன் பேச்சிலே சில நாள் பழக்கம் இல்லை இது பல நாள் பழக்கம் போல் தெரிகிறதே. எனக்காக தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்தானா? அவனது முக வாதத்திற்கான காரணமும் கூட இது தானா?
மேலே சென்று சகோதரனை சங்கடத்தில் ஆழ்த்திட விரும்பவில்லை. ஏறிய வேகத்திலே கீழே இறங்கியவளை வாசலில் நின்ற தேவா அழைத்தான்.
“இங்க என்ன பண்ற? அங்க உன்ன எல்லாரும் தேடுறாங்க”
மனைவியிடம் கடுகடுத்தவன் வீட்டினுள் பார்த்து, “டேய் சந்தோஷ் எங்கடா இருக்க?” தேவா கொடுத்த சத்தத்தில் தடதடக்க கீழே வந்த சகோதரன் முகம் வெகுவாய் வாடியிருந்தது.
“யார்ட்ட பேசிட்டு இருந்த எம்புட்டு நேரம் போன் அடிச்சிட்டே இருக்க நானு?”
“இல்ல தேவா ஒரு முக்கியமான போன்…”
சந்தோஷ் கனிவாக பதில் கொடுத்து அவனை உள்ளே அழைக்க, “அப்றம் வர்றேன், உன்ன எல்லாரும் கூட்டியாரசொன்னாங்க. வா போவோ” என கையேடு அவனை அழைத்து செல்ல சகோதரனை ஆற்றாமையோடு பார்த்தாள் பைரவி.
தேவா இருக்கும் கோவத்திற்கு சந்தோஷை தடுத்து நிறுத்தியும் பேச முடியாதே. இன்று தான் வேண்டாத இந்த கோவம் எல்லாம் வர வேண்டுமா இவனுக்கு?
நாய்க்குட்டியை போல் செய்வதறியாமல் அவர்கள் பின்னாலே அங்கு சென்றிருக்க ஏற்கனவே இருவரின் திருமண பேச்சும் துவங்கியிருந்தது தேவா தந்தை ராஜரத்தினம் மூலம்.
“ஏற்கனவே பேசுனது தான் ப்பா, சந்தோஷ்க்கும் இஷாக்கும் கல்யாண பேச்சு எடுக்கலாம்னு தான் வந்தோம்”
ராஜரத்தினம் கூறவும் சகோதரனை பார்க்க உணர்ச்சிகளை துடைத்து இருந்தது அவன் முகம்.
அவனை பார்த்து பைரவி உதயநிலாவை தேட சற்று வெளிறிய முகம், சில நொடிகளுக்கு முன்னர் நீரால் கழுவிய முகம் என அமைதியாக படி இறங்கி வந்து நின்றாள்.
“சாப்பிட வா நிலா?” காயத்திரி மகளிடம் கேள்வி கேட்டு வர வேண்டாமென தலை அசைத்து ஓரமாய் சென்று நின்றுகொண்டாள்.
“நாங்களே பேசலாம்னு தான் ரத்தினம் நினைச்சோம், முறையா நாங்க பேசுறது தானே நல்லது” என சீதாவும் முகம் கொள்ளா புன்னகையோடு வினவினார்.
அவருக்கு இரு குழந்தைகளின் வாழ்க்கையும் நல்லவிதமாக அமைய போகிறது என்கிற ஆனந்தம்.
“யார் பேசுனா என்ன மதினி வந்தாச்சு நம்ம வீட்டுல வச்சே கல்யாண பேச ஆரமிச்சிடலாம்”
மனைவியிடம் நாள்காட்டியை வாங்கி பார்த்த அர்ஜுனனும், “அம்மா ய்யா நாளும் நல்ல நாளா தான் இருக்கு” என்றார் வீட்டில் இன்னொரு சுபநிகழ்ச்சி நடக்க போகும் அதே ஆனந்தத்தில்.
“நல்ல விசியம் நடக்கமுன்ன நல்ல விசியம் கேட்டு ஆரமிக்கலாமே” இடையில் வந்து நின்று விக்னேஷ் தடுத்தான்.
நல்ல காரியம் நடக்கும் பொழுது மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்க விரும்பாதவர்கள் உண்டோ… “என்னையா?” என ஒருவாறு செய்தியை யூகித்து தான் பார்வதி ஆர்வமாய் கேட்டார்.
“இன்னைக்கு காலைல தான் பாத்தோம் அய்யம்மா அம்பது நாள் கணக்கு வருது” என வெட்கத்தோடு அவரிடம் மெதுவாய் கூற அவனுக்கு அருகில் நின்ற மித்ராவிற்கு அளவுகடந்த மகிழக்கோடு வெட்கம் வந்தது.
“ஐயோ நெசமாவா ய்யா?”
மகிழ்ச்சி பொங்க சத்தமாக நற்செய்தியை கூறி வீட்டினர் அனைவருக்கும் இனிப்பை கொடுக்க சந்தோஷ், நிலா, பைரவி முகத்தில் மட்டும் வருத்தம் மேலோங்கி நின்றது.
அனைவரும் ஆரவாரத்தில் இருக்க பெயருக்காக சந்தோஷ் கூட விக்னேஷிடம் இரண்டு வார்த்தைகளை வைத்தான்.
ஆனால் நிலா தான் கடினப்பட்டு கண்ணீரை துடைத்து துடைத்து சிரிக்க முயல்வது பைரவிக்கு பார்க்கவே மனம் கனத்தது.
கண் முன்னே ஒரு காதல் ஜோடி வாழ்க்கையில் அடுத்த அழகான கட்டத்திற்கு சென்றிருக்க, அதே காதலை கொண்டுள்ள தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என அவள் நிச்சயம் மனம் நொந்து அழுத்திருப்பாள் அல்லவா?
தன்னால் தானே என்ற வருத்தம், குற்றவுணர்ச்சி இணைந்து பைரவியை ஆட்டிப்படைக்க எந்த கொண்டாட்டத்தில் பைரவி இணைந்துகொள்ளாமல் போனது அங்கிருந்த எவரையும் சந்தேப்பட வைக்கவில்லை.
இன்னும் அவள் பழையபடி மாறவில்லை, நேரம் தேவைப்பட்டிருக்கும் என நினைத்துக்கொண்டனர்.
ஆனால் அவளுள் பெரிய யுத்தமே நிகழ்கின்றதென எவரும் கவனிக்காமல் விட்டனர். தேவா கூட சற்று கோவத்தை குறைத்து இலகுவாய் விக்னேஷை கேலி செய்து வந்தான்.
“மனசுக்கு நிறைவா இருக்கு ப்பா. அதே சந்தோஷத்தோட பூ வக்கிரத்துக்கான நல்ல நாளையும் நீங்களே பாத்து சொல்லிடுங்க”
ராஜரத்தினம் தந்தையிடம் வந்து நிற்க, ஆனந்தம் பொங்க அடுத்து வரவிருக்கும் நல்ல நாளினை பார்க்க துவங்கினார் பெரியவர்.
மகன் சரி எங்க அடுத்து மருமகனை பார்த்தார், “நீங்க சொல்றது தான் மாமா” என்றார் கண்ணன் மனைவியை பார்த்துவிட்டு.
சீதாவின் மாமனார் மாமியார் சில ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியிருக்க பெரியவராய் கண்ணன் கூட மாமனார் அர்ஜுனனிடம் தான் வந்து நிற்பார் ஆலோசனைகளை கேட்க.
சகோதரன் முகம் சூம்பி போய் இறுக்கமாய் மாறி நிற்க, வெட்கத்தோடு கணவன் அருகில் நின்ற இஷாவின் நிலையில் பைரவியை பாதிக்க விறுவிறுவென உதயநிலா அருகே சென்று நின்றாள்.
பைரவியை பார்த்து வரவழைத்த புன்னகையோடு சோபாவில் இடம் கொடுத்து அமர, “அண்ணாவை எவ்ளோ நாளா லவ் பண்ற நிலா?” என்றான் ஒரே போடாக.
துரிதமாக செயல்பட வேண்டிய நிலை இது என புரிந்தது பெண்ணுக்கு.
“பைரவி…” திடீர் தாக்குதலை எதிர்பாராமல் விழித்தாள் நிலா.
“பதில் மட்டும் தான் நிலா வேணும்”
“ஆறு வருஷம்” உடைந்தது பைரவி மனம், ஆறு வருட காதலை சகோதரன் எனக்காக ஒரே நொடியில் தூக்கி எரிந்து வந்து நிற்கிறானா?
எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவோடு நகர போக அவள் கை பிடித்து தடுத்து நிறுத்தினாள் உதயநிலா, “வேணாம் பைரவி, உன் அண்ணன் சத்தியமும் உன் வாழ்க்கையும் யோசிச்சு நாங்க எடுத்த முடிவு இது”
அவள் பிடியை தளர்த்திவிட்டு, “ஆனா நான் யாருக்கும் சத்தியம் பண்ணி குடுக்கலையே”
பிடிவாதமாக அர்ஜுனன் அருகே வந்தவளை கவனித்தனர் யோசனையாக பார்க்க, “இந்த கல்யாணம் வேணாம் தாத்தா” என்றாள் உறுதியான குரலில்.
அர்ஜுனன் அருகே அவள் சென்று நின்றிருக்க தங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு இது கேட்கவில்லை.
ஆனால் மனைவியின் முகத்தை பார்த்த தேவா யோசனையோடு அருகே செல்ல அர்ஜுனன் முகத்தில் சோதனையின் சாயல்.
“பாப்பா என்னடா பேசுற நீ?” என்றார் அர்ஜுனன் அருகே இருந்த பார்வதி பயத்தோடு.
ஒன்றுபட்ட குடும்பம் எந்த காரணத்திற்கொண்டும் பிரிந்திட கூடாதென்ற பயம் அவரிடத்தில்.
“ஆமா என்னோட அண்ணனுக்கு இஷா வேணாம் ஆச்சி”
அதை கேட்ட தேவா கோவத்தில் கத்தியேவிட்டான், “என்னடி பேசுற நீ?” என்று.
தேவாவின் குரலில் அனைவரும் இவர்களை பார்க்க பதறிய சீதா மகளை தான் அதட்டினார், “பைரவி என்ன சொன்ன தேவாவை?” என்று.
“ம்மா நான் தாத்தாகிட்ட தான் ம்மா பேசுறேன்” கணவனுக்கும் சேர்ந்தே அந்த பதில் வர இருவரையும் உதாசீனம் செய்து மீண்டும் அர்ஜுனனை பார்த்தாள்.
“ப்ளீஸ் தாத்தா, இந்த பேச்சு இதோட நிக்கிறது தான் நல்லது” என்றாள் இன்னும் தீவிரமாக.
“ஏன் ம்மா, இதெல்லாம் முன்னாடியே பேசி வச்சது தான?” பார்வதி பேதியை சமாதானம் செய்யும் நோக்கோடு பேசினார்.
“பேசுனது தப்பு ஆச்சி, அண்ணா மனசுல இஷா இல்ல…” பைரவி பேசும் முன்பே அவள் கையை பற்றி தன்னை பார்க்கும்படி திருப்பி நிறுத்தினான்,
“என்ன பேசுனது தப்பு? உன் அண்ணனுக்கு என் தங்கச்சி கூட பேசுனதா இல்ல எனக்கு உன்கூட பேசுனதா?”
அவன் பேச்சில் திடுக்கிட்ட பைரவி நிதானித்து, “நான் இங்க என் அண்ணனை கல்யாணத்தை பத்தி மட்டும் தான் பேச வந்துருக்கேன். வேற எதையும் இங்க பேச வேண்டாம்” என்றாள் அழுத்தமாக.
“அதே உன் அண்ணன் கல்யாணம் மூலியமா தான் மா உன் கல்யாணமே நடந்தது” வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நாயகி ஆற்றமாட்டாமல் வந்து மருமகளை திருத்தினார்.
“அது நடந்துடுச்சே அத்தை, நடக்கலைனா கூட இந்நேரம் ரெண்டையும் நிறுத்தியிருக்கலாம்” பைரவி பேச முதலில் முள் நெஞ்சுக்குள் பாய்ந்தது தேவாவிற்கு தான்.
ஆனால் ஏற்கனவே அவனுக்கிருந்த கோவம், இப்பொழுது மனைவி பேசிய கோவம் என ஆசையை மறந்து சினமே தலை ஓங்கி நின்றது.
“பாத்தியாடா உன் அத்தை மகளை, கல்யாணம் ஆனதும் இந்த பேச்சு அவசியம் தானா?” என்றார் மகனிடம் ஏறிக்கொண்டு.