காலை சீக்கிரமாகவே விழிப்பு தட்டிய பைரவி எழுந்து செல்ல மனமே இன்றி படுத்துக்கிடக்க அவள் கணவன் அவளை அணைப்பதற்கு பதிலாக தலையணையை இறுக்கமாக பற்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
வலுவான அவன் தேகத்தையும், உறக்கத்திலும் இளக்கம் இல்லாமல் வீம்பாக உறங்கும் அவன் முகத்தையும் ஆசையாக அளந்தவள் தலையணையை அவனிடமிருந்து பிரித்து அது இருந்த இடத்தை தான் ஆக்ரமித்துக்கொண்டாள்.
தலையணை சுகத்தை விட பெண் மேனி உஷ்ணத்தை கூட்டும் அல்லவா? பஞ்சு உடலின் வித்யாசம் தேவாவை கண்கள் லேசாக திறக்க வைக்க, பைரவிக்கு பின்னாலிருந்த மணியை பார்த்தான்.
ஐந்து கூட ஆகவில்லை. தூக்க கலகத்தோடு அவளை சந்தேகமாய் பார்த்து, “தூங்கு சக்கரை” என மெதுவாக உறங்க முற்பட்டான்.
“ஏன் உங்களுக்கு கை எல்லாம் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு?”
“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” அவன் துயிலை கலைப்பதற்கு வேண்டும் என்றே காதோரம் பேசினாள்.
மௌனமாக தேவா உறங்க அவன் கன்னத்தை உரசும் சாக்கில் அவள் கைகள் வலிக்காமல் கன்னத்தில் அலைபாய,
ஆசை துளிர்த்து திடுக்கிட்டு விழித்த தேவா மேலும் அவள் கைகளை துளாவ விடாமல் அவள் கையை பிடித்திட, “என்னடி பண்ற?” என்றான் மோகமும் ஆசையுமாக.
வித்யாசம் தெரிந்த அவன் பார்வையில் சிரித்தவள் அவன் கண்களை கை கொண்டு மூடி, “என்ன இது பார்வை மாறுது? கண்ண நோண்டிடுவேன் பாத்துக்கோங்க”
அவள் கையை தட்டிவிட்டு, “என் பொண்டாட்டிய நான் எப்படி வேணாலும் பாப்பேன். உனகென்னடி நோகுது?”
“என்ன மீறி எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிருக்கீங்க நியாபகம் இருக்கா?”
பற்றியிருந்த அவள் உள்ளங்கையில் முத்தமிட்டு, “முத்தமும் பார்வையும் கணக்குல சேராது”
ஆலய மீனாட்சி போல் மீன் விழியால் சிரித்தவளை ஆண் புறா போல் கழுத்தை வளைத்து அவளை மட்டுமே ரசித்தான். உறக்கம் களைத்து சிரிக்கும் அழகை புதுப்பித்த நொடிகள் என்றும் வீழாது.
“இது போங்காட்டம்! ஆம்பளைங்க பேச்சு மாறக்கூடாது” வெண்சோளை தட்டுகளை கொத்தி தின்னும் குருவிகள் சத்தம், சிலிர்த்து நிற்கும் சண்டை சேவல்கள் கூவலும் இருவரின் செவியினை அடையவில்லை.
“ஆம்பள மாற கூடாது, பொம்பள நீ மாறலாம்ல?”
“நாங்க எல்லாம் நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு-னு வளந்தவங்க. உங்க இஷ்டத்துக்கெல்லாம் மாற முடியாது, சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. ஏன் இவ்ளோ ரப்பா இருக்கு உங்க ஸ்கின்?”
அவன் தோலினை தடவியவள் கை அவன் கைகளில் இருக்க, பார்வையோ டீ-ஷர்ட் உள்ளே இருந்த அவன் முடியடர்ந்த மார்பினில் இருந்தது.
அந்த பார்வையினால் சுயமிழந்த சற்று செயலிழக்கட்டுமே என நினைத்தாள் போலும். மீண்டெழுந்தவன்,
“ஆம்பளைங்க ஸ்கின் அப்டி தானே இருக்கும்” என்றான் அந்த அழகு வெண்ணிலாவை ரசித்தபடியே.
“ம்ம்ஹ்ம்ம் அண்ணா ஸ்கின் இப்டி இருக்காது”
“வெயில், மணல், மூட்டை தூக்குறது, கம்பு சுத்துறதுனு எல்லாமே இருக்கலாம்” தன் கையையே ஆராய்ந்து கூறினான்.
“கம்பு சுத்துவீங்களா?” வியப்போடு கேட்டாள்.
“ம்ம்ம் பத்து வயசுல இருந்து கத்துக்குட்டேன். இந்த ஊர்ல ராஜவேந்தன்-னு ஒருத்தர் இருந்தார். தப்பு செஞ்சா அடி பின்னிடுவார்.
அதுக்காகவே யாரும் அதிகமா அவர்கிட்ட கத்துக்க வர மாட்டாங்க. ஆனா அவர் கம்பு சுத்துறத பாத்தே எனக்கு அவர்கிட்ட பழகனும்னு ஆசை. அதான் கத்துக்குட்டேன்”
“அப்போ நீங்க அடி வாங்கிருக்கிங்களா?”
“வாங்காம பின்ன?” இடையில் இருந்த பனியனை சற்று தூக்கி முதுகை காட்டினான்,
“ஒரு கோடு தெரியும் பாரு. பிளஸ் டூ லீவ்ல அங்க போய் பயிற்சி பண்ணிட்டு இருந்தேன். பேச்சு கவனத்துல கம்ப எப்படி பிடிக்கிறேன்னு கவனிக்காம விட்டேன். அவ்ளோ தான். கைல வச்சிருந்த கம்ப வச்சு ஒரே அடி. அன்னைக்கு பெரிய தழும்பா இருந்தது. இப்ப பரவால்ல”
அவனுக்கு வலிக்குமோ என பயத்தோடு அவள் மெருதுவாக நீவ, வெடுக்கென கையை தட்டிவிட்டு, “சும்மா இரு சக்கரை” என்றான் உணர்ச்சிகளை அடக்கிய குரலில்.
அவள் முகம் சென்நிலவாய் மாற, “சரி கெளம்பலாமா அப்பா முன்னாடி போறேன்னு சொன்னாங்க நேத்தே”
இன்று விருதுநகர் சென்று பெண் கேட்கும் படலத்தை துவங்கி வைக்கவே இந்த பயணம். தேவாவிடம் தன்னுடைய கடந்த காலத்தை கூறி ஒரு வாரம் ஆகியிருந்தது.
அன்று கேட்டதோடு சரி அதன் பிறகு தான் அவனிடம் இது போல் ஒன்றை சொல்லாதது போல் இருந்தது அவன் செயல்.
அவள் கடந்த காலத்தை பற்றி கேட்கும் முன்பு எப்படி இருந்தானோ அதே போல் தான் இப்பொழுதும் இருந்தான்.
பரிதாபமான பார்வை, பச்சாதாப பேச்சு என எதுவும் இல்லை. நிம்மதியாக இருந்தது பைரவிக்கு. வீட்டை விட்டு வெளியில் வந்தாலே பரிதாபம், இரக்கம், வெறுப்பு போன்ற பார்வையை மட்டுமே பார்த்து பார்த்து சலித்து போனவளுக்கு ஆசை பார்வை காதலை தந்தது.
அந்த காதலே ஆலகால விஷமுண்ட ஆத்ம மயக்கத்தையும் தந்தது. காத்திருப்பு காதலில் மட்டுமல்ல, புரிதலுக்கும் அழகு என உணர்ந்தவள் உறவினை வலுவாக்க, பட்டுப்போன பாலைவனத்தில் காதல் என்னும் செடியினை ஆழமாய் ஊன்றிட சில காலங்கள் எடுத்துக்கொண்டாள்.
அவன் அன்பின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை, ஏதேனும் ஆசையில் நிகழ்ந்த கூடலாய் தங்கள் வாழ்கை துவங்கி விட கூடாதென சிறு ஐயம் தான்.
“ஏங்க”
“என்னங்க?” அவள் இழுத்த அதே ராகத்தில் பேசி அவளை கேலி செய்தான்.
“எனக்காக அண்ணன் எதுவும் இஷாவ கல்யாணம் பண்ணிக்க சரினு சொன்னாங்களோ?”
தேவா, “இதுல உனக்கு சந்தேகம் வேறயா?”
என்று தேவாவிடமிருந்து விருதுநகர் சென்று சகோதரனின் திருமண பேச்சை எடுக்கலாம் என்ற செய்தி வந்ததோ அன்றிலிருந்து இந்த நெருடல் மனதில் நீங்காமல் நிற்கின்றது.
“அண்ணனுக்கு இதுல விருப்பம் இல்லனா என்னங்க பண்றது?”
“கட்டைய வச்சு அடிச்சாவது தாலி கட்ட வச்சிடலாம்” விளையாட்டாக பேசியவாறே மனைவியின் கூந்தலை வைத்து விளையாடிக்கொண்டிருக்க அவன் கையில் அடித்து முறைத்தாள்.
“நான் சும்மா கேக்கல ஆனந்த். சீரியசா கேக்குறேன்”
“நானும் சீரியஸா தான்டி சொல்றேன். மாட்டேன்னு உன் அண்ணன் சொல்லி தா பாக்கட்டுமே அப்றம் இருக்கு அவனுக்கு கச்சேரி” தாராளமாக கணவனை முறைத்தவள் அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள்.
“விருப்பு வெறுப்பு சொல்றது இல்லை, உன் அண்ணன் வாக்கு குடுத்துருக்கான்… ஆமா நீ ஏன்டி இந்த சிலுப்பு சிலுப்புரவ? உன் அண்ணன் எதுவும் உங்கிட்ட பேசுனானா?” என்றான் கூர்மையான பார்வையோடு.
“இல்ல, எனக்காக அவன் எதுவும் அவசர முடிவு எடுத்திருக்க கூடாதுல ஆனந்த் அதுக்காக சொன்னேன். ஒரு பயம் அவ்ளோ தான். ஒடனே அண்ணன் மேல சந்தேகப்படாதிங்க” என்றாள் தேவாவை சமாதானம் செய்யும் எண்ணத்தோடு.
உண்மையில் அவன் மனதளவில் நினைத்தது தான் சந்தேகமாய் அவனிடம் வந்ததும் கூட. திருமணத்தன்று தான் இருந்த மனநிலையில் அதிகம் யோசிக்க முடியவில்லை.
காரணமே தெரியாமல் பெட்டியில் அடைக்கப்பட்டு ஏறுமதி செய்யும் பொருளை போல தேவாவின் வீடு வந்து சேரும் வரை எந்த விசயமும் பெரிதாக தெரியவில்லை.
வீட்டினரோடு கூட அதிகம் பேசவில்லை. ஆதலால் சகோதரன் மனம் என்ன நிலையில் உள்ளதென்றும் கூட அறிந்திருக்கவில்லை.
அதன் பிறகு பைரவி தேவாவோடு தந்தை இல்லம் சென்ற நேரங்களிலும் கூட அதிகம் தேவா, சந்தோஷ் இரட்டையர்கள் போல் ஒன்றாகவே சுற்றி வருவார்கள். இதில் எங்கு அவனிடம் தனியாக பேசி அவன் மனதை அறிய?
“என்னமோ சொல்ற… சரி நீ கெளம்பிட்டே இரு, நான் மாடுகளை கொளத்து கரைக்கு கூட்டிட்டு பசங்க கிட்ட ட்ரைனிங் பத்தி சொல்லிட்டு வந்துடுறேன்” கையில் ஒரு துண்டோடு வெளியேறினான் தேவா.
வழக்கம் போல் காளைக்கு பயிற்சி கொடுக்க சென்ற இடத்தில் அய்யனாரின் ஆட்கள் வம்பை இழுக்கும் எண்ணத்தோடு பேச்சை வளர்க்க என்றும் இல்லாத திருநாளாய் தேவாவின் சினம் கூரையை தொட்டு எரிமலையாய் வெடிக்க தயாராக நின்றது.
காப்பை முறுக்கி சண்டைக்கு ஓடியவன் தோளை பற்றி நிறுத்தினர் அவனுடைய கூட்டாளிகள் சிலர்.
“மாப்பிள்ளை, தங்கச்சி கல்யாணம் விசயமா நல்ல பேச்சு பேச போற, அடிபட்டு ரத்த காயத்தோட நின்னா நல்லாவா இருக்கும்?”
அவனை அடக்கி அனுப்பிவைக்க வீட்டிற்கு கடுகடுத்த முகத்தோடு வந்தவனை சற்று பயத்தோடு தான் பார்க்க நேர்ந்தது பைரவியால்.
ஐந்தே நிமிடத்தில் தயாராகி வந்தவன் பைரவியை அழைக்காமல் சென்று வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.
பைரவியோ அவனுக்கு தேநீரை தயாரித்து க்ளாசில் ஊற்றிக்கொண்டிருக்க அவர்கள் காரின் ஹாரன் சத்தம் காதை கிழித்தது.
வேகமாக வெளியில் வந்து பார்க்க, “இன்னுமா நீ கெளம்பல?” ஆத்திரத்தோடு கடுகடுத்தான் தேவா.
“டீ ஆத்திருக்கேங்க” என்றாள் பவ்யமாக.
“உன் தலைல ஊத்திக்கோ”
காரினுள் இருந்தே கத்தினான், “இப்ப நீ வரல அப்டியே விட்டுட்டு நான் வாட்டுக்கு கெளம்பிடுவேன்”
தேவாவை ஏகத்திற்கும் முறைத்தவள் டம்ளரை அப்படியே திண்ணையில் வைத்து சோபாவில் இருந்த பையை எடுத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி வர,
“கதவை யாரு உங்கொப்பண்ணா வந்து சாத்துவாரு?” என்ற உயர்ந்த குரல் வந்தது.
ஏதோ கோவத்தில் சொல்கிறான் என புரிந்தவள் அமைதியாக சென்று வாகனத்தில் ஏறிட செல்லும் வழி எல்லாம் பைரவிக்கு மௌனமாய் கழிய, தேவா கைபேசியில் எவருடனோ மாறி மாறி ஒன்றரை மணி நேரம் திட்டிக்கொண்டும், அறிவுரைகள் கூறியும் வந்தான்.
விருதுநகர் வந்ததும், அவர்கள் வீட்டு தெருவின் முனையில் இருந்த காளியம்மன் கோவில் விசேஷத்தால் அன்று வாயிலை அடைத்து மேடை அமைத்திருந்தனர்.