அப்பப்பா! கம்பீரத்தின் அர்த்தம் இவனிடம் வந்து கற்றுக்கொள்ளுங்கள் என செவிப்பறை கிழிய கத்த வேண்டும் போல் இருந்தது.
அவள் மயங்கி நின்றது அவன் கம்பீரத்தினால் மட்டுமல்ல, மனிதரை விட பல மடங்கு உயர்ந்து நிற்கும் அதன் பாசத்தின் மீதும் ஈர்ப்பு உண்டானது.
தேவாவின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் அதனை நெருங்கி முகத்தை இரு கைகள் கொண்டு பற்றி அதன் நெற்றியிலே முட்டி கண்ணீராலே நன்றியை தெரிவித்து நின்றாள்.
தேவாவிற்கு பயம் கலந்த அதிர்ச்சி.
அவளை எதுவும் செய்துவிடுவானோ என்ற பயம், அதே நேரம் தான் அருகில் சென்றால் அமைதியாக இருப்பவன், தேவா அவனை கொஞ்ச நினைத்தால் சிலுப்பிக்கொண்டு செல்பவன் இன்று பைரவியிடம் அப்பாவி குழந்தையாய் நிற்க நம்ப முடியவில்லை.
ஆனால் அவன் செய்ய நினைத்ததை பைரவி செய்ததிலும் மகிழ்ச்சி.
பைரவிக்கு, தன்னுடைய உயிரையே மீட்டி கொடுத்தவனிடம் தன்னை குத்தி கிழித்து கொன்றாலும் பரவாயில்லை என ஆற தழுவி நன்றியை தெரிவிக்க அசையாது நின்றான் காளையன்.
அவனுக்கு தெரியாதா அவளை? பல நாட்கள் நெருங்கி வருபவள் ஆசையாக தன்னை பார்த்து பிறகு பயந்து நடுங்கி புலி வேந்தனை மட்டும் கொஞ்சி உணவூட்டி ஓடுவது அவள் வழக்கம். அவள் கண்களில் இருந்த ஆசை தெரிந்ததோ என்னவோ அசையாது நிமிடங்கள் நின்றுவிட்டான் காளையன்.
ஆசை தீர மௌனமாய் நன்றி உரைத்தவள் தலை உயர்த்தி, “ம்ம்ம் என்ன நீ பெரிய திமிரு புடிச்சவனா? பக்கத்துல வந்தாலே முறைக்கிற?” செல்லமாக கன்னத்தில் இரண்டு அடி கொடுக்க காளையன் எதுவும் எதிர்வினை ஆற்றாவிடினும் பின்னாலிருந்து தேவா குரலை உயர்த்தினான்.
“அடியேய் என் தம்பிய நானே கை நீட்டுனது இல்ல நீ என்ன அடிக்கிற?” மகிழ்ச்சி கூத்தாடியது அவன் குரலில்.
அவளுக்கோ பிள்ளை போல் மாறினான் காளையன், தைரியத்தில் அவனை இன்னும் இறுக்கமாக பற்றி, “ஏன் இவன் முட்டிடுவானோ? என்ன எதுவும் செய்ய மாட்டலடா?” கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள் காளையனுக்கு.
“சக்கரை மச்சானும் முரட்டு பயலா மாறிடவா?”
கன்னத்தை ஆசையாய் தடவிக்கொண்டே அவன் கேட்க பற்கள் தெரிய சத்தம் வராமல் சிரித்தாள் பெண், “வாய்ப்பில்லை ராஜா” என்று.
“தம்பி உங்க அம்மா வந்துருக்காக” என தூரத்திலிருந்து குரல் ஒன்று கேட்க நம்ப முடியாமல் இருவரும் மாறி மாறி பார்த்து வீட்டிற்கு நடந்தனர்.
வாசலிலே கிடந்த மூன்று காலணிகளை பார்த்து பெற்றோரும் சகோதரியும் வந்துவிட்டனர் என புரிந்து பைரவியை பார்த்தான், “அம்மா எதுவும் உன்ன சொல்ல மாட்டாங்க பைரவி. நான் பாத்துக்குறேன் நீ அமைதியா மட்டும் இரு” சகோதரி திருமணத்தை பற்றி தான் பேச வந்துள்ளனரோ என மனைவிக்கு அறிவுரை கொடுத்து அழைத்து சென்றான்.
தாய் தந்தை அன்று நடந்த பிரச்சனைகளுக்கு பிறகு அயன்தென்கரைக்கு வருவதையே நிறுத்தியிருக்க இவ்வளவு அவசரமாக வந்ததன் காரணத்தை கூட அறியாமல் அவர்களை எப்படி அமைதிப்படுத்த வேண்டும் என்பதையும் யோசிச்சு உள்ளே சென்றான்.
அவன் நினைத்தது ஒன்று நடந்தது வேறு, நாயகி மகனின் காயத்தை பார்த்து கண்ணீர் வடித்திட தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை. அவர்கள் குலத்தின் ஒளி அல்லவே அவன்! உயிரே நடுங்கியது. எப்படியேனும் போ என இருந்தவர்களால் அவனுக்கு நடந்த விபத்தை ஜீரணிக்க இயலவில்லை.
தகவல் அறிந்த உடனே ஓடி வந்துவிட்டனர். சகோதரி கூட தேவா தோள் சாய்ந்து பயத்தில் அழுதுவிட்டாள்.
அனைவரையும் ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த மருமகளை முறைத்த நாயகி, “என் புள்ளைய பத்தரமா பாத்துக்கணும்னு தான உன்ன இங்க அனுப்புனது? நீ உன் அம்மா வீட்டுல ஒய்யாரமா ஒக்காந்துக்குட்ட. என் புள்ள தனியா ஆஸ்பத்திரில இத்தனை நாள் கஷ்டபட்ருக்கான். ஒரே வாரத்துல இளைச்சு போய்ட்டான்”
“ம்மா அவளை விட்டுட்டு வந்தது நானு. திட்டு விழுகுறது அவளுக்கா? பைரவி ஒரு சுக்கு காப்பி” மனைவியிடம் திரும்பி கண்களை சுருக்கி சமாதானம் செய்தேன்.
அவன் சமாதானத்தை ஏற்றதாய் சின்ன சிரிப்பு பைரவிக்கு வர சமயலறைக்குள் செல்லவிருந்தவளை தடுத்து நிறுத்தினார் நாயகி.
“என்னவோ போடா… அவளுக்கு அதிகமா இடம் குடுக்குறதே நீ தான். அந்த தைரியத்துல தான் இவ்ளோ தூரம் எல்லாரையும் இளக்காரமா நடத்துறா. எத்தனை நல்ல நல்ல லட்டு மாதிரி பொண்ணுங்க வந்தது தெரியுமா உனக்கு? ஒவ்வொன்னும் அழகுல மட்டும் இல்ல குணத்துலையும் தங்கம். வீட்டுக்கு அடங்கி ஒடுங்கி இருந்துருப்பாங்க” தன் பின்னாலே சமையலறை வந்த மகனிடம் குற்றம் சாட்டினார்.
“எத்தனை லட்டு இருந்தாலும் சக்கரை இல்லாம எதுவும் இனிக்காதுல ம்மா” பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து வரவேற்பரையில் நின்ற மனைவியை பார்த்து தேவா கண் சிமிட்ட வெட்கத்தில் முகம் சிவந்து உளம் மகிழ்ச்சி போனாள்.
நாயகிக்கோ மற்றவருக்கோ அவன் பேசியதன் பொருள் சரியாக பிடிப்படவில்லை.
“யாருக்காக யோசிச்சு உனக்கு இவளை கட்டி வச்சேனோ அவளோட கல்யாணமே இல்லனு ஆனதும் உன் பொண்டாட்டி மேல எனக்கு கோவம் தான் இன்னும் அதிகமாகுது. பா என்ன பேச்சு அன்னைக்கு? அப்பாவி மாதிரி இருக்குறத பாத்து இனிமேலாவது ஒழுங்கா இருப்பான்னு நினைச்சேன். ஆனா தப்புடா தேவா”
“நாயகி போதும் நிறுத்து…” வார்த்தை அதிகம் வளர்வது தெரிந்து மனைவியை அதட்டினார் ராஜரத்தினம்.
நாயகியோ மகனின் நிலைக்கு காரணம் மருமகள் என்னும் விதத்திலே பேசிக்கொண்டே போனார், “வாய அடைச்சாலும் உண்மை எவ்ளோ நாள் மூடி இருக்கும்? ஏன்டா தேவா நல்லா கேட்டியா அண்ணனும் தங்கச்சியும் பிளான் பண்ணி ஒரு கல்யாணத்தை நடத்தி இன்னொரு கல்யாணத்தை நிறுத்திருக்க போறாங்க…”
மகன் கையில் டம்ளரை திணித்தவர் கணவனிடம், “உங்க தங்கச்சிக்கு இதுல சம்மதம் இல்லல… இல்ல அதுவு?”
நக்கலாய் நாயகி நிறுத்த மனைவியை பார்த்த தேவா அவள் முகத்தில் அப்பிக்கிடந்த வேதனையின் வலிமை புரிந்து அன்னையை வீட்டை விட்டு தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.
“ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க ம்மா, இஷாக்கு அண்ணன் நான் ஒருத்தன் உயிரோட தான் இருக்கேன். என் தங்கச்சிக்கு நல்ல பையன நான் பாப்பேன். போனவன் வந்தவனை பத்தி எல்லாம் யோசிக்காதிங்க.
இன்னோன்னு ஒரு சில விசயங்களை தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் மாத்த முடியாது. பைரவி மேல உங்களுக்கு வெறுப்போ கோவமோ எது வேணாலும் இருக்கட்டும். ஆனா அவ மட்டும் தான் உங்களோட மருமக. எனக்கு இந்த ஜென்மத்துல அவளை தவற வேற ஒருத்தர் என் வாழ்க்கைல இல்லை” என்றான் தீர்க்கமாக.
கலங்கிய விழிகளோடு மகனை இயலாமையாய் பார்த்தார், “என்னால அவளை இன்னும் ஏத்துக்க முடியல தேவா. தப்பு பண்ணவ-னு மட்டும் தான் பைரவிய பாக்குற நேரம் எல்லாம் என் மண்டைல ஓடிட்டே இருக்கு… நான் என்னடா பண்ணட்டும்? ஒழுக்கமா பிள்ளைகளை வளர்த்து, ஒழுக்கமானவை கைல ஒப்படைச்சா தானே எனக்கு மனசு ஆறும்?”
“பைரவியோட அந்த நிலைமைக்கு காரணம் உங்க மகன் தான்னு தெரிஞ்சா?”
“தேவா…” அதிர்ந்தவர் பிடிமானத்திற்கு அவன் கையை பற்றிக்கொண்டார்.
அவனது கண்களும் கலங்கியது, “நான் தான் ம்மா என் பைரவி இப்டி இருக்க மொத்த காரணமும்” கண்கள் கலங்கி வலி படர்ந்தது தேவாவின் முகத்தில்.
“என்னடா சொல்ற?” தவிக்கும் மகனின் நிலை அவரை பெரிதும் ஆட்டியது, எதற்கும் அசாராதவன் இன்று கண்ணீர் வடித்து நிற்க புரியாமலே பயந்தார் நாயகி.
“வீட்டுல எல்லாரும் யோசிக்கிற மாதிரி அவ ஓடி போகல ம்மா, ரேப் விக்டிம் ம்மா அவ” தாடை இறுகி உதடுகளும் கண்களும் கோவத்தில் துடித்தது தேவாவிற்கு.
“நீ…” அவளது நிலை பரிதவிப்பை தர தான் தான் காரணம் என மகன் கூறியது அதை விட அச்சத்தை தந்தது.
இல்லை என தலை அசைத்து மறுத்தவன், “ஆனா மறைமுகமா நான் தான் ம்மா இதுக்கு காரணம்… நான் நினைச்சிருந்தா இந்நேரம் அவ சந்தோசமா எங்கையோ நிம்மதியா இருந்துருப்பா… இப்டி எல்லாரோட வாயில விழுந்து தினம் தினம் அழுதுட்டு இருந்துருக்கு மாட்டா” உடைந்து அமர்ந்த மகனின் நிலை அவளது வேதனையை தான் நாயகிக்கு காட்டியது.
“தேவா…”
“ஒன்றை வருசத்துக்கு முன்னாடியே என் வாழ்க்கைல வந்துட்டாம்மா என் பைரவி, அப்போ பாதுகாக்க வேண்டிய பொக்கிஷத்தை கோட்டை விட்டேன். இப்ப கைல கிடைச்சிருக்கு மறுபடியும் யாருக்காகவும் எந்த சூழ்நிலையையும் அந்த தங்கத்தை விட மாட்டேன்”
எண்ண சூழலில் சிக்கியிருந்த மகன் அருகே அமர்ந்தவன் அவன் பேசுவதற்காக காத்திருந்தார்.
“மொடா குடிகாரனா இருந்த நான் எப்படி தண்ணி அடிக்கிறத நிறுத்தினேன்-னு கேட்டுட்டே இருப்பிங்கள்ல?” வலி சுமந்த விழிகளோடு அன்னையை பார்க்க ஆமாம் என்றார் அவர்.
“ஒரு தடவ மைசூர்க்கு என்னோட ப்ரன்ட் சதீஷ பாக்க போயிருந்தேன் அன்னைக்கு நைட் கிளப் போய்ட்டு கார்ல அவன் கூட வீட்டுக்கு போய்ட்டு இருந்த நேரம் மணி பதினொன்றைக்கு மேல இருந்தது. முழு போதைல இருந்தேன்.
ஹை-வேல ஒரு பொண்ணு வந்து ரோட்டுல பாதி தூரம் வந்து ஹெல்ப் கேட்டுட்டு இருந்தா. நான் கால் கேர்ள்-னு நினைச்சு சதீஷ வண்டிய நிறுத்த விடல, அவன் பொலம்பிட்டே வந்தான். பாக்க அந்த பொண்ணு தப்பான பொண்ணு மாதிரி தெரியலடா, முகம் படபடப்பா இருந்துச்சு-னு சொல்லிட்டே இருந்தான்.
ஏதோ கற்பனை பன்றான் போய் பாத்தா நிம்மதியா இருப்பான்னு யோசிச்சு சரி வண்டிய திருப்பு-னு வந்தோம். கார நிறுத்தி இறங்கி பாத்தா அங்க யாருமே இல்ல. கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி பாத்துட்டு கெளம்பலாம்னு இருந்தப்போ தான் ஒரு பேக் பாத்தேன்.
தண்ணீ பாட்டில், கிழிஞ்ச பை எல்லாம் பாத்துட்டு எனக்கே பயம் வர ஆரமிச்சிடுச்சு. மொத்தமும் இருட்டு எதுவும் கண்ணனுக்கு தெரியல, கார் லைட் ஆன் பண்ணிட்டு மேல போய் தேடுனோம்.
அப்போ தான் ம்மா பாத்தேன் அவளை. கை கால் கட்டி, டிரஸ் மொத்தமும் கிழிஞ்சு, உடம்பெல்லாம் ரத்தம்… உயிரே துடிச்சிடுச்சு ம்மா” பேசியவன் குரல் கரகரத்தது.
“உடனே என்னோட சட்டையை மாட்டிவிட்டு எழுப்ப பாத்தேன், மயக்கத்துல இருந்தா.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம். என்ன பண்றது ஏது பண்றதுன்னு ஒண்ணுமே புரியல. அடிச்ச போதை மொத்தமும் போச்சு, ஆனா அவளோட முகம் மட்டும் நியாபகம் வரல அவ இருந்த நிலமைல.
மூணு மணி நேரம் செக் பண்ணிட்டு டாக்டர் எங்களை கூப்பிட்டாங்க, ‘கொடூரமா ரேப் பண்ணிருக்காங்க. ஒருத்தர் இல்ல ரெண்டு பேர். ப்ளீடிங் ரொம்ப ஹெவியா இருக்கு. ஒடம்பு மொத்தமும் காயம், அந்த பொண்ணோட உத்துழைப்பு இல்லாததால அரக்க தனமா அடிச்சு தன்னோட இச்சையை தீத்துருக்காங்க.
யாரோ தெரியாத பொண்ணா இருந்தாலும் அவளுக்காக அந்த மிருகங்களை கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணும்னு வெறி எல்லை மீறி போச்சு.
ஆனா அத விட அந்த நேரம் அந்த பொண்ண தனியா விட முடியல. அவங்க குடும்பத்துக்கிட்ட தகவல் சொல்லலாம்னு யோசிச்சா அவ கண் முழிக்கல. நான் வண்டிய நிறுத்த விட்ருந்தா இந்நேரம் ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கை பாலா போயிருக்காதேன்னு ஒடஞ்சு போனேன்.
போதைல ஒரு பொண்ணோட தவிப்பு கூட தெரியாம இருந்துட்டோமேன்னு அவளை பாக்க கூட கூசி போய் வெளியே இருந்தோம் நானும் சதீசும். நேரம் ஆச்சு, விடிய காலைல கண் முழிச்சவ கதறுன கதறல் இருக்கே…”
இறுக்கமாக காதை மூடி கண்களை சுருக்கி மூடியிருந்த மகனின் உணர்வை புரிந்தவர் கண்களிலும் பைரவியின் நிலை எண்ணி பொறுக்க முடியாத வலி. ஏதேதோ அவளை பற்றி மனம் சித்தரித்திருக்க அதை எல்லாம் உடைத்தெறிந்து சிதைந்த நிலையில் படுக்கையில் வாடிக்கிடக்கும் மருமகளை கற்பனை செய்த நாயகிக்கே உடல் தூக்கிவாரி போட்டது.
“இன்னமும் காதுல கேட்டுட்டே இருக்கு ம்மா, அவளோட அழுகை எல்லாம் ‘ஏன்டா என்ன காப்பாத்தல’-னு சட்டையை புடிச்சு கன்னத்துலையே அறைஞ்ச மாதிரி இருந்தது. குற்ற உணர்ச்சி சுக்கு நூறா என்ன கொன்னுச்சு.
அன்னைக்கே ஆச்சிக்கு ஒடம்பு சரியில்லைன்னு போன், என்ன பாக்கணும்னு சொல்லி. போகவே மனசில்லாம போனேன் சதீஷ விட்டுட்டு. அவன் வீட்டுக்கு போய்ட்டு வர முன்ன அவ இருந்த தடையாமே தெரியல, ஹாஸ்பிடல் எல்லாம் தேடுனோம். அவளை கண்டு புடிக்கவே முடியல. டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்கனு சொன்னாங்க”
கண்களை துடைத்தவன் அன்னையை பார்த்து, “இப்ப கூட பைரவி காப்பாத்துனது நான் தான்னு தெரியாது. தெரிஞ்சது, இரக்கப்பட்டு அவளை கல்யாணம் பன்னேனு நொந்துடுவா.
அவளோட நினைவுகளை அழிக்க முடியாது அவளோட வாழ்க்கையை திருத்த முடியாது, ஆனா என்னால செழிப்பா மாத்த முடியும். இது பரிதாபத்துலையோ குற்றஉணர்ச்சிளையோ எடுத்து முடிவில்ல, எனக்கு நெஜமாவே பைரவி புடிச்சிருக்கு.
விருதுநகர்ல முதல் தடவ அவளை பாத்த அன்னைக்கு கூட சரியாய் முகம் நியாபகம் இல்ல. எங்களுக்கு கல்யாணம் முடிவாகி என்னோட ப்ரன்ட்க்கு நான் தகவல் குடுத்த நேரம் தான் சதீஷ் சொன்னான் அந்த பொண்ணு தான் பைரவி-னு.
உண்மை தெரிஞ்ச அன்னைக்கு எந்த மாதிரி நான் பீல் பன்னேனு சொல்ல தெரியல ம்மா, நிம்மதியா சந்தோசமா வருத்தமா ஏதோ ஒன்னு. ஆனா மனசு நிறைவா இருந்தது. காரணம் தெரியல. அவ வேணும், அவ மட்டும் தான் வேணும் அது மட்டும் சத்தியம்” என்றான் ஆத்மார்த்தமாக.
அவன் பேச்சிலும் கண்களிலும் இருந்த தெளிவு நாயகியை உலுக்கியது. என் மகன் இத்தனை உறுதியானவனா என. இவனையா நான் ஒன்றும் தெரியாதவன் என நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? வியப்போடு மகனை பார்த்தவர் கண்கள் அவன் பின்னால் தேநீர் கோப்பையோடு வந்து நின்ற பைரவி மேல் பட்டது.
அன்னை பார்வை உணர்ந்தவன் முகத்தை சாதாரணமாக வைத்து தலை திருப்ப, அவனை சந்தேகத்தோடு பார்த்தவள் வரவா என அனுமதி கேட்டாள். கண் மூடி திறந்து அனுமதி கொடுத்தவன் அன்னையிடம் சத்தமே இல்லாமல், “அவளுக்கு எதுவும் தெரிய வேணாம்” என்றான்.
பைரவி கொடுத்த தேநீரை சத்தமில்லாமல் எடுத்து அருந்தியவர் அவளை பார்த்த பார்வையில் ஒரு கனிவு இருந்தது.
“தம்பி கணக்குல கொஞ்சம் இடிக்கிது கொஞ்சம் இங்கன வர்றிங்களா?” கணக்குப்பிள்ளை தேவாவை அழைக்க எழுந்து சென்றுவிட்டான்.
பைரவி உள்ளே செல்ல எத்தனிக்க, “இங்க வா பைரவி” கனிவான குரலில் அத்தை அழைக்கவும் கண்களில் வியப்பு பைரவிக்கு.
இதுவரை அவர் பெயர் கூறி அவளை அழைத்தது இல்லை. இன்று அழைத்துவிட்டார் அதுவும் மென்மையான குரலில்.
அதே சமயம் சந்தேகமும் வந்தது, இருந்தும் வெளிக்காட்டாமல் அமைதியாக அவர் அருகில் அமர்ந்தவள் அவர் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள். நாயகிக்கோ தூரத்தில் நிற்கும் மகன் மீது தான் கண்கள்.
“ரொம்ப நல்லவன் அவன். இருபத்தி ஆறு வருசமா புரிஞ்சுக்காத எனக்கு அஞ்சே நிமிசத்துல வாழ்க்கை இவ்ளோ தான்னு பக்குவமா புரிய வச்சிட்டான் இந்த பையன்” சிரிப்பு அவர் இதழில்.
“இந்த மாடு, கோழி-னு அவன் திரிஞ்ச நேரம் ஒரு ஃப்ரோபஷர் பையன் இப்படியா காடு கரை-னு இருப்பாங்கன்னு கோவம். அந்த மாடு இப்போ இவன் உயிரை காப்பாத்துச்சுனு கேள்வி பட்டதும் அந்த மாட சாமியா நினைச்சு வணங்கணும் போல இருந்தது அதான் வந்துட்டோம்.
இங்க வந்து தேவாவை பாத்ததும் தான் உயிரே வந்தது, அந்த நிமிஷம் முடிவு பண்ணேன் என் பையன் வாழ்க்கையை அவன் விருப்பத்துக்கு வாழ விடணும்னு. அவனோட சொந்த வாழ்க்கையையும் சரி தொழில் வாழ்க்கையையும் சரி” மறைமுகமாக அவளையும் ஏற்றுக்கொள்ளும் அனுமதி வர அவர் செற்றாடல்களில் மனம் விம்மியது பைரவிக்கு.
“என்ன பத்தி எதுவும் அவங்க சொன்னாங்களா அத்தை?” கையை இறுக்கமாக பிணைத்து அவரை பார்த்தாள்.
பரிதவிக்கும் அவள் விழிகளின் மொழி அறிந்தவர் அவள் கை பற்றி அதில் அழுத்தம் கொடுத்தார், “உன்ன பத்தி எதுவும் சொல்லல, அவனை பத்தி சொன்னான். அவனோட வருங்காலத்தை பத்தி சொன்னான்” மளுக்கென கண்ணீர் ஓட பைரவியின் மெல்லிய விசும்பல் நிம்மதியோடு பறந்தது…