காயத்தின் அளவு தீவிரமாக இருக்க மருத்துவமனை வாசம் தான் மூன்று நாள் என உறுதியாக மருத்துவர் கிடுக்கு பிடியாக பிடித்துவிட அசைய முடியவில்லை தேவாவால்.
ஒரு பக்கம் உயிரை மீட்டெடுத்த காளையனை பார்க்கும் ஆவல், மற்றொரு பக்கம் மனைவியை சென்று சேர ஏக்கம் என தத்தளித்தான் தேவா.
“பைரவி பாக்கணும்” சிறு குழந்தை போல் அடிக்கடி புலம்பும் நண்பனை அதட்டி மிரட்டி ஓரிடத்தில் அமர்த்தி வைத்தனர்.
அதன் பிறகு மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பியும் கூட அதிகம் சிரத்தை எடுத்து வேலை செய்ய முடியவில்லை, வேலை நடந்த இடங்களில் நின்று மேற்பார்வை செய்வதோடு நிறுத்திக்கொண்டான்.
இழுத்து போட்டு வேலை செய்ய முடியாத காரணத்தால் மனைவியின் எண்ணம் அதிகம் வந்து இம்சித்தது.
தன்னை கேள்வியாக பார்த்த அந்த கண்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டுமென கிளம்பிவிட்டான் விருதுநகருக்கு. முதலில் சென்று மனைவியை பார்க்காமல் மச்சினனை சந்திக்க கடைக்கே சென்றான்.
தேவாவை எதிர் பார்க்காத சந்தோஷ் சண்டையிட தான் வந்தானோ என்று பயந்தே போனான். ஆனால் தேவா அன்று ஆவேசமாக நடந்ததற்கு மன்னிப்பு வேண்டி வீட்டிற்கு செல்ல அப்பொழுது தான் சீதா மகள் வெளியில் கிளம்புவது சொல்ல அத்தையை முறைத்து வந்தவனுக்கு அவளே அழைத்து பேசியது கேட்டு வந்து பேருந்து நிலையத்தில் பிடித்துவிட்டனர்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர வலிச்சாலும் உன்ன பாக்க, உன்ன என்ன சொல்லி சமாளிக்க-னு யோசிச்சிட்டே வந்ததுல வலியே தெரியல” அப்போ இப்பொழுது வலி உள்ளதோ மனத்தினுள்ளே மருகியவள் வாகனத்தை பிடிவாதமாக நிறுத்த கூறி சாதித்தும் விட்டாள்.
வாகனம் நின்றதும் கதவை திறந்து இறங்கி வந்தவள் அவனை பார்த்து வம்படியாக, “இறங்குங்க” என்றாள்.
“என்ன நீ வண்டி ஓட்ட போறியா?” என்றான் கேலியும் கேள்வியுமாக.
“ஆமா” என்றாள் தயக்கமே காட்டாமல். கலவரம் தெரிந்த அந்த பார்வையில், “கை ஒடஞ்சது பத்தலையா காலையும் ஒடைச்சு மொத்தமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக போறியா?”
“நான் மைசூர்ல இருந்தப்போ ட்ரிவிங் கிளாஸ் போனேன்”
அவளை மேலும் கீழும் பார்வை பார்த்து, “இருக்கட்டும் நானே ஓட்டுறேன்” மறுத்தான் தேவா.
அவளோ பிடிவாதமாக அவனை விலக்கிவிட்டு தானே ஓட்டுநர் இருக்கையில் அமர வாகனத்தை மேலும் கீழும் சில நொடிகள் ஆராய்ந்தாள், “சரியா போச்சு போ” முணுமுணுத்த தேவா ஒய்யாரமாக சாய்ந்து அவளை ஆராய்ச்சியை கவனித்தான்.
அனைத்தையும் பார்த்தவள் வாகனத்தை உயிர்ப்பித்து மெதுவாக செலுத்த மனம் அடித்து சொன்னது இவள் அரை மணி நேர பயணத்தை ஒரு மணி நேரம் ஆகிவிடுவாள் என.
அதையே சாதகமாக எடுத்துக்கொண்ட தேவா பத்து நாட்கள் அவளை காணாமல் தள்ளி வைத்திருந்த ஆசை எல்லாம் இணைத்து ரசிக்க துவங்கினான்.
பல முறை தேவா கேட்டு புடவை அணியாதவள் மாற்று உடை எதுவும் எடுத்து வராத காரணத்தால் வேறு வழி புலப்படாமல் புடவை எடுத்து அணிந்திருந்தாள்.
தேவா முன்பு சற்று அவள் மெலிந்த உடலை தேத்தியிருக்க இப்பொழுது மீண்டும் மெலிந்து காட்சியளித்தாள். தன் பிரிவு அவளை வருத்தியது என எண்ணிய நொடி வருத்தமும் ஆனந்தமும் ஒருங்கே வந்தது.
மனைவி சில நிமிடங்கள் முன்பு திட்டியது கூட இனிய கீதமாக ஒலித்தது அவனுக்கு பற்களை காட்டிக்கொண்டே கேட்டவனை அருகில் இருந்த சந்தோஷ் கூட விசித்திரமாக பார்த்தான்.
‘ஹீஹீ பொண்டாட்டி லவ்’ என்றான் சமாளிப்பாக.
இப்பொழுது கூட கோபமில்லை வருத்தம் அவளது பேச்சில். நம்பிக்கை இல்லாமலா அவளோடு இருக்கிறான்?
காற்றில் ஆடிய கற்றை கூந்தல் எத்தனை அடக்கினாலும் திமிறிக்கொண்டிருக்க ஜன்னலை பைரவி அடைக்க அந்த காற்று செய்த உதவியில் அவள் அழகை ரசித்துக்கொண்டிருந்த தேவாவிற்கு ஏமாற்றமாக போனது.
மீண்டும் அதனை திறந்து வைத்தான். சாலையில் ஒரு கண்ணை வைத்து தேவாவை திரும்பி பார்க்க அவனது கள்ள பார்வை உணர்ந்து முகம் சிவந்தது ஆடையை சரி செய்ய அவளது அழகினில் மயங்கி விழுந்தான் அவன்.
மந்தார சிரிப்போடு கண் மூடி பின்னால் தலை சாய்த்தவன் கண்கள் அதிக நேரம் மூடியிருக்கவில்லை, அதே நிலையில் தலை திருப்பி அவளை மீசை துடிக்கும் சிரிப்போடு பார்த்தான்.
பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் உணர்வு அவனை காட்டிக்கொடுக்க வெட்கம் பிடிங்கு தின்றது பைரவியை, “ஆனந்த்” சினங்களோடு எச்சரிக்கை வந்து விழ தேவாவின் புன்னகை மேலும் விரிந்தது.
நிழலில்லா வானவில் பல வர்ணங்களை துறந்து முழுதும் சிகப்பாய் உருமாறி நிற்பது போல் அழகான காட்சி அது. ரசித்தான் அனைத்தையும் மறந்து.
“புடவை அடிக்கடி கட்டு சக்கரை” தேன் குழைத்த குரலில் அவன் கூற சக்கரை பாகாய் இனித்தது.
இந்த அழைப்பை கேட்டு எத்தனை நாட்கள் ஆகியது. உணர்ச்சிகள் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அதையும் ரசனையை பார்த்தான், “இவ்ளோ அழகா சக்கர நீ” என அதிசயித்தான்.
இதழ் கடித்து சிரிப்பை விழுங்கிய பைரவி வாகனத்தின் வேகத்தை சற்று அதிகரித்து திசை திருப்ப முயன்றாள். எதற்கும் அசருபவனா அவன்? இன்று அவளை பார்வையாலே ரசித்துவிட்டு முடிவெடுத்துவிட்டான். நிறுத்தும் வழி தான் இல்லை. காமத்தை தாண்டிய ரசனை அவனுடையது. மனைவிக்கு தவறாக தெரியவில்லை.
சிரிப்பை அடக்க முயன்று சிரமப்பட்ட பைரவிக்கு இதழ் கடித்து வந்ததே அலுப்பை தர அவசர அவசரமாக ஓட்டினாள் வாகனத்தை.
அவனும் ஏதோ ஒரு நம்பிக்கையில் மனைவியின் கையில் உயிரை ஒப்படைத்து வேறு வேலையை கவனிக்க துவங்கிவிட்டான். பல திருத்தங்கள் இருந்தது அவள் வாகனம் செலுத்துவதில், குறித்துவைத்துக்கொண்டான் பிறகு அவளிடம் சொல்ல.
“கோவம் போச்சா?” என்றாள் அவள்.
“போய்கிட்டே இருக்கு” கள்ளச்சிரிப்புடன் தேவா கூற வலிக்காமல் அவன் காலில் ஒரு அடி வைத்தாள்.
“காளையான பாக்கணும் போல இருக்கு” நொடியில் சிரிப்பு மறைந்து கண்ணீர் ஆக்கிரமித்தது அவள் கண்களில்.
“எதுக்கு இந்த எமோஷன்?”
“அவன் மட்டும் இல்லனா…” விழுக்கென கண்ணீர் ஒன்று விழுந்தது. அவனின்றி யோசிக்க கூட முடியவில்லை. யாதுமாகி நின்றான்.
வாழ்க்கையின் முன் பக்கங்களை இனியும் திருப்பி பார்க்காமல் முன்னோக்கி செல்ல மட்டுமே தவித்தது மனம். அவன் இல்லையென்றால் அதற்க்கும் வழியில்லாமல் தேங்கிவிடுமே அவள் வாழ்க்கை.
“விடு அதான் ஒன்னுமில்லைல. நம்ம ஊர் மாரியம்மனுக்கு பொங்க வக்கிறேன்னு ஆச்சி வேண்டிக்கிட்டாங்க போல. ம்ம்ம் பொங்கல்-னு சொன்னதும் தான் நியாபகம் வருது பொங்கல் ரெண்டு நாள் முன்ன எல்லாம் விருதுநகர் போக முடியாது.
முதல் நாள் அலங்காநல்லூர்ல ஜல்லிக்கட்டுக்கு போகணும். உன்ன வேனா சனிக்கிழமை விட்டு வரவா, இல்ல உன் அண்ணன் நாளைக்கு பொங்க சீர் குடுத்து அழைக்க வர்றோம்-னு சொன்னான் அவன் கூட போறியா?”
“உங்ககூட வர்றேன், எப்படா பொண்டாட்டி ஊருக்கு போவா ஊர்ல இருக்க முறை பொண்ணுங்கள சைட் அடிக்கலாம்ணே காத்துட்டு இருக்கீங்க?” வார்த்தைகளில் உஷ்ணம் தெரிய அவள் கண்களிலோ விளையாட்டு பாவம்.
“அதான் பாத்தேனே… என்கிட்ட சண்டை போட்ட அன்னைக்கு. அவ்ளோ கலவரத்துலையும் பொண்டாட்டிகிட்ட ஒரு பாய் சொல்லல. நிவிகிட்ட சிரிச்சிட்டே பேசிட்டு போனீங்களே”
நியாபகப்படுத்தி கேள்வி கேட்டவள் அதோடு நிறுத்தாமல், “ஆமா அது என்ன குற்ற உணர்ச்சில கல்யாணம் பன்னேனு சொன்னிங்க?”
“அது… அது நீ அழுததை நான் பாத்தேன்ல மனசுக்கு கஷ்டமா போச்சு” என்றான் சமாளிப்பாக.
“இல்ல வேற ஏதோ அர்த்த..”
“அடடே வீடு வந்துடுச்சு, பொண்டாட்டி வண்டிய இங்கனையே நிறுத்து உள்ள லோட் ஏத்த பொருள் இருக்கு” வாகனத்தை முழுதாய் பைரவி நிறுத்தும் முன்பே குதிப்பது போல் இறங்கி அவசரமாக ஓடிவிட்டான்.
அவனை பின்தொடர்ந்தவள் அந்த பேச்சை கைவிட்டு காளையனிடம் அழைத்து செல்ல கேட்க அவனும் மறுக்காமல் அழைத்து சென்றான்.
தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுதே இரண்டு கயிற்றினால் கட்டப்பட்டிருந்த காளையனின் கம்பீரம் எவருக்கும் சிலிர்ப்பை கொடுக்கும் உடலில்.
இதில் அவள் நெருங்கும் நேரம் குனிந்து தலை சாய்த்து கொம்பினால் மண்ணை வெட்டி வீசிய அந்த கம்பீரத்தில் நொடி ஒன்று தடுமாறியது பைரவியின் தைரியம்.
அவள் பயத்தை உணர்ந்தவன் அவள் கை பற்றி, “தூரத்துல இருந்தே பாத்துக்கோ சக்கரை” என்ற சொல்லோடு தான் அழைத்து சென்றான்.
பைரவியின் செவிப்பறையில் அது எதுவுமே விழவில்லை. பல முந்தைய கால புத்தகங்களில் சொற்ற்றாடலில் குறிப்பிட்டிருந்த காளைகளின் தத்ரூப உருவமாய் நின்றான் இவன்.
சிறு சதைப்பற்றும் இல்லாமல் இறுகிய உடலில் கிரீடம் போல் திமில், வரிந்து கட்டும் கூறிய விழி, ரத்த திலகம் வைத்தது போல் நெற்றியில் சிவப்பு பொட்டு, வீச்சரிவாள் போல் இரண்டு கூறிய கொம்பு.