காயத்திரி தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த பொழுது கூட அர்ஜுனன் எதுவும் பேசவில்லை.
“ஏதாவது பிரச்சனையா அத்தை?” மாமனாரின் முகம் பார்த்து அத்தையிடம் கேள்வி எழுப்பினார் காயத்திரி.
‘தெரியவில்லை’ என மருமகளை பார்த்து தலையை பார்வதி தலை அசைக்க இருவரும் அர்ஜுனன் வார்த்தைக்காக காத்திருந்தனர்.
“என்னைக்கு தான் விடிவு காலம் பொறக்கும்னே தெரியல ம்மா” வேதனை மண்டிய குரலில் அவர் பேசவும் இரு பெண்களுக்கும் புரிந்துவிட்டது.
“நான் வேணா விக்கிகிட்ட ஒருதடவை பேசி பாக்கவா மாமா?” விக்னேஷ், காயத்திரி பிரதாபனின் ஒரே மகன். தந்தை, தாத்தாவோடு தொழிலில் உள்ளான்.
“வேணாம் மா” உடனே மறுப்பு வந்தது, “அவன் தான் தெளிவா சொல்லிட்டானே வேணாம்னு இதுக்கு மேல அந்த பேச்சையே எடுக்க வேணாம்” என்றுவிட்டார் அர்ஜுனன்.
“ஏதாவது புரோக்கர் பேசுனாங்களா?”
“என்கிட்டே யாரும் பேசல ம்மா, சந்தோஷ் சொன்னான்”
“எங்களால உங்களுக்கு ஏன் ப்பா இவ்ளோ கஷ்டம்” ஈரமான விழிகளோடு வந்து நின்ற மகளை பார்த்ததும் இன்னும் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது பெரியவருக்கு.
அர்ஜுனனின் கடைசி மகள். பெயர் சீதா. மிகவும் வெகுளி.
“நீ ஏன்டா அப்டி நினைக்கிற, என் பிள்ளை கஷ்டப்பட்டுட்டு இருக்கறப்ப தகப்பன் நான் எப்படி சந்தோசமா இருக்க முடியும்?”
“எல்லாம் என் தலையெழுத்து ப்பா, புள்ளைய ஒழுங்கா வளக்கலைனா அதுக்கான தண்டனையை நான் அனுபவிக்கிறேன், அவங்க அப்பா அனுபவிக்கட்டும். வயசான காலத்துல நீங்க இப்டி வேதனையோடு நிக்கனும்னு உங்களுக்கு என்ன தலையெழுத்தா?”
விரக்தியில் பேசிய நாத்தனாரை நிறுத்தினார் காயத்திரி, “நல்லா இருக்கு சீதா நீ பேசுறது. அப்றம் அண்ணன், அண்ணி-னு நாங்க எல்லாம் எதுக்கு உனக்கு இருக்கோம்? சொந்தம்னா நின்னு வேடிக்கை பாக்க மட்டும் தானா? கண்ண கசக்காம இரு. நல்லது நடக்கும்” சற்று காட்டமாக சீதாவை மிரட்டினார்.
“உண்மை ஊருக்கே தெரியும் அண்ணி. இனி நல்லது நடக்கவே நடக்காது. சந்தோஷ் கல்யாண வேலைய ஆரமிக்கலாம்”
மனதை கல்லாக்கி கூறிய மகளை பார்த்த பார்வதி, “என்ன பேசுறேன்னு யோசிச்சு தான் பேசிறியா ம்மா? பொட்ட புள்ளைய வீட்டுல வச்சுக்குட்டு ஆம்பள புள்ளைக்கு கல்யாணம் நடத்துனா ஊர் என்ன பேசும்?” தவிப்பாக வினவினார்.
“அதுக்கெல்லாம் சேர்த்து தான் உங்க பேத்தி நல்ல பேச்சு வாங்கி குடுத்துட்டாளே ம்மா, அப்ப பேசுனது விடவா இப்ப யாரும் பேசிட போறாங்க?” அந்த ஒரு நாள் தான் இன்றளவும் அவர்கள் நிம்மதியை குழைத்துக்கொண்டுள்ளதே.
“ஊர்ல இருக்குறவங்க ஆயிரம் சொல்லுவாங்க, அதுக்காக நம்ம புள்ளைய நாம எப்டியோ போன்னு விட்டுட முடியுமா சீதா? நீ உன் பையனுக்கு பொண்ணு பாரு, நான் என் பேத்திக்கு எது நல்லதோ அத பண்ணிக்கிறேன்” என்றார் சற்று கோவமாக.
பெரியவரின் கோவத்தை புரிந்த காயத்திரி, “உளூர்ல இல்லாம வெளிய பாக்கலாம் மாமா”
சிறிது நேரம் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்த அர்ஜுனன் ஆழ்ந்த சிந்தனைக்குள் போய்விட்டார். பார்வதி அதற்குள் மகளை வீட்டிற்குள் அழைத்து சென்று மனதை ஆறுதல்படுத்த, உடன் கயாத்திரியும் சீதாவை இரண்டு மிரட்டி சாந்தப்படுத்தினார்.
“இனி ஒருமுறை தேவையில்லாதது பேசாம இரு. நம்மளோட எண்ணம் தான் வாழ்க்கைல பிரதிபலிக்கும் சீதா. என்ன நடந்தாலும் பிள்ளை மேல உன்னோட கோவத்தை காமிச்சிடாத, அவ மனசு ஒடைஞ்சா அதுக்கு அப்றம் அழுதாலும் எதுவும் மாறாது”
நிற்காமல் வழிந்த கண்ணீரை துடைத்தார், “சரி அண்ணி” என எதிரில் இருக்கும் அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சீதா, அர்ஜுனன் பார்வதி தம்பதியின் கடைசி மகள். இவர்கள் வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் உள்ள ரத்தினம் என்பவரை மணமுடித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தும் வருகிறார்.
மகள் சென்றதும் தங்கள் அறைக்குள் வந்த அர்ஜுனன், “மதுரை வர அவசரமா போகணும் ம்மா, வர மதியம் மேல ஆகிடும். நீ எனக்காக காத்துருக்காம சாப்புடு” சட்டை பையில் சில பண தாள்களை வைத்தார்.
“பெரியவனும் வர்றானா உங்ககூட?”
“இல்ல ம்மா, பெரியசாமி அவசரமா கூப்ட்டான். அதான் அவனே வந்து வண்டில கூட்டிட்டு போறேன்னு சொன்னான்” உடனே கணவனுக்கான மாத்திரை, சூடு தண்ணீர் என தேவையான அனைத்தையும் எடுத்து ஒரு பையில் கொடுத்தார்.
“போய்ட்டு ஒரு போன் போட்டுடுங்க கயாத்திரிக்கு”
நினைவூட்ட, “சரி நான் பாத்துக்குறேன் ம்மா” – அர்ஜுனன்
“சாப்பாடு சாப்டுட்டு மோர் எதுவும் வெளிய குடிச்சிடாதீங்க”
“சரி ம்மா”
“வெளிய ரொம்ப கோவப் பட வேணாம்”
“சரி ம்மா”
“உங்ககிட்ட என்ன பண்றதுன்னு கேட்டா மட்டும் பேசுனா போதும். சரிங்களா?”
“சரி ம்மா தவற உன்கிட்ட என்னால எதுவும் சொல்ல முடியுமா பார்வதிம்மா?” கணவன் சொல்லி சிரிக்கவும் தன்னாலே பார்வதிக்கும் மெல்லிய புன்னகை அரும்பியது.
“என்னோட ஸ்வீட் கப்பிள்ஸ்” அறை கதவின் அருகே நின்ற நிவேதா முகம் எல்லாம் புன்னகையோடு பெரியவர்களை பார்க்க உடனே பார்வதி உறுத்தாமல் கணவனை விட்டு சற்று இடைவேளையில் நின்றார்.
நிவேதா, அர்ஜுனன் பார்வதிக்கு பிறந்த இரண்டாவது பிள்ளை பூர்ணிமாவின் இளைய மகள். பூர்ணிமா-சத்யம் தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள், முதல் மகன் பெயர் சூர்யா, இரண்டாவது மகள் தான் நிவேதா. மொத்த வீட்டின் கடைக்குட்டி.
செல்லமும் அதிகம். தினம் ஒருமுறையாவது தன்னுடைய ஆச்சி தாத்தாவை பார்த்தால் தான் அவளுக்கு நாளே ஓடும். பெரியவர்களின் அந்யோனியத்தை பார்த்து வாழ்ந்ததால் இவர்களை போல் தான் வாழ வேண்டும் என்ற ஆசை அவளுக்கு அதிகம் உள்ளது.
இப்பொழுது கூட வீடே சற்று பயம் கொள்ளும் அர்ஜுனன் மனைவியிடம் அமைதியாக நிர்ப்பத்தை பார்த்து மகிழ்ச்சி கலந்த ஆசை.
“உங்கள பாக்குறப்ப எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு தாத்தா” அங்கலாய்த்தாள் பேத்தி.
“படிப்பே இன்னும் முடியல அதுக்குள்ள என் பேத்திக்கு என்ன?” – பார்வதி
“படிச்சு என்ன பண்ண போறேன்? நான் என் புருசனுக்கு சாப்பாடு ஆக்கி போட்டு, நீங்க தாத்தாவை லவ் பண்ற மாதிரி லவ் பண்ணிட்டு பக்கத்துலயே இருக்கனும். சோ படிப்பு சும்மா டிகிரீன்னு பேர் பின்னாடி போட வேணும் அவ்ளோ தான்” மெத்தையில் வந்து படுத்துக்கொண்டு போர்வையை எடுத்தாள்.
பார்வதி சிரிக்க, “இது என்ன காலேஜ் போகலையா? வந்து படுக்குற?” என்று அர்ஜுனன் கேட்கவும், “ஸ்டடி ஹாலிடேஸ் தாத்தா” என்றாள் சின்னப் பெண்.
“ஸ்டடி ஹாலிடேஸ்ல படிக்காம இது என்ன பழக்கம், போய் படி”
பெரியவர் கண்டிக்கவும் ஆச்சியின் முகம் பார்த்து பேத்தி கெஞ்ச, “விடுங்க கொஞ்ச நேரம் தூங்கிட்டு போய் படிக்கட்டும். உங்களுக்கு நேரமாகலையா?”
கணவரின் கவனத்தை திசை திருப்பி பேத்திக்கு கண் ஜாடை காட்ட, அவளும் ஆச்சியின் கன்னத்தில் முத்தம் கொடுத்து அன்னை விரட்டி விட்ட தூக்கத்தை தொடரலானாள்.
மனைவியின் கையால் டீ ஒன்றை குடித்து முடிக்கும் முன்பே பெரியசாமி என்பவர் வந்திருக்க அவருடன் மதுரை நோக்கி புறப்பட்டார் அர்ஜுனன். பெரியசாமி என்பவர் அர்ஜுனன் தோழரின் மகன்.
வழியெங்கும் சோகமாகவே வந்த பெரியசாமியை பார்க்கவே மனம் அவரை விட பெரியவருக்கு தான் வருத்தமாய் இருந்தது.
“குடிக்க ஏதாவது வாங்கலாமா ய்யா?” பெரியவரின் கேள்விக்கு வேண்டாம் என்றார் பெரியசாமி, “என் புள்ளைக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம் மாமா, இந்த நேரத்துல காசு எதுவும் கைக்கு வராதுன்னு சொன்னா என்ன பண்றதுன்னு தெரியல மாமா, மொத்த உலகமும் சுத்துற மாதிரி இருக்கு”
“ஆள புடிச்சிடலாம் ய்யா, எதுக்கு வெசனப்படுற? எ.சி.பி நம்ம பையன் தான், பேசுனா ஆள தட்டினாலும் காசு வாங்கிடலாம். ஆனாலும் இவ்ளோ பெரிய தொகைக்கு வெளி ஆள நம்பி சீட்டு போடுறது முட்டாள் தனம்” கோவத்தை நேராகவே காட்டினார்.
இவர் தான் பல முறை பெரியசாமியிடம் எச்சரிக்கை செய்திருந்தார், ஐம்பது லட்சத்திற்கு தனியார் சீட்டு கம்பெனியை நம்பி பணம் போடுவது தற்கொலைக்கு சமம் என்று, ஆனாலும் கண்ணுக்கு முன்னால் தானே அந்த கம்பெனி உள்ளதென்று நம்பிக்கையில் பணம் போட, ஒரு மாதமாக அப்படி ஒரு கம்பெனி இருந்ததற்கான தடயமே இல்லாமல் போனது.
அதனால் தான் இப்பொழுது அர்ஜுனனின் தெரிந்தவர்கள் மூலம் கம்ப்ளைண்ட் கொடுக்க மதுரை நோக்கி பயணம்.
செல்லும் வழியிலேயே ஒரு அழைப்பு வர, டிரைவரிடம் பரபரப்பாக, “எப்பா வண்டிய சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷன்க்கு விடு” என்றார்.
“என்ன ஆச்சு?”
“அந்த சீட்டு கம்பெனி மேனேஜர சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சிருக்காங்களாம் மாமா, அங்க போனா ஏதாவது தகவல் தெரியும்ல”
“அதுவும் சரி தான், அவன் என்ன சொல்றான்னு பாத்துட்டு அப்றம் நாம எ.சி.பி பாக்க போகலாம்” – அர்ஜுனன்.
அறை மணி நேரத்தில் வாகனம் அந்த சிறிய போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிற்க அங்கு பெரிய கூட்டமே நின்றது, அதில் இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் பணத்தை ஏமாந்தவர்கள் தான்.
நிலைமையை இவர்களுடன் வந்த ஒருவன் சென்று விசாரிக்க, “என்னமோ சொத சொதன்னு பேசிட்டே இருக்கானுங்க ண்ணா, இவன எல்லாம் லாடம் கட்டணும்” என்றான் ஒருவன் கோவமாக.
“ஏன் தம்பி நீங்க எவ்ளோ பணம் போட்டு ஏமாந்திங்க?” கேள்வி எழுப்பினார் அர்ஜுனன் அந்த ஆடவனிடம்.
“நான் இந்த பிரச்சனைக்காக வரல தாத்தா, என் ப்ரன்ட் ஒருத்தன் உள்ள இருக்கான், லாயர் வர வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். தப்பே பண்ணாதவன அடிச்சு ரத்த காயத்தோட நிக்க வச்சிருக்கானுங்க, இவன பாருங்க ஊரையே ஏமாத்திட்டு சாவகாசமா உள்ள ஜம்முன்னு ஒக்காந்துருக்கான்” ஆதங்கத்தை வெளி காட்டினான் ராஜா.
இனி அமைதியாக இருந்தால் எதுவும் ஆகாதென புரிந்த அர்ஜுனன் எ.சி.பி எண்ணிற்கு அழைத்து விவரத்தை கூற நிமிடங்களில் தகவல் மொத்தத்தையும் திரட்டி அழைப்பதாக கூறினார்.
அதுவரை அமைதியாக இவர்கள் அருகில் நின்ற ராஜா அப்பொழுது காரிலிருந்து இறங்கிய அய்யனாரை பார்த்ததும் வேட்டியை எடுத்து மடித்து கட்டி, “டேய் குணா” ஓங்கி குரல்கொடுக்க, சற்று தள்ளி நின்ற குணாவும் அய்யனாரை கண்டுகொண்டான்.
அய்யனார் இருவரையும் பார்த்து ஸ்டேஷன் உள்ளே நடக்க துவங்க, அவரை தொடர்ந்து பின்னாலே கை, முகம் என கட்டோடு மயிலப்பனும் வந்தான். இருவரும் முன்னால் நடக்க அவர்கள் பின்னே உஷ்ண பார்வையோடு அவர்கள் இருவரையும் தொடர்ந்து நடந்தார்கள் ராஜாவும் குணாவும்.
இருவரும் நடந்ததை பார்த்த பெரியசாமி, “ஏதோ இந்த பசங்க தப்பு பண்ண மாதிரி இருக்குதே மாமா” என்றார் ராஜாவை அளவிடும் பார்வையோடு.
“இல்ல பெரியசாமி, அந்த பையன் கோவம் எனக்கு தப்பா தெரியல” என்றவர் அவர்களை பின்தொடர்ந்தார்.
காவல் நிலையம் உள்ளே சென்ற அய்யனாருக்கு, முகம் எங்கும் ரத்தத்தோடு விறைப்பாக ஒரு டேபிள் மீது அமர்ந்திருந்த தேவாவை பார்த்ததும் உதட்டின் ஒரு ஓரத்தில் சிறு புன்னகை.
அதே புன்னகையோடு இன்ஸ்பெக்டர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர, “என்ன சார் செல்லுக்குள்ள வச்சு விசாரிக்காம, வெளிய வச்சு உபச்சாரம் பண்ணிட்டு இருக்கீங்களா?” இன்ஸ்பெக்டரிடம் வார்த்தையும் தேவாவின் மீதும் கண்ணுமாய் கேள்வி எழுப்பினான் மயிலப்பன்.
கோவத்தை எதிர் பார்த்த மயிலப்பனுக்கு தேவா உடல் குலுங்காமல் மெல்லிய சிரிப்பு ஒன்றை அமைதியாய் கொடுக்க அவனுக்கு இன்னும் எரிந்தது சினம்.
“அது ஒன்னுமில்ல மாப்பிள்ளை, வாய விட்டு வசிட்டல… அத சொல்ல தான் வந்துருக்கான் போல” என்றான் குணா நக்கலாக.
“என்னடா லந்தா?” குண பக்கம் எகிறிய மயிலப்பன், “மரியாதையா பேசு” என்றான் உஷ்ணமாக.