“அண்ணா கல்யாணம் பத்தி எதுவுமே பேசலயே ஆனந்த்… எனக்கு அண்ணனை பாக்குறப்போ எல்லாம் கஷ்டமா இருக்கு. எனக்காக இவ்வளவு செய்ய யோசிச்சவனுக்கு நான் எதுவுமே செய்ய முடியல பாருங்க” சோகம் பேசியவள் பார்த்து சிரித்தான்.
“அத பத்தி அம்மா ஏற்கனவே பெரிம்மாகிட்ட பேசிட்டாங்க, தாராளமா சந்தோஷ் நிலா கல்யாணத்தை ஏற்பாடு பண்ண சொல்லி. இனி பொண்ணு கேக்க வேண்டிய உங்க வேலை தான் பாக்கி”
அகம் மலர்ந்து பிரகாசித்தது பெண்ணுக்கு, “நிஜமா சொல்றிங்களா?” அவன் ஆமாம் என்க பெரிய பாரம் குறைந்தது போல் இருந்தது.
அந்த நிலையிலும் கணவன் பேசியதை நினைவுபடுத்தி, “அது என்ன எங்க வேலை பாக்கினு தனியா பொண்ணு கேக்க சொல்றிங்க?”
“ஆமா என் தங்கச்சிக்கு அண்ணனா நீங்க வர்றப்போ உங்கள வரவேற்க வேணாம் நான்?”
“என் மாமனார், மாமியார், மச்சான் முக்கியமா” மனைவியை பிடித்து மேலும் தன்னோடு ஒட்டிக்கொண்டான், “என் பொண்டாட்டிய” என்று.
“சரி தான் போங்க…”
உதட்டை சுளித்து முகத்தை திருப்பிய மனைவியின் செயலில் சிரித்தவன் அனைவரும் எழும் முன்பு மனைவியை கொஞ்சி கெஞ்சி வேகமாக கிளப்பி வீட்டின் வெளியில் விறகடுப்பில் தீ மூட்டி காத்திருக்க தோட்டத்தில் வேலை பார்ப்பவர் ஒருவர் கோழிக்கறி வந்து கொடுத்தார்.
தேவா வெங்காயம் நறுக்கி மனைவிக்கு உதவி செய்ய பைரவி கமகமவென ஒரு மணி நேரத்தில் குழம்பு தயாரித்து வீட்டினருக்கு இட்லி தயாரித்து காத்திருக்க இவர்கள் இருவரையும் தேடி குளித்து முடித்து அனைவரும் வந்து விட்டனர்.
சீதாவிற்கு பொறுப்பாய் வேலை செய்யும் மகளின் செயலில் அதீத திருப்த்தி ஏற்பட, அதை விட சந்தோசமாய் இருந்தது நாயகி மற்றும் பைரவியின் ஒற்றுமை. அதே சந்தோஷத்தில் காலை வழக்கமாக உண்ணும் உணவை விட அனைவரும் கூடுதலாய் ஓர் இரண்டு இட்லி சேர்த்து உண்டனர்.
எப்பொழுதும் பொங்கலின் மூன்றாம் நாளில் தங்களிடம் வேலை செய்யும் அனைவருக்கும் வயிறார உணவு வழங்கி நன்றியை தெரிவிக்கும் பழக்கம் இளங்கோவனிடம் இருந்து தேவாவிற்கு வந்திருந்தது.
அவரை விட ஒரு படி மேலே சென்று அவர்கள் வீட்டினர் அனைவரையும் அழைத்திருந்தான் தேவா. சமையலுக்கும் வேலையாட்களை போட்டிருக்க தேவையான பொருட்களை வாங்கி வைத்து குடும்பத்தினரோடு ஐக்கியமாகிவிட்டான்.
அந்த இடத்திலே வைத்து அர்ஜுனன் சந்தோஷ் திருமணத்தை பற்றிய பேச்சை எடுத்தார். உடனே சீதா தந்தையிடம், “இப்ப தான் எல்லாம் கொஞ்சம் நல்லா போகுது ப்பா, கொஞ்சம் ஆற போட்டு பேசலாமே மதினி ஏதாவது நினைச்சுக்க போறாங்க” பயந்தார் சீதா.
“இவா சண்டைக்கு வந்துடுவாளோனு பயந்துட வேணாம் மதினி மாமா கிட்ட சொல்லி பேச சொன்னதே நானும் உங்க தம்பியும் தான். என் பொண்ணுக்கு குடும்பமா சேர்ந்து ஒரு நல்ல பையன பாக்க மாட்டிங்களா என்ன?” சிரித்த முகமாய் கேட்பவரை பார்த்து பயம் நீங்கி மகிழ்ச்சி பொங்கியது.
இது தானே சொந்தங்கள்… என்ன தான் காரணம் புரியாமல் ஒரு பக்க நியாயத்தை வைத்து முகத்தை திருப்பினாலும் அதே அந்த பிரச்சனைக்கான தீர்வு தன்னிடமே உள்ளது என்பதை புரிந்து செயலாற்றும் சமயம் விரிசல் விட்ட உறவுகளை வார்த்தை ஜாலத்தாலே ஒட்டிவிடுவார்களே. நாயகியும் அதை தான் செய்தார்.
“என்ன க்கா அமைதியா இருக்க? சொல்லு நீ என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை பாத்து தர மாட்டியா?” என்றார் ராஜரத்தினமும் கூட.
“அட போடா…” எந்த விதமான இடையூறும் இல்லாமல் சாந்தமாக பிரச்சனை முடிவது அவருக்கு அழுகையையே தந்தது. பாச தம்பியின் உறவு விட்டு போய்விடுமோ என்ற பயம்.
“சந்தோஷ் கல்யாணத்துக்குள்ள இஷாக்கு கல்யாணம் பேசி முடிவு பண்றோம்.. சரியா?” என்றார் தம்பியிடம்.
“ஹ்ம்ம் எல்லாரையும் காப்பாத்துறீங்க சித்தி, என்ன மட்டும் டீல்ல விட்டறீங்க. எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சா நானும் படிக்கிறதுல இருந்து எஸ்கேப் ஆவேன்ல” முகத்தை சோகமாக வைத்த நிவேதா குற்றப்பத்திரிகை வாசித்தாள் சீதாவை பார்த்து.
“நிவிமாக்கு எதுக்கு இந்த சோகம்?” சமையல் வேலையை பார்த்துவிட்டு வந்தவன் அப்படியே நிவேதா அருகில் சென்று அமர்ந்தான்.
“மச்சான் உன்ன கட்டிக்கிறேன்டா. எதுக்கு வெளிய பையன தேடணும்?” அவனது சுபாவம் அறிந்து அனைவரும் சிரிக்க நாயகி மகனை முறைத்தார்.
அதை எல்லாம் கண்டுகொள்ளாதவன் நிவேதாவிடம், “உனக்கு ஓகே தானடா நிவி?”
“அக்கா ஓகே சொன்னா எனக்கு டபுள் ஓகே” என்றாள் பைரவியை பக்கமாக கண்காட்டி. மனைவியை பார்த்தவன் சிரிப்போடு சலனமே இல்லாமல் அமர்ந்திருப்பவள் முகம் பார்த்து, “ஹெல்ப்புக்கு ஆள் ரெடி பண்றேன் உனக்கு ஓகேயா” என்றான் குறும்பாக.
“ஆனாலும் உன் பொண்டாட்டிக்கு உன் மேல ரொம்ப தான் ய்யா நம்பிக்கை” என கேலி செய்தார் பார்வதி.
“ஆச்சி அவர் மேல எனக்கிருக்க நம்பிக்கையை விட தாத்தாக்கும் உங்களுக்கும் அதிகம்னு இங்க எல்லாருக்கும் தெரியாதா?”
“சரியா சொன்னா” விக்னேஷ் கூற உணவு தயாராகிவிட்டதென அழைப்பு வந்தது. வீட்டினர் அனைவரையும் அமர வைத்து பைரவியையும் அமர சொன்னான்.
அவள் கணவனோடு உண்பதாய் கூறி பரிமாற துவங்கிவிட்டாள். ஒரு மணி நேரம் மேல் ஆகியது பந்தி முடிய. சோர்வின்றி இருவரும் பம்பரமாய் சுழல, பெரியவர்கள் வீட்டினர் என எவர் அருகில் இருந்தும் தேவா, பைரவிக்கு வேலை அதிகமாய் இருந்தது.
அதே ஊரை சேர்த்திருந்தனரே, வந்தார்கள் அனைவரையும் கவனிக்கும் பொறுப்பு கூடிப் போனது. வந்தவர்கள் மனதையும் வயிற்றையும் நிறைத்து அனுப்பினான் பொங்கல் போனஸ் கொடுத்து.
அனைவரும் கிளம்பிய பின்னர் இருவரையும் அமர்த்தி உண்ண வைத்து மகிழ்ச்சியோடு இல்லம் திரும்பினர் அர்ஜுனன் குடும்பம். அவர்கள் சென்ற பிறகு இடத்தை ஒதுக்கி நாளை ஏற்ற வேண்டிய லோட் பொருட்களை தயார் செய்தவன் அதற்காக வண்டியை அழைத்து நினைவு படுத்தி இல்லம் திரும்ப உறக்கத்தில் இருந்தாள் பைரவி.
அதிக சோர்வு தான் அவளுக்கு. நேற்றும் உறங்கவிடவில்லை, காலையிலிருந்து வேலை அதிகம். காலை உடுத்திய புடவையை கூட மாற்றாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
சமையலறை சென்றவன் தன்னைக்கான தேநீரை எடுத்து உடன் மதியம் மீதமிருந்த உணவை கொஞ்சம் ஒரு தட்டில் எடுத்து வந்து எழுப்பி அவள் கையில் தட்டை கொடுத்து தன்னுடைய தேநீரை அருந்தினான்.
“கொஞ்சம் கூட ரொமான்ஸ் பண்ண தெரியிதா உங்களுக்கு?” உதட்டை சுளித்து அவனை முறைத்தாள்.
டம்ளரை அப்படியே வைத்து அவளை நெருங்கி அமர்ந்து இடையில் கை வைத்தான், “டயர்டா இருப்பியேனு பாத்து அமைதியா இருந்தா என்னடி முறைக்கிற?” கண்களையும் இதழையும் மாறி மாறி பார்த்து பொய் கோவம் காட்டினான்.
சில்மிஷம் செய்யும் அவன் விழிகளை மூடியவளுக்கு வெட்கம் கரைபுரண்டோடியது.
“ரொமான்ஸ்னா கட்டி புடிக்கிறது, முத்தம் கொடுக்குறது மட்டுமில்ல” ஏதோ தைரியம் உந்தி அவனது கன்னத்தில் பல் தடம் பதியுமளவு கடித்து வைத்தாள்.
“ஆ…” மனைவி கை தட்டிவிட்டு கன்னம் தேய்த்து முறைத்தான், “ராட்சசி. ஏன்டி கடிச்ச?”
“ரொமான்ஸ் சொல்லி குடுக்க முயற்சி பண்ணுறேன். தட்டு எடுத்துட்டு வந்தவர் அப்டியே ஊட்டி விட்டிருந்தா தான் என்னவாம்?”
“இப்ப யாரு உண்ண நீயா சாப்புடுனு சொன்னது? டீ குடிச்சிட்டு ஊட்டி விட வந்தேன்டி” அவன் திருதிருவென விழித்ததையும், தன் பேச்சை மனைவி நம்பியதில் சந்தோஷமடைந்தவன் சிரிப்பதையும் கவனிக்கவில்லை பைரவி. கையேடு தட்டை வாங்கி அவளுக்கு ஊட்டிவிட துவங்கினான்.
“மதியம் பரிமாறுனதால நீ ஒழுங்கா சாப்பிடல கவனிச்சேன். அதான் உனக்கு அப்பயே கொஞ்சம் தனியா எடுத்து வச்சிட்டேன்” அவள் உண்பது போல் பிரியாணியோடு சிக்கன் குழம்பை பிணைந்து ஊட்டினான்.
“ஆமா எனக்கும் ரொம்ப பசிச்சது” கடித்த இடத்தை தடவிவிட்டு,
“வலிக்கிதா?” சோகமாய் கேட்டாள்.
“முத்தம் குடு வலி போய்டும்” கன்னம் காட்டினான். சத்தமாய் சிரித்தவள் கணவன் கேட்டதை கொடுக்க வெட்க சிரிப்போடு மனைவிக்கு ஊட்டினான் உணவை.
“ஆமா அது என்ன உன்ன விட அய்யம்மா அய்யப்பாக்கு என் மேல நம்பிக்கை அதிகம்… எல்லாரும் அதுக்கு சிரிக்கிறாங்க?” தண்ணீரை பைரவி கையில் கொடுத்து பேசவிட்டான்.
“உங்க குடும்பத்தை எப்படி தாத்தா ஏத்துக்குத்தாங்கனு நினைக்கிறீங்க?”
“மகன் மேல இருக்க பாசத்துல வந்துருப்பீங்க” என்றான்.
“அதான் இல்ல… நீங்க புலி வேந்தனுக்கு அடிபட்டு போச்சுன்னு ஜெயில்ல இருந்திங்கள்ல? அப்போ தான் உங்கள தாத்தா முதல் தடவையா பாத்தாங்க”
விழி விரித்து அவளை பார்த்தான், “அத தான் அயப்பாவை முன்னாடியே பாத்த மாதிரியே இருக்கேனு பசங்க சொன்னாய்ங்களா”
“ம்ம்ம் வாய்ப்பு இருக்கு… ஆரம்பத்துல உங்கள எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா தாத்தாக்கு இல்லை. அண்ணா தான்…” தயங்கினாள் அவன் முகம் பார்த்து.
மேலே சொல் என கண்ணாலே சமாதானம் கூறினான், “அன்னைக்கு நீங்க என்கிட்டே வந்து பேசிட்டு போனீங்கள்ல… அப்றம் தாத்தாவும் வந்தாங்க. எனக்கு பயமா இருக்குன்னு பொய் சொன்னேன். அப்போ தான், உங்கள ஜெயில்ல வச்சு பாத்ததையும் வேந்தனுக்காக நீங்க சண்டை போட்டு நின்னதையும்.
‘ஒரு மாட்டுக்கே இவ்ளோ தூரம் வந்துருக்கானே, நாளைக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உயிரை குடுக்க கூட தயங்க மாட்டான்… கல்யாணம் பண்ணிக்கோடா அவனை தவற உன்ன வேற யாராலயும் சந்தோசமா வச்த்துக்க முடியாது’-னு கை எடுத்து கேட்டாங்க.
எனக்காக ஏன் ஆனந்த் இவ்ளோ பெரிய மனுஷன் கலங்கி நிக்கணும்? உங்க மேல இவ்ளோ நம்பிக்கை இருந்தா ஒரு வார்த்தை உங்கள பத்தி விசாரிக்காம கழுத்த நீட்டுனு சொல்லுவாங்க”
“அப்போ அய்யப்பா கேட்டதுக்காக தான் என்ன கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னியா?” போலியாக முறைத்தான்.
“ம்ம்ம் தாத்தக்கான பாய்ண்ட்லயும் நான் தான் இருக்கேன்… அய்யாவோட குணம் அப்டி ஊரே என்ன மாப்பிள்ளையாக்க பாத்துட்டு இருந்துச்சு… கடைசில நீ தான் வந்து கொத்திட்டு போய்ட்ட”
தட்டை ஓரமாக தள்ளி வைத்து அதிலே கையையும் கழுவி மனைவியின் மடியில் படுத்துக்கொண்டான். வாகாக தலை கொடுத்திருந்த தேவாவின் சிகையை பற்றி,
“ரொம்ப தான் நல்லவர் இவரு. ஊர்ல இருக்க ஒரு பொண்ணையும் விடல, இதுல அந்த ஆட்டக்காரி கூட ஆட்டம் வேற” வலிக்காமலே கத்தினான் சிரிப்பினூடே.
“ஹே அது நானா ஆடலடி… அந்த பொண்ணா வந்து ஆடுனா. என் சக்கரை மேல சத்தியம்”
நம்பிக்கை இல்லாமல் அவள் கேட்கவில்லை என தெரிந்து ஆசையாய் ஆசையை வளர்த்து புடவை விளக்கி அவள் வயிற்றில் முத்தம் வைக்க… உடல் தடுமாறி, பேச்சு தடுமாறி மனமும் தடுமாறி கூடல் கடலில் மூழ்கி திளைத்தனர்.
ஓய்வின்றி தவிப்பவளுக்கு ஓய்வு கொடுக்கும் எண்ணத்தில் அவனும் இல்லை, விடுமுறை எடுக்கும் எண்ணம் அந்த மாணவிக்கும் வரவில்லை. பாடத்தை விரும்பியே கற்க துவங்கினாள் ஆனந்தின் மனைவி.
வழி தெரியாத நல்ல உள்ளங்களுக்கு கண்ணீர் மட்டுமே பதிலாகாமல் பாதையை காட்டி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பதும் விதியின் முடிவே.
காதல் மகிழ்ச்சியை கொடுப்பவை மட்டுமல்ல துன்பத்தை மறைத்து நான் இருக்கிறேன் என கூறும் ஆறுதல் மொழியும் என வாழ்க்கையை இழந்து தவிக்கும் மனைவிக்கு நொடிக்கு நொடி புரிய வைத்தான்.
காதல் கூடி, ஆசை பெருகி, நேசம் வளர்ந்து, ஆனந்தமும் ரெட்டிப்பாகி வாழ்க்கை தித்திக்கட்டும் சர்க்கரையாய்…