வாழைமரம், மாவிலை தோரணம், அழகிய வண்ண கோலம், சரசரக்கும் பட்டுப்புடவை அணிந்த பெண்கள், அவர்களுக்கு ஈடாய் பட்டு வேஷ்டியில் சுற்றிய ஆண்கள் என அவ்விடமே வண்ணமயமாக இருக்க, சித்திரை வெயிலில் எவர் முகமும் சிறிதும் வடிவிடாமல் தென்னை மரங்கள் சாமரம் வீசியது.
காலை ஏழு மணி தான் ஆனாலும் வீடே ஜெகஜோதியாக மின்னியது. எங்கு திரும்பினும் சிரிப்பின் சாயல். அழகின் பிரதிபலிப்பு.
“டேய் மச்சான்… இங்க வா” தலையை ஆட்டி அருகில் தூரத்தில் நின்றவனை அழைத்தாள் ஆறு வயதான கிருஷ்ண ஜீவனி. தேவானந்த் – பைரவியின் மூத்த புதல்வி.
அவள் கையில் சுமக்க முடியாத அளவு பெரிய பாத்திரத்தில் ஜிலேபி நிரம்பி வழிந்தது. அவளது குரல் கேட்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் மற்றும் உதயநிலாவின் மகன் தீசன் முறைத்தான் அமைதியாக.
இருவருக்கும் ஒரே வயது தான். ஆனால் இருவருக்கும் இரண்டரை மாதம் தான் வித்யாசம். அந்த இரண்டரை மாதமே திஷனை பெரிய மனிதனாக காட்டியிருந்தது. அவன் தந்தையை போல அமைதி, பொறுமை என இருப்பான்.
அதே கிருஷ்ண ஜீவனி அவளது தந்தையின் மறு உருவம். எதிலும் அமர்க்களம், துறுதுறுப்பு, சேட்டை தான். பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, தன்னை ஒத்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்கு சுத்தமாக கொடுக்க மாட்டாள். அதிகாரம் தூள் பறக்கும்.
“வாடா மச்சான்… அண்ணா நீயும் வா” விக்னேஷ் மகன் ஷ்ரவனையும் உடன் அழைத்தாள்.
கையில் இருந்த பெரிய பாத்திரத்தை பாவாடை சட்டையோடு தூக்க இயலாமல் கீழே வைத்து தலை தூக்கியவள் முகமெங்கும் முத்து முத்தாக வேர்த்தது. அந்த நிலையிலும் இரட்டை குடுமி அணிந்து அதில் அழகிய மல்லிகை பூ சூடி தேவதையாக மிளிர்ந்தாள் ஆனந்தபைரவியின் பெண் குழந்தை.
ஷ்ரவன் அவளுக்கு உதவ ஓடி வர, அவனை தடுத்தான் தீசன், “போகாத ஷ்ரவன். அவ ஸ்வீட் திருடிட்டு வந்துட்டா” என்றான் அவள் காதுப்படவே.
“டேய் புளிசட்டி. நான் திருடுனதை நீ பாத்தியாடா?” பாதை என்னும் பாராமல் இனிப்பை மண் தரையில் அப்படியே வைத்து அவனை நோக்கி சண்டைக்கு சென்றாள் சிறிய ராங்கி.
தீசன் அசையவே இல்லை. அப்படியே நின்று கண்களாலே சவால் விட்டான் வந்து பார் என.
“பாப்பா அப்டி எல்லாம் பண்ணிருக்க மாட்டா தீசன்” ஷ்ரவன் ஆணித்தரமாக கூறினான்.
“அப்டி சொல்லுடா அண்ணா” இடுப்பில் கை வைத்து தீசனை முறைத்தாள்.
“கிருஷ்ணா…” தூரத்தில் கேட்ட தந்தை குரல் கேட்டு கோவத்தில் சிவந்திருந்தவள் சிறிய கண்கள் மீனின் விழிகள் போல் விரிந்துகொண்டது.
“அப்பா…” பயந்தவள் ஒரே ஓட்டமாக சென்று ஒரு லாரிக்கு பின்னால் நின்றுகொண்டாள்.
அவ்வியம் வந்த தேவா தரையில் கிடந்த பாத்திரத்தை எடுத்து சுற்றிலும் மகளை தேடினான். எங்கும் மகளை காணவில்லை. வைக்கப்போரின் முன்னாள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை தவிர.
“ஷ்ரவன் கிருஷ்ணாவ பாத்தியா?” அவனிடம் கேள்வி இருக்க சுற்றிலும் குழந்தைகளை சுற்றியும் கண்களை அலையவிட்டான் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய.
சில நேரம் அரிதாக பாம்பு அந்த பக்கம் வருவதுண்டு, இன்று அதிலும் ஆள் நடமாட்டம் இருக்க வராது என தெரிந்தும் ஒரு முன்னெச்சரிக்கைக்காக பார்த்துக்கொண்டான்.
“இல்ல சித்தப்பா” என்று ஷ்ரவன் கூறிய தொனியில் சந்தேகமே வராது.
பிசுறு தட்டாமல் அடித்து கூறினான் பெரியவன். அவனை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை கொடுத்து தீசன் பம்பரத்தை சுற்றும் வேலையில் இருந்தான்.
அவனது செயலே சந்தேகம் கொடுக்க, “மாப்பிள்ளை கிருஷ்ணாவ பாத்தியா நீ?” என்றான்.
அவனோ சரியாக கிருஷ்ணா இருந்த இடத்தை காட்டிவிட்டான்.
“இருக்கு இன்னைக்கு இவளுக்கு” முணுமுணுத்து தேவா அங்கு மெதுவாக செல்ல, “பாப்பா சித்தப்பா வர்றாங்க” எச்சரிக்கை மணியை ஷ்ரவன் அடிக்க அந்த குட்டி முயலோ ஓட்டமெடுத்து ஓட துவங்கியது.
ஒரு லாரியை சுற்றி சுற்றி இருவரும் ஓட எங்கிருந்து தான் வந்ததோ அடுத்த வாண்டு. வேதவ் தேவாவின் இரண்டாவது மகன். மூன்று வயதே நிரம்பியவன் செய்யும் சேட்டையை தேவா ஒருவனால் மட்டுமே சமாளிக்க முடியும்.
எந்நேரமும் துறுதுறுவென சுற்றி திரிபவனுக்கு இருக்கும் தெம்பு கூடுதலாய் இருக்கும். அதனாலே சில நேரம் இல்லை இல்லை பல நேரம் பைரவி தந்தையிடம் அனுப்பிவிடுவாள் மகனை.
“ப்பா ப்பா நானு நானு” என சகோதரியை துரத்த அவனும் தந்தைக்கு உதவ,
“வாடா மகனே உன் அக்காவை பிடிச்சு மரத்துல கட்டி வைக்கிறோம் நாம”
மகனையும் துணைக்கு அழைத்து இருவரும் திட்டம் வகுத்து இரண்டு பக்கமும் சென்று விரட்ட, அவளோ இருவருக்கும் போக்கு காட்டி தோப்பினுள் ஓடிட இப்பொழுது பெரிய மகன் ஷ்ரவனும், மாப்பிள்ளை தீசன், நிவேதாவின் மகள் ப்ரணிதா, இஷா மகள் இருவர் என அனைவரும் கிருஷ்ணாவை துரத்த அதுவே ஒரு விளையாட்டாகி போனது.
வந்த வேலையை மறந்து அனைவரும் தேவாவோடு ஆரவாரமாக துள்ளி குதித்து விளையாட துவங்கினர்.
“உன்ன எதுக்கு அனுப்பி வச்சா நீயும் பொடுசுகளோட சேர்ந்து ஆடிட்டு இருக்க? ஸ்வீட் எங்கடா? பந்துல எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” மகனை வந்து அதட்டினார் நாயகி.
உடனே தீசன் பக்கம் திரும்பி, “மாப்பிள்ளை ஸ்வீட் எங்க?” என்றான்.
தீசன் கை நீட்டிய திசையில் பார்க்க நிதானமாக எவ்வளவு வாயில் அடைக்க முடியுமோ அவ்வளவு இனிப்பை வாயினுள் திணித்துக்கொண்டிருந்தனர் கிருஷ்ண மற்றும் வேதவ்.
“அடேய் அடேய் என்னடா பண்றீங்க” ஓடி சென்று பாத்திரத்தை பிடிங்கி அன்னையின் கையில் கொடுத்தான்.
“அப்பா அப்பா ஸ்வீட்…. அய்யம்மா” தந்தையைவிட்டு நாயகி பின்னால் தோன்றிக்கொண்டே இருவரும் செல்ல மற்ற பிள்ளைகளை தோப்பிலிருந்து வெளி வர கூறி மீண்டும் பந்திக்கு சென்றான் தேவா.
கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்த விருந்திலிருந்து வந்த பெரியவர் ஒருவர் கையை துடைத்தவாறே, “ராசா… வீடு பிரமாதம்… சாப்பாடும் உன் கவனிப்பும் அத விட அருமை”
வேட்டி மடிப்பிலிருந்து ஒரு சிறு பையை எடுத்தவர் அதில் கை விட்டு திருநீறை எடுத்து அவன் நெற்றியில் பூசினார், “சீரும் சிறப்புமா வாழையடி வாழையா சந்தோசமா இருப்ப ய்யா” மனதார வாழ்த்தி சென்றார் அவர்.
முகமெல்லாம் சிரிப்போடு புதிதாக கட்டியிருந்த தங்கள் வீட்டினை பார்வையிட்டான் தேவா.
பல வருடங்களாக அவளது கனவாக இருந்தது இந்த வீடு. அவனிடம் அதை பற்றிய கூறிய பிறகு அவன் கனவாகி போனது. உடனே வேலையை துவங்க முடியாத நிலை.
கைமீறி செலவுகள் அதிகம் இருந்தது. அதோடு மனைவி அடுத்த ஐந்து மாதத்தில் தங்கள் காதல் சின்னத்தை சுமக்க அதற்குண்டான செலவும் இழுத்து பிடித்துக்கொண்டது தேவாவை. இதே போல் அடுத்த ஆறு வருடங்கள் சற்று சிரமமாக ஓடியது.
இரண்டு பிள்ளைகளை வைத்தும் வீடு பத்தவில்லை, என ஒரு நாளும் மனைவி முகம் சுளித்ததில்லை. இருப்பதில் மகிழ்ச்சியாக வாழ துவங்கினாள். அவளுக்கு தேவை தேவாவின் அருகாமை மட்டுமே. தேவாவிற்குமே பைரவியை விட்டு ஒரு நாளும் இருக்க இயலாது.
ஆனாலும் அவளை கவனிப்பதில் ஒரு நாலும் தவறியதில்லை. என்ன வெளியாக இருப்பினும் மனைவியை அழைத்து சென்று அலுவலகம் விட்டு தானே அழைத்து வருவான்.
அவளது கர்ப காலங்களில் தந்தை வீட்டிலே தங்கி அலைச்சல் வராமல் பார்த்துக்கொண்டான். தனக்கு சிரமம் என்றெல்லாம் பார்க்கவில்லை. கிருஷ்ண ஜீவனி சற்று வளர்ந்த பின்னர் தங்கள் இல்லம் வந்து குழந்தையை தானே பார்த்துக்கொண்டு மனைவி கையில் தன்னுடைய வாகனத்தை ஒப்படைத்துவிட்டான்.
அது ஒரு காரணமோ என்னவோ, தந்தையோடு இருந்து தந்தையின் குணம் அதிகம் அவளுக்கு வர துவங்கியது. அடுத்த இரண்டு வருடத்தில் வேதவ் பிறக்க அவனும் வளர்ந்த பிறகு இருவரையும் தேவா தாயாய் மாறி பார்த்துக்கொண்டான்.
அவன் படும் கஷ்டங்களை பார்த்து வேலைக்கு செல்ல மாட்டேன் என நின்ற பைரவியை மிரட்டி வேலைக்கு அனுப்பி வைத்தான் தேவா.
இந்த நேரங்களில் வீடு கட்டுவதற்கு தேவையான முக்கால்வாசி பணத்தை சேமித்து வைத்துவிட்டு மனைவி கையில் புதிதாக ஒரு ஆப்பிள் மடிக்கணினியை கொடுத்தான்.
புரியாமல் விழித்தவளிடம், “உன் விருப்பம் போல நம்ம வீடு எனக்கு வேணும், மவளே ஒழுங்கா கட்டலன்னு வை” என செல்ல எச்சரிக்கை கொடுத்து சிரித்த கணவன் அன்பில் மேலும் மேலும் நனைந்தாள் பைரவி.
வீடு மெல்ல மெல்ல எழும்ப துவங்க தேவாவின் விருப்பத்தை கேட்டு வந்து நிற்கும் மனைவியை துரத்திவிடுவான். வீட்டின் செங்கல், சிமெண்ட், பெயிண்ட் , சிறு சிறு அலங்கார பொருட்கள் என அத்தனையும் பைரவியின் தேர்வு தான்.
என்ன தான் மனைவி, மக்கள் என நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் மனைவி ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் ஆடையாய் படிந்து நின்றது தேவாவின் இதயம் முழுதும்.
இப்பொழுது முழுதாய் அழகாய் எழும்பி நிற்கும் வீட்டின் முன்பு ஊர் கூட்டி நிறுத்தி என் மனைவியின் திறமையின் வெளிப்பாடு இது என சொல்லிய பிறகே நிறைவு வந்தது அவனுக்கு.
பெயருக்காக வீட்டினை பாராட்டாமல் மனதாராவே அனைவரும் பாராட்டி சென்றனர்.
சிரிப்போடு வீட்டினுள்ளே சென்றவன் முற்றத்தில் இன்னும் நறுமண புகை பரப்பிக்கொண்டிருந்த யாக குண்டத்தை தாண்டி கன்னி மூலையில் வீற்றிருந்த சிறு பூஜை அறைக்கு சென்றான்.
இளமஞ்சள் புடவையில் வாடாமல்லி பார்டர் வைத்த புடவையை இடையில் சொருகி, வாழைப்பழங்களை எல்லாம் எடுத்துக்கொண்டிருந்தவள் பாரம் தாங்காமல் சோர்வோடு சுவற்றில் சாய, மனைவியிடம் வேகமாக சென்று வாங்கிக்கொண்டான்.
“ஒரு வார்த்தை கூப்பிட்டிருந்தா வந்துருப்பேன்ல சக்கரை?” முறைத்து பார்த்தான்.
“இல்ல நீங்க பிஸியா இருப்பிங்கள்ல அதான். ஏதாவது வேணுமா?” கேட்டாள் கணவனிடம்.
சோர்வாக தலையை காட்டியவன், “ஏன்டி கொழந்தைக வயித்துல இருந்த நேரம் இவ்ளோ ஸ்வீட் சாப்பிட்ட?”
சிரித்தவள் மென்மையாக, “ஸ்வீட் வேணுமா?” என்றாள்.
“ஆமா, ரெண்டும் அஞ்சே நிமிசத்துல அரை கிலோ ஸ்வீட் சாப்பிட்டு முடிச்சிடுச்சுக”
“ஏன்டி அதுக்குன்னு அரை கிலோ ஸ்வீட்டா?” பார்வை மையலாக மனைவி முகத்தை அளவிட்டது.
“சரி விடுங்க, எல்லாரும் இருக்கப்போ எதுவும் சொல்லவும் முடியாது… வெளிய போய் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க, நான் காளைகளுக்கு வாழைப்பழத்தை குடுத்துட்டு வர்றேன்”
“வெளிய எல்லாம் போக வேணாம், உனக்காக பால்கோவா ஸ்பெஷலா செஞ்சு வாங்குனேன் அது கிட்சன்ல மேல் ஸ்லாப்ல இருக்கு எடுத்து குடு, நான் பசங்களுக்கு குடுத்துக்குறேன்” தேவா கூறவும் முகம் சூம்பி போனது பைரவிக்கு.
பால்கோவா அவள் விரும்பி உண்ணும் இனிப்பு, அதிலும் தேவா மதுரையில் ஒரு கடையில் வாங்கி வரும் அந்த இனிப்பிற்கு அவளும் அவள் நாவும் அடிமைகள்.
“ம்ம்ஹ்ம் நான் தர மாட்டேன்” சோகமாக மறுத்தாள்.
“சக்கரை இனிப்பில்லாம எப்படி பந்தி வைக்கிறது? நான் உனக்கு வேற வாங்கி தர்றேன்டி”
“ம்ம் அப்டி எப்படி எனக்குனு வாங்கிட்டு வந்து வேற யாருக்கோ குடுக்குறீங்க?”
கணவனிடம் சண்டையிட்டு கொண்டிருக்கும் நேரமே, “எம்மா இந்த வெத்தலை பாக்கு எங்க வச்சிருக்க?” இளங்கோவன் குரல் வெளியில் கேட்டது.
“நான் வந்து எடுத்து தர்றேன் தாத்தா” தன்னை முறைத்து சென்ற மனைவியை பார்த்து சிரித்துக்கொண்டவன் அவளோடு தானும் சமையலறை வந்தான்.
தேவா உள்ளே வந்த நேரம் பைரவி வெற்றிலை பையோடு வர, அவளிடமிருந்து வாங்கி, “நீ மேல இருக்க ஸ்வீட்ட எடு”
தாத்தாவிடம் சென்று, “பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் உள்ளையே இருக்கு தாத்தா” அவரிடம் கொடுத்து மீண்டும் சமையலறை வர, அவன் முகத்தையே பார்க்காமல் அவன் கையில் இனிப்பை திணித்து வெளியேறவிருந்த மனைவியின் வயிற்றோடு பிடித்து அப்படியே சமயலறையினுள் இழுத்து சென்றான்.
“சக்கரை சக்கரை… காரமான சக்கரை” வாஞ்சையாக மனைவியை திட்டி ஒரு சிறு இனிப்பை மனைவிக்கு ஊட்டிவிட்டு, “என் சக்கரைக்கு அப்றம் தான் எதுவும்” எதிர்பாராத நேரம் கன்னத்து முத்தம் ஒன்றை கொடுத்து வெளியேறியிருந்தான்.
சிவப்பேறிய கன்னங்களையும் சிரித்த ஆதாரங்களையும் சரி செய்து வெளியில் வரவே பைரவிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. பந்தியில் சென்று இனிப்பை கொடுத்து கொட்டகைக்கு சென்றாள்.
வழக்கம் போல தனியாக செல்லாமல் வீட்டின் சிறுவர்கள் அனைவரையும் அழைத்து சென்றிருந்தான் தேவா. மூன்றாக இருந்த காளைகள் இப்பொழுது எண்ணைக்கையில் வளர்ந்து பத்து காளைகளாக இருந்தது.
குழந்தைகள் ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்க அவர்களுக்கு அருகில் ஒவொருவரை நிறுத்தியிருந்த சற்று தொலைவில் நின்று அனைவரையும் பார்த்தான் தேவா.
“ஷ்ரவன் மாட்டுக்கு முன்னாடி வா பின்னாடி போகாத” தந்தையாய் திருத்தம் கூறி கையை பின்னால் கட்டி நின்றான்.
பயம் அறியாத வயதிலே பிள்ளைகளுக்கு மாட்டை காட்டி பயத்தை திணிக்காமல் பின்னால் நின்று ஊக்கம் கொடுப்பான். அதுவே அவர்களுக்கு பழகியிருக்க முதலில் பயந்த பெரியவர்கள் தேவாவின் அணுகுமுறையில் நம்பிக்கை வந்து பயத்தை தளர்த்தியிருந்தனர்.
மாடு கட்டியிருந்தால் மட்டுமே பிள்ளைகளை அருகில் விடுவான், அதிலும் அருகில் ஆட்கள் மூவர் நாள்வரை வைத்தே. மற்ற நேரம் யாரும் இன்றி பிள்ளைகளை காளைகள் அருகில் செல்ல அனுமதிப்பதில்லை.
“ப்பா… ப்பா… காளையன் பழம் நோ சொல்றான் ப்பா” ஒரு வாழைப் பழத்தை காளையன் வாயினருகே கொண்டு சென்று வம்படியாக உண்ணுமாறு நின்றான் வேதவ். காளையனோ அசராமல் பெரிய கோவில் தூணை போல் கம்பீரமாக அசையாது நின்றான்.
“மாமா என்ன பாத்திங்களா நான் குடுத்த பழத்தை லிங்கம் வாங்கிட்டான்” உல்லாசமாக கை தட்டி ஆர்பரித்தான் குணாவின் ஐந்து வயது மகன்.
“சிங்கம்டா நீ” தேவா சிரிக்க, தந்தையின் வேட்டியை பிடித்து இழுத்தான் வேதவ்.
கீழே குனிந்து என்ன என தேவா கேட்க, “பருத்தி கொட்டை தாங்க” என்றான் குட்டி கண்களை சிமிட்டி.
அப்படியே அவன் அன்னையின் மறு உருவம் இவன். ஒரே கண் அசைவில் பைரவி தேவாவை மயக்குவது போல் இவனும் மயக்கிவிடுவான்.
இப்பொழுது கூட அதிகாரம் தூள் பறக்க திமிராக கேட்கும் மகனை பார்த்து சிரிப்பு தான் வந்தது. தேவாவின் முட்டி வரை தான் உயரமிருப்பான் ஆனால் தந்தையை விட பெரியவன் தோரணையில் இருக்கும் செயல்கள்.