வாகனத்திலிருந்து யாரும் இறங்காமல் நிற்க, விக்னேஷ் தான் இறங்கி தாத்தாவிடம் சென்றான். அவரின் பதட்டத்தை புரிந்து, “இந்த வீடு தானா? இருங்க நான் முதல போய் பேசுறேன்”
தானாக முதலில் மூடியிருந்த கேட்டை திறந்து காலிங் பெல் அடிக்க, வாயில் வேப்பங்குச்சியோடு வந்து நின்றான் தேவா, விக்னேஷை மேலும் கீழும் பார்த்து. உள் பனியன் அணிந்து முகத்தின் இடது பக்க கன்னத்தில் ஒரு குட்டி பேண்ட்ஏஜ், ட்ராக் பாண்டில் பாதிக்கு மேல் மணல் பரவி அழுக்காக நின்றான்.
“என்னடா பொண்ணு பாக்க வந்த கெழவி மாதிரி இந்த பார்வை பாக்குற? யார் வேணும் உனக்கு?” தோற்றத்தில் இருந்த சந்தேகம் தேவா பேசவும் உறுதியானது விக்னேஷுக்கு.
கைபேசியை எடுத்து தாத்தாவிற்கு அழைத்தவன் வாகனத்தை திரும்பி பார்த்து, “அய்யப்பா(தந்தையின் தந்தை) நல்லா விசாரிச்சீங்களா இந்த வீடு தானா?”
பேரனின் கேள்வியிலும், இவனை என்ன செய்யலாம் என யோசித்து நின்ற தேவாவின் தெனாவெட்டு பார்வையும் தேவா தான் ஏதாவது பேசியிருக்க கூடும் என தோன்றி சிரிப்பு வந்தது பெரியவருக்கு.
“சரியான வீடு தான்” எனவும் கைபேசியை அனைத்தவன், “பொண்ணு பாக்க வரல பையன் பாக்க வந்துருக்கோம், வழி விடு”
தேவாவை தள்ளி நிறுத்தி வீட்டிற்குள் புகுந்த விக்னேஷ் வீட்டினை அளக்க, “பையனா? ம்மா எனக்கு எதுவும் பொண்ணு பாத்துருக்கியா?”
ஆசையாக ஹாலிலிருந்தே அன்னையிடம் கேள்வி எழுப்ப, “உன்ன எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க?” நக்கலாய் வந்தது பதில் சயமலரையிலிருந்து.
“டேய் உள்ள ஷேர் எதுவும் இருந்தா எடுத்து போடு, ஆமா அத்தை மாமா எங்க?” உரிமையாய் ஹாலிலிருந்த பொருளை எல்லாம் சுத்தப்படுத்தி, ஆங்காங்கு இருந்த பொருட்களை எல்லாம் ஓரிடத்தில் ஒதுக்கி வைத்தான்.
“யார்ரா நீ? கிளீனிங் கம்பெனில இருந்தெல்லாம் என் அப்பா வர சொல்ல மாட்டாரே, டேய் வேலை செய்யாத, சம்பளம் தர மாட்டாய்ங்க இவிங்க”
சிதறி கிடந்த நியூஸ் பேப்பரை எடுக்க போனவன் கையை பிடித்து தேவா அட்வைஸ் சொல்ல, அவன் கையை உதறிய விக்னேஷ், “நான் கிளீன் பண்ண வரலடா, சமாதானம் பேச வந்துருக்கேன்”
ஹாலில் திடீரென வேற்று மனிதன் குரல் கேட்க வெளியில் வந்து நாயகி பார்த்த பொழுது மகன் கை காப்பாய் முறுக்கி நிமிர்ந்த நெஞ்சோடு,
“சமாதானம் பேசவா? இப்ப தானே புரியாது, அந்த அய்யனார் வீட்டுக்கே ஆள அனுப்பிட்டானா? நல்லா கேட்டுக்கோ, பிரச்னை வந்தது வந்தது தான். என் கால்ல விழுந்தாலும் அவன் பதவியை பறிச்சே தீருவேன், ஒருதடவை வச்ச வாக்கு மாறவே மாறாது” மீசையை முறுக்கி சண்டைக்கு சென்ற தேவாவின் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தினான் விக்னேஷ்.
“எந்த வாக்கு குடுத்தாலும் பல் வெலகிட்டு வந்து குடு போ”
“என்னாடா வீட்டுக்குள்ள புகுந்து லந்தா?” தேவா இன்னும் குரலை உயர்த்த மாடியிலிருந்து வந்த ராஜரத்தினத்தை பார்த்ததுமே கண்டுகொண்டான் விக்னேஷ்.
“சித்தப்பா” ஆசையாய் விக்னேஷ் கூறவும், தன்னுடைய அண்ணன் சாயலில் நின்ற மகனை பார்த்ததும் சொல்ல முடியாத சந்தோசம் வார்த்தைகளை உருவாக்க விடவில்லை.
“விக்கி?” கேள்வியாய் அவனிடம் கேட்க, “சித்தப்பா என்ன நியாபகம் வச்சிருக்கீங்களே” வேக நடையோடு அவரை சென்று கட்டிக்கொண்டான்.
“எப்டிடா இருக்க? இவ்ளோ நல்லா வளந்துட்ட?” ஆச்சிரியமாக அவனை மேலும் கீழும் பார்த்தார்.
“நல்லா இருக்கேன் சித்தப்பா, நான் வளந்துட்டேன், நீங்களும் வளந்துட்டீங்க” சிறிது தூக்கியிருந்த அவர் தொப்பையை காட்டி சிரிக்க, ராஜரத்தினமும் சிரித்தார்.
“என்னமா மேல்(male) டிராகன்க்கு இப்டி எல்லாம் பேச தெரியுமா?” தேவானந்த் வியப்பாக அன்னையிடம் கேள்வி எழுப்ப, அவரோ அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தார். எத்தனையோ முறை கணவன் அவர்கள் வீட்டின் முன் மணி கணக்காக நின்றும் பேசாதவர்கள் இன்று தானே வந்து பேசவும் சற்று கலகமாகவே இருந்தது.
“அதெல்லாம் வயசுக்கு வர்றதுடா”
விக்னேஷிடம் பதில் சொல்ல, தேவா தந்தையை மேலும் கீழும் பார்த்து, “இவரென்ன பொம்பள புள்ளையா வயசுக்கு வர்றதுக்கு?” அதி முக்கியமான கேள்வியை கேட்க, தவறாமல் ரத்தினம் மகனை தீயாய் முறைத்தார்.
அவன் பேச்சில் சிரித்த விக்னேஷ், “ஏன் சித்தப்பா இவன் எப்பையுமே இப்டி தான் பேசுவானா?”
“ஆமா அப்டியே உங்க அய்யப்பா மாதிரி” சிறு எரிச்சல் அவர் முகத்தில்,
“ஆமா விக்கி நீ மட்டும் தான் வந்தியா, வேற யாரும் வரலையா?”
வாடிய முகத்தோடு அவர் கேட்க, ரத்தினத்தின் கையை பிடித்து வாசலுக்கு அழைத்து சென்றவன், “அங்க நிக்கிற மூணு கார்லயும் நம்ம வீட்டு ஆளுங்க தான். உங்க அப்பா அம்மா முதற்கொண்டு”
வாகனத்தை காட்டி அவர் முகம் பார்த்த விக்னேஷ் முகமே அவ்வளவு உணர்ச்சிகளை காட்டியது, ராஜரத்தினம் அதை விட ஒரு படி மேலே சென்று சில துளி கண்ணீரை உதிர்த்தார்.
“சித்தப்பா, எல்லாரும் உங்களுக்காக தான் வைட்டிங்”
அவன் குரலில் தெளிவுற்றவர், “நாயகி வா அப்பா வந்துருக்காங்க” சத்தமாக அழைக்க, கணவனின் அழைப்பில் அதிர்ச்சியுற்றவர் அப்படியே நிற்க,
“நாயகிக்கு இனிமேல் தான் மாமியார் கொடுமை எல்லாம் இருக்க போகுது” தேவாவின் சிரிப்பை கேட்டு அவன் கையில் அழுத்தமாக கிள்ளி வெளியில் விரைந்தார்.
நாயகி வரும் முன்பே ரத்தினம் வாகனத்திற்கு சென்றிருக்க, அவரை பார்க்கும் ஆவலில் மொத்த குடும்பம் அவரை சூழ்ந்திருந்தனர். “நீ தான் விக்னேஷ் ஆஹ் பா?”
“ஏன் இவ்ளோ நேரம் உங்க புருஷன் பேசுனப்ப தெரியலையா?” தேவா வேண்டும் என்றே தீயை மூட்ட,
“சும்மா இரு தேவா” அதட்டி, “உள்ள போ விக்கி நான் வர்றேன்” தன்னுடைய பங்கிற்கு நாயகி புகுந்த வீட்டினரை சென்று வரவேற்க, அந்த கூட்டத்தை பார்த்த தேவா விக்னேஷிடம்,
“யாரு அந்த பொண்ணுங்க?” பற்களை காட்டி அவன் கேட்ட விதத்திலே விக்னேஷ் தேவாவை எடை போட்டுவிட்டான்.
“ரெண்டும் அழகா இருக்கேடா, நீ இதுல யாரையாவது புடிச்சுக்குட்டியா?”
இந்துமித்ரா மேல் பார்வையை பதித்த விக்னேஷ், “இல்லை” என்றான் இறங்கிய குரலில்.
“ரைட்டு, அத்தை பொண்ணுங்க வந்துருக்குறப்ப குளிச்சா தானே நல்லா இருக்கும்? நான் குளிக்க போறேன்”
நகர முயன்ற தேவாவை பிடித்தவன், “அய்யப்பா, அய்யம்மாவ பாத்துட்டு போடா” என்றான் விக்னேஷ்.
“இதுனால தான் நீ இன்னும் சிங்கள்லா இருக்க, அத்தை பொண்ணுங்க தான் முக்கியம்” விறு விறுவென மாடி நோக்கி பாட்டு பாடிக்கொண்டே சென்ற தேவாவை பார்த்த விக்னேஷ் சிரித்துக்கொண்டான்.
குளிக்க செல்லும் பொழுதே சகோதரியை எழுப்பி கீழே போகுமாறு கூறி, தானும் குளித்து வந்த பொழுது மொத்த வீடும் ஜெகஜோதியாக மின்னியது. அதுவும் அவன் அத்தை பெண்கள் இருவரும் தேவாவின் கண்களுக்கு தேவதைகளாகவே தெரிந்தனர்.
எந்த முக சாயமும் பூசாமல் பளிச்சென மின்னிய அவர்கள் முகம் ஒரு பக்கம் மனதை ஈர்க்க, அத்தை மகள் என்ற உரிமை வேறு விதமாக அவன் சேட்டையை தூண்டியது.
அனைவரையும் உபசரித்து, பெரியவர்கள் இருவரிடமும் மனதார ஆசீயையும், கெஞ்சலையும் பெற்றவன் அமைதியாக நழுவி நின்றது அத்தை மகள்களுக்கருகில் தான்.
மகனின் திருவிளையாடலை உணர்ந்த ராஜரத்தினம், “தேவா போய் கறி எடுத்துட்டு வா” என்றார்.
தந்தையை முறைத்தவன் பிறகு சிரிப்போடு, “நான் குளிச்சிட்டேன் நைனா, நீங்க போங்களேன்” என்றான்.
“சனி ஞாயிறு நீ குளிக்க மாட்டியே இன்னைக்கு ஏன்டா குளிச்ச?”
ஆச்சிரியமாக மகனை மேலும் கீழும் அவர் பார்க்க, அவனுக்கருகில் அமர்ந்திருந்த இரு பெண்களும் சத்தமாக சிரிக்க, மற்றவர்களும் உடன் சிரித்தனர்.
“நம்ம வீட்டுக்கு தான் பொண்ணுங்க வந்துருக்காங்களே” சகோதரியும் உடன் வம்பிற்கு இழுக்க இதற்கு மேல் அங்கிருந்தால் சேதாரம் தனக்கு தான் என புரிந்த தேவா, “விக்கி வாடா, நல்ல சாப்பாடு வாங்கி தர்றேன்” என்றவன் அனைவரிடமும் விடைபெற்று,
“ம்மா பாய்ய ஹோட்டல்ல இருந்து மதிய சாப்பாடு எல்லாம் குடுக்க சொல்றேன், நீங்க சமைக்க வேணாம்” என வெளியில் நகர்ந்தான் விக்னேஷோடு.
வாகனத்தை வெளியில் எடுக்க, “தேவா இந்த பைக் இங்க எல்லாம் இருக்கா?”
“இல்ல டா, நானே இத சென்னைல ஒரு மாசம் அலைஞ்சு வாங்குனேன், அதுக்கும் மேல இருபதாயிரம் செலவு பண்ணேன், நீ ஓட்டு இத”
யமஹா rx 100 வாகனம் பழைய வகை புளொட், அதன் தயாரிப்பு நின்ற போதும் அதன் மீதுள்ள ஆண்களின் ஆசை இன்றளவும் இன்னும் நிலைத்திருக்கும். இந்த வாகனத்தில் இருக்கும் வசதி பல லட்சம் கொட்டி வாங்கும் இன்றைய வாகனங்களுக்கு கிடையாது.
ஆசையாய் வாங்கி ஓட்டிய விக்னேஷை வழிநடத்தி முதலில் ஒரு பெரிய ஹோட்டலில் வீட்டினருக்கு எந்த வகை உணவுகள் எல்லாம் பிடிக்கும் என பார்த்து பார்த்து ஆர்டர் கொடுத்து அதை வீட்டிற்கு மதியம் ஒரு மணிக்கு அனுப்புமாறு தகவலும் கொடுத்து கிளம்பினார்கள் அயன்தென்கரைக்கு.
“எங்க போறோம்?” – விக்னேஷ்
“சொர்கத்துக்கு” விஷமமாக கூறி தேவா வாகனத்தின் வேகத்தை கூட்ட அலறியது விக்னேஷின் இதயம்.
“வண்டிய நிறுத்து நீ, நான் பஸ் புடிச்சு வீட்டுக்கு போறேன்” என அரை மணி நேரமாக வித விதமாக கெஞ்சி கேட்டும், வாகனத்தின் வேகத்தை சிறிதும் குறைக்கவில்லை தேவா.
அரை மணி நேர பயணத்திற்கு பிறகு லாவகரமாக கிளை பாதை ஒன்றில் வாகனத்தை தேவா விடவும் விக்னேஷின் மொத்த கவனமும் தனக்கு இரண்டு பக்கமும் வளர்ந்திருந்த வயல், தோப்பு என பச்சை உலகமாக காட்சியளிக்கும் சிற்ரூரினுள் பயணித்தது.
ரோட்டின் ஓரமாகவே ஒரு குட்டையை கடக்க அதனுள் உல்லாசமாக துள்ளி குதித்து விளையாடும் சிறுவர்களை பார்த்து தானும் அவர்களுடன் விளையாட ஆசை கொண்டது விக்னேஷின் மனம்.
“என்ன ஊர் இது?”
“அயன்தென்கரை, என் தாத்தாவோட ஊர். அம்மா ஸ்கூல் எல்லாம் சோழவந்தான்ல தான் படிச்சாங்க, காலேஜ் மதுரைல. அந்த நேரத்துல இருந்தே அப்பா அம்மாவை பாத்துருக்கார். அம்மா அப்றம் வேலைக்கு போன காலேஜ் பாத்து வேணும்னே சேந்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கார் உன்ர சித்தப்பா”
“என்னது காலேஜ்ல இருந்தேவா?” வியந்தான் விக்னேஷ்.
“ஆமாடா, ஊரையே ஏமாத்திருக்காரு” இருவரும் பேசிக்கொண்டே ஊரினுள் நுழையும் பொழுதே தேவாவை பார்த்து பலர் வணக்கத்தை வைத்த வண்ணம் இருக்க, “அடிக்கடி வருவியா தேவா?” என்றான் வியப்பாக.
“வேலை இங்க தாணு முடிவானதும் எப்படி வராம இருக்குறது?” சிரித்தான் தேவா.
“வேலையா?”
“ஆமா இங்க தான் ரைஸ் மில், தோப்பு, வயல், கோயற் ரோப் தயாரிக்கிற பேக்டரி எல்லாம் நான் பாக்குறேன்”
“ஏன்டா படிக்கலயா?”
“ஏன் படிச்சா இந்த வேலை எல்லாம் பாக்க கூடாதா?” – தேவா
“பாக்கலாம் ஆனா சித்தப்பா சித்தி ரெண்டு…”
“யய்யா மோட்டார்ல கோளாறு, வந்து என்னனு பாத்துடேன்” ஒரு பெரியவர் உரக்க பேச, நின்றான் தேவா.
“காலைல தண்ணி விட முடியலையா?”
“இல்ல தம்பி விட்டாச்சு, மாந்தோப்புக்கு விடலாம்னு பாத்தா ஓடல”
“சரி ண்ணே நான் பாத்துக்குறேன், அப்றம் இது என் பெரிப்பா பையன், விக்னேஷ்” சகோதரனுக்கும் அறிமுகம் வைத்தான்.
“வாங்க தம்பி, ஒருவழியா எல்லாரும் சேந்தா சரி தான் ய்யா, நான் சாயந்தரம் வர்றேன்” என அவர் நகர மேலும் வீட்டை நோக்கி போனான் தேவா.
விசாலமான அந்த வீட்டினுள் நுழையும் பொழுதே அதன் பழமையை பார்த்து வியந்தான் விக்னேஷ். அவன் வாகனத்தின் ஓசை கேட்டே வெளியில் வந்த வேலையாள் ஒருவர், “தம்பி அய்யாவும் அம்மாவும் ஒரு விசேஷத்துக்கு திருச்சி வர போயிருக்காங்க, உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க” என்றார்.
யோசனையாக, “அப்டியா? எதுல போயிருக்காங்க?”
“கார்ல தான் தம்பி, கதிரேசன் தான் டிரைவர்”
“சரிங்க ண்ணே, நான் தோட்டம் வர போய்ட்டாரேன். எனக்கு நாட்டுக்கோழி கொழம்பு வைக்க முடியுமா?”
“டேய் நீ வீட்டுல ரெஸ்ட் எடு, படில ஏறுனா லாஸ்ட் ரூம் என்னோடது. இரு நான் ரெண்டு மணி நேரத்துல வந்துடுவேன்”
தேவா அவன் களைப்பில் இருப்பான் என வீட்டில் தங்க வைக்க முனைய பெரியவன் உன்னுடனே வருகிறேன் என அழைத்து செல்ல வற்புறுத்தினான். தோப்பிற்கு சென்று மோட்டாரை வேலை பார்க்க எலக்ட்ரிசியன் ஒருவனை அழைக்க, அந்த பக்கம் பதிலே இல்லாமல் போனது.
அதனால் தானே சட்டையை அவிழ்த்து வைத்து பொறுமையாக மோட்டாரை சரி பார்த்து ஒரு மணி நேரத்தில் ஓடவும் வைத்தான்.
சகோதரனுக்கு பதில் கூறிய தேவாவின் கண்கள் அவன் பின்னே சிரிப்போடு விழ திரும்பி பார்த்தான் விக்னேஷ், ஒரு பெண். சில நிமிடங்களுக்கு முன்பும் அந்த இடத்தில் தான் இருந்தாள், இப்பொழுதும் அதே போல் தான் ஆனால் கைபேசியில் யாருடனோ பேசும் பாவனை.
“ஏய் செகப்பி” சத்தமாக தேவா அழைத்ததும் கைபேசியை கீழே வைத்தவள்,
“என்ன மாமா?” என்றாள் உற்சாகமாக.
“மாமனை ஏன் ரொம்ப நேரமா வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டே இருக்கவ?”
“என் மாமா நான் பாப்பேன்” அந்த பெண்ணும் அதே போல் சடைத்துக்கொண்டாள்.
“பார்றா” எழுந்து அவள் அருகில் சென்றவன் பல அடி தூர இடைவேளை விட்டு, “நல்ல யோசனை சொல்றேன், நாம கல்யாணம் பண்ணிக்கலாம் நீ காலம் மொத்தமும் பாத்துட்டே இருக்கலாம்” என்றான் ரகசிய குரலில்.
“கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்ற ஆனா ஏன் இவ்ளோ மெதுவா சொல்லணும்? அந்த மேனா மினுக்கி வாசுகிகிட்டையும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே சொல்லிருக்க?”
“ஏய் அவ உன்கிட்ட பொய் சொல்லிருப்பா டி” – தேவா
“இனிமேல் அவளை பாக்க மாட்டேன்னு சொல்லு, உனக்கு ஓகே சொல்றேன்”
கண்டிஷனோடு அவள் நிற்க தேவாவோ விடுவதாய் இல்லை, “அப்டி இல்ல செகப்பி, நம்ம ஊர் பிள்ளை, போறப்ப வர்றப்ப எல்லாம் பாத்தா பேசாம இருக்க முடியாது, அவ அப்பனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். என் தாத்தாகிட்ட சண்டைக்கே வந்துடுவான்”
இவன் நிற்கப்போவதில்லை என புரிந்த விக்னேஷ், “எனக்கு பசிக்கிது டா” எனவும், “செகப்பி மாமாக்கு ஒரு முத்தம்”
“டேய்” பதறினான் விக்னேஷ். ஆனால் அவர்கள் இருவரும் அசரவில்லை, அந்த பெண் தேவாவிற்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்க, இவன் வெட்கத்தோடு வண்டியை எடுத்தான்.
“ஒரு பொண்ணையும் விட்டு வைக்க மாட்டியா டா நீ?”
“மொத்த ஊரும் முறை பொண்ணுங்க தான், நான் என்ன பண்ண?” என கேட்டு தேவா சிரிக்க விக்னேஷ் தன்னுடைய விதியை எண்ணி நொந்துகொண்டான்.