மதுரை சென்று வந்த அர்ஜுனனின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் இருப்பதை கவனித்த பார்வதி மகனிடம் சென்று பேசினார், “எனக்கும் அதே மாதிரி தான் ம்மா இருக்கு, இந்த ஒரு வாரமா அய்யா ஏதோ ரொம்ப சந்தோசமா இருக்காங்க”
“நமக்கு தெரியாம எதையாவது மறைக்கிறாரோ?”
புருவத்தை சுருக்கி மகனிடம் அன்னை கேட்டுக்கொண்டிருக்க, “என்ன ரகசியம் பேசுறீங்க?” காலை வாக்கிங் சென்று வந்த அர்ஜுனனுக்கு அன்னை மகனின் தீவிர பேச்சில் கேள்வி வந்தது.
“இல்லங்க இன்னைக்கு சரக்கு என்ன வந்ததுன்னு கேட்டுட்டு இருந்தேன்”
“சரி சரி, எல்லாரும் வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” அனைவரையும் வீட்டின் முற்றத்தில் அமர வைத்திருந்தார்.
இரண்டு மகள்களின் குடும்பம் கூட வந்திருந்தது. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் எவருக்கும் அர்ஜுனனிடம் என்ன என கேள்வி கேட்க தைரியமில்லை.
அனைவரது பார்வையையும் கண்டும் காணாமலும் தவிர்த்தவர், “யாருக்கெல்லாம் ரத்தினத்தை பாக்கணுமோ அவங்க இன்னும் அரை மணி நேரத்துல இங்க வந்து நிக்கணும்” வேலை முடிந்ததென மூத்தவர் கிளம்பி சென்றதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தது எல்லாம் ஒரு சில நொடிகள் தான். அவரவர் வீட்டிற்கு கிளம்ப ஓடினர்.
சந்தோசமாக தங்கள் வீட்டிற்குள் வந்த சீதா முதலில் செய்தியை கணவனிடம் கூற வேண்டும் என்ற எண்ணத்தோடு கைபேசியை தேட, அவரின் கைபேசிக்கு அருகில் அமர்ந்திருந்த மகளை பார்த்தார்.
அமைதியாக ஒரு மூலையை வெறித்தபடி கால்களை கட்டி சோபாபில் அமர்ந்திருந்தாள், பைரவி. கடந்த சில காலங்களாக அந்த முகத்தில் ஒரு முறையாவது வேதனையை, வலியை தேடி பார்த்த சீதாவிற்கு எப்பொழுதும் கிடைக்கும் ஏமாற்றமே இன்றும் கிடைத்தது.
“போன் எடுத்தியா?” அதட்டலாக கேட்ட அன்னையின் குரலில் முகத்தை அவர் பக்கம் திரும்பியவள் இல்லை என தலையை அசைக்க, “அப்றம் ஏன் அது உன் பக்கத்துல இருக்கு?” அடுத்த கேள்வியை சந்தேகமாக வைத்தார்.
“அப்பா கால் பண்ணாங்க”
வெறுமையாக அவள் கூறிய பதிலில் கண்கள் கலக்கியவர், “உன்ன எடுக்காத சொல்லிருக்கேன்”
“சின்ன மாமாவ தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு முடிவெடுத்துட்டாங்க போல, மதுரைக்கு போக போறோம்”
“நான் வரல” – பைரவி
“ஏன்?” – சீதா
“எனக்கு வர புடிக்கல?” – பைரவி
“உனக்கு எங்க தான் வர புடிக்கும்? உன்ன மட்டும் வீட்டுல தனியா விட்டுட்டு போக முடியாது” மகளை பார்த்து முறைத்தார் சீதா.
அன்னையின் பதிலில் அவரை விழி அகலாமல் பார்த்தவள், “எப்பயும் பண்ற மாதிரி என்ன வீட்டுல பூட்டி சாவி கொண்டு போங்க”
“ஏன்டி இப்டி இருக்க நீ? உன்னால நாங்க பட்ட அவமானம் போதாதா? உன்னால எங்களுக்கு சந்தோசம் தான் குடுக்க முடியல, நிம்மதியாவது கெடுக்காம இரேன். ஒரு விசேஷத்துல தல காட்ட முடியல, எங்க போனாலும் உன்ன பத்தி தான் கேக்குறாங்க” அன்னையின் புலம்பலில் பதில் பேசாமல் அமைதியாக பைரவி அமர்ந்திருந்தாள்.
“உனக்காக உன் அண்ணனும் எங்கையும் போக முடியல, ஆக மொத்தம் எங்க எல்லாரையும் அழிச்சிட்டு நீ சந்தோசமா தான் இருக்க”
மகளை திட்டிக்கொண்டே சமயலறைக்குள் சென்ற சீதா உணவு எதுவும் தொடாமல் இருப்பதை கண்டு இன்னும் கோவம் வந்தது, “இப்டியே சாப்புடாம இருந்து எங்களை சாகடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?” ஆத்திரமாக வரவேற்பறை வந்து பார்க்க பைரவி அங்கு இல்லை.
“என்னமோ போ, என்னைக்கு நீ இந்த வீட்டை விட்டு போறியா அன்னைக்கு தான் எங்களுக்கு சந்தோசம்” கண்ணீரை புடவையில் துடைத்த சீதா மீண்டும் சமயலரையில் நின்று அழுதுகொண்டே கிளம்பும் வேலையையும் பார்த்தார்.
மகளை பார்த்து தாய் பேச வேண்டிய வார்த்தைகளா இவை? சாகும் நிலையில் இருந்தாலும் பேசவே கூடாது, ஆனாலும் மனம் ஆறாமல் அவள் மேல் உள்ள கோவத்தை வார்த்தைகளில் கொட்டி அரை உயிராய் இருந்தவளை இன்னும் வதைத்தார் பைரவியின் அன்னை.
கணவரோ, மகனோ இப்பொழுது பேசியதை கேட்டால் ஆத்திரம் கொள்வார்கள் என்பதால் தான் அவர்கள் வேலைக்கு சென்ற பிறகு பைரவி மனம் மாறும் வரை பேச்சாலே அவளை வேறு வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்து தானும் மாண்டு, மகளையும் வார்த்தை கொண்டு கொல்கிறார்.
தன்னுடைய அறைக்குள் வந்த பைரவி கதவில் சாய்ந்து மடிந்து கண்களை மூடி அமர்ந்திட விழிகளிருந்து நொடி நிற்காமல் அருவியாய் ஓடியது கண்ணீர்.
காதினுள் அத்தனை வார்த்தைகள், பல குரல்கள், பல அழுகை சத்தம், சில சிரிப்பு சத்தம் என ஓய்ந்து போன மனதில் பயம் பெருகி, நிம்மதி தொலைந்து பல மாதங்கள் ஆகியது. கண்ணில் கூர்மையான பொருள் படும் நேரமெல்லாம் அதன் பதத்தை பார்க்க தூண்டும் மூளையை என்ன சொல்லி அடக்குவதென்று தெரியவில்லை.
இதை எல்லாம் விட அன்னை பார்க்கும் சந்தேக பார்வை, பாரமாக இருப்பதாக அவர் கூறும் வார்த்தைகள் என வார்த்தைகள் உரைக்கா வலியை என்ன செய்து ஆற்றுவதென்று தெரியாமல் தவிப்பாள்.
‘அழுகாத’ மூளை கூறும் கட்டளை வார்த்தையை கேட்டு எழுந்து அவள் அறையில் இருக்கும் பழைய ரேடியோவை ஆன் செய்து அதன் அருகிலே கையை தலைக்கு கொடுத்து படுத்துகொண்டாள் கண்களை மூடி.
சந்தோஷை பைரவிக்கு துணையாக சீதா இருக்குமாறு கூறிவிட்டார், ஆக அவர்களை தவிர்த்து அடுத்த சில நிமிடங்களில் மொத்த குடும்பமும் மூன்று வாகனத்தில் கிளம்பியிருந்தனர் மதுரைக்கு.
அனைவரின் மனதிலும் குறைந்தது ஒரு கேள்வியாவது இருந்தது, ஆனால் அர்ஜுனனின் முகப்பொலிவு அவர்களை அமைதியாக்கியிருந்தது.
முதலில் சென்ற அர்ஜுனன் அமர்ந்திருந்த வாகனம் மதுரையை அடைந்த பொழுது ஒரு கடையில் வாகனத்தை நிறுத்தி கண்களில் தெரிந்த அத்தனை தின்பண்டங்கள், பழங்களை வாங்கி வைத்தது மட்டும் போதாமல், ஒரு கடையில் நிறுத்தி அவரே பார்த்து பார்த்து துணிகளை வாங்கினார்.
அனைத்தையும் வேடிக்கையாளராகவே இருந்து பார்த்த குடும்பத்தினருக்கு சொல்லில் வடிக்க முடியாத ஆனந்தம்.
மீண்டும் வாகனத்தினுள் வந்தமர்ந்த கணவனிடம், “என்ன இதெல்லாம்?” என்றார் சிரிப்போடு.
கணவன் பதில் சொல்லாமல் மனைவியை பார்த்து சிரிக்கவும், “எனக்காக தான்னு சொல்லாதீங்க, கண்டிப்பா நான் நம்ப மாட்டேன்” ஆனந்தத்தில் பார்வதிக்கு அழுகையே வந்துவிட்டது.
“ப்ச் என்னமா இது?” இயலாமையோடு மனைவியை பார்த்தார். உடன் அமர்ந்திருந்த மகனும் மருமகளும் கூட பார்வதியை தடுக்கவில்லை.
எத்தனை வருடங்களாக மகனை பார்க்காமல் தவித்திருக்கும் அவர் மனம், அந்த கவலையை எந்த கணவர் வீம்போடு தவிர்த்து வந்தாரோ அதே கணவர் இன்று உன் மகனோடு சேர்த்து வைக்கிறேன் என அழைத்து செல்வது எத்தனை இன்பமாய் உள்ளதென்று சொல்ல முடியவில்லை அவரால்.
இருபத்தி எட்டு வருடங்கள் முன்னால் மதுரையில் படித்து அங்கேயே ஒரு கல்லூரியில் வேலையும் பார்த்து வந்த அர்ஜுனன் இளைய புதல்வர் ராஜரத்தினம் அவருடன் அதே கல்லூரியில் பணிபுரியும் நாயகி என்பவரை காதலிப்பதாக கூறி வந்து நின்றார்.
தன்னுடைய விருப்பத்தை கூறும் பொழுது கூட, என் பேச்சை என் மகன் கேட்பான் என்ற எண்ணத்தில் வேறு வரனை உடனே பார்க்க துவங்கினார்.
விஷயமறிந்த ராஜரத்தினம் வந்து தந்தையிடம் வாதாடினார், வீட்டில் தன்னுடைய பேச்சிற்கு மறு பேச்சு இதுவரை வாராமல் இருக்க இன்று முதல் முறை மகன் வந்து பேசுவதில் அவரின் காதல் தீவிரத்தை உணர்ந்து,
“நீ வேலைக்கே போக வேணா, வந்து கடைய பாரு இல்லையா நம்மூர்ல ஒரு காலேஜ்க்கு வேலைக்கு போ”
“எனக்கு தெரியும் அய்யா உங்களுக்கு இதெல்லாம் புடிக்காதுன்னு, ஆனா நாயகி நம்ம ஆளுங்க தானே, அப்டி இருக்கறப்ப உங்களுக்கு ஏன் ஏத்துக்க இவ்ளோ தயக்கம்?”
“நீ உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்க அப்றம் உனக்கு அப்பன்னு நான் எதுக்கு ரத்னம் இருக்கேன்?”
தன்னுடைய அகங்காரத்தை பிள்ளையின் மகிழ்ச்சியை விட பெரிதாக நினைக்கும் தந்தையிடம் அதற்கு மேல் வாதாட விருப்பமில்லாமல் அமைதியாக மதுரைக்கு கிளம்பிவிட்டார்.
சரி யோசிக்கட்டும் என அர்ஜுனனும் விட, அடுத்த இரண்டே வாரத்தில் நாயகியோடு வாசலில் வந்து நின்றார் ராஜரத்தினம்.
தகவல் கேட்டு கடையின் வேலை எல்லாம் விட்டு கோவமாக வந்த அர்ஜுனன், “என்ன இது அசிங்கமா ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நிக்கிற? ஊருக்குள்ள எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அத கெடுக்கவே பொறந்துருக்கியாடா?”
அவரின் ஆத்திரம் தந்த பயத்தில் நாயகி ரத்தினத்தின் கையை பிடிக்க தந்தைக்கு இன்னும் கோவம் ஏறியது.
“அந்த பொண்ண ஊர்ல விட்டு கையோட வேலைய ரிசைன் பண்ணி வா, இல்லனா என்ன பண்ணுவேன்னு தெரியாது” விரலை நீட்டி எச்சரிக்கை செய்தார் அர்ஜுனன்.
“பாத்திலையே விட அவளை கல்யாணம் பண்ணிக்கல அய்யா”
“ராஜா” பார்வதி அதிர்ச்சியில் மகனை நெருங்க மனைவியின் கை பிடித்து நிறுத்தினார் அர்ஜுனன்.
தந்தையை மீறி எவருக்கும் செயல்பட பயமாகவும் இருந்தது.
“உங்கள மாதிரி வறட்டு கெளரவம் பாத்துட்டு நாயகியை என்னால விட முடியல அய்யா, அதான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டோம்”
தன்னுடைய வார்த்தைக்கு மறு பேச்சு இதுவரை பேசியிராத மகன் இன்று தன்னை மீறி திருமணமே செய்து நிற்க தன்னுடைய கர்வம் அடிபட்டதாய் உணர்ந்தார் பெரியவர்.
“இவன் இனிமேல் இந்த வீட்டுக்குள்ள வர கூடாது பார்வதி, அதையும் மீறி இவன் வந்தான்னா நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன், போக சொல்லு. இவனுக்கும் இந்த வீட்டுக்கும் இருக்குற உறவு இன்னையோட முடிஞ்சது”
“ஏங்க இப்டி பேசுறீங்க? அவன் ஏதோ தெரியாம பண்ணிட்டான்”
“தெரியாம பண்ணுற காரியமா இது?”
சத்தமாக கத்த, பார்வதி அரண்டு போனார், “அப்பன் நான் என்ன செத்தா போய்ட்டேன் இவனா போய் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்க? போக சொல்லு பார்வதி, அவனை அனுப்புறதுல விருப்பம் இல்லனா நீயும் கூடையே போகலாம். யாரும் யாரையும் தடுக்கல”
குரலை உயர்த்தாத மனைவியிடமே ஓங்கி பேசியவரின் கோவம் தீராதென புரிந்த ராஜரத்தினம் தந்தையிடம் எவ்வளவோ எடுத்து சொல்ல முயன்றும் முடியாமல் போக, திருமணம் முடித்து மூன்று மணி நேரம் கூட ஆகாத மனைவியை அப்படியே தெருவில் நிற்க வைக்க புடிக்காமல் மீண்டும் மதுரை கிளம்பினார்.
நாயகியின் வீட்டு பக்கமும் இதே போல் எதிர்ப்பு வந்தாலும், ஒரே வாரத்தில் அவரது தந்தையான இளங்கோவன் மகளின் தவிப்பை புரிந்து தானே ஊரார் முன்னிலையில் எளிமையாக திருமணத்தை முடித்து மதுரையில் அவர்களது பணியை மனதில் வைத்து தனியாக வீடு ஒன்றையும் பார்த்துக்கொடுத்து குடித்தனம் வைத்து வந்தார்.
அடுத்த ஒன்றரை வருடத்தில் தேவானந்த் பிறந்திட, அவனுக்கடுத்து நான்கு வருடங்கள் பிறகு ஒரு பெண் குழந்தை இஷா.
அடிக்கடி வீட்டின் முன்னரோ கடையின் முன்னரோ வந்து மணி கணக்காக காத்திருந்த ராஜரத்தினம் கடந்த இருவது வருடங்கள் மேலாக வருவதில்லை வீட்டினரின் தவிப்பான பார்வையை கவனித்து.
இத்தனை வருடங்கள் வீம்பாக இருந்த அர்ஜுனன் தானே வந்து உன் பிள்ளையிடம் அழைத்து செல்கிறேன் என்னும் பொழுது உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலாதவராய் கரைந்துவிட்டார் பார்வதி.
“பிள்ளையை பாக்க போற நேரம் ஏன்ம்மா இப்டி கண்ண கசக்கிட்டு நிக்கிற? சந்தோசமா வா” உடனே சிரிப்போடு கண்ணீரை துடைத்தாலும் நிற்காமல் இன்னும் சில துளி நீர் வர தான் செய்தது.
“சின்ன பையனா பாத்தது, இப்போ நரைமுடி எல்லாம் வந்து பெரியவனா ஆகிருப்பான்ல?” ஏதோதோ கற்பனை அவருக்கு மகனை நினைத்து மனதில் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் சில நிமிடங்களில் பார்க்க போகும் இந்த நொடி கூட ஆயுட் காலம் போல் நீண்டு தெரிந்தது.
“அங்க போய் பாத்துக்கலாம் ம்மா, அப்பவே அவன் அழகா தான் இருப்பான். அதுனால இப்போ ரொம்ப மோசமா இருப்பான்னு சொல்ல முடியாது” தன்னுடைய ஆர்வத்தையும் வெளியிட்டார் பிரதாப்.
“ஏன் மாமா, கொளுந்தனாருக்கு எத்தனை பிள்ளைங்க?” – காயத்திரி
“ஆமா அய்யா, நீங்க அனுப்புவது தான். ஆனா எப்படி உங்களுக்கு இதெல்லாம் கெடச்சது?” – பிரதாப்
“விசாரிக்க சொன்னேன், ஏன், எதுக்குன்னு எல்லாம் இப்ப கேள்வி வேணாம். பொறுமையா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” செல்லும் பொழுது எதற்கு அலசல் என மற்றவரும் கூட பேச்சை விட்டனர்.
இளசுகளாக ஒரு காரில் வர, அவர்களுக்குள் அத்தை, மாமா, அவர்கள் குடும்பம் என ஒரு தனி கருத்து கணிப்பே நடந்தது கேளிக்கையோடு. பெரியவரின் வாகனத்தை பின்பற்றி ஒருவழியாக அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிட, அங்கு கண்ட பெரிய வீட்டின் முன் மொத்த குடும்பமும் யோசனையாக நின்றது.