“பார்க்கிங்ல வச்சு இன்னைக்கு பேசி ஒரு முடிவுக்கு வாங்க, அவளுக்கும் வயசாகிட்டே போகுது, எனக்கு தெரிஞ்சு வீட்டுல பாக்குற பையன எல்லாம் தள்ளி வச்சிட்டே போறது கூட உன்ன மனசுல வச்சிட்டு தான்”
பேசிக்கொண்டே இருவரும் துணி கடையை அடைந்திருக்க வாகனத்தை நிறுத்தி வீட்டினருக்காக காத்திருந்தார்கள் இருவரும். சரியாக அவர்களும் வந்துவிட அனைவரும் கடைக்குள் செல்ல தனக்கு தண்ணீர் வேண்டும் வண்டியிலிருந்து எடுத்து தருமாறு கேட்டுக்கொண்ட தேவா அமைதியாக குடும்பத்தினரோடு ஐக்கியமாகிவிட்டான்.
அர்ஜுனன் வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை இது போல் அனைவருக்கும் உடை வாங்கி தருவது வழக்கம், இப்பொழுது மகன் வேறு தங்களோடு இணைந்திருக்க குடும்பமாக குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு நாடகத்திவிடலாம் என்ற எண்ணத்தில் அனைவரையும் கடைக்கு அழைத்து வந்திருந்தார்.
அவரவர் அவரவருக்கு பிடித்தமான உடையை தேர்தெடுத்துக்கொண்டிருந்த பொழுது தன்னுடைய உடைக்கான தேர்வை அன்னையிடம் ஒப்படைத்து பைரவி சற்று தள்ளி நிற்க எதிலும் ஈடுபாட்டு காட்டாத அவளை விசித்திரமாக பார்த்தான் தேவா.
நிவேதா ஒரு புடவையை தேர்வு செய்து அன்னையிடம் காட்டி பிறகு தேவாவிடம் சிரித்த முகமாக காட்ட, அவள் தேர்தெடுத்த புடவை அவனுக்கு புடிக்காவிடினும் ‘சூப்பர்’ என சைகை செய்து விக்னேஷை எதிர் பார்த்து வாயிலை நோக்க, அங்கு மித்ராவின் கையை மகிழ்ச்சி தளும்ப பிடித்து வந்தான் விக்னேஷ்.
தேவா தங்கள் பார்ப்பது தெரிந்து மித்ரா தன்னுடைய கையை உருவிக்கொண்டு வெட்கத்தோடு அன்னையோடு இணைந்துகொள்ள, தேவாவை பார்த்து கண்ணடித்து காரியத்தின் வெற்றியை உறுதி செய்து ஒன்றும் நடவாதது போல் நின்றுகொண்டான் விக்னேஷ்.
அனைவரும் உடைகளை தேர்வு செய்து முடிக்கவே இரவு ஒன்பது ஆகியிருக்க, மனைவியிடம் வந்த ராஜரத்தினம் ஒரு நகை பெட்டியை கொடுத்து வைத்திருக்க சொன்னார்.
வந்த வேலையை முடித்திருந்ததாக நினைத்த தேவா கையில் சில பைகளை திணித்து மீண்டும் கடைக்குள் மாயமானார் நாயகி. இனி வேலைக்கு ஆகாதென முடிவோடு பார்க்கிங் வந்த தேவா தன்னுடைய கையிலிருந்த பைகளை எல்லாம் வாகனத்தினுள் வைத்து பசிக்காக தான் வாங்கிய ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து உண்ண துவங்கிய நேரம் சோர்வாக வந்தார்கள் அர்ஜுனனும் பார்வதியும் அவர்களோடு பைரவியும்.
பெரியவர்களை பார்த்ததுமே எழுந்தவன் பைரவி கையிலிருந்த பையை வாங்கி வாகனத்தினுள் வைத்து தண்ணீர் பிஸ்கட்டை நீட்டினான்,
“உங்களையும் விட்டு வக்கலயா? இன்னும் எவ்ளோ நேரம் தான் ஆகுமோ தெரியல” என்றான் சிரிப்போடு.
“கடை மூடுறப்ப தான் ப்பா வருவாங்க, அதுவும் கடைக்காரன் அனுப்பிவிட்டா” பார்வதி கூறி சிரிக்க அவன் நீட்டிய பிஸ்கட்டை பைரவி தவிர்த்துவிட்டாள்.
“வேணாம் ப்பா, வீட்டுல போய் பால் சோறு, பக்கோடா வச்சு சாப்ட்டா தான் உன் ஐயப்பாவுக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும். நீ பைரவி வேணா கூட்டிட்டு போய் சாப்புடுங்க” – பார்வதி
“இல்ல வேணாம்” உடனே பதில் வந்தது பேதையிடமிருந்து.
‘இவளை யாரு இப்ப கூப்ட்டாவாம்?’ எரிச்சலுற்றான் தேவா மனதில். பெரியவர்களை வாகனத்தினுள் அமர வைத்தவன் வெளியே வந்து நிற்க தனியாக நின்ற பைரவி,
“நீங்க வேணா போங்க, நான் மாமாகிட்ட சொல்லிறேன்” காண்பது கனவா என்னும் ஆச்சிரியத்தில் தேவா பெண்ணை பார்த்தான், முதல் முறை அவளே அவனிடம் பேசும் வசனம்.
“இல்ல வெயிட் பண்ணுறேன்” என்றவன் சில நொடிகள் அவளை படித்து, “உனக்கு பர்ச்சேஸ் முடிஞ்சதா?” என்றான்.
“வாங்க வேண்டிய அவசியம் வரும்னு தோணல” ஒரு வேதனையோடு கூறி சிரித்தவளின் புன்னகையிலிருந்த வேதனை முதல் முறையாக தேவாவின் மனத்தை தட்டி பார்த்தது.
ஏதோ பெரிதாக ஒன்றை இந்த பெண் மறைகிறாள் என புரிந்தவன், “உனக்கு என்ன லவ் ப்பைலியரா?” இன்னும் கசந்தது பெண்ணின் புன்னகை, பதிலுக்கு பதிலாக.
சில நேர மௌனங்களுக்கு பிறகு தானே, “சாரி அப்போ நீ கீழ விழுந்துட கூடாதேன்னு தான் உன்ன புடிச்சேன், எந்த தப்பான எண்ணமும் இல்ல”
தன்னுடைய கண்களை பார்த்து கூறுபவனின் கண்களில் எந்த முறை தவறிய பார்வையும் இல்லாமல் போக, “இல்ல என் மேல தான் தப்பு. ஏதோ பய… பதட்டத்துல அப்டி பண்ணிட்டேன். சாரி” மனதார பெண்ணிடமிருந்து வந்த மன்னிப்பில் மெல்ல இதழ் விரித்து சிரித்தவன் சரி என தலை அசைத்தான்.
பெரியவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்ட பைரவியை தொடர்ந்த தேவாவின் கண்கள் அதன் பிறகு தன்னுடைய தோழர்களோடு சில நிமிடங்கள் பேச்சில் கழிய, அவனிடம் வந்த ராஜரத்தினம், “அந்த செயின் எங்க தேவா?” என்றார்.
“செயினா எந்த செயின்?” – தேவா
“அதான்டா, உன் அம்மா உன்கிட்ட குடுத்தது” – ரத்தினம்
“அம்மா குடுத்தா?” காரினை நோக்கி நடந்தவன், “ஏதாவது ஒரு பைலை தான் இருக்கும்” என்றவன் அன்னை கொடுத்தனுப்பிய பைகளினுள் தேடினான்.
மகன் தேடுவதை பார்த்தவர் அமைதியாக நிற்க சில நொடிகளில் பொறுமையிழந்து போனார், “எங்கடா இருக்கா இல்லையா?” – ரத்தினம்.
“கானம் ப்பா, அம்மாகிட்ட கால் பண்ணி கேளுங்க” மகனை முறைத்துக்கொண்டு மனைவிக்கு அழைப்பு கொடுத்தார் கைபேசியில்.
“உன்கிட்ட தான் கொடுத்ததா உன் அம்மா சொல்றா” இணைப்பை துண்டித்தவர், “என்னடா தொலைச்சிட்டியா? அதுல அஞ்சு பவுன் நகை இருக்குடா” என்றார் ஆத்திரமாக.
“நான் எதுக்கு ப்பா தொலைக்க போறேன்? அம்மா என்கிட்டே குடுத்தாத நான் அப்டியே வாங்கி கார்ல வச்சேன். நடுல பைய எங்கையும் கீழ கூட வைக்கல” வாதாடினான் தேவா.
“எங்கையோ வச்சு எங்கையோ வந்து கேக்குற நீங்க உங்களுக்கு எந்த பேர் வேணா குடுத்துகோங்க”
பார்க்கிங் கீழே தனியாக இருந்தாலும் அந்த கடையில் தொழிலாளர்கள் தங்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்க குரலை உயர்த்தி பேசிய தந்தையின் பேச்சு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.
“ரத்தினம், என்ன பண்ற நீ?” அர்ஜுனன் மகன் செயல் புடிக்காமல் வந்து சத்தம் போட்டார்.
“அம்மாக்காக ஆசையா நகை வாங்கி வச்சேன் ப்பா, இவன் அந்த செயின் எங்கையோ தொலைச்சிட்டான்” – ரத்தினம்.
“என்னது நான் தொலைச்சேனா? நீங்க என் கைல குடுத்த மாதிரி பேசுறீங்க? அய்யப்பா என் கைக்கு நாலு கட்ட பைய தவற வேற எதுவும் வரல” – தேவா
“அதான் சொல்றான்ல ரத்தினம், எங்கையாவது கீழ விழுந்துருக்க போகுது, நாயாகிக்கிட்டே ஒரு வார்த்தை நல்லா கேளு” – பார்வதி
பார்வதிக்கு பின்னால் நின்ற பைரவி தந்தை மகன் இருவரையும் விழி அகலாமல் பார்த்து நின்றாள், தங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கும் சண்டை நிச்சயம் நிகழும் ஆனால் இவர்கள் நிற்பது போல் பார்வையாலே எரித்துவிடும் அளவிற்கு முட்டிக்கொண்டு நின்றதில்லை.
“நாயகி எதையும் இவ்ளோ கேர்லெஸ்ஸா பண்ண மாட்டா ம்மா, இவன் தான். இவன் தான் எங்கையோ தொலைச்சிட்டு வந்து நிக்கிறான். பொறுப்பிலாதவன்” – ரத்தினம்
“மாமா கடை மொத்தமும் சிசிடிவி இருக்கும். செக் பண்ணலாம்” எங்கேனும் தவறி இருந்தால் கூட கண்டுகொள்ளலாம் என்ற எண்ணத்தில் பைரவி மாமனிடம் பரிந்துரைத்தாள்.
“இல்ல ம்மா, இவன் தான் எங்கையோ போட்டு ட்ராமா பண்ணிட்டு இருக்கான், இதுல இவன் எங்கையோ போட்டு கடைக்காரன்கிட்ட நான் அசிங்கப்படணுமா? வீட்டி பயே, பொறுக்கி” ஆத்திரத்தில் வார்த்தைகள் எல்லை கடக்க சென்றது தந்தைக்கு.
“ரத்தினம் வெளிய இருக்கோம் பாத்து பேசி. வார்த்தையை விட்டா தாயா இருந்தாலும் சரி பிள்ளையா இருந்தாலும் சரி அல்ல முடியாது” – அர்ஜுனன்
“நான் யோசிச்சு தான் ப்பா பேசுறேன், இத்தனை நாள் இவன இப்டி விட்டது தப்பா போச்சு, இவன எல்லாம் எடுக்க வேண்டிய விதத்துல பாடம் எடுக்கணும். காசு அருமை தெரியாம ஊதாரியா நிக்கிறான்” – ரத்தினம்
“பாடம் தான? தாராளமா எடுங்க, உங்களுக்கு தெரிஞ்சு பெல்ட் வச்சு அடிப்பீங்க, இல்லையா எப்போவும் போல தப்பே பண்ணாததுக்கு ஊர் முன்னாடி அசிங்கப்படுத்துவீங்க அது தானே உங்களுக்கு தெரியும்?”
தந்தையின் குரலையும் மீறி குரலை உயர்த்தினான், தவறே செய்யாமல் எதற்கு பழிசொல்லை ஏற்க வேண்டும் என்ற கோவம் அவனிடம்.
“இப்பயும் நீ பண்ண தப்ப ஒத்துக்குவே மாட்ட?” – ரத்தினம்
“தப்பே பண்ணாம நான் எதுக்கு ஒத்துக்கணும்? அப்டியே நான் தப்பே பண்ணிருந்தாலும் இப்டி தான் நிப்பேன், இல்ல என் வாயில இருந்து மன்னிப்பு கேட்டுட்டு தான் போவேன்னு நீங்க நின்னா, தாராளமா நில்லுங்க ஆனா நாள் மொத்தமும் இங்கையே நின்னு கடைசி வர ஜெயிக்க மாட்டீங்க”
தேவாவின் கோவத்தின் அளவு நெஞ்சை நிமிர்த்தி தந்தையிடம் சரிக்கு சரியாக நின்ற பொழுதே தெரிந்தது.
“இப்டி தான் பெத்த அப்பன்கிட்ட பேசுவியாடா நீ?” ஆத்திரத்தை அடக்க முடியாமல் ரத்தினமும் நின்றார் தேவாவை முறைத்து.
ஆனால் அவனோ, “ஏன் தாத்தா எனக்கெல்லாம் கோவமே வராதா? நான் தப்பே பண்ணவே இல்லனு சொல்றேன் இவரு எதுக்கு இந்த ஆட்டம் ஆடுறாரு?” – தேவா
“டேய் வார்த்தையை அடக்கி பேசு” எகிறிக்கொண்டு சென்ற மகனின் கையை பிடித்து இழுத்தும் பார்வதிக்கு பயனில்லாமல் போனது.
“என்ன பண்ணிடுவீங்க? எதுக்கு எடுத்தாலும் என்ன குறை சொல்லாம நகையை தொலைச்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நான் தான் செஞ்சேன்னு சொல்லிட்டு நிம்மதியா சுத்துறாங்கல்ல, அந்த உங்க பொண்டாட்டிகிட்ட போய் கேளுங்…”
அவன் பேசி முடிக்கும் முன்பே அவன் கன்னத்தில் முடிந்த மட்டும் தன்னுடைய பலத்தை கூட்டி அடித்திருந்தார் ராஜரத்தினம்.
“ரத்தினம்…”
“டேய்” பெரியவர்கள் இருவரும் அதிர்ச்சியடைய, பைரவி விக்கித்து நின்றாள்.
“என்ன ரொம்ப தான் துள்ளுற?” தேவாவிற்கு சுற்றி இருந்த பல கண்கள் தன்னை பார்ப்பது போல் அவமானமாக இருந்தது, ஆனாலும் கோவத்தை கட்டுப்படுத்தி பற்களை கடித்து நின்றான்.
“என் பொண்டாட்டி உன்னோட அம்மா. நியாபகம் வச்சுக்கோ. நகையை பத்தரமா பாத்துக்க தெரியல, பேச்சு மயிரை பாரு. காசு பணம் சம்பாதிச்சிருந்தா தான அதோட அருமை தெரியும்? வெட்டியா மாடு மேக்கிறவனுக்கு எங்க தெரிய போகுது. வெட்டி பய” கண்கள் சிவக்க கோவத்தை பாரபட்சம் பார்க்காமல் வெளியில் விட்டார் தந்தை.
“அறிவிருக்காடா உனக்கு? தோலுக்கு மேல வளைந்த புள்ளைய கை நீட்டி அடிச்சதும் இல்லாம வாய்க்கு வந்தபடி பேசுற? அவன் மேல உண்மையிலேயே தப்பு இல்லனா மூஞ்சிய எங்க கொண்டு போய் வப்ப?”
தனக்காக பேசிய அர்ஜுனனின் கையை பிடித்து நிறுத்திய தேவா தன்னுடைய வாலெட்டில் இருந்த ஒரு எ.டி.எம் கார்டை கோவமாக கீழே எறிந்தான்,
“நீங்க வாங்குன அஞ்சு பவுன் என்ன? பதினஞ்சு பவுன் நகை வாங்குற அளவு காசு இதுல இருக்கு, ஒரு பைசா கூட உங்க காசு இல்ல. மொத்தமும் ஒவ்வொரு பைசாவும் என் காசு மட்டும் தான், மாடு மேய்கிறவனால இவ்ளோ காச உங்க கைல குடுக்க முடியும்னா, ஆமா நான் மாடு மேய்கிறவன் தான்”
மிகவும் தாழ்ந்த குரலில் பற்களை கடித்து சிவந்த கண்களோடு அழுத்தமாக பேசிய பேரனை பார்த்து, “என்ன ய்யா தேவா இது, எதிர்க்கிட்ட பேசுற மாதிரி பேசுற? அவன் உன் அப்பா ய்யா” கலங்கி போனார் பார்வதி இந்த தந்தை மகன் பேச்சு பரிமாற்றத்தில்.
தன்னை ஆதூரமாக பிடித்த பார்வதியிடம் திரும்பி முகத்தில் வரவழைத்த புன்னகையோடு பார்த்தவன் அவ கையை எடுத்துவிட்டு, “உங்க கையாள நீங்க செய்ற மீன் கொழம்ப சாப்புட எனக்கு குடுத்து வைக்கல போல அய்யமா” என எவர் முகத்தையும் பார்க்காமல் தன்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
கோவமாக செல்லும் பேரன் மேல் எந்த தவறும் இல்லை என்பதை புரிந்த அர்ஜுனன், “ஆத்திரத்தை மட்டுமே காட்டி நான் இழந்த மாதிரி நீயும் உன்னோட புள்ளைய இழந்துடாத ரத்தினம்” எச்சரிக்கை மட்டுமே செய்ய முடிந்தது பெரியவரால்.
மகன் செய்தது அசிங்கமாய் தோன்ற, “ப்பா கார்டு எடுத்து பாத்தா தெரியும் அவன் லட்சணம்” என்னும் பொழுதே மனைவி அவசரமாக வந்தார்.
“ஏங்க, நகை நான் அண்ணிகிட்ட குடுத்து வச்சிருந்தேன்” என ஒரு பையை கணவனிடம் நீட்ட பெரியவர்கள் இருவரும் ஏமாற்றமான ஒரு பார்வையோடு மகனை கடந்தனர்.
“ஏன்டி இத மொத்தையே சொல்லல?”
அந்த பையை பிடிங்கி அவ்விடத்தை விட்டு செல்ல, எவரும் இல்லாமல் தனியாக கிடந்த தேவாவின் கார்டை பார்த்த பைரவி தான் எடுத்து வைத்துக்கொண்டாள் அவனிடம் வீட்டில் சென்று கொடுக்க.