“நிவிமா” காலையில் அர்ஜுனன் வீட்டின் வாயிலில் கோலமிட்டுக்கொண்டிருந்த நிவேதாவின் அருகில் குத்தித்து வந்து அமர்ந்தான் தேவா.
தீடீரென தன்னருகில் குதித்த மாமன் மகனின் வரவை எதிர் பார்க்காத நிவேதா பயத்தில், “ஐயோ” என கத்திவிட கையிலிருந்த கோலப்பொடி மொத்தமாக கோலத்தின் மீதே விழுந்தது.
அவளுடன் கோலமிட்டுக்கொண்டிருந்த பைரவி தலையை தூக்காமல் கண்ணை மட்டும் தூக்கி இருவரையும் பார்க்க, “இங்க என்ன பார்வை ஏ ச்சீ வேலையப் பாரு”
அவளை தேவா விளையாட்டாக மிரட்ட அவனை கண்டுகொள்ளாமல் நிவேதா கொட்டிவிட்ட பொடியை அப்புறப்படுத்துவதில் பைரவி மும்முரமாய் இருக்க, தேவா நிவேதவிடம், “என்ன நிவிமா உன்ன போய் இப்டி வேலை வாங்குறாங்க?”
“இதெல்லாம் ஒரு வேலையா? கால் மணி நேரத்துல முடிஞ்சிடும் மச்சான்” – நிவேதா
“பாஹ் நீ மச்சானு சொல்றது கேக்கவே எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமாடா?” கன்னத்தில் கை வைத்து அவளையே ஓவியம் போல் பார்த்தான்.
“அப்டியா?” சிரிப்போடு கேட்டவள் மீண்டும் வேலையை துவங்கினாள்.
“அப்டியே தான், எங்க மறுபடியும் ஒருக்கா கூப்புடு பாப்போம்”
காதோரம் தவழ்ந்த சிகையினை சரி செய்து சிரிப்போடு நிவேதா சமாளிக்க, “சரிந்து விழும் குழல் அழகில் ஆயிரம் ஜரிகை பட்டாகிறாள்”
அவன் உதிர்த்த கவிதையில் வெட்கத்திற்கு பதில் சிரிப்பு வந்துவிட சத்தமிட்டு சிரித்தவள் சிரிப்பொலியில் உள்ளே வேலை செய்துகொண்டிருந்த அவள் அன்னை வந்து பார்த்து,
“நிவி மெதுவா சிரி, பாக்குறவங்க பைத்தியம்னு நினைச்சிட போறாங்க” எச்சரித்துவிட்டு உள்ளே சென்றிட.
“அதெல்லாம் பை பர்த்ல வர்றது. இதெல்லாம் தனியா கிளாஸ் போய் கத்துகுட்டா நம்ம வம்சத்துக்கே அசிங்கம்” அவள் கையிலிருந்த பொடியை வாங்கி அழகாய் வரைந்திருந்த கோலத்தில் அலங்கோலமாய் பொடியை தூவிவிட அவன் கைலியிருந்த பொடியை பிடிங்கிவிட்டாள் பைரவி.
“உள்ள கூட்டிட்டு போய் பேசு நிவி” அவளுடைய வேலையையும் தானே செய்வதாக பைரவி கூற, “ரொம்ப தான். நீ வா நிவி ம்மா நாம மாப்பிள்ளை பையன கதற விட்டு வேடிக்கை பாக்கலாம்”
அவள் கை பிடித்து தேவா வீட்டினுள் இழுத்து செல்ல விக்னேஷ் அடுத்த பத்து நிமிடத்தில் அலறி அடித்து வீட்டினுள் அங்கும் இங்கும் ஓட அவனை துரத்துவதே வேலையாக வீட்டையே இரண்டாக்கினார்கள் மூவரும்.
ஒரு ஆட்டம் வீட்டையே இரண்டாகி ஆடி தீர்த்த களைப்பில் குளிப்பதற்காக தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுக்க பைரவியின் இல்லத்திற்கு சென்ற தேவா பொருட்களை எடுத்து செல்லவிருந்த நேரம் அவன் முன்பு அவனையுடைய கார்டை எடுத்து நீட்டினாள் பைரவி.
“ஹே என்னோட கார்டு உன்கிட்ட எப்படி வந்துச்சு?” அதிசயித்து அவளிடமிருந்து வாங்கினான்.
“பணத்தை சம்பாதிக்க தெரிஞ்ச அளவுக்கு அத மதிக்கவும் தெரிஞ்சிருக்கணும்”
அமைதியாக அவளை ஏறிட்டவன், “அத தெரிஞ்சதால தான் உன் மாமா கைல குடுக்காம எனக்கு சோறு போட்ட என்னோட நிலத்துக்கிட்ட குடுத்தேன்” என்றவன் சினத்தை அடக்க முடியாமல்,
“இல்ல தெரியாம தான் கேக்குறேன் உனக்கு ஏன் எதையுமே தெளிவா யோசிச்சு நிதானமா பேச தெரியாதா? என் குடும்பத்துல இருக்குற பிரச்சனை எனக்கு தான் தெரியும் நீ உன் பிரச்னையை மட்டும் பாரு”
முகத்திலடித்தார் போல் சொற்களை எரிந்து சென்றவனை எந்த விதத்திலும் அவளால் குற்றம் கூற இயலவில்லை.
தன்னுடைய தாய் மாமனுக்கு அவர் மகன் சம்பாதித்த பணத்தை தொட்டு பார்க்க கூட தகுதியில்லையா, அப்படி என்ன விரோதம் இருவருக்கும்?ஆயிரம் தான் இருந்தாலும் தந்தை ஒரு மகனிடம் இத்தனை வெறுப்பை காட்டவா வேண்டும்? என வேறு ஒரு எண்ணமும் உதித்தது.
அவனுக்காக வருத்தப்பட்ட மனதிடம் அதன் பிறகு தான் மூளை அவளுடைய நிலையை அவன் கண்டுக்கொண்டதை கூறியது.
அவளை மேலும் யோசிக்க வைக்காமல் அறையிலிருந்து தன்னுடைய பொருட்களை எல்லாம் அள்ளிக்கொண்டு அவளை தாண்டி சென்றவன் பார்வை அவளை எரித்து சென்றதில் அவன் கோவத்தின் அளவை கூற, எதற்கும் இத்தனை நாட்களை தன்னுடைய கருத்தை கூறாமல் இருந்தது போலவே இருந்திருக்கலாம் என தோன்றியது பைரவிக்கு.
அறையினுள் நுழைந்த பைரவி சுவற்றினில் மாட்டியிருந்த தன்னுடைய புகைப்படம் ஒன்றை கதவினில் சாய்ந்தபடியே பார்த்தாள்.
இன்பம் முகத்தில் தளும்ப தளும்ப நிறைத்திருந்தது. அவளுக்கு பிடித்த ஊதா நிற பட்டு புடவை. சில மாதங்களுக்கு முன்னர் அர்ஜுனனின் வீடு பால் காய்ச்ச என தாத்தா பேத்திக்கு எடுத்து கொடுத்த புடவை அது.
புகைப்படம் எடுக்க மாட்டேன் என நின்றவளை வீட்டினர் தான் பெண் பார்க்க தேவைப்படுமென வீம்பாக பிடித்து எடுத்திருந்தனர். அன்று இருந்த மகிழ்ச்சி இன்று ஒரு துளி கூட இல்லை.
மகிழ்ச்சி இல்லையென்றாலும் பரவாயில்லையே உள்ளத்தில் நிம்மதி சொட்டு மிச்சமில்லாமல் எடுத்துக்கொண்ட ஆண்டவன் வேதனை, சோகம், வலி, சந்தேகம், பயம் என மனதை குடையும் அத்தனையையும் கொடுத்துவிட்டானே.
உறவுகளுடன் எந்நேரமும் மகிழ்ச்சியாய் இருக்க நினைக்கும் மனதை இன்று உறவுகள் பக்கமே திரும்பாத அளவிற்கு சோகத்தை கொடுத்து அறையினுள் அடைபட வைத்தது எத்தனை கொடுமை என அந்த இறைவன் அறிவானோ என்னவோ.
எத்தனை நேரம் இலக்கே இல்லாத மன ஓட்டத்தை அதன் ஆசைப்படி சுழல விட அன்னையின் சத்தம் கேட்டு இன்னும் சில நிமிடங்களில் நடக்கவிருக்கும் விக்னேஷ் மித்ராவின் நிச்சய விழாவிற்கு கிளம்ப தயாரானாள்.
இந்துமித்ரா வற்புறுத்தி கடந்த வாரம் பைரவி கையில் கொடுத்து சென்ற சிகப்பு நிற புடவை. ஏனோ அதை அப்பொழுது அணிந்துகொள்ள மனமில்லை.
நாளை காலை அணிந்துகொள்ளலாம் என எடுத்த இடத்திலே வைத்து எலுமிச்சை மஞ்சள் நிற புடவையில் மெல்லிய பச்சை பார்டர் வைத்த புடவையை உடுத்தி கீழே வர வரவேற்பறையில் சந்தோஷை தவிர எவரும் இல்லை.
“அம்மா எங்க?”
“டைம் ஆச்சு பாப்பா, அதான் முன்னாடி கிளம்பிட்டாங்க” அவள் முன்னே ஒரு நகை பெட்டியை நீட்டினான்.
இதை அணியாவிட்டால் அதற்கும் அன்னை திட்டுவார் என வாங்கி திறக்க, என்றும் இல்லாமல் இன்று ஒரு நெக்லஸோடு பெரிய ஆரம் ஒன்றும் இருந்தது.
சகோதரனை விழி உயர்த்தி பார்த்து சிறிய நெக்லஸை மட்டும் எடுத்து அணிய, “இதையும் போடு பைரவி ” என்றான் அண்ணன் அவன்.
என்றும் எதற்கும் சகோதரி விருப்பத்திற்கு தடையாக நிற்காதவன் இன்று அழுத்தமாய் அவள் கையில் அந்த நகையை திணிக்க மறுவார்த்தை பேசாமல் வாங்கி அணிந்தாள் பைரவி.
இருவரும் வீட்டை விட்டு சற்று தூரத்தில் இருந்த அந்த பெரிய திருமண மண்டபத்தினுள் நுழைய, முன்னே செல்லாமல் தயக்கமாய் நின்ற சகோதரியை பார்த்த சந்தோஷ், “உள்ள போ பாப்பா”
அவன் குரலில் தான் வலுக்கட்டாயமாக உள்ளே செல்ல, அங்கு பாதி நிச்சயம் முடிந்திருந்தது.
மணமக்கள் இருவரின் தாய் மாமன்களும் முறையாக உப்பு தட்டை மாற்றி மித்ரா இளைய தாய் மாமனின் கையால் நிச்சய புடவையை வாங்கி சென்றிருந்தாள்.
ஜொலித்த சகோதரியின் முகத்தை பார்த்துக்கொண்டே கூட்டத்தினுள் நுழையவிருந்த பைரவியின் கை பிடித்து நிறுத்திய சந்தோஷ், “ஸ்டேஜ்க்கு வா பைரவி” என்க, அதை கண்டுகொள்ளாமல் மண்டபத்தின் கடை கோடியில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துகொள்ள, வேதனையோடு மணமேடை ஏறினான் சந்தோஷ்.
“என்ன மச்சான் இவ்ளோ நேரம் ஆக்குற?” மேடைக்கு அருகில் இருந்த மணமகன் அறையிலிருந்து வந்தது தேவாவின் குரல்.
சன்னமான சிரிப்போடு உள்ளே சந்தோஷ் செல்ல, இளசுகள் கூட்டம் மொத்தமும் அங்கே தான் இருந்தது.
“கொஞ்சம் வேலை இருந்தது தேவா”
சந்தோஷுக்கு பின்னால் வந்த நிவேதா, “அண்ணா வேஷ்டி சட்டை உனக்கு சூப்பர்” சந்தோஷ கண்கள் மின்ன பாராட்டினாள்.
“அப்போ எனக்கு?” சிறு பிள்ளையாய் அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் தேவா.
“உங்களுக்கென்ன அய்யனார் மாதிரி குமத்தாவா இருக்கீங்க” கேலியாக அவள் பதில் கூற மொத்த கூட்டமும் சிரித்தது.
“என்ன வளர்ப்புடா சாமி” போலியாக நொந்துகொண்ட தேவா அப்பொழுதும் கண்களை மயக்கமாகி வைத்து,
“நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே… தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே” நிவேதாவின் புடவை நிறத்தை கவனித்து முகம் கொள்ளா புன்னகையோடு பாடும் தேவாவை பார்த்த சந்தோஷிற்கு மனம் கனத்து போனது.
அங்கிருந்த எவரையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய தாத்தாவை நோக்கி சென்றவன் அவர் கை பிடித்து எவரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றான்.
“நான் பண்றது சரியான்னு தெரியல தாத்தா” தவித்தது அவன் வார்த்தைகள் மட்டுமல்ல அவன் கண்களும், இதயமும் தான்.
பேரனின் தவிப்பை பார்த்தவர், “தேவா மனசுல யாரும் இல்லனா தப்பில்லை சந்தோஷ்”
கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து, “நிவி கூட அவன் நெருக்கமா இருக்குறத பாத்து தப்பு பண்றோமோனு தோணுது தாத்தா, ஒரு தங்கச்சிக்காக இன்னொரு தங்கச்சியோட மனச ஒடைக்கிறோமேன்னு இருக்கு. ரொம்ப சுயநலமே இருக்கேனா நான்?” – சந்தோஷ்
“தேவாவ பத்தி நீ இன்னும் தெளிவா தெரிஞ்சுக்கல ய்யா, எதையும் யோசிக்காம ஆக வேண்டியதை பாக்கலாம். நடந்தது எல்லாமும் இதுக்காக கூட இருக்கலாம்” – அர்ஜுனன்
“உண்மை தெரிஞ்சு தேவா பைரவிய ஏத்துக்குவானா தாத்தா? என் தங்கச்சிக்காக பாத்து தேவா வாழ்க்கையையும் சுயநலமா யோசிச்சு நான் கெடுத்துட போறேன்” – சந்தோஷ்
“டேய் பேராண்டி” சிரித்தார் பெரியவர், “உங்கள விட எனக்கு என் பேத்தி மேல நம்பிக்கை அதிகம். யாரும் கை காட்டுற அளவு அவ இருந்ததில்லை, இனியும் இருக்க மாட்டா. போ டா” பேரனை அதட்டி அவர் சென்றுவிட்டார்.
குடும்பத்தினர் முன்னிலையில் விக்னேஷ் மித்ரா நிச்சயம் தடாலடியாக நடக்க, மேடையில் மணமக்களை ஆசீர்வதித்து கீழே இறங்கிய அர்ஜுனன் கண்கள் தூரத்தில் இருந்த பேத்தி பைரவியை பார்த்தது.
எந்த கூட்டத்தோடு ஒன்றி நிற்க வேண்டுமோ அந்த கூட்டத்தை சின்ன சிரிப்போடு தூரத்திலிருந்து பார்க்கும் பேத்தியின் மகிழ்ச்சியை இந்த நொடியே அவள் விருப்பமே இல்லாமல் திரும்பி கொடுக்க முடிவெடுத்தார்.
சந்தோஷை அழைத்து பைரவியை மேடைக்கு அழைத்து வர கூறி மகன் ரத்தினத்தை கண்ஜாடையில் அழைத்து பேரனிடம் திரும்பி, “தேவா இங்க வா” எனவும் அவனும் சிரிப்போடு வந்து நின்றான்.
“சொல்லுங்க அய்யப்பா” என.
பேத்தி மேடைக்கு வரும் வரை அமைதியாக இருந்தவர் ரத்தினத்தை பார்த்து கை நீட்ட தந்தை கையில் இரண்டு மோதிரங்களை வைத்தார் ராஜரத்தினம். மனமக்களுக்காக இருக்குமென நினைத்த தேவா நிற்க,
“இத பைரவி கைல போட்டு விடு தேவா” என்க, தேவாவை காட்டிலும் பைரவிக்கு தான் அதிகம் மூச்சடைத்தது.
என்ன நடக்கின்றதென்பதை யூகிக்க முடியாத அளவிற்கு குழந்தை அல்லவே இருவரும். இருவரையும் இருவரும் எந்த நிலையிலும் ஒன்றாக இணைத்து பார்த்ததில்லை.
“மாமா என்ன இது?” முதலில் வந்து நின்றது நாயகி தான்.
“ரத்தினம் உனக்கு புரிய வைப்பான் ம்மா, இப்ப எதுவும் பேச வேணாம்”
மருமகளை தடுத்து தேவாவை பார்த்தார் அர்ஜுனன், “போடு ய்யா, மொத்த மண்டபமும் உங்கள தான் பாக்குது”
“அய்யப்பா எனக்கு இது சரியா படல. ஏன் இந்த திடீர் ஏற்பாடு? எனக்கு நிச்சயம் பேசுறவர் என் அனுமதி கேக்க வேணாமா?” தந்தை, தாத்தா என அனைவரையும் முறைத்தது தேவாவின் கண்கள்.
“தேவா நான் சொல்றத மட்டும் கேளு. நீ பைரவிய கல்யாணம் பண்ணிக்கணும். இப்ப நிச்சயம் நடந்தே தீரணும்” பிடிவாதமாய் மகனிடம் கட்டளை விதித்தார் ரத்தினம்.
“அப்டி என்ன தலை போற அவசரம்?” – தேவா
“தலை போற அவசரம் இல்ல ய்யா, சந்தோஷத்துக்காக அவசரம். என் பேத்தியோட சந்தோசம்” பெரியவரின் கண்களில் இறைஞ்சுதலை பார்த்தவன் மொத்த கோபத்தையும் தந்தையிடம் திருப்பினான்.
“எல்லாருக்கும் வாழ்க்கை குடுக்க தான் என் பையன நான் பெத்து வளத்துருக்கேனாங்க?” நாயகியின் கேள்வியில் சுருக்கென இதயம் அடித்தது பைரவிக்கு.
அமைதியாக மணமேடை விட்டு கீழே இறங்கியவள் முன்பு வந்து நின்ற அவள் அன்னை சீதா, “இப்ப நீ இந்த கல்யாணத்த பண்ணிக்கலைனா உன் அம்மாவை நீ உயிரோட பாக்க முடியாது”
அவரை இயலாமையோடு பார்த்தவள் அமைதியாக நின்றுவிட, யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் ஆனால் என்னுடைய பெண்ணின் வாழ்க்கை சீராகும் பட்சத்தில் எந்த பேச்சையும் கேட்டுக்கொள்வேன் என உறுதியான மனதோடு பைரவியை மீண்டும் மேடையில் நிற்க வைக்க, சிலையாக நின்ற மகளின் மனதை வழக்கம் போல் படிக்காமல் போனார்.
“ம்மா தேவையில்லாம பேசாதீங்க” அன்னையை அடக்கியவன் தந்தையிடம் வழக்கம் போல் மல்லுக்கு நின்றான்,
“உங்க வாழக்கையை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை இருந்தப்போ என் வாழ்க்கையை பத்தி முடிவெடுக்க எனக்கு முழு உரிமையும் இருக்கு” அர்ஜுனனின் கையில் மோதிரத்தை மீண்டும் வைத்தான்.
“என்ன சொந்தம் எல்லாம் கூடி நிக்கிறப்போ அசிங்க படுத்த பேசுறியா?” – ரத்தினம்
“தம்பி சண்டை போடுற நேரம் இது இல்ல” மகனை அடக்கி பேரனிடம் சென்றவர், “யய்யா தேவா, உன் அப்பனுக்காக வேணாம். இந்த அய்யப்பாகாக இந்த உதவிய பண்ணு ய்யா. உன் கால்ல விழுந்து கூட…”
“போதும் அய்யப்பா” அர்ஜுனன் பேச்சை நிறுத்தி அவர் கையில் திணித்த மோதிரத்தை மீண்டும் எடுத்துக்கொள்ள பேரனின் மனம் மாறி விடுமோ என்ற பயத்தில் பைரவையை அவன் முன்னாள் நிற்க வைத்தார்.
எவருடைய உத்தரவிற்காகவும் காத்திருக்காமல் அவள் கையை பிடித்தவன் அதே வேகத்தில் மோதிரத்தை அணிவித்துவிட, தனக்கு முன் நீட்டியிருந்த தேவாவின் கையை பார்த்தவள் கண்களில் வேதனையோடு வெளியேறியது கண்ணீர் துளிகள் பல.
“உன் அண்ணன் வாழ்க்கை நாசமா போகணும்னா தாராளமா இப்படியே கீழ இறங்கி போ”
காதுகருகில் ஒலித்த அன்னையின் வெறுப்பு நிறைந்த வார்த்தையில் பைரவிக்கு மூச்சு முட்ட இயந்திர கதியாக அவன் விரல்களை தொடாத அளவிற்கு மோதிரத்தை விறல் நுனியில் மாட்டிவிட அவள் விரல்களை பற்றிய தேவா பைரவியின் கைகளை பிடித்து தன்னுடைய விரல்களுக்குள் போட்டுவிட, அவன் தொடுகையில் தவித்த மனதோடு ஏறிட்டாள்.