காலையில் சரியாய் ஆறு மணிக்கு வந்து நின்ற இளஞ்சேரலைத் திகைப்புடன் பார்த்த குமார், “என்ன அண்ணே, கடைக்கு வந்திருக்கீங்க.?”
“ஏன்டா? வேற எங்க போகணும்ங்கிற.?”
“இல்ல, நேத்து தான கல்யாணம் ஆச்சு. ஒரு நாலு நாளைக்கு வர மாட்டீங்கனு நினைச்சேன்.”
“துரை, உனைய அஞ்சு மணிக்கு கடையைத் திறக்கச் சொல்லுறதுக்கு.. நானு, நாலு மணிக்கு எல்லாம் முழிச்சு நாப்பது தடவை ஃபோன் போட வேண்டியது இருக்கு. இந்த லட்சணத்துல, உனைய நம்பி கடைய விடவா.?”
“ஓஹோ.. அதான் நீயி கல்யாணம் ஆகி ஒரு வாரம் கடைக்கு வராம, அவ்வளவு தூரம் பேசிப் பழகுனியோ.? வாயை மூடிட்டு வேலையைப் பாருடா!”
“இந்தாளைப் போயி எப்படித்தான் அவங்கக் கட்டிக்கிட்டாங்களோ.?” என முணுமுணுத்தபடி அவன் கறியை வெட்ட, “அது, அவ பாடு! உனக்கு எங்க வலிக்கிது? வீட்டுலயே குத்த வச்சு உட்கார்ந்தா, பிழைப்பு என்னத்துக்கு ஆகும்? நானு என்ன உனைய மாதிரியா.? லாபம்னாலும் நட்டம்னாலும், வித்தாலும் விக்கலனாலும்.. கையில கத்திய பிடிச்சிட்டா உனக்குச் சம்பளம். ஆனா என்னோட பிழைப்பு.? போட்ட முதல்லு கை சேருமானே தெரியாம, ஒவ்வொரு நாளும் ஓடுது. அதை மீட்டு எடுக்க நானு படுற பாடு, எனக்குத் தான்டா தெரியும்!”
“இத ஒண்ணு சொல்லுங்கண்ணே!”
“அப்ப, ஒத்த நாளுக்குச் சம்பளம் இல்லாம வேலை பாரேன்.?”
“அய்யோ, அண்ணே.?”
“என்ன பதறுற.?”
“கையில காசில்லாம போனா, என்னோட பொண்டாட்டி வீட்டுக்குள்ள விட மாட்டா.”
“தெரியிது இல்ல? வாய் வேலையைக் குறைச்சிட்டு, கை வேலையைக் கூட்டு!” என்றிட, பணியைத் தொடர்ந்தான் குமார்.
ஒரு ஆடுதான் அன்று அறுத்திருந்தனர்.
“ஒண்ணுக்கு மேல வேணாம்பா. கல்யாணம் ஆன மறுநாளே கடையில போயி உட்கார்ந்தா, பார்க்கிற எல்லாரோட கண்ணும் வாயும் சும்மா இருக்காது. கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது. அதைவிடச் சொல்லடி, நம்மளை உலுக்கி விட்டுடும். போறதும் தெரியாம, வர்றதும் தெரியாம வியாபாரத்தை முடிச்சிட்டு வரச் சொல்லுங்க. ஒரு நாலஞ்சு நாளைக்குக் கத்தியைத் தொட வேணாம் அவன், சொல்லீடுங்க!” என்று தந்தையிடம் சொல்லி அனுப்பி இருந்தாள் கீதா.
பரமசிவமும் அதற்குத் தகுந்தாற் போல் ஒன்றை மட்டும் அறுத்து உரித்துக் கொடுத்து விட்டு, சேரலிடம் சொல்லிச் சென்றார். அவன் இல்லாமல், மூத்தவரே கூட வியாபாரத்தைப் பார்த்து விடுவார். ஆனால் முக விற்பனை ஒன்று உண்டு.
‘இதற்கு இவர்தான் உரிமையாளர்!’ என மக்களின் மனதில் ஒருவரின் முகம் பதிந்து விட்டால், வேறு ஒருவரை அவ்விடத்தில் அத்தனை எளிதில் ஏற்க மாட்டார்கள்.
இது சாதாரணக் கடை விற்பனையில் மட்டுமல்ல, ஆட்சியில் அமர்த்தப்படும் ஆளுமைகள் வரை பொருந்தும்.
சுதந்திரம் அடைந்த பின்னர், இன்று வரையும் இரு பெரும் கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருப்பதே, அதற்குச் சான்று. காரணம்.. அதனை நிறுவியவர்களும், கட்சியினது சின்னங்களின் மூலமாய் அந்த ஆளுமைகளை மக்கள் இன்றளவும் காண்பதுமே! ஆனால் இதற்கு ஆதிப்புள்ளி, அவர்களின் முகமே ஆகும்.
சேரல் தனது உழைப்பு மற்றும் திறமையோடு சேர்த்து, முகத்தையும் பேச்சையும் முன்னிருத்தி வியாபாரம் செய்பவன்.
அறிந்த ஒருவரை, “என்ன அண்ணே, இந்தப் பக்கம்?” என அழைத்துப் பேசும் பொழுது, அவனின் முகத்திற்காக பதில் உரைக்க வருபவரிடம், “கறி வாங்கிட்டுப் போறது.?” என்று வியாபாரத்தைத் தொடர்வான்.
“இல்லப்பா.. நேத்துதான் வீட்டுல கறிக்குழம்பு வச்சாங்க. இன்னைக்கும் வாங்கிட்டுப் போனா, என்ன சொல்லுறாங்களோ..?” என அவர் தனது நிலையை உரைக்க,
“அப்ப, சுக்காக்கு வாங்கிட்டுப் போங்க. எண்ணைச் சுக்கா, மிளகு சுக்கால எல்லாம் தேங்கா போட்டுக் கொடுத்தா பிள்ளைக ஆசையா சாப்பிடும்ல.? இல்லேனா கறியைக் கொத்தித் தர்றேன். கோலா உருண்டை போடலாம். குழம்பும் வச்சுக்கலாம், பொரிக்கவும் செய்யலாம். கிரேவியா வச்சா, ரொம்ப மெல்லுற வேலை இல்லாம, அப்படியே சாப்பிட்டுக்கலாம்!” என்று விற்று விடுவான்.
இதற்காகவே.. என்னென்ன வகை உணவை, எப்படி எப்படி.. வகை வகையாய் சமைக்கலாம் என விசாரித்து அறிந்து வைத்திருக்கிறான். வெளியில் எங்கேனும் சாப்பிடும் பொழுது, அதன் சுவை பிடித்து விட்டால், சமையல் காரரையே தேடிச் சென்று.. அதைச் சமைக்கும் முறையையும் பக்குவத்தையும் கேட்டு அறிந்து கொள்வான்.
வாய்ப்பு கிடைக்கும் போது சமைத்துப் பார்ப்பவன், கீதாவிடமும் அதன் செய்முறையைப் பகிர்வான்.
“இந்த ருசி, நம்ம பக்க ஆளுங்களுக்குப் பிடிக்காது சேரா. மசாலாவை இப்படிப் போட்டா நல்லா இருக்கும்!” என்று அவளும் தன் பங்கிற்கு ஆலோசனை சொல்லி, அதனைச் செய்து தந்து சுவைக்கவும் வைக்க, அப்படியே பிடித்துக் கொள்வான்.
“இப்படிச் செய்யச் சொல்லுங்க அண்ணே, நல்லா இருக்கும்!” என்று வாடிக்கையாளர்களிற்கும் சொல்லி, அவர்களின் வீட்டு இல்லத்தரசிகளின் கைப்பக்குவம் வரை தெரிந்து வைத்திருக்கிறான்.
“சேரா.. நீயி சொன்னதை மறந்திட்டேன்பா. வீட்டுக்காரம்மா கிட்டயே நேரா சொல்லிடுறியா.?” எனக் கைப்பேசியின் மூலம் குடும்பத்தில் ஒருவனாய் மாறும் வித்தை அறிந்தவன்.
பெண்களே நேரடியாய் அவனை அழைத்து, “சேரா வீட்டுல இருந்து வராங்கப்பா. கொஞ்சம் பார்த்து கறியைக் கொடு. குழம்பை இப்படி வைக்கப் போறேன், அதுனால இந்த அளவுல இந்தப் பக்குவத்துல வேணும்!” என்று நேரடியாகவே உரைப்பதுவும் உண்டு.
ஏழு வருட பழக்கம், ஒரே இடத்தில் நிலையாய் நிற்பவன்.. அப்பகுதி மக்களின் நினைவுகளிலும் பதிந்து போவது என்பது இயல்பானது தானே? எனினும் அதற்கு முக்கியக் காரணம்.. சேரலின் தளராத உழைப்பும், தொழில் செய்யும் பாங்கும் தான்.
எவரிடமும் எதையும் கேட்டிட தயங்காதவன். ‘கேட்டால் மட்டுமே, நமக்கானது கிடைக்கும்!’ என்ற எண்ணம் கொண்டவன். செந்தமிழை மணமுடிக்க, தயங்காது கேட்டதே அதற்குச் சான்று.
ஆடு அறுக்கும் பரமசிவத்திற்கு, ஆதிக்குடிலைத் தாண்டி அந்த அளவிற்கு வெளிப்புற ஆட்களோடு பழக்கமோ அறிமுகமோ கிடையாது. சேரலிற்குத் தொழில் கற்றுத் தந்தவர் என்றாலும், இடம் ஒன்றைப் பிடித்துக் கடை என்பதற்குப் பிள்ளையார் சுழி போட்டவன் இளையவன் தான். அதனால் கடையின் உரிமையாளனாய், அவன் கல்லாவில் இருப்பது அவசியமாகிறது.
மூளை, குடல், தலை.. என எதையும் விடாமல் அனைத்தையும் விற்று முடித்து, “ஆட்டுக் காலை வாட்டுறதுக்குக் கொடுத்துட்டு, அப்படியே தோலையும் தேய்ச்சு வை!” எனக் குமாரிற்குக் கட்டளையிட்டு விட்டு, ஒன்பது மணியளவில் இல்லத்திற்குச் சென்றான் சேரல்.
“நேத்து, அக்கா சாப்பாடு கொடுத்துவிட்ட பாத்திரத்தை எடுத்துக்கத் தமிழ்மா.” என்றிட, அனைத்தையும் எடுத்து வைத்தாள்.
இருவரும் செல்ல, ஆரத்தி எடுத்து வரவேற்ற கீதா உணவைப் பரிமாறிய படி, “மதியத்துக்கு என்ன செய்யட்டும் தமிழ் உனக்கு.?” என வினவ, அவள் தன்னருகே இருந்த கணவனைப் பார்த்தாள்.
“அவன் என்ன கொடுத்தாலும் சாப்பிடுவான். சொல்லப் போனா, இவனை வச்சுதான் நானு சோறாக்கவே கத்துக்கிட்டேன்.” எனச் சிரித்தவள், “நீயி சொல்லு, என்ன வேணும்னு.”
“எதுனாலும் சரி அண்ணி!”
“உனக்குப் பூரி பிடிக்கும்னு சேரா சொன்னான். அதான் டிபனுக்கு அதைச் செஞ்சேன். மூணு தான் சாப்பிட்டிருக்க, ஏன் தமிழ் நல்லா இல்லையா.?”
“அப்படி எல்லாம் இல்ல அண்ணி, ரொம்ப நல்லா இருக்கு!”
“அப்புறம் என்ன.?”
“நானு சாப்பிடுறதே, அவ்வளவு தான்!” என எழுந்து செல்ல, கீதா தம்பியைப் பார்த்தாள்.
“என்னக்கா?”
“எதுவும் சொன்னியாடா அவளை?”
“நானு என்ன சொல்லப் போறேன்?”
“இந்த ஊரு, இடம், வீடு எதுவும் பழக்கம் இல்லைல? அதான் ஒருமாதிரி இருக்கா போல. கடைக்குப் போறேன், வியாபாரத்தைப் பார்க்கிறேன்னு அவளைக் கண்டுக்காம விட்டுடாத!”
அவன் தலையசைக்க, “இப்பப் போயிட்டு வந்ததே போதும். ஆடு, கோழிகளைப் பார்க்க நீயி போகாத! குமாரை அனுப்பு. இல்லேனா, அப்பாக்கிட்ட சொல்லட்டா நானு.?”
“அதெல்லாம் வேணாம், குமார் பார்த்துப்பான்.”
“போகக்கூடாது சரியா? இங்க சரினு சொல்லீட்டு, நேத்து செஞ்ச மாதிரி ஓடிடாத!”
“சரிக்கா.” என்றவன் வெளியே செல்ல.. பின்னோடு வந்த கீதா, “சேரா, தமிழை எங்கேயாவது வெளியில கூட்டிட்டுப் போ!” என்றாள்.
அவளும் வர, “என்னமா போகலாமா.?”
“எங்க போறது, இந்த ஊருல.?”
“அதெல்லாம் நிறைய இடம் இருக்கு. வா, கூட்டிட்டுப் போறேன்!” என்று தமக்கையிடம் தலையசைத்து விட்டு, மனையாளுடன் கிளம்பினான்.
முதல் நாள் சென்ற இடத்திற்கே அழைத்து வந்ததைக் கவனித்த தமிழ், “ஆட்டுக்குக் கீரை வெட்டதான் எனைய கூட்டிட்டு வந்தியா.?”
மெலிதாய்ச் சிரித்தவன், “கீரை வெட்டுறது, ஆடு கோழிகளுக்குத் தீவனம் போடுறது எல்லாம், குமார் தான் செய்யிவான். கல்யாணத்துக்காக அவனைக் கடையில விட்டுட்டு வந்திட்டேன். அங்க வேலை முடியவே, சாயங்காலம் மூணு மணி ஆகிடுச்சு. அதுக்கு மேலயும், அவனால செய்ய முடியாதுல.? அதுனால தான் மத்த சின்னச் சின்ன வேலையை, நேத்து நான் பார்த்தேன். இன்னைக்கு அவனே செஞ்சிடுவான்.”
“அப்புறம் எதுக்கு இங்க வந்தோம்!”
“நம்ம கோவிலுக்கு.”
சுற்றிலும் பார்த்தவள், “கண்ணுக்கு தெரியிற வரைக்கும், தோப்பும் வயலுமா தான் இருக்கு. கோவில் எங்க.?”
“அந்தத் தோப்புக்குப் பின்னாடி தான் இருக்கு.” எனச் சற்றுத்தள்ளி இருந்த வாழைத் தோப்பைக் காட்டியவன், “நடந்து தான் போக முடியும். நடந்துடுவியா.?”
“ரொம்பத் தூரமா.?”
“கொஞ்சம், தூரம் தான்!”
அவள் தலையசைக்க, கைப்பற்றி அழைத்துச் சென்றான். நிறைந்திருந்த வண்டல் மண்ணில் இடைவெளி இன்றி அடர்ந்திருந்த வாழைத் தோப்பிற்குள் நடந்து, அடுத்ததாய் இருந்த தென்னந் தோப்பையும் கடந்தனர்.
பார்வையில் பட்ட கோபுரத்தைக் கண்டவனின் விழிகள் மெல்ல கீழ் இறங்கிட, அவ்விடத்தைக் கண்டு திகைத்து நின்றாள் செந்தமிழ்.