Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரும்பில் ஓர் இதயம்

இரும்பில் ஓர் இதயம்….14

இரும்பில் ஓர் இதயம்….14

வீட்டு வாசலில் பரிதி தோரணையாக நின்றான்.அவனின் விழிகள் முழுவதும் வயிற்றில் கையை வைத்தபடி விழிகளில் நீர் கோர்க்க அமர்ந்திருந்த தன் மனையாளையே நோக்கியது.

“இந்தா வந்துட்டாரு உன் மகாராஜா….”என்றவள் அவனிடம் வேகமாக செல்ல நாயகி அவளின் பின்னே சென்றார் எங்கே மகள் ஏதாவது துடுக்கு தனமாக பேசிவிடுவாளோ என்று.

“ம்க்கும்….நான் எனக்கு தெரிஞ்ச பொண்ணு மூலமா நல்ல டாக்டர் யாருனு விசாரிச்சிட்டு வரேன்…அங்கேயே கூட்டிட்டு போகலாம்….இப்ப கொஞ்சம் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்குங்க….”என்றுவிட்டு அவள் போய்விட,அவளின் பின்னே வந்த நாயகியும்,



Advertisement

“இந்த சமயத்துல புருஷன் பக்கத்தில இருந்தா தான் நல்லது தம்பி பார்த்துக்குங்க….”என்று தன் பங்கிற்கு கூறிவிட்டு செல்ல,பரிதியோ கண்களை குறுக்கி அவர்களை பார்த்தவன் எதுவும் பேசவில்லை அமைதியாகவே நிற்க நாயகியோ மூச்சை இழுத்துவிட்டுவிட்டு திரும்பி மிருதுளாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

மிருதுளா பரிதியை கண்டவுடன் மறந்த அனைத்தும் நினைவுக்கு வர அதுவரை பொலிவுடன் இருந்த அவளின் முகம் மீண்டும் இருளடைய பரிதியோ எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளே வந்தவன்,

“பசிக்குது….”என்று கூற மிருதுளாவோ எதுவும் கூறாமல் எழுந்து அவனிற்கு சாப்பாட்டை ஊட்டியவள் எதுவும் பேசாமல் தனது வேலைக்கு சென்றுவிட்டாள்.மனது அவனிடம் அனைத்தையும் கூற வலியுறுத்த மூளையோ வேண்டாம் என்று வலியுறுத்தியது.அதே மனநிலையுடன் வேலைக்கு சென்று திரும்பியவளை வெறும் வீடு தான் வரவேற்றது.

Advertisement

இரவு பத்து மணிக்கு மேல் தான் பரிதி வீட்டிற்கு வந்தான்.அவன் வீட்டில் நுழையும் போது மிருதுளா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.மெல்ல அவளின் அருகில் அமர்ந்து அவளை எழுப்ப,ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் என்னவோ ஏதோ என்று எழ,

Advertisement

“ஏய் பார்த்து….”என்று கூறிவிட்டு அவள் விழாமல் இருக்க அவன் பிடிக்க,அவனை முறைத்தவள் பல்லை கடித்துக் கொண்டு,

“அப்ப எல்லாம் தெரியும் அப்படி தான….”என்று கேட்க,அவனோ எதையும் காதில் வாங்காமல்,

“சாப்பாடு எடுத்துட்டுவா….”என்றுவிட்டு தன்னை சுத்தப்படுத்த சென்றுவிட்டான்.பரிதி திரும்ப வரும் போதும் மிருதுளா எழாமல் அப்படியே இருக்க,அவனே தனக்கு தேவையான உணவை எடுத்து வந்து அவளிடம் அமர்ந்தவன்,

Advertisement

“ம்ம்ம்….ஊட்டு…”என்று நீட்ட எதுவும் கூறாமல் வாங்கியவள் அவனிற்கு ஊட்ட தொடங்கினாள்.மனதும்,மூளையும் பேசிவிடு பேசிவிடு என்று அறிவுறுத்த அவன் சாப்பிட்டு முடித்து படுக்க ஆயுத்தமாக,

“நான் பேசனும்….”என்று அவள் கூற அவனோ படுக்கையில் படுத்துவிட்டான்.மிருதுளாவிற்கு தான் இவனை என்ன செய்வது என்று தெரியவில்லை.அவளும் படுத்துக் கொண்டாள் ஆனால் அவனிடம் இருந்து இடைவெளிவிட்டு அவள் படுக்க அடுத்த நிமிடம் அவளின் இடை வளைத்தது பரிதியின் கரம்.அவனின் அணைப்பிற்குள் அவள் பொருந்தினாலும் மனதாலும் உடலாலும் பொருந்தாமல் விலகியிருக்க,

“ம்ம்ம்….சண்டகாரி…என்ன என்கிட்ட சொல்லனும்…..ம்ம்ம்….”என்று குழைந்து வந்தது பரிதியின் குரல்,

“நான் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க….எல்லாம் உங்க இஷ்டம் தான….”என்றவள் குரல் கரகரப்பாக வர,அவளின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.அதை பரிதியின் உதடுகள் துடைத்தெடுத்தது.

“ம்ம்….நீ சொல்லி நான் அதை கேட்க மாட்டேன்னா ஏன் என்கிட்ட சொல்லுற….”என்று அந்த நிலையிலும் அவன் தெளிவாக இருக்க,வேகமாக அவனை நோக்கி திரும்பியவள்.

“நீ…நீங்க….போங்க…போங்க….எனக்கு அழுகையா வருது…..நான் அழக்கூடாது…”

“ஏனாம்….”என்றவனின் கரங்கள் அவளின் மணி வயிற்றை தான் தடவியபடி தான் இருந்தது.ஓரளவிற்கு அவனும் ஊகித்துவிட்டான் இன்று காலை அவள் அமர்ந்திருந்த விதம் அவனை வெகுவாக அசைத்திருந்தது ஆனாலும் அவளிடம் எதுவும் கூறவிரும்பவில்லை. அவளோ அவனின் தொடுகையை உணராமல்,

“ம்ம்….சொல்லமாட்டேன்….நீங்க முதல்ல காலையிலேந்து எங்க போனீங்க….அதை சொல்லுங்க….”என்று அவளும் தெளிவாக கேட்டு கொண்டிருக்கும் போதே பரிதியின் அதரம் அவளின் நெற்றியில் அழுத்தமாக பதிந்து விலகியது.

“சும்மா எனக்கு முத்தம் கொடுத்து மயக்கலாம்னு நினைக்காதீங்க….எங்க போனீங்கனு சொல்லுங்க….”

“எங்க போனேன்….ம்ம்ம்….மறந்து போச்சே சண்டகாரி….”என்றவன் உதடுகள் அவளின் முகத்தில் ஊர்வலம் வர,அவனை தன்னிடம் இருந்து வலுகட்டாயமாக பிரித்தவள்,

“நீங்க திரும்பியும் திருட்டு வேலை செய்யக்கூடாது……என் மேல சத்தியம்…..ம்ஹம்….”என்றவள் அவனின் கரத்தை தனது வயிற்றில் வைக்க போக வேகமாக இழுத்தவன்,அவளை தள்ளிவிட்டான்.

“போடீ…என்ன என்னை உன் இஷ்டத்துக்கு கட்டுப்படுத்தலாம்னு பார்க்குறீயா….அதெல்லாம் முடியாது…..”என்றவனை வெறித்து பார்த்தவள் அவனிடம் எதுவும் பேசாது திரும்பி படுத்துக் கொண்டாள்.அந்த அறையில் மிருதுளாவின் அழுகை மட்டுமே கேட்டது.அவனிற்கு அவளின் அழுகை எரிச்சலை தந்தது.

“ப்ச்….சும்மா அழுது என் உயிரை எடுக்காத….”என்றவன் எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.மிருதுளாவும் அழுதழுது ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கியும் போனாள்.அடுத்த நாள் காலை விழிக்கும் போது பரிதி வீட்டில் இல்லை மிருதுளா எதை பற்றியும் சிந்திக்க கூடாது என்று தனக்கு தானே தேற்றிக் கொண்டாள். அவனிடம் வேறு எப்படி வாதிட என்று தான் தெரியவில்லை அவளிற்கு.உண்மையில் குழந்தை உண்டானதன் எந்த மகிழ்ச்சியும் அவளிடம் இல்லை.

எவ்வளவு சந்தோஷமான விஷயம் அதைக் கூட நிம்மதியா மகிழ்ச்சியாக இருக்கவிட மாட்டேங்கிறாரே இந்த கடவுள் என்று தான் தோன்றியதே தவிர பரிதியிடம் இனி பேசி பயனில்லை என்று தெரிந்துவிட்டது.முன்பு போல் எதும் பேசி அவன் மீண்டும் எங்காவது சென்றுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தவளுக்கு மேலும் தலை பாரமாக இருக்க,

“ஏய் மிருது…என்னடீ  உட்கார்ந்திருக்க….கிளம்பு டாக்டர் கிட்ட போகனும்…..வா….”என்று கத்தியபடி வந்தாள் திவ்யா.நேற்றே கடையில் வேலை செய்யும் ஒரு திருமணமான பெண்ணிடம் மகப்பேறு மருத்துவர் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு வந்துவிட்டாள்.காலை அவரிடம் முன்பதிவும் செய்துவிட்டாள்.உண்மையில் அவள் தான் அந்த குழந்தையின் வரவில் அத்தனை சந்தோஷமாக இருந்தது.

நாயகிக்கு புரிந்துவிட்டது மீண்டும் பரிதி ஏதோ பிரச்சனை செய்கிறான் என்று.அதுவும் இரவில் வெளியில் கோபமாக சென்றதை பார்த்தவருக்கு மனதில் அத்தனை கோபம் என்ன மனிதன் இவன் நல்ல பெண்னை இப்படி வதைக்கிறானே அதுவும் அவள் உன் குழந்தைக்கு தாயாக போகிறாள் என்று தான் கூறிய பிறகும் அவன் இப்படி நடந்து கொள்ளவது சுத்தமாக பிடிக்கவில்லை.அதனால் அவரும் திவ்யாவுடன் வந்துவிட்டார்,

“மிருது கண்ணு…வா கண்ணு போயிட்டு வந்துடுவோம்….”என்று அவரும் அழைக்க மிருதுளாவும் அவர்களுடன் சென்றாள்.கணவன் வருவான் தன்னை அழைத்து செல்வான் என்ற எண்ணமெல்லாம் இல்லை.மனது வெறுமையடைந்தை போல் இருந்தது.மருத்துவரை சந்தித்துவிட்டு பெண்கள் வர,பரிதி வீட்டின் வாயிலில் தான் அமர்ந்திருந்தான்.திவ்யாவும்,மிருதுளாவும் பேசியபடி வர அவனை கவனிக்கவில்லை ஆனால் நாயகி கவனித்துவிட்டார்.

“ஓய் இங்க பாருடீ….உன் உடம்பை பார்த்துக்க….டாக்டர் சொன்னது நியாபகம் இருக்குல்ல….”என்று திவ்யா மிருதுளாவிடம் கூற,

“சரிடீ கவனமா இருக்கேன்….”என்றவளை இடைமறித்தார் நாயகி,

“கண்ணு….இன்னும் இரண்டு மாசம் நீ உன் உடம்பை பத்திரமா பார்த்துக்கனும் புரியுதா….உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்னை கேளு….”என்று கூறியவர் பார்வை நானிருக்கிறேன் அவளிற்கு என்று பரிதிக்கு எடுத்துரைத்தது.நாயகியின் பார்வையையொட்டி திரும்பிய மிருதுளாவும் அவனை கண்டு கொண்டாள்.ஆனால் அவனோ எதோ நாடகத்தை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன மகாராஜா சார் அப்பாவாக போறீங்கனு கொஞ்சம் கூட பொறுப்பில்லை….இப்படி தான் அவளை தனியாவிட்டு போவீங்களா….உங்களை எங்க கூட டாக்டர் கிட்ட வாங்கனு தான சொன்னேன்….”என்றவள் அவளின் கையில் இருந்த மருந்து மாத்திரைகள் அடங்கிய பொதியை அவனிடம் கொடுத்துவிட்டு,

“இந்தா பிடிங்க….இத்தனை நாள் உங்களை அவ கவனிச்சா….இப்ப நீங்க  அவளை கவனிங்க…..”என்று கூற,

“திவி சும்மா இரு…..”மகளை அவன் ஏதாவது கூறிவிட்டாள் அவரால் தாங்கி கொள்ள முடியாது என்று மகளை அடக்க பார்க்க அவளோ இவர் கூறுவதை காதில் வாங்கினாள் தானே.

“நீ சும்மா இருமா….நான் சொல்லிட்டு தான் வருவேன்….என்ன ராஜா சார்….நான் சொல்லுறது உங்க காதுல விழுதா….”என்று அவள் கேட்க,

“கவனிக்காம தான் பிள்ளை வந்தததா….”என்றவனின் வார்த்தைகள் திவ்யாவிற்கு புரியவில்லை ஆனால் மிருதுளாவிற்கு புரிய திவ்யா அடுத்த வார்த்தை பேசும் முன்,

“திவி….கடைக்கு கிளம்புனும்ல கிளம்பு….நானும் பத்து நிமிஷத்துல கிளம்பி வந்துடுறேன்….”என்றவள் பரிதியை தான்டி வீட்டின் உள்ளே சென்றுவிட,

“ம்க்கும்….பிள்ளை உண்டான பொண்ணை இப்படி வேலைக்கு அனுப்புறீங்களே ராஜா சார்….உங்களுக்கே இது நியமா இருக்கா….”என்று திவ்யா அவனிடம் விடாமல் பேச அவனோ எதையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றுவிட்டான்.செல்லும் போது அவனின் கைகளில் மருந்து பொதிகளும் இருந்தது.அதை கவனித்த திவ்யாவிற்கு மனது சற்று சமன்பட்டது.அவளிற்கு பரிதியின் மீது ஒரு சிறு நம்பிக்கை அவன் நல்லவன் என்று.

வீட்டின் உள்ளே வந்த மிருதுளா வேகமாக கடைக்கு கிளம்ப அனைத்தையும் எடுத்து வைத்தவிட்டு அவனிற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனின் முகம் பார்க்காமல் ஊட்ட தொடங்கினாள்.பரிதிக்கு நன்கு புரிந்தது அவள் தன்னை தவிர்க்க பார்க்கிறாள் என்று ஒருவித கோபம் எழுந்தது.அவள் அவனிடம் சண்டை போட்டால் கூட திரும்பி திட்டலாம் ஆனால் இப்படி அமைதியாக தன்னை தாக்க அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.அதனால் பாதி சாப்பாட்டில் போதும் என்றுவிட,

“ஏன் பசிக்கும்……நான் வேற மதியம் கொஞ்சம் லேட்டா தான் வருவேன்….சாப்பிடுங்க….”என்று விட்டு மீண்டும் ஊட்ட,

“மதியமெல்லாம் வரவேண்டாம் நான் வெளியில போறேன்….”என்றுவன் எழ பார்க்க,அவனின் கைகளை பிடித்து அமர செய்தவள்,

“சாப்பிட்டு போங்க….”என்று கூறிவிட்டு அவனிற்கு முழுவதுமாக ஊட்டிவிட்டு தான் எழுந்தாள்.

“இந்தா உன்னோட மாத்திரை….”என்று திவ்யா கொடுத்த பையை அவளிடம் நீட்டியவன் வேறு எதுவும் கூறாமல் சுவற்றில் சாய்வாக அமர,மிருதுளாவிற்கு கையில் கிடைப்பதை விசிரியடிக்கும் கோபம் தான் ஆனால் தன் உடல் அதோடு மருத்துவர் வேறு இந்த சமயத்தில் அதிக கோபம் கூடாது என்று கூறியிருக்க தன்னை முயன்று அடக்கி கொண்டாள்.

அவன் நீட்டிய பைகளை வாங்கியவள் கடைக்கு கிளம்ப,

“சாப்பிடல….”என்று பரிதியின் குரல் அவளை நிறுத்த,திரும்பி அவனை முறைத்தவள் எதுவும் கூறாமல் செல்ல அவனும் தோளை குலுக்கி கொண்டு அவளுக்கு முன்னே வெளியில் சென்றுவிட்டான்.மிருதுளா கதவை அடைத்துக் கொண்டிருக்கும் போது,

“ஏன்டீ…உனக்கு அறிவில்லை….”என்ற திவியின் கோபக்குரலில் திரும்பிய மிருதுளா,

“என்னடீ….”

“என்ன நொன்னடீ…..ஒழுங்கா இப்படி உட்காரு…..எங்காயாவது நகர்ந்த அப்புறம் இருக்கு….”என்றவள் அவளை இழுத்து அமர வைத்துவிட்டு வேகமாக தனது வீட்டிற்கு சென்று தட்டுடன் வர மிருதுளாவிற்கு அப்போது தான் புரிந்தது ஆனால் நான் சாப்பிடாமல் இருக்கிறேன் என்று இவளுக்கு யார் கூறியிருப்பார்கள் என்று நினைத்தபடி அமர்ந்திருக்க,

“ம்ம்….சாப்பிடு….”என்று அவளிற்கு ஊட்ட முற்பட,

“உனக்கு எப்படி தெரியும்….”

“ம்ம்ம்….எல்லாம் உன் ராஜா தான் சொல்லிட்டு போறார்….திமிரு பிடிச்சவ சாப்பிடாம கிளம்புறானு….”என்று கூற,

“உன்கிட்ட வந்து சொன்னாரா….”என்று கேட்க,

“ம்க்கும்….என் வீட்டு வாசல்ல கத்திட்டு போறார்…..”என்று திவி கூற,மிருதுளா பல்லை கடித்தாள்.அதன் பின் அவளின் பொழுது வேலையில் கழிந்தது.அடுத்த இரண்டு வாரமும் இதே நிலை தான் பரிதி மிருதுளா வாழ்வில்.

மிருதுளா அவனிற்கு அனைத்தும் செய்வாள் ஆனால் அவனிடம் முகம் கொடுத்து பேசமாட்டாள்.பரிதிக்கு உள்ளுக்குள் கோபமாக இருந்தாலும் அவளிடம் உன் கோபம் என்னை பாதிக்கவில்லை என்பது போல் காட்டிக் கொள்வான்.இந்த இரு வாரங்களில் திவி தான் படாத பாடு பட்டு போனாள் பரிதியிடம்.ஆம் மிருதுளா சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தாள்,மாத்திரை எடுக்காமல் இருந்தால் அவளின் வீட்டு வாசலில் தான் கத்திவிட்டு செல்வான்.

“அடபாவிகளா இதுங்க சண்டையில என்னை இழுத்துவிடுதுங்களே….”என்று நொந்து கொண்டாலும் மிருதுளாவை கவனிப்பது அவள் தான்.இதில் மிருதுளாவிற்கு கருப கால உபாதைகள் வேறு இருக்க வெகுவாக சோர்ந்து போனாள் பெண்.நாயகிக்குமே இப்போதெல்லாம் பரிதியின் இந்த கோபமான அக்கறை கண்டு வியந்து தான் போனார்.அதை மிருதுளாவிடமும் கூறுவார்,

“ம்ம்ம்….நான் கூட என்ன உன் புருஷன் இப்படி இருக்கான்னு நினைச்சேன்….ஆனா உன் மேல பாசம் இருக்கு பாரு கண்ணு….உன்னை எப்படி கவனிக்குதுனு….”என்று கூற

“ஆமா ஆமா…ரொம்ப பாசம் தான் ஆனா என் மேல இல்லை அவர் பிள்ளை மேல ம்மா…”என்று மிருதுளா குறைபடுவாள்.

“அப்படி தெரியலையே கண்ணு….உன் புருஷன் கண்ணு எல்லாம் எப்போதும் உன் மேல தான்….நான் தான் பார்க்குறேனே…”என்று கூறிவிட்டு செல்வார்.மிருதுளாவிற்கும் அவர் கூறுவது புரிந்தது தான் ஆனால் அந்த ஒரு விஷயம் அது மட்டும் மறைந்து போனால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று தான் நினைப்பாள்.இப்போதெல்லாம் எங்கு செல்கிறான் என்று தெரியவில்லை அதுவே அவளை பயம் கொள்ள செய்ததது.

காலை அவளுடன் கிளம்பி செல்பவன் இரவு தான் வருவது.மிருதுளா கருப்பமானதிலிருந்து அவளை மதியவேளை வீட்டிற்கு வராதே என்றுவிட்டான்.மிருதுளா இல்லாமல் அவன் வீட்டிற்கு வரமாட்டான்.இதோ இன்று இரவாகிவிட்டது எங்கு சென்றான் என்று தெரியாமல் படுத்திருந்தாள் மிருதுளா.அப்போது கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு அவள் எழும்ப,பரிதி தான் களைந்த உடையுடன் வந்தான்.முகமும் சோர்ந்து போய் இருந்தது.

இவள் எழுந்தை பார்த்தாலும் எதுவும் கூறாமல் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் தானே சாப்பாட்டை எடுத்து வந்து அவளிடம் நீட்ட  இது தினமும் நடப்பது என்பதாள் அவளும் வாங்கி ஊட்டிவிட்டாள்.அவன் முகம் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக சோர்வுடன் இருக்க,

“என்னாச்சு…ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…”என்றுவிட்டு அவனின் கழுத்தை தொட்டு பார்க்க,அவளின் கையை தட்டிவிட்டவன்,எதுவும் கூறாது எழுந்து சென்றுவிட்டான்.எவ்வளவு சண்டை வந்தாலும் இருவரின் படுக்கையும் ஒன்று தான் அவளிற்கும் அவனின் அணைப்பு இல்லாமல் உறங்க முடியாது.பரிதி படுத்தவுடன் அவன் முகம் பார்த்து திரும்பி படுத்தவள்,

“உடம்புக்கு ஏதாவது முடியலையா….”என்று கேட்க,

“வேலைக்கு போனா இப்படி தான் களைப்பா இருக்கும்….நீ தூங்கு….”என்று அவன் கூற,மிருதுளாவிற்கு அவன் என்ன சொன்னான் என்பதை கிரகிக்கவே சில நிமிடம் தேவைப்பட்டது.

“என்…என்ன…என்ன சொன்னீங்க….”

“ஒரு தடவை தான் சொல்ல முடியும் திரும்ப திரும்ப எல்லாம் சொல்ல முடியாது…..எனக்கு தூக்கம் வருது தூங்கு…”என்றுவிட்டு திரும்பி படுக்க,அவனை திரும்ப விடாமல் அணைத்துக் கொண்டவள்,

“நிஜமா தான் சொல்லுறீங்களா…வேலைக்கு போறீங்களா…..எங்க போறீங்க…எப்போ வேலையில சேர்ந்தீங்க….ஏன் என்கிட்ட சொல்லவேயில்லை….”என்று வரிசையாக கேள்விகளை தொடுக்க,அவனோ அவளையும்,அவளின் அணைப்பையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்கன்னா….என்னையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க….”என்றவள் அப்போது தான் அவனின் பார்வை சென்ற இடத்தை பார்க்கவும்,தன் நாக்கை கடித்து கொண்டாள்.இருவருக்கும் சண்டையானதிலிருந்து அவளாக அவனை அணைத்ததில்லை இப்போது தானா அணைக்கவும் அவனிற்கு கோபம் என்று புரிந்தது.

“நீங்க மட்டும் நான் சொன்னதை கேட்டீங்களா…..அதான் எனக்கு கோபம்….”என்றவள் அணைப்பை மேலும் இறுக்க,

“ப்ச் தள்ளி போடீ…..யாருக்கு வேணும் உன் கட்டிபுடி வைத்தியம்…..போடீ…தள்ளி….”என்று அவன் தள்ள இவள் மிஞ்ச என்று வெகு நாட்களுக்கு பிறகு இருவருக்கும் இனிமையான நேரம் என்று தான் கூற வேண்டும்.சற்று நேரத்திற்கு பின் அவனின் அணைப்புபிற்குள் சரண்டைந்தவள்,

“சொல்லுங்க….எங்க வேலைக்கு போறீங்க….”என்று கேட்க,

“பக்கத்துல இருக்குற  கார் கேரேஜ்ல….தான்…”

“என்ன மாணிக்கம் கேரேஜனு பேரு போட்டிருக்குமே அங்கேயா….அது பெரிய கேரேஜ்ங்க….எப்போ சேர்ந்தீங்க….”என்றவளின் குரலில் அத்தனை நிம்மதி முகத்தில் ஒருபுதுவித ஒளி,அனைத்தையும் அவதானித்தபடி தான் இருந்தான் பரிதி,

“ஒரு வாரமாச்சு….”என்று கூற,

“என்ன ஒருவாரமா ஏன் என்கிட்ட சொல்லல….”என்று குறைப்பட்டு கொண்டவள் அவனின் நெஞ்சில் முகத்தால் குத்த,அவனோ கண்டு கொள்ளாமல் ஒற்றை கரத்தால் முகத்தை மூடி படுத்திருந்தான்.மிருதுளாவிற்கு மனதின் பாரம் எல்லாம் நீங்கிய உணர்வு இனி பரிதி பார்த்துக் கொள்வான் என்று நினைத்தபடி அவனுடன் ஒன்றிபடுத்திருக்க,

“ரொம்ப சந்தோஷமெல்லாம் படாத….மத்தவன் ஒழுங்கா இருக்குற வரை நானும் ஒழுங்கா இருப்பேன்….இல்லை என் வழி தான்….”என்று மிருதுளாவை அதிர வைத்துவிட்டு அவன் தூங்க.மிருதுளாவிற்கு தான் இது என்ன இப்படி கூறுகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க,என்ன நினைத்தானோ அவளிடம் திரும்பி படுத்து வாகாக அணைத்துக் கொண்டு,

“இங்க பாரு….என்னால உடனே எல்லாம் திருந்த முடியாது….நான் செய்யுற வேலைக்கு ஒழுங்கா பணம் வந்தா நான் எதுவும் செய்யமாட்டேன்…ஆனா ஒழுங்கா தரலை நான் என்வழியில தான் போகனும்….அதனால தான் உன்கிட்ட பொய்யான வாக்குறிதி எதுவும் தரலை…..பார்க்கலாம் எனக்குள்ள மாறுதல் வருதானு….”என்றவனை தாவி அணைத்துக் கொண்டவள் அவனின் முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள்.அவனின் இந்த மாற்றமே பெரிய மாற்றமாக மிருதுளாவிற்கு தெரிந்தது.இதுவே அவளின் அலைக்கழிந்த மனதை அத்தனை அமைதி படுத்திருக்க,

“இதுவே போதும்….நீங்க கண்டிப்பா மாறுவீங்க….எனக்கு நம்பிக்கையிருக்கு….”என்றவள் அவனின் நெஞ்சில் அழுத்தமாக அதரத்தை பதிக்க,

“ஆமா….ஆமா…நான் மாறிடுவேன்….நம்பிக்கிட்டே இரு….”என்று நக்கலாக அவன் கூறினாலும் கண்களில் என்னவோ ஒரு புது ஒளி தெரிந்தது.அதை பார்த்துக் கொண்டே மிருதுளா கண்ணயர்ந்தாள்.அவளின் முகத்தில் தெரிந்த நிம்மதியை கண்களால் நிரப்பிக் கொண்டே பரிதியும் கண்ணயர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!