அருண் அசூர வேகத்தில் காரை ஓட்ட,புவன் “மச்சான் ஸ்லோ பண்ணு… இல்ல.., நடக்கறதே வேற”
அருண் வேகத்தை மிதப்படுத்தினான். புவன் குணம் அறிவான் அவன். சாதுவான புவன் தேவைக்கு புலி போல சீறி நின்றான் என்றால் சகலமும் நின்று அசையும். அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே அந்த குணம் உண்டு தேவைக்கு மட்டுமே கோபத்தை காட்டுவார்கள். மற்றநேரம் அவர்கள் தான் நகரத்தின் முக்கியப்புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
புவன் “எதையும் வாய் திறந்து பேசு. குறைஞ்சபட்சம் உன் நல்லதுக்காவது பேசு” எரிச்சலாக உரைத்தான்
அருண் “நான் பேசுறேன் பேசிட்டுதான் இருக்கேன்”
புவன் “இல்ல மச்சான். நீ உனக்குள்ளயே எதையோ போட்டு குழப்பி எதையோ செய்யுற… இது நல்லதே இல்ல”
அருண் “வேற என்ன செய்யணும்”
புவன் “உன் மனசுல இருக்கிறத சொல்லு நிலைமையை எடுத்து சொல்லு”
அருண் “சொன்னா மட்டும்! என்னல்லாம் கட்டிக்க மாட்டாளாம். இந்தியா விட்டு கொரியா போயிடுவாளாம் அவளே சொன்னா” என்றான் மிகவும் சின்ன குரலில்
சிரஞ்சீவி “ஏன்டா அவங்க வீட்ல இருன்னு சொன்னாங்கல்ல.. இருந்திருந்தா பொண்ணு கேட்டுட்டு வந்துருக்கலாமா… நீ பாட்டுக்கு வந்துட்ட…”
அருண் “தெரியல வந்துட்டேன். அண்ட் அந்த பொண்ணு இருக்கிற நிலமைல எங்கயாச்சும் போய் நிம்மதியா இருக்கட்டும் விடு ” என்றவன் உள்ளுக்குள் தோன்றும் கோபத்தை திரும்ப காரின் வேகத்தில் காட்டினான்.
சிரஞ்சீவி “உனக்கும் சொல்றேன் மச்சான் நான் என் வாழ்க்கையில பார்க்க வேண்டியது நிறைய இருக்கு” கிண்டலாக சொன்னான்
புவன் “இவன் திருந்தல மச்சான்”
அருண் தமயந்தியின் வீட்டிலிருந்து வந்தவன் அவன் போக்கில் வேறு வேலையில் இருந்தாலும் மனம் தமயந்தி பக்கமே சாய்ந்தது. “ஏன் தமயந்தி? அப்படி எது உன்ன தடுக்குது? பேச பழக” என்று அவன் கேட்ட கேள்விக்கு அவளை தடுக்கும் விஷயத்தை அவள் ஊருக்கு அழைத்துச்சென்று உணரச்செய்து காட்டிவிட்டாள். தவித்து போனான் இவன். உனக்காக ப்ரே பண்ணுவேன் என்றாளே அதை எண்ணி சிரிப்பதா? இல்லை ஊரே சேர்ந்து தூத்தியது அதனால்தான் கவனம் ஈர்க்கும் விதம் இருக்க பிடிக்கவில்லையென்று சொல்லாமல் சொன்னாளே அதை யோசிப்பதா?
அருண் அவன் யோசனை உலகத்தில் அவன் இருக்க ப்ரொடக்ஷன் கம்பெனி மானேஜர் “தம்பி டிரைக்டர் ஹீரோயின்ன செலெக்ட் பண்ண போட்டோ அனுப்பிருக்கார். நீ எதுக்கும் பார்த்து சொல்லேன்”
அருண் “இதெல்லாம் அவர் வசதின்னு சொல்லிருந்தேனே”
மானேஜர் “இல்ல தம்பி புதுமுகம். அதான் எதுக்கும் நீ ஒரு தடவ போட்டோ பாரேன்”
வரிசையாக புகைப்படம் பார்த்தவன் உயரமாக இருந்த பெண்ணை காட்டி இந்த பெண்ணை ஓகே பண்ண சொல்லுங்க என்றான்.
மானேஜர் “அந்த பொண்ணுக்கு சரியா நடிக்கவே வரலையாம்ப்பா”
அருணுக்கு கோபம் வந்தது. “அப்புறம் எதுக்கு என்ன கேட்டிங்க என்னமோ பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு புகைப்படங்களை மேஜை மீது எறிந்துவிட்டு சென்றான்.மீண்டும் அவளை பார்க்கும் வரை உடல் பொருள் ஆவி அனைத்திலும் அவளை பற்றியே எண்ணிக்கொண்டே கழிக்க போகிறான் என்பது புரிந்தது.
பூமிகா அவளுக்கு பிடித்த கதை புத்தகம் வாங்கிக்கொண்டு கடையில் இருந்து வெளியே வரும்போது புவனை சந்தித்தாள்.
புவன் “தற்செயலா மீட் பண்ற மாதிரி செட் பண்றது இப்ப எல்லாம் ரொம்ப டயர்டா இருக்கு பூமி”
பூமிகா “குட் அப்போ என்ன பாக்க வராத”
புவன் “உனக்கு தெரியும் அது என்னால முடியாதுன்னு”
பூமி “அப்ப என்னவோ செய் எனக்கென்ன உன் டைம் தான் வேஸ்ட்”
புவன் “தமயந்தி அவளைப் பத்தி எங்ககிட்ட சொன்னா”
பூமி முகம் சுருங்கியது “என்ன சொன்னா”
புவன் “அவ டீன் ஏஜ்ல நடந்த ஒரு விஷயத்தை பத்தி சொன்னா”
பூமிகா சற்று யோசித்தவள் சட்டென “சிரஞ்சீவி ஏதும் கிண்டல் பண்ணிடல தானே” என்று கேட்டாள்
புவன் “என்ன இப்படி கேட்கிற”
பூமிகா “இல்ல அவன் சில நேரம் இடம் பொருள் தெரியாம பேசிடுவான். அவன் மேல வேற அவளுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கு. நல்ல பிரெண்ட்ன்னு சொல்லிட்டு இருக்கா. அவனைப் போல தைரியமா எதையும் கிண்டல் பண்ணி தட்டிவிட்டு கடந்து போயிட்டே இருக்கணும் சொல்லுவா. ஆனா இந்த விஷயத்துல தமயந்தி கொஞ்சம் சென்சிடிவ் அதான் கேட்டேன் பூ”
கணநிமிடம் அவன் தோழி காதலி மனைவி என சகலமுமாக தெரிந்த பூமிகா மின்னி மறைந்தாள். எந்தப் பெயரை வைத்து கூப்பிடக்கூடாது என்று நினைத்தாளோ அதை சொல்லி விட்டாளே! அவள் சங்கடம் முகத்தில் தெரிய…
புவன் எதையும் பெரிது படுத்தாமல் “நாங்க எதுவும் பேசலை” என்றான்
பூமிகா “ஆனா எனக்கு ரொம்ப ஆச்சரியம் அவளே வாய்விட்டு இந்த கதையை சொல்லி இருக்கிறாளே” என்று அவன் முகத்தை பார்த்தாள்
சட்டென புவன் “ஏதாச்சு சாப்பிட்டுகிட்டே பேசலாமா” கேட்டான்
பூமிகா “அதெல்லாம் முடியாது”
புவன் “ப்ளூபெர்ரி சீஸ் கேக், இல்ல ஒரு ப்ரூட் பஞ்ச்,இல்ல குழி பனியாரம் என்ன சாப்பிடலாம் சொல்லு”
பூமிகா “வேணாம் அம்மா வெயிட்டு குறைக்க சொல்றாங்க நான் எதுவும் சாப்பிடல”
புவன் “சரி அப்போ ஜூஸ் குடிக்க போகலாமா”
யோசித்தவள் பூமி “ஜூஸ் குடிக்கிற வரைதான் பேசுவேன் அப்புறம் நான் கிளம்பி போயிருவேன்”
புவன் ஓகே என்று ஒத்துக்கொண்டான்.
இருவரும் ஜூஸ் கடை நோக்கி நடக்க புவன் “தம்மு பாஸ்கெட் பால் கோச் அப்புறமா அவங்க வைஃப் கதைய சொன்னா”
பூமிகா “ஆங் அதுதான் எல்லாத்துக்கும் காரணமா அமைஞ்சதுன்னு நெனைக்கிறேன். எனக்கே அந்த விஷயத்தை அவ தங்கச்சித்தான் சொன்னா. ஆனா உங்களுக்கு அவளே சொல்லிருக்களே. நல்ல இம்ப்ரூவ்மென்ட் அந்த சண்டைக்கு அப்பறம் ஸ்கூல்ல சிலர் திரிச்சு பேசி கஷ்ட்படுத்திருக்காங்க. இதுல ஏற்கனவே உயரமா இருக்குறதுலயும் வயசுக்கு மீறி வயசான மாதிரி தெரியறதையும் நிறைய கிண்டல் கேலி பேச்சு இருக்க… அதெல்லாம் அவங்க அம்மாவ கடுப்பேத்த, அவங்க அம்மா வேற வேற வில்லேஜ் ஸ்கூல்லா டிரான்ஸ்பர் வாங்க… அவங்க அப்பாவும் வேற வேற ஊர்ல வேலைக்கு போக… அப்பா தனியா, அவ அவங்க அம்மா தங்கச்சி வேற ஊர்ல இருக்கிற மாதிரி ஆக… கபடி வாலிபால்ன்னு இவ வேறவேற விளையாட்டுல்லாம் தாவி தாவி போக ஒரு கட்டத்துல பிரண்ட்ஸ்க்கு ஏங்கி போக… பேசுறதயே விட்டுட்டு யார் எது சொன்னாலும் யார் எது பண்ணாலும் தாங்கிக்கிட்டு போற டைப்பா மாறிட்டா. எனக்கு அவங்க அம்மா மேலதான் கொஞ்சம் கோபம். அந்த ஆண்ட்டிக்கு அவ மேல அக்கறை நிறைய இருக்கும் ஆனா அவகிட்ட எரிஞ்சு விழுவாங்க. அது அவளுக்கு இன்னும் நமக்கு யாருமே இல்லன்னு லோன்லி பீல் கொடுக்கும். இந்த அம்மாக்களே இப்படித்தான் போல எது வேணுமோ அதை செய்யமாட்டாங்க ”
இவள் யாரை திட்டுகிறாள் என்கிற குழப்பத்தில் எதுவும் பேசாமல் புவன் “ம்ம் ”
பூமிகா தொடர்ந்தாள் “ அவ உயரம் அதுமேல இன்செக்யூரிட்டிஸ் மத்த பொண்ணுங்க போல நாம இல்லையேங்கிற கவலை, நம்மள யாரும் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்கங்கிற வருத்தம் நிறைய இருக்கும்… ஆனா ஒரு நாளும் எதையும் காட்டிக்காம நிமிர்ந்து நடந்து வருவா போவா. நானும் அவ பயத்த, கவலைய மாத்த ட்ரை பண்ணி ஓரளவுக்கு ஜெயிச்சேன். ஆனா உங்க பிரண்ட்ஷிப் எல்லாம் அவளை ரொம்பவே கான்ஃபிடன்ட்டா மாத்தி இருக்கு”
புவன் “அப்படியா”
பூமிகா “ ஆமா நான் நிறைய வித்தியாசம் பார்க்கிறேன். அவ பூர்ணிமா கல்யாணத்துக்கு போனது, அங்கே இருந்து அவ என்கூட பேசின விதம் அதெல்லாம் வச்சு சொல்றேன் தமயந்திய நான் முதல் முதல்ல பார்த்ததுக்கும் இப்பவும் நிறைய வித்தியாசம். பாதி கிரெடிட் உங்களை சேரும்”
புவன் சிரித்துக்கொண்டான்.
பூமிகா “ஆனா அவளுக்கு அருண் தான் ஏதோ கொஞ்சம் பிடிக்கல போல எப்ப பார்த்தாலும் அவனை திட்டிட்டே இருக்கா”
புவன் இப்போது ஜோராக சிரிக்க.., பூமிகா எரிச்சலானாள் “என்ன கெக்கபிக்கேன்னு சிரிக்கிற”
புவன் “ஒண்ணுமில்ல ஜஸ்ட் சிரிச்சேன்.சரி சொல்லு நீ எப்படி இருக்க”
பூமிகா “எனக்கென்ன சூப்பரா இருக்கேன்… அவனவன் பைனல்ஸ்ல தான் கஷ்டப்படுவான்னு சொல்றாங்க. நான் இன்டெர்மீடியேட்லே தவழ்ந்துட்டு இருக்கேன். எங்கிருந்து நான் ஆடிட்டர் ஆகுறது”
புவன் “மெதுவா போகலாம், தப்பு இல்ல அதுல”
பூமிகா “ல்ல ஆனா அம்மா ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”
பூமிகா இளகி கூட்டுக்குள் இருந்து வெளிவருவது தெரிந்தது. புவன் “நான் செல்லம்மாள் ட்ரஸ்ட்க்கு பைனான்ஸ் ஹெட்டா போய் உட்கார போறேன். தம்முக்கு என் கம்பெனில…” என்று இழுத்தான்
பூமிகா “நோநோ வேணாம்.. ஆனா இத நான் மைண்ட்ல வச்சுக்கிறேன். இங்க தமயந்திக்கு பிரச்சனை பணம் இல்ல, அது பிரச்சனையா இருந்தாலும் அத சம்பாதிக்கிற நிறைய வழி அவளுக்கு தெரியும்.பாஸ்கட் பால் கோச் பண்ணிதான் அவ ஹாஸ்டெல் பீஸ் கட்டுறா, திடீர்ன்னு போலீஸ் டிபார்ட்மென்ட் கூட எங்கேயோ மேட்ச்க்கு எல்லாம் போயிட்டு வந்து எனக்கு கிஃப்ட் வாங்கி குடுத்துருக்கா. அதனால பணம்ங்குறத விட தம்முக்கு அவ உழைப்பை போட்டு அதுல ரொம்ப பெரிய இடத்துல போய் கம்பீரமா உட்காரனும். அது பண்ணா அவ மேல அவளுக்கே ஒரு மதிப்பு வரும். அதுதான் அதுக்குதான் அவளோட நாம கூட இருந்து கமான் தம்மு உன்னால முடியும்ன்னு சொல்லணும் அதுவே அவளுக்கு போதும். மத்ததெல்லாம் அவளே சாதிப்பா. என்ன நெனச்சிட்ட நீ அவள பத்தி… கண்டீப்பா உங்க காலேஜ்ஜே அதிசயப்படற அளவுக்கு அவ பெருசா வராளா இல்லையா பாரு”
புவன் “ம்ம்… ரைட்டு… பார்ப்போம்…”
பூமிகா “நான் கிளம்புறேன். அப்பறம் அவளை பத்திரமா கூட்டிட்டு வந்து விட்டதுக்கு தேங்க்ஸ்”
புவன் “அவ எங்களுக்கும் பிரெண்ட் தான்”
பூமிகாவுக்கு கொஞ்சமாக பொஸசிவ்நெஸ் எட்டிப்பார்க்க அவனை முறைத்துப் பார்த்துவிட்டு அகன்றாள்.
தமயந்திக்கு நம்ம கொஞ்சம் அதிகமா ஷேர் பண்ணிட்டோமோ என்று மன உறுத்தலாக இருந்தது. நண்பர்கள் மூவரும் அவளை எந்த கேள்வியும் கேட்காமல் அவர்களுடன் இணைத்துக் கொண்டு ஊரில் கொண்டுவந்து சேர்த்தது வியப்பாக இருந்தது. அதிலும் அருணை அன்று அவள் மனம் நோகும்படியாக பேசியது பெரிதாக அவனை வருத்தியும் யோசிக்காமல் உதவியிருக்கிறானே!
பூர்ணிமாவின் திருமணத்தன்று பூர்ணிமா ஏற்கனவே பணியாட்களிடம் எட்டரை மணிக்கு தமயந்தியின் பைகளை எடுத்துகொண்டு போய் டிராவல் டெஸ்கில் வைத்துவிட சொல்லியிருக்கிறாள். பணியாட்களும் அப்படியே செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டனர். இதில் டிராவல் டெஸ்கில் இருந்த ஆட்களும் தமயந்திக்காக அரை மணிநேரம் காத்திருந்து விட்டு அவள் வரவில்லை என்றதும் அடுத்தடுத்த விருந்தினரை பார்க்க சென்றுவிட்டிருக்கின்றனர். இதில் யாரும் கண்டுகொள்ளாத பையை பத்திரமாக வைக்கிறேன் என்று ட்ராவல் டெஸ்க் செய்த வேலையில் பைகள் எங்குபோனது என்றே தெரியவில்லை.
பூர்ணிமாவின் தம்பிகளுக்கு விசயம் தெரிந்ததும் துரிதமாக விசாரித்து அவள் பை சூட்கேஸ் எல்லாம் கண்டுபிடித்து கூரியர் அனுப்பிவிட்டனர்.
தமயந்தி அம்மாவின் நண்பர் வீட்டிலும் திருமணம் மிகவும் ஜோராக நடந்து முடிந்தது. விசேஷம் முடிந்த அடுத்த நாள் இவள் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.அடுத்து ஒரு மாதம் முழுக்க காலேஜ் பிளேஸ்மெண்டில் இன்டர்வியூ கொடுத்து ஏதேனும் ஒரு கம்பெனியில் நல்ல வேலை வாங்கிவிட்டு தான் ஊரு பக்கம் திரும்பவேண்டும் என முடிவு செய்துகொண்டாள்.
பூமிகா புவனுடன் சேர்ந்து அடுத்தடுத்து வரும் இன்டர்வியூகளுக்கு தயாராக தொடங்கினாள்.
பூமியின் எவ்வித பேச்சையும் சிறிதும் மனம் கோணாமல் எதிர்கொள்ளும் புவனை பார்த்து தமயந்திக்கு ஆச்சரியமானது. சிரஞ்சீவியின் வாயாடலுக்கு பதில் சொல்பவள் புவனின் ஒரு சில பேச்சுக்களை காதிலேயே விழாது போல இருந்து கொள்கிறாள். சிரஞ்சீவியை காட்டிலும் புவனின் பேச்சும் அதிகமாக இருந்தது.
தமயந்தி சட்டென புவனிடம் “நீ என்கிட்ட ஒரு உதவிக்கு பேசி வச்சிருந்த இல்ல என்ன அது”
புவன் “அதுதான் நான் கேட்காமலே நடக்குதே”
தமயந்தி தயங்கி தயங்கி “பூமி மேலே உனக்கு ஆசை இருக்கா புவன்” கேட்டாள்
புவன் “இந்த பிறப்புல என் நோக்கமே பூமி கூட சேர்ந்து வாழ்றதுதான்”
தமயந்தி “வாவ்… நல்ல நோக்கம்… எவ்வளவு உயர்ந்த நோக்கம்…”
புவன் “ஸ்வீட் பூமியை யாரு வேணாம் சொல்லுவா”அவன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரம் பூமிகா “சீ போடா குரங்கு” என்று சிரஞ்சீவியை சொல்லிக்கொண்டிருந்தாள்.
தமயந்தி “பூமிகா ஸ்வீட்டா! அதுசரி உனக்கு முத்திருச்சு”
புவன் “அது முத்தி பல வருஷம் ஆகுது”
தமயந்தி “இத்தனை நாள் இது எப்படி நான் கவனிக்காம இருந்தேன்”
புவன் “ ஏன்னா உன் கவனம் எங்க மேல இருந்ததில்ல”
தமயந்தி அவனை அதிர்ச்சியாக கண்களை விரித்து பார்க்க
புவன் “நமக்கே ஒரு விஷயம் புரியாம குழப்பமா இருக்கும்போது வெளியில சொல்லுவோமா என்ன” கேட்டான்
தமயந்தி “அதானே… சொல்லுவோமா என்ன” என்று சொல்லி பேசி முடித்துக்கொண்டு நகர்ந்து சென்றாள்.