பிரகாஷ் வீடு வந்த போது ஒருவரும் வீட்டில் இல்லை. பிள்ளைகள் பள்ளி சென்று இருப்பார்கள். ஆனால், மனைவி எங்கே போனாள்?…
அங்கிருந்த வெளிவராண்டாவில் காத்திருந்தான். பசிக்க வேறு செய்தது… ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் சாலா வந்தாள். நல்ல வெயில், உடல் முழுவதும் வேர்த்து இருக்க, இரு கைகளிலும் பெரிய பைகளை இழுத்து கொண்டு, ஒரு பக்க கால்.சாய்த்து நடந்து வந்தாள்.
வெளி வாயிலில் நின்று இருந்த கணவனை பார்த்து அவள் திகைக்க, மனைவியை கண்டு முகம் சுளித்தான் பிரகாஷ்.
“ வாங்க…” சம்பிரதாய அழைப்பு மட்டுமே மனைவியிடம்…
“என்ன கண்றாவி இது. எங்க போய் வார?… இது என்ன பெரிய பை?… கால் ஏன் ஒரு பக்கம் சாச்சி நடக்குற?…” என்று அடுக்கடுக்காக கேள்வி தொடுக்க
கதவை திறந்தவள், அவனை வருமாறு அழைத்த விட்டு, உள்ளே சென்றவள் ஒரு செம்பு முழுக்க தண்ணீரை காலி செய்தாள்.
“தனியா வீட்டிலே தான் இருக்கேன். இங்க யாரும் பழக்கம் இல்லை. தனியா இருக்குறது ஒரு மாதிரி அழுத்தமா இருக்கு, பொழுது போக துணி விக்குறேன்…” என்று தகவலாக வார்த்தை வந்தது.
என்ன…” என்று அதிர்ந்தவன்.
“துணி விக்கிறயா!… யார கேட்டு உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்க… என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை. உங்க வீட்டில தெரியுமா?…”
“தெரியும்…”
“அப்போ நான் தான் ஏமாளி. என்னை என்ன கையாலாகதாவன்னு நினைச்சியா?… கூப்பிடு உங்க வீட்டை, நான் கேக்குறேன் கேள்வி… எனக்கு ஒரு வார்த்தை சொல்லலை, அதை விட என் கிட்ட கேட்கவும் இல்லை. தும்முன கூட சொல்லுவியே உனக்கு என்ன நோவு வந்துச்சு…” எகிறினான் பிரகாஷ்.
அவள் அசுவாரசியமாக பார்த்தாள். யாரோ, என்னவோ என்ற அவளின் தோரணை பிரகாஷ் பிரஸர் எகிறியது. பார்வையிலேயே ஒரு உதாசீனம், ஒரு அவமரியாதை…
“என் கிட்ட சொல்லாம எதுக்கு இந்த வேலை பார்த்த?…”
“எதுக்கு இவ்வளவு டென்ஷன். நான் என்ன பெரிய ஜவுளி கடையா திறந்து இருக்கேன். சும்மாவே வீட்டுல உட்கார பிடிக்கலை. ஃப்ரீயா இருக்குற நேரத்தை பிரோஜனமா செய்றேன்…” ஒரு மாதிரி சாலா சொல்ல.
“எதுக்கு சளிக்கிற… அந்தளவுக்கு நான் உனக்கு தள்ளி போய்ட்டேன்…”
“காலையில இருந்து வெயில்ல அலஞ்சு வந்து இருக்கேன். என்னால இப்படி தான் பதில் சொல்ல முடியும்…” எரிச்சல் மண்டியது.
“இப்படி எல்லாம் உன்னை யார் கஷ்டப்பட சொன்னா… இந்த வயசுல உனக்கு இது தேவையா?… பாக்குறவங்க என்னை தான் தப்பா நினைப்பாங்க… இதுவரை என்னவோ, இனி வேண்டாம், விட்டுட்டு…” கட்டளையாக கணவன் சொல்ல.
“ முடியாது… எனக்குன்னு ஒரு விசயத்தை ஆசைப்பட்டு செய்றேன். பட்டுன்னு விடுன்னு சொல்றீங்க. அப்படி எல்லாம் விட முடியாது…” சாலா தெளிவாக சொல்ல
“எப்ப இருந்து என் முடிவை எதிர்க்க கத்துக்கிட்ட சாலா… நீ ரொம்ப மாறிட்ட…” ஆற்றாமையாக வார்த்தை வந்தது.
“ எல்லாம் மாறி தான் போச்சு… என்னை மாத்திக்க வேண்டிய சுழலும் வந்துச்சு…”
என்னவோ என்று பார்த்தாலும், “செலவுக்கு ஏன் பணம் கேட்கல. எப்படி சமாளிச்சீங்க?…” கேட்க வேண்டாம் என்று நினைத்தாலும் மனம் விடவில்லை.
“உங்க கையை எதிர்பார்த்து நிப்போம்ன்னு நினைச்சீங்களா. ஆனா பாருங்க, இந்த பரந்த உலகம் எங்களை அரவணைச்சுகிட்டு…”
“ஓ… புதுசா என்ன சாலா. நீ என்கிட்ட பணம் வங்குனதே இல்லையா… எதுக்கு இவ்வளவு பிடிவாதம். நாம எல்லாம் ஒரே குடும்பம், என் கிட்ட கேட்க உனக்கு என்ன தயக்கம்…”
“எனக்கு தயக்கம் எல்லாம் இல்லை. நீங்க சொல்ற மாதிரி நான் உங்க கிட்ட பணம் வாங்குனதே இல்லையா என்ன… நாம ஒரே குடும்பமா இருந்தா, நான் சொல்லாமவே எங்க தேவை உங்களுக்கு தெரியணும். நமக்கு என்ன நேத்தா கல்யாணம் ஆச்சு, என் தேவை என்னன்னு சொல்ல…” நக்கலாக சாலா சொல்ல.
“ஏன், நீ கேட்காம நான் பணம் தரணுமா… உன் புருசன் தானே ஒரு வார்த்தை கேட்டா என்ன?..”
இது விதாண்ட வாதம் என்று நினைத்தவள். மெளனமாக உள்ளே செல்ல,
“எனக்கு பசிக்குது…” என்ற படியே பிரகாஷ் அறைக்கு சென்று விட்டான்.
சாலா முகத்தில் ஒரு விரக்தி சிரிப்பு வந்தது. இது தான் கணவன் புத்தி. அவளும் வேலைக்கு சென்று அழுத்து தான் வந்தாள். கால் நரம்பு ஒரு பக்கம் இழுத்து கொண்டது. கணவனாக அவன் தேவையை மட்டும் சொல்லி செல்கிறான்.
காலையில் பிள்ளைகளுக்கு வைத்த சாம்பார் சாதம் இவளுக்கு இருக்க, அத்தோடு ரெண்டு முட்டை போட்டவள். சூடு செய்து கொண்டு போய் வைத்தாள்.
“இது தான் இருக்கா, வேற ஒன்னும் செய்யலையா சாலா. அஞ்சு மாசமா நாக்கு செத்து போச்சு…” சலித்த படி மீதம் வைக்காமல் உண்டான்.
மாலையில் பிள்ளைகள் வந்து விட்டார்கள். அஞ்சு ஆர்ப்பாட்டமாக துள்ளி குதிக்க, அஜயிடம் அப்படி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. சாதாரண நலவிசாரிப்பு மட்டும் தான். அதில் கொஞ்சம் சுணக்கம் தான் பிரகாஷ்க்கு… அஞ்சு மட்டுமே ஆறுதல்.
சிறிது நேரத்தில் பிள்ளைகள் டியூசன் என்று ஓட, பிரகாஷ் வித்தியாசமாக பார்த்தான். நீண்ட மாதங்கள் கடந்து தந்தை வந்து இருக்க, பிள்ளைகள் சாதரணமாக கடந்து விட்டார்களே…
அடுத்தடுத்து சாலா தன் வேலையிலும், பிள்ளைகள் அவர்கள் வேலையிலும் மூழ்க. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து நின்றான் பிரகாஷ்.
தன் குடும்பம் முன் மாதிரி இல்லை என்பதை விட, தன்னை தேடவும் இல்லை. தன்னை எதிர்பார்க்கவும் இல்லை. நான் தான் என் குடும்பத்தின் அச்சாணி என்ற ஆணவம் முறிந்து விழுந்தது. சாலா சாதுரியமாக எதுவும் செய்கிறாளா?… என்று மனைவியை சந்தேகமாக பார்த்தான் பிரகாஷ்.
அவன் வந்ததில் அவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல நாள் ஓடியது. அவரவர் வேலைக்கும் ஓடி கொண்டு இருந்தார்கள். சாலாவை நிறுத்தவே முடியவில்லை.
முன்பு எல்லாம் வேலை விசயமாக வெளியூர் சென்று வந்தால். வீட்டில் இவனுக்கு கவனிப்பு பலமாக இருக்கும். பிள்ளைகள் ஒரு நாள் லீவு போட்டு வெளியே போய் வருவார்கள். கணவன் உடன் இருக்கும் போது எல்லாம் சாலா தலையில் பூ இல்லாமல் இருக்காது…
எத்தனை வேலையிலும் உங்களுக்கு எதுவும் வேண்டுமா என்று மனைவியின் கேள்வி கேட்காமல் இத்தனை வருட வாழ்க்கை நகர்ந்ததே இல்லை. இன்று எல்லாம் மாறி போனது. வந்தா வா… போன போ… இது தான் அவளின் நிலைப்பாடு.
அஞ்சுவின் தந்தையை கண்ட ஆர்ப்பரிப்பு கூட இரண்டு நாளில் காணாமல் போனது. வேற என்ன பிடி விசாலாட்சி கையில்… படிப்பு விசயத்தில் சாலா பிள்ளைகளை விரட்டி கொண்டு இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவளின் கையில் தற்போது என்ன இருக்கு… பிள்ளைகள் எதிர்காலம் அவர்கள் படிப்பு மட்டும் தான் எனும் போது, நில்லாது விராட்டினாள்.
பிரகாஷ், “டாமினெட் பண்ற, ரூடா இருக்க, பிள்ளைகள் உன்னை வெறுக்க போறாங்க…”
காதிலே வாங்க வில்லை. எங்கள் ஆதாரம் படிப்பு மட்டும் தான்… நாப்பது வயதில் வீடு வீடாக துணி விக்கும் போது அல்லவா தெரிகிறது படிப்பின் அருமை. என் கணவன் லட்சத்தில் சம்பாதிக்கிறான் எனக்கு என்ன கஷ்டம் வர போகுது… அந்த ஆணவம் எல்லாம் அடிபட்டு, ஒத்த நைட்டி விக்க படும்பாடு அவள் அறிந்ததே… அதை தப்பி தவறி கூட அவள் பிள்ளைகள் அறிய கூடாது.
ஆரம்பத்தில் கத்திய பிரகாஷ் கூட கொஞ்சம் நிதானித்தான். மனைவி தன் பிள்ளைகளை சரியாக தான் கொண்டு செல்கிறாள் என்று தோன்றியது.
முதல் எல்லாம் அஞ்சு குட்டி வெள்ளை யூனிஃபார்ம் மண்ணாக தான் வீடு வரும். இப்போது எல்லாம் வெள்ளை, வெள்ளையாக தான் வீடு வருது.
சாலாவும் சொல்லி பார்த்து கேட்க வில்லை எனவும் , ஒரு நாள் மகளவே துவைக்க விட . அதன் பின் அஞ்சு துணியை அழுக்கு செய்ய வில்லை.
பிள்ளைகள் ஷூ, ஷாக்ஸ், பேக், லஞ்ச் பேக் முதற்கொண்டு கண்ட இடத்தில் கிடக்கும். இப்போது ஒரு ஒழுங்குக்கு வந்து இருக்கு… எல்லாவற்றையும் அதன் இடத்தில் வைத்து, உடம்பு கழுவிய பின் தான் டிவி பக்கத்திலே பிள்ளைகள் வருகிறார்கள்.
அதுவும் தன் அஞ்சு குட்டி லஞ்ச் பாக்ஸ்சை திறந்து சிங்கிள் வைக்கிறாள். அதுவே ஆச்சர்யம் தான். தாங்கள் குடித்த பால் கப்பை லேசாக நீரில் கழுவி வைக்கிறார்கள். தாய் ஒரு அரட்டல் போடாமல் படிக்க அமர்ந்து விடுகிறார்கள்.
இது அத்தனையும் சாலா இருந்தாலும் சரி, சாலா வீட்டில் இல்லா விட்டாலும் சரி தன்னை போல வீடு சுழன்றது. அட! என் செல்லங்களுக்கு எப்போது இருந்து இவ்வளவு பொறுப்பு…
முன்பே சாலா ஒரு ஒழுங்குக்கு பிள்ளைகளை கொண்டு வர, தடுத்து விடுவான் பிரகாஷ்.
“நான் இருக்கேன் என் பிள்ளைகள் செல்லமாக தான் வளர வேண்டும்…”
“என் அம்மு குட்டிய நீ வேலை சொல்லாத சாலா. அவங்களை பார்க்கிறது தான் உன் வேலை, நியேன்ன அவங்களை வேலை சொல்ற…” எகிறி வருவான் தந்தை.
“பெண் பிள்ளை சின்ன சின்ன வேலை செய்ய பழக வேணாமா… பின்னாடி கஷ்டப்பட போறா…” சாலா தொடங்கினாள்.
“என் மக பழக தேவையில்லை. நான் அப்படி தான் வளப்பபேன்… என் பேர பிள்ளைகளுக்கும் சேர்த்து சம்பாரிக்க எனக்கு தெரியும். என் பிள்ளை வீட்டு வேலை செய்ய அவசியமில்லை…” கடுமையாக சொல்வான் பிரகாஷ்.
சாலாவும் விட்டு விட்டாள். என் கணவன் இருக்கான், எல்லாவற்றையும் பார்த்து கொள்ள, என் பிள்ளைகள் செல்லமாக வளரட்டும் என்று நினைத்தாள். ஆனால் இன்று, ஒருவரின் நிலை எப்போது, எப்படி வேண்டாலும் மாறும் என்று நேராக கண்டு கொண்டாள்.
நடுத்தர வயதில் தான் தடுமாறி நிற்பது போல, பிள்ளைகள் தடுமாற கூடாது. எத்தனை வசதி அமைய பெற்றாலும், தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற உறுதியை பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினாள்.
ஒரு வாரத்தின் பின் பிரகாஷ் சென்னை சென்று விட்டான். சாலா வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவளின் பெற்றோர் அடிக்கடி வந்து போய் தான் இருந்தார்கள். ஒரு நாள் சாலா தான்,
“அம்மா, அருண், பிரபா எல்லா எப்படி இருக்காங்க…”
“யாருக்கு தெரியும். சின்னவன் ஏதோ இங்க தான் காலேஜ் போரானம். எனக்கு எதுவும் தெரியலை சாலா…”
“ஏன் ம்மா இப்படி பண்ற… அவங்களும் உன் பேர பசங்க தான, அவங்க உனக்கு யாரோ வா?…”
“மனசு ஆறல சாலா. எம் பிள்ளையை தூக்கி கொடுத்தது கண்ணுக்குள்ள நிக்குது. அது மாறும் போது பாப்போம்…” விட்டேறியாக சொன்னார் பாண்டியம்மாள்.
மறுநாள் சாலா சென்று விட்டாள் பிரபாவை பார்க்க, தன்னுடைய வாழ்க்கை, பிள்ளைகள் என்றே ஓடி கொண்டிருந்தவள், அக்கா மகனை மறந்து தான் விட்டாள். பெற்றவள் போல யாரும் வர முடியாது போல… மனதில் குற்ற உணர்ச்சி கொன்றது.
பிரபா ஹாஸ்டலில் தான் இருந்தான். அவனை கண்ட நொடி கண்களில் நீர் நிறைந்தது. உடல் மெலிந்து, கொஞ்சம் கருப்பாக இருந்தான்.
“ஏன்டா எப்படி இருக்க… சரியா சாப்பிட மட்டையா, ரெண்டு நாள் லீவு தானா வா என் கூட, சித்தி இங்க தான்டா இருக்கேன்…” என்று சாலா தன் வீட்டிற்க்கு அழைத்து சென்றாள்.
அஜய், அஞ்சு இருவரும் நல்ல விதமாக தான் பழகினார்கள். ஆனால், பிரபாக்கு அங்கு ஒட்டவே முடியவில்லை. சாலாக்கு அவனை தன்னோடு வைத்து கொள்ளும் எண்ணம் இருந்தது.
சாப்பாடு சரியாக செய்து கொடுக்க முடியாமல் தான் ஹாஸ்டலில் விட்டது. தன்னோடு இருக்கட்டும் என்று சாலா நினைக்க, பிரபா ஒத்து கொள்ள வில்லை. அங்கு தன்னை விருந்தாளியாக மட்டும் தான் உணர்ந்தான்.
அஜய் , அம்மா என்று செல்லம் கொஞ்சும் போதெல்லாம் பிரபாக்கு, மீனா முகம் கண் முன் வர, தவித்து போனான். சாலா என்ன கவனித்தும், பிரபாக்கு ஒட்ட முடியவில்லை. தன் தாயின் நினைப்பு தான் முழுமையாக நின்றது. சாலா தடுத்தும் லீவ் முடிய ஹாஸ்டல் வந்து விட்டான்.
அடுத்த மாதமும் பிரகாஷ் தன் குடும்பத்தை காண வந்து விட்டான். ஒரு ஆச்சரிய பார்வை மட்டும் தான் சாலாவிடம்… ஏதேதோ வாங்கி கொண்டு வந்து இருந்தான். பிள்ளைகளை என்றும் இவள் தடுத்தது இல்லை. ஆனாலும் பிள்ளைகள் அவளின் வளர்ப்பில் தான் நின்றார்கள்.
ரொம்ப ஏக்கம் பிரகாஷ்க்கு. ஷாலினி தோலில் கிளியாக தொற்றினாலும், இவனுக்கு நினைப்பு எல்லாம் மனைவி, பிள்ளைகள் இடம் மட்டும் தான். எல்லாவற்றையும் பழைய மாதிரி மாத்த முயற்சி செய்தான். குடும்பமாக வெளியில் செல்ல பிளான் செய்தால்.
சாலா எனக்கு வேலை இருக்கு என்று கழன்று கொள்வாள். அஜய்க்கு கிளாஸ் இருக்கு… அம்மா, அண்ணன் இல்லாமல் அஞ்சு மட்டும் தனியாக வர மாட்டாள்.
நல்ல கணவனாக சாலாக்கு உதவி எல்லாம் செய்ய தொடங்கினான். பிள்ளைகளை பள்ளி சென்று விட்டு வந்தான். வீட்டை ஒழுங்கு செய்தான். மாலையில் சாலா சோர்ந்து வரும் போது காபியும், பிஸ்கட்டும் வைத்து கொடுப்பான். ஆச்சர்யமாக பார்த்தாலும், கண்டு கொள்ள மாட்டாள்.
அடுத்த முறை வரும் போது கை நிறைய பொருட்களை அள்ளி வந்தான். சாலாக்கு பட்டு புடவை, குட்டி தோடு, பிள்ளைகளுக்கு கிப்ட்ஸ் என்று நிறைய இருந்தது. பிள்ளைகள் சிரித்தாலும், மனைவியிடம் மட்டும் ஒரு ரியாக்ஷன் இல்லை. தினமும் பூ வாங்கி குடுத்தான். சிரிக்க சிரிக்க பேசினான், பிள்ளைகள் உடன் சேர்ந்து விளையாட, பாட்டு பாட என்று வீட்டை அமர்கள படுத்தினான்.
திருமணம் ஆன புதிதில் சாலாவை செல்ல பெயர் வைத்து சீண்டி விடையாடிய நினைப்பை கொண்டு அதே போல விசா, செல்லம், பொண்ணு குட்டி என்று செல்லம் கொஞ்சுவான்.
“இந்த மஞ்சள் கலர் சேலை உனக்கு அழகா இருக்கு சாலா…”
“ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பிட்டாலும் என் பொண்டாட்டி வைக்கிற சாம்பாருக்கு ஈடு கிடையாது. பிரமாதம் சாலா…”
“போன மாசம் கம்பெனில டூர் அரேஞ்ச் பண்ணாங்க. நீ இல்லாம எனக்கு போகவே மனசு இல்லை…”
“இப்போ எல்லாம் வீட்டுக்கு போக கூட பிடிக்கலை சாலா. நீ இல்லாம வீடு வெறுக்குன்னு இருக்கு…”
“முகம் ஏன் கருப்படிக்குது… முடி கொட்டுதா சாலா உனக்கு… அப்பப்போ ஏன் இடுப்ப பிடிக்கிற, வேற டாக்டர் பார்ப்போமா…”
பிரகாஷ் உருண்டு, பிரண்டு பார்த்தும் சாலா விடம் மட்டும் கதையாக வில்லை. மனைவியின் இறுகிய முகமும், நிமிர்ந்த நடையும் மாறவே இல்லை.
விசாலாட்சிக்கு தெரியும் தன் தப்பை சரி காட்டுகிறான் என்று… எதுவுமே நடக்காதது போல பொண்டாட்டி, பிள்ளை என்று பாட்டு பாடுகிறான். இதயத்தை கத்தி கொண்டு குத்தி விட்டு, மருந்து போட முயற்சிக்கிறான். எனக்கு என்ன தேவை என்று இவனுக்கு தெரியுமா…
தனக்கு உண்மையாக, தன்னுடைய நேசத்துக்கு தகுதியாக இல்லாமல்… போலி அக்கரையிலும், அரவணைப்பிலும் என்னை சமாதானம் செய்ய முயலுகிறான். தன்னையே சுற்றி வந்து பட்டும், நகையும் கொடுத்தால் மனைவி மயங்கி விடுவாளோ?…
கண்ணார கண்டாளே, எத்தனையோ இரவுகள் தான் மட்டும் ரசித்த கணவனின் நெஞ்சுரத்தில், எவளோ ஒருத்தி சாய்ந்து சுகம் கண்டதை கண்ட பின்னும்மா பேதை நெஞ்சம் ஏமாரும்…
தன்னை மட்டும் மோகத்தோடும், ஆசையோடும் பார்த்த கண்கள், வேற ஒருத்தியை நாடியதை பார்த்த பின்னும், கணவனின் பொய் ஜாலங்களில் மயங்கியா விடுவாள் விசாலாட்சி.
“எனக்கு என் நகை எல்லாம் வேணும்…” சாலா ஆரம்பிக்க.
“என்ன சாலா திடிர்ன்னு கேக்குற… வீடு வாங்க தான வச்சோம்…”
“ஆமா, இப்போ நான் சொந்த ஊர் வந்து இருக்கேன். எல்லாரும் பார்ப்பாங்க… எங்க அம்மாவும் கேட்டாங்க…”
மாமியார் நகை கேட்டதில் பிரகாஷ் க்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அத்தோடு நகையை திருப்பி கொடுத்தால், மனைவி தன் பக்கம் திரும்புவாளோ என்று ஒரு எண்ணம் தோன்ற, இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தை போட்டு நகையை திருப்பி கொடுத்தான்.
அதை மறுநாளே கொண்டு போய் அடகு வைத்தவள், தனக்கு என்று ஒரு கடையை வாடகைக்கு பிடித்தாள். ரொம்ப அலைச்சல் உடம்புக்கு முடியவில்லை. ஊர் ஊராக அலைய முடியாமல் போனது. ஒரு பக்கம் சுருண்டு கொண்ட கால் நரம்புக்கு பிசியோ செய்ய வேண்டும்.
தான் நன்றாக இருந்தாள் மட்டுமே தன் பிள்ளைகள் எதிர்காலம். சிகிச்சை மேற்கொள்ள நேரம் வந்து விட்டது. ஓரளவு வாடிக்கையாளர்களை பிடித்து வைத்து இருந்தாள். தவணைக்கும் கொடுப்பதால் இவளை தேடி ஆட்கள் கூடும்.
“ உன் பிளான் தான் என்ன சாலா…” கணவன் உடைத்து கேட்க.
மனைவியிடம் மெளனம் மட்டுமே…
“ பிள்ளைகளுக்காகன்னு வந்துட்டு உன்னை தான் மேம்படுத்துற… எதுவா இருந்தாலும் சொல்லு சாலா, என்னை ஒதுக்கி மட்டும் வைக்காத… நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை…” தன்னை புரிய வைக்க முயன்றான் கணவன்.
சாலா முகத்தில் விரக்தி சிரிப்பு மட்டுமே வந்தது. பெரிதாக, யாரிடமும் சொல்லாமலே தன்னளவில் ஒரு கடையை போட்டு அமர்ந்து விட்டாள். பிள்ளைகள், கடை, வீடு, வருமானம் என்று தன்னை நிலை நிறுத்த தொடங்கினாள்.
பிரகாஷ் எவ்வளவு முயன்றும் மனைவியை நெருங்கவோ, அவளை அறியவோ முடியவில்லை. கல்லு மாதிரி திடமாக நின்றாள்.
சுதாவிடம் இருந்து போன் வந்தது.
“சாலா, அந்த கேடுகெட்டவ கூட உன் புருசனுக்கு தகராறு போல… நேத்து உங்க வீட்டுல ஒரே சத்தம். அக்கம் பக்கம் ஆள் இருக்குன்னு கூட நினைப்பில்லாம கத்தி கத்தி பேசுறா… எனக்கு என்னவோ உன் புருசன் சுதாரிச்சுடாங்க போல… நீ அப்படியே கை குள்ள போட்டுக்க…”
சாலா எந்த பதிலும் சொல்லால் சரி என்று மட்டும் சொன்னாள். பிள்ளைகளுக்கு விடுமுறை வர சென்னை கிளம்பி விட்டாள். பிரகாஷ்க்கு ஒரே ஆச்சர்யம். வருடம் கடந்தும் ஒரு முறை கூட மனைவி வீடு வர வில்லை. இன்று தான் வருகிறாள், சந்தோசத்தில் மிதந்தான்…
“அஜு , என்ன நடந்தாலும் அம்மா கூட இருப்பயா… உனக்கு அம்மா மேல நம்பிக்கை இருக்கு தான…” சாலா கேட்க.
“ எஸ் மாம்… யூ ஆர் மை சோல். நான் எப்பவும், என்ன நடந்தாலும் உங்க கூட தான் இருப்பேன்…” தெளிவாக அஜய் சொல்ல.
வளர்ந்த மகன் தான். தோல் சாய்ந்து ஒரு மூச்சு அழுதால் என்று தோன்ற, தன்னை அடக்கி கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். விடிந்தால் சென்னை, பார்ப்போம் தனக்கு விடியல் தருமா…