Skip to content
Post Views: 1,107
இளங்குயில் – 1
“அப்பா ,அப்பா, பிளீஸ்ப்பா, எனக்காக ஒரு தடவை பிளீஸ்”, கெஞ்சினாள் யாழினி.
“இப்படித்தான், எப்ப பாரு உங்க அப்பாவுக்கு ஐஸ் வச்சு, ஐஸ் வச்சு, உன் காரியத்தை சாதிச்சிக்கற. ஆனால் இந்த தடவை கண்டிப்பா நான் ஒத்துக்கவே மாட்டேன். இது என்ன விளையாட்டு விஷயமா உனக்கு? இது உன்னோட வாழ்க்கை யாழு” என தாயாய் மாதவி கவலையுடன் கூறினார்.
“நான் எங்கம்மா விளையாடுறேன்? எனக்கும் தெரியும் இது என்னோட வாழ்க்கைனு. அதுக்காக தான் நான் திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்கேன்…”
Advertisement
“என்னங்க நீங்க, அவதான் சொன்னதையே சொல்றானா, நீங்களும் எதுவுமே பேசாம கேட்டுட்டு இருக்கீங்க?” தன் கணவர் சுந்தரிடம் பாய,
“அட இருமா, பாப்பா என்னமோ சொல்றா அதைத்தானே கேட்கிறேன்…”
“ஆமா பாப்பா பாப்பான்னு, சொல்லி சொல்லி நீங்க தான் அவளை கெடுக்கிறதே. அவளை என்ன, நீங்க இன்னும் அஞ்சாவது படிக்கிற பொண்ணுனு நினைச்சுட்டு இருக்கீங்களா? அவளுக்கு கட்டி குடுக்குற வயசு வந்தாச்சு…”
Advertisement
“அதனாலதான் அவளும் கட்டி கொடுக்க சொல்லி கேக்குறா”
Advertisement
“உங்களுக்கு கிண்டலா இருக்கா”
“அச்சோ… என் பேச்சை டைவட் பண்ணாதீங்க இரண்டுபேரும். ப்பா, ப்ரணவ்வ உங்களுக்கு மூணு வருஷமா தெரியும் தான. அவங்ககிட்ட நீங்க ஏதாவது ஒரு குறை சொல்லுங்க பாப்போம். அவர் ரொம்ப நல்லவர் ப்பா. நீங்க எப்படியும் ஏதாவது ஒருத்தனை எனக்கு மாப்பிள்ளையா பாப்பீங்க. அது ஏன் எனக்கு புடிச்சவரா இருக்க கூடாது”.
“உனக்கு பிடிக்காத யாரையும் நாங்க உன்ன கட்டாயபடுத்தி உனக்கு கட்டிவைக்க மாட்டோம்.”
Advertisement
“என் அம்மானா அம்மா தான்” என்று, யாழினி அவர் கண்ணம் கிள்ளி கொஞ்ச வர,
“இரு” என கை தூக்கி பொறுக்க சொன்னவர்,
“அதே மாதிரி நீ யாரையாவது கூட்டிட்டு வந்து, இவர தான் கட்டிப்பேன்னு நின்னா, நாங்க சரினும் சொல்ல மாட்டோம்… பெத்தவங்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா உன் விருப்பப்படி செய்….”
அதுதானே பாத்தேன்… நல்ல காலத்திலேயே நீ எனக்காக பேச மாட்ட, இப்பவா பேச போற என நினைத்தவள்,
“ அப்பா… எனக்கு ஒருத்தரை பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். அதுனால உங்க கிட்ட வந்து பர்மிஷன் கேட்கிறேன். அம்மா சொன்ன மாதிரி உங்கள வேண்டாம்னு நினைச்சிருந்தா, கல்யாணம் பண்ணிட்டு வந்து தான் உங்க கிட்ட சொல்லியிருப்பேன்…..” என்றவள் தாயை பார்த்துக்கொண்டே,
“எனக்கு கல்யாணம் பண்ணலாம் னு முடிவு எடுத்தது நீங்க. எனக்கு பிடிச்ச மாப்பிள்ளை ய நான் கை காமிச்சாச்சு. இனி நீங்க தான் முடிவு பண்ணனும்…” என்று கூறிவிட்டு சென்று அமர்ந்து கொண்டாள்.
“அதான, பத்திரிக்கையில வேலை செய்யறவளுக்கு பேச கத்து தரனுமா என்ன…”
“ம்மா.., நான் சின்ன புள்ளையா இருக்கும் போதே, நீ தான் பேச கத்துகுடுத்த மறந்திட்டியா, இல்ல புதுசா ஏதாவது கத்து தர போறியா….”
“ம்ம்ம்….. நக்கலு” என கூறிவிட்டு கணவரை பார்க்க, அவரோ மாதவியை முறைத்து கொண்டிருக்க,
இந்த மனுஷன் ஏன் நம்மள இப்படி முறைக்கறாரு, என நினைத்தவர் “என்னங்க என்ன யோசனை?” என கேட்க,
அவளே இருந்திருந்து, இப்ப தான் கொஞ்சம் கெஞ்சி கேட்க ஆரம்பிச்சா, அதுக்குள்ள நடுவுல வந்து ஆட்டைய கலைச்சு, அவள மலையேற வெச்சுட்டு, என்ன யோசனை னு கேள்வி வேற என நினைத்தவர்,
“ம்ம்… ஒன்னுமில்லை மா, சும்மா தான்” என கூறி சமாளித்தார் திரும்பி மகளை காண,
அவளோ இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருக்க,
“எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் பாப்பா” என்றார்.
“என்னங்க நீங்க” என ஏதோ கூற வந்தவர், கணவரின் ‘மாது’ என்ற ஆட்சேபணையில் எதுவும் கூறாமல் அமைதியாகி விட,
யாழினிக்கு சங்கடமாகிவிட்டது.
“ம்மா, ப்பா உங்கள ரொம்ப கஷ்டபடுத்துறேனா” என கேட்க,
தாயோ முறைக்க, “ஏன்டா பாப்பா அப்படியெல்லாம் யோசிக்கிற, அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றார் சுந்தர்.
“சரி எந்த கோவில்ல மீட்டிங்”
“நம்ம லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் தான் வர்ற சனிக்கிழமை காலையில பத்துமணிக்கு!” என்று கூறிய மகளின் முகத்தில், தெரிந்த புன்னகையை பார்த்தவர் தானும் புன்னகைக்க,
“என்னமோ பண்ணுங்க, ஆனா எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை” என கூறியபடி உள்ளே சென்றார் மாதவி.
சோர்வுடன் மகள் பார்க்க, “விடுடாமா பாத்துக்கலாம்” என்றார் சுந்தர்.
******** ********** ********** *******
“ஓகோ….. கோவில்ல போயி பொண்ணு பாக்குற அளவு போயாச்சா, ம்ம்… செரி….. கல்யாணத்துக்கு நாங்க எல்லாம் வரலாமா, இல்ல அதுவும் தேவையில்லை யா,
“அப்பா”
“என்னடா அப்பா, என்ன இப்பதான் அப்பா னு தோனுதோ, நான் கேக்குறேன். ஏன் உன் அண்ணனுக்கும், அக்காவுக்கும் நான் தானே பாத்து கல்யாணம் பண்ணி வெச்சேன்? நல்லா தான இருக்காங்க? அப்ப உனக்கும் நான் பாத்து பண்ணி வெப்பேன் தானே என்ன அவசரம் னு கேட்கிறேன்.”
ம்க்கும்…. நீங்க பண்ணி வெச்ச லட்சணம் எங்களுக்கு தான் தெரியும்! அவனாவது நல்லா இருக்கட்டுமே. அது பொறுக்கலையா உங்களுக்கு? என்று மனதில் மட்டுமே எண்ணினான் ஆதவன்.
பின்ன வாய் விட்டு சொல்லி யார் வாங்கிகட்றது.
“ஏன் கோமதி, நீ என்ன எதுவும் பேசாம இருக்க?.. ஓ.. உன் அண்ணன் பொண்ணை, நான் வேண்டாம் னு, சொன்னதால சாருக்கு நீங்க துணையோ?”…
“ஐயோ, அப்படி எல்லாம் ஒன்னுமில்லீங்க, எனக்கே இப்ப உங்ககிட்ட சொல்லும் போது தான் தெரியும்ங்க”
“ம்ம்….. ஒன்னும் நம்புற மாதிரி இல்லியே, உன் மவன், ஒன்னுக்கு போனா கூட, உன்னிய கூட கூட்டிட்டு தான் போவான் அதேன் சந்தேகமா இருக்கு”
வெக்கங்கெட்ட மனுசா, மருமகளை வெச்சுட்டு பேசற பேச்சு பாரு, என மனதிற்குளே தலையில் அடித்து கொண்டவர், “அதெல்லாம் சின்ன புள்ளையிலங்க, இப்ப அவனே சிங்க குட்டி மாதிரி நிக்கிறான். அவனுக்கு எதுக்கு நான் துணைக்கு?”…..
“அப்பிடியா!! நம்ப முடியலையே?” என சந்தேகமா பார்க்க,
“அட போங்க, சின்ன வயசில அம்மா அம்மா னு சுத்தின மாதிரி, இப்பவும் இருப்பாங்க னு நினைக்கிறது நம்ம தப்பு. வயசு போக போக, அம்மாவும் அம்மிகல்லும் ஒன்னுதான்னு, நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்…. தேவைப்படும் போது தான், நம்மகிட்ட வேலை… இல்லீனா நாமளும் அந்த மூலையில உக்கார வேண்டியது தான்” என கண்ணீர் வடித்து, சேலை தலைப்பில் முகத்தை துடைத்துக் கொண்டு, அடுப்படி வாயிலில் சென்று அமர,
அவரின் கண்ணீரில், ஒருவேளை நிஜமாவே இவளுக்கு தெரியாதோ, என நினைத்தார் சோமு..
நிஜமாவே அம்மா வருத்தப்படுதா என ப்ரணவ் பார்த்தவன், தாயின் முக வாட்டத்தில், “அம்மா நான் எப்ப அப்படி நினைச்சேன்” என்று கேட்க,
“ பின்ன, உனக்கு நான் முக்கியமா இருந்தா நீ எங்கிட்டயில்ல மொத சொல்லியிருக்கனும்”
ஐயோ, இந்த அம்மாவுக்கு என்ன ஆச்சு, என்று மண்டையை பிடித்துக்கொண்டவன்,
“நீ தானே ம்மா அப்பாகிட்ட…”
“அ..ஆ ஆமா.. நா நான் தான் சொன்னேன். அண்ணனுக்கும் அக்காவுக்கும் மாட்ட…., அப்பா உனக்கும் ஒரு பொண்ணை பாத்து, கட்டி வெச்சுட்டார்னா எங்க கவலை எல்லாம் தீர்ந்திடும் னு. அதுக்காக நீயே பொண்ணு பாப்பியா, இங்க பாரு தம்பி, நீ என்ன தான் எனக்கு பிடிச்ச பிள்ளைனாலும் எம் புருஷன் சொல்லாம நான் உனக்கு பொண்ணு பார்க்க ஒரு எட்டு எடுத்து வைக்க மாட்டேன் பாத்துக்க, என்னனாலும் அவரு தான் எனக்கு முதல்ல தெரிஞ்சுக்க” என கூறி தன் கணவரை காண,
தன் மனைவியை கண்டு பெருமையாய் புன்னகைக்க,
“ம்மா நான் சத்தியமா…”
“என்ன சத்தியம் பண்ணி போட்டியா, யாரை கேட்டு நீ அப்பிடி செஞ்ச, என்ன உங்க அப்பா சத்தியத்துக்கு கட்டுப்பட்டவரு, செஞ்சு கொடுத்த சத்தியத்துக்காக துணுஞ்சு நிப்பாருங்கற தைரியமோ உனக்கு” என்றவர்,
“ஏங்க இவன் என்ன சொல்றான் னு பாருங்க” என்க,
“அதேன என்னடா உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க”
“அது ப்பா வந்து”,
“ஏங்க நாம் இவ்வளவு தூரம் சொல்லியும், இன்னும் வந்து போயினுட்டு இருக்கான். இப்ப என்ன உனக்கு, அந்த பொண்ணை நாங்க வந்து பாக்கனும் அதுதானே சேரி நாம் போலாம்” என கூற, அவரது கணவர் இவரை முறைக்க,
“அதுக்கு இல்லீங்க, இவன்தான் சத்தியம் பண்ணி போட்டானே. அதுக்காக உங்களுக்கு சத்தியத்தை மீறினா புடிக்காதே” என்றவர்,
அவரது காதுக்கருகில் வந்து “சும்மா போயி பாத்துட்டு இந்த பொண்ண புடிக்கல, நீங்க வேற மாப்பிள்ளை பாத்துக்கங்க னு சொல்லிட்டு வந்திடுவோம்” என கூற,
அவர் நம்பாமல் பார்க்க “எத்தனையோ பொண்ணு பாக்குறோம், அதுல இது ஒன்னு னு நினைச்சுக்குவோம்ங்க…. அதுமட்டுமல்ல என்கிட்ட கூட இவன் சொல்லல, அதான் ஒரு மாமியாவா இப்படி பண்ணலாம் னு தோனிச்சு” என கூறிவிட்டு பார்க்க,
சிறிது நேரம் யோசித்தவர் “என்னமோ சொல்ற நம்புற மாதிரி இல்ல பாப்போம்” என்றவர்,
“ஆனா ஒன்னு சொல்லி வை உன் மவன் கிட்ட, இனி இதுமாதிரி ஏதாவது தேவையில்லாம பண்ணிட்டு சத்தியம் கித்தியம்னு வந்துட்டான், புள்ளையே வேண்டாம் னு தலை முழுகிடுவேன் பாத்துக்க” என கூறியவர் துண்டை உதறி எடுத்துக் கொண்டு வெளியே செல்ல,
தங்களது அறை வாசலில் நின்று கவனித்து கொண்டிருந்த, ஆதவனின் மனைவி ஆனந்தி தன் மாமியாரையும் அருகில் இருந்த இரண்டு மகன்களையும், ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.
“ம்ம்ஸ்ஸ்ஸ் அப்பாடா” என அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை நிதானமாக விட்டு சோஃபாவில் சென்று அமர்ந்தவர்,
“டேய் பெரியவனே, அந்த அடுப்படியில மஞ்ச கலர் டப்பால, மைசூர்பா இருக்கும் அதை எடுத்துட்டு ஒரு செம்பு தண்ணி கொண்டா”…
“டேய் சின்னவனே அந்த பேன கொஞ்சம் வேகமா வையி”…
“டேய் பெரியவனே சீக்கிரம் கொண்டா”
“ம்மா, இதோ வந்துட்டேன்” என ஒரு டப்பாவை நீட்ட, அதிலிருந்து ஒரு மைசூர்பாக்கினை உடைத்து ஒரு துண்டு வாயில்போட,
“இப்படி அவசரமா ஸ்வீட் சாப்பிடுற அளவு நாம் என்ன சாதிச்சிட்டோம்” என ப்ரணவ் கேட்க,
“ம்ம்…… டேய் மகனே, உங்க அப்பாகிட்ட அரை மணிநேரம் பேசினாலே உடம்புல இருக்குற மொத்த சுகரும் இறங்கிரும், அதேமாதிரி ஊர்ல இல்லாத பிரஷரும் மொத்தமா ஏறிடும். அத பேலன்ஸ் பண்ண தான் இப்படி” என கூறி மீண்டும் ஒரு கடி கடிக்க,
இரு மகன்களும் தாயை பார்த்து சிரித்தபடி அருகில் வந்தனர்.
“ம்மா, எப்படி மா இந்த மனுஷனை இத்தனை வருஷம் சமாளிச்ச”,
“டேய் பெரியவனே, இப்ப வரைக்கும் உங்க அப்பாவ சமாளிக்கல, சமாளிக்க கத்துட்டிருக்கேன் அவ்வளோ தான்”.
“ம்மா அப்ப என் கல்யாணம்” என ப்ரணவ் கத்த,
“அட கத்தாதடா, போன மனுஷன் திரும்பி வந்திடபோறார். ஒரு ஒரு அடியா எடுத்து வெச்சா தான் நடக்க முடியும். ஒரேமுட்டா கால நீட்டினா, விழுக வேண்டியது தான்”…
இரண்டு மகன்களும் அவரையே பார்க்க,
“என்னடா அப்படி பாக்குறீங்க இரண்டு பேரும்”
“ம்மா நீ ஒரு யுனிக் பீஸ் மா” என்றான் ஆதவன்.
“நீ எப்படி மா அந்த பட்டிகாட்ல போயி பொறந்த?…..” என்று ப்ரணவ் கேட்க,
“ம்ம்…. டேய் மகனே, இந்த பட்டிகாடு தான் ஏதாவது ஐடியா பண்ணி, உன் கல்யாணத்தை நடத்தி வைக்கும். வேணுமா? வேண்டாமா?”……
“தெய்வமே, இந்த அறியா பிள்ளை தெரியாமல் பேசியதை மறந்திடு, மன்னிச்சுடு… என் அடி மடியில கை வெச்சுடாத தெய்வமே…. நீ இருக்குற நம்பிக்கையில தான் நானே இருக்கேன்” என காலில் விழுந்து புலம்ப,
“ம்ம்…..அந்த பயம் இருக்கட்டும்” என்று கூறி சிரிக்க,
தாயின் சிரிப்பில் தங்களை மறந்து ரசித்தனர் மகன்கள்.
error: Content is protected !!