மீராவின் தம்பி வருண் நல்ல உயரமாக, நிறமாக இருந்தான். வருணின் பார்வை அவர்கள் மேலேயே இருந்தது. வருணுக்கு தன் சகோதிரி மேல் உண்மையாக அக்கறை இருந்தால்…. அவள் தனியே ஒரு ஆண்னிடம் அமர்ந்து பேசுவதைக் கண்டிப்பாக விரும்பமாட்டான். அவன் அவர்களின் அருகே வந்து மீராவிடம் விசாரிப்பான் அல்லது அப்படி அவனுக்கு மீராவின் மீது அக்கறை இல்லையென்றால்… வீட்டில் சென்று போட்டு கொடுப்பான் என்று அர்ஜுன் நினைத்தான். அர்ஜுன் வருணை பார்க்காதது போல் மீராவிடம் சுவாரசியமாகப் பேச…. மீராவும் அவன் தம்பியை பார்பதை விட்டு அர்ஜுனிடம் பேச ஆரம்பித்தாள். வருண் தன் நண்பர்களை அனுப்பிவிட்டு அவர்களை நோக்கி வந்தான். அவன் வருவதை ஓரக்கண்ணில் பார்த்த அர்ஜுனின் மனதில் நிம்மதியும், சந்தோஷமும் உண்டானது. அவன் வருவதைப் பார்க்காதது போல் மீராவிடம் பேசிக்கொண்டிருந்தான். “நீ இங்க என்ன பண்ற? யாரிது?” வருண் கேட்க… அவனை எதிர்பார்க்காத மீரா திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள், வருண் அங்கே நிற்பதை பார்த்து ஆச்சர்யபட்டாள். அவளுக்கு அவன் திடீரென்று வந்து பேசவும் என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவள் மெளனமாக நிற்க…. நடந்ததைப் பார்த்த அர்ஜுன், தன்னை அவனே வருணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். “ஹாய் நான் அர்ஜுன். மீராவோட ப்ரண்ட், நீங்க?” என்றான் அவனைத் தெரியாதது போல்… “நான் வருண் மீராவோட தம்பி.” அவன் சொன்னதைக் கேட்ட மீராவின் கண்கள் கலங்கிவிட்டது. அவள் வருணை பார்த்து முறைத்தாள். அந்தப் பார்வை, உனக்கு இது இப்போது தான் நினைவு வருகிறதா? நீயும் உங்க அம்மா பேச்சைக் கேட்டு என்னோடு பேசாமதான் இருந்த என்று கேட்பது போல் இருக்க…. வருண் தலை குனிந்தான். “உன்னோட தம்பியா மீரா… உன்னைப் பார்த்தது ரொம்பச் சந்தோஷம் வருண்.” அர்ஜுன் மேலும் பேச்சை வளர்க்க…வருணுக்கு அர்ஜுனின் மேல் நல்ல எண்ணம் தோன்றவில்லை. அவன் அவனைச் சந்தேகமாகத் தான் பார்த்தான். அப்போது ஆதியும், ஆருவும் அங்கே வர, அர்ஜுன் அவர்களை வருணுக்கு அறிமுகம் செய்தான்.
“இது என்னோட அண்ணா ஆதி, இவ என்னோட தங்கை ஆராதனா.” என்றவன், “இவன் மீராவோட தம்பி வருண்.” அவனையும் அவர்களுக்கு அறிமுகம் செய்ய…. வருணின் முகம் தெளிந்தது. அதைப் பார்க்காதது போல் பார்த்த அர்ஜுன், அவங்க அக்காவை தனியா தள்ளிட்டு வந்திட்டேன்னு நினைச்சிருக்கான் என்று புரிந்துகொண்டான். ஆதியும், ஆருவும், வருணின் படிப்பு பற்றி விசாரித்தனர். எல்லோரும் அங்கயே அமர்ந்து பேச…. “மீராவும் என் தங்கை ஆருவும் ஒரே டான்ஸ் கிளாஸ் தான் போறாங்க அதனால ப்ரண்ட்ஸ். மீரா எங்க வீட்டுக்கு தான் இன்னைக்கு வந்திருந்தா… வானவேடிக்கை பார்க்கலாம்னு பீச்க்கு வந்தோம்.” அர்ஜுன் வருணிடம் விளக்கி சொல்ல…. வருணின் சந்தேகம் விலகியது. அதைப் பார்த்த அர்ஜுன் இவனுக்கு மீராவின் மீது பாசம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். எல்லோரும் ஆதி வாங்கி வந்திருந்த பஜ்ஜியை ஆளுக்கு ஒன்று என்று எடுத்து சாப்பிட… ஆரு ஆதியிடம் இன்னொரு ப்ளேட் பஜ்ஜி கேட்டாள். “இன்னைக்கு அதை, இதைச் சாப்பிட்டிருக்கோம். அதுவும் பஜ்ஜி எல்லாம் நிறையச் சாப்பிட்டா… உடம்புக்கு ஒத்துக்காது.” ஆதி அறிவுரை வழங்க… “ஆமாம், நான் பத்து பஜ்ஜி சாப்பிட்டேன் பாரு… ஒன்னு தான சாப்பிட்டேன்.” ஆரு பாவமாகச் சொல்ல… அவள் சொன்னதைக் கேட்டு அர்ஜுன், “நீ ஒன்னு சாப்பிட்டா… பத்து சாப்பிட்ட மாதிரி ஆரு.” என்று சொல்ல… அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். ஆரு அர்ஜுனின் காதில், “உன்னோட மச்சான்கிட்ட உன்னோட லவ் மேட்டர் போட்டு குடுத்திடவா…” என்று கேட்க… “அம்மா தாயே அடங்கு…” என்றவன், சென்று இன்னொரு ப்ளேட் பஜ்ஜி வாங்கி வந்து கொடுத்தான். ஆதி, அர்ஜுன், ஆரு மூவரும் வானவேடிக்கையைப் பார்த்து அதைப் பற்றிச் சந்தோஷத்துடன் பேச மீராவும் , வருணும் அமைதியாக அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்ட அர்ஜுன், “சரி கிளம்பலாமா…” என்றவன், “மீரா… நீ உன் தம்பியோட போ, நாங்க ஆட்டோல போறோம்.” என்றான். “இல்லை… வேண்டாம் நான் தனியா போய்ப்பேன்” வருண் சொல்ல…. “நீங்க ரெண்டு பேரும் ஒரு வீட்டுக்கு தான போறீங்க. அப்புறம் எதுக்குத் தனித்தனியா… வருண் இப்பவே மணி ஒன்பது ஆகப் போகுது. மீரா இந்த நேரத்துக்குத் தனியா போறது நல்லது இல்லை.” அர்ஜுன் எடுத்து சொல்ல… “சரி நான் மீரா அக்காவோட போறேன்.” என்றான் வருண். அதைக் கேட்டு அர்ஜுன் புன்னகைத்தான். “எல்லோரும் சேர்ந்து என்னோட கார்ல தான வந்தோம். நான் உங்களை ட்ராப் பண்ணிட்டு போறேன்.” மீரா சொல்ல… “வேண்டாம். எங்களை விட நீ அடையார் வந்திட்டு… திரும்பி பெசன்ட் நகர் வரணும். அதுக்கு நாங்க ஆட்டோல போய்டுவோம். நீ வருனோடு கிளம்பு.” அர்ஜுனின் உறுதியான குரலில்… அதற்கு மேல் மறுக்கமுடியாமல்… மீரா வருணை பார்க்க… அவன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு மீராவின் கார் அருகே சென்று நின்றான். மீரா ஆதியிடமும், ஆருவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப… அர்ஜுன் மீராவோடு நடந்து கொண்டே, “போ மீரா… அவன் உன் தம்பி தான… நான் உனக்கு நைட் போன் பண்றேன் சரியா…” என்றதும், மீரா சரி என்று தலை ஆட்டினாள். அவர்கள் எப்படிப் போவார்கள் என்று நினைத்து மீரா காரின் அருகே சென்று தயங்க… அர்ஜுன் மீராவை கண்டுகொள்ளாமல்… ஒரு ஆட்டோ பிடித்து அதில் ஆதி, ஆருவோடு ஏறி சென்றுவிட்டான். மீரா அவர்கள் ஆட்டோ கண்ணைவிட்டு மறைந்ததும் தான் காரில் ஏறினாள். காரில் ஒரு தர்ம சங்கடமான நிலைதான் இருந்தது…. மீரா வருண் இருவரும் எதோ முன் பின் தெரியாதவர்களுடன் பயணம் செய்தால் எப்படி உணர்வோமோ அப்படித்தான் உணர்ந்தனர். வீட்டிற்குள் அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்து மீனாக்ஷிக்கு எரிச்சல் வந்தது. இது ரெண்டும் சேர கூடாதுன்னு ஒன்ன ஹாஸ்டலுக்கு அனுப்பினா, இன்னைக்கு எப்படி ரெண்டும் சேர்ந்துசுங்க என்று குழப்பத்துடன் வருணை பார்க்க… அவன் நிமிர்ந்து அவன் அம்மாவை பார்க்கவேயில்லை. மீரா மாடி ஏற… “சாப்பிட்டு போயேன்.” வருண் சொல்ல…. மீரா மீனாக்ஷி இருவரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். அதைக் கண்டு கொள்ளாமல் வருண் சென்று கை கழுவிட்டு சாப்பிட அமர… மீராவும் கை கழுவிவிட்டு அவன் எதிரில் சாப்பிட அமர்ந்தாள். சாப்பிடும் போது இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசவில்லை…. ஆனால் மீரா வருண் சாப்பிடும் போது.. அவனுக்குத் தேவையானதை அவன் அருகே தள்ளி வைத்தாள். அதே போல் வருணும் அவனுக்குப் பரிமாறிக்கொண்டு மீராவிற்கு வசதியாகப் பாத்திரத்தை அவள் அருகில் நகர்த்த… என்று இருவரும் ஒன்றாக உணவு அருந்தினர். மீரா அன்று தான் அவள் வீட்டில் வயிறும், மனமும் நிறையச் சாப்பிட்டாள். மீரா சாப்பிட்டதும் வருணிடம் குட் நைட் சொல்லிவிட்டு மாடிக்கு செல்ல… வருணும் பதிலுக்குக் குட் நைட் என்றான். மீரா மேலே சென்றதும் வருனிடம் வந்த அவன் அம்மா, “என்னடா இது புதுப் பழக்கம்? ரெண்டு பேரும் ஒன்னா வரீங்க, ஒன்னா சாப்பிடுறீங்க, என்ன விஷயம்?” என்று கேட்க… “அவ என்னோட அக்கா, நான் அவளோட தம்பி, அது தான் விஷயம். உங்களுக்கு இது தெரியாதா?” என்ற வருண் முதல் தளத்தில் இருக்கும் அவன் அறைக்குச் செல்ல… மீனாக்ஷி திகைத்து நின்றுவிட்டார். அர்ஜுன் வீட்டில் வழக்கம் போல் எல்லோரும் வெளியே தோட்டத்தில் உட்கார்ந்து பேச… வித்யா அலுப்பாக இருக்கிறது என்று படுக்கச் சென்றுவிட்டார். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது … கணேசன் “ஆதிக்கு, பொண்ணு பார்க்க அடுத்த வாரம் போகலாம்.” என்றவர், “வரன் பார்க்கிறது பெரிய வேலை…. இனி அடுத்து ஆருவுக்கும்…. அதுக்கு அடுத்து அர்ஜுனுக்கும் பார்க்கணும்.” அவர் மலைப்பாகச் சொல்ல…. “எனக்கு வேண்டாம், நீங்க ஆருவுக்கு மட்டும் பாருங்க.” என்றான் அர்ஜுன். “ஏன்டா உனக்கு நீயே பார்த்துப்பியா?” கணேசன் சிரித்துக்கொண்டே கேட்க… ஆதி, “அப்பா… அவன் சேர்ந்து தீபாவளியே கொண்டாடிட்டான். அவன்கிட்ட போய்ப் பொண்ணு நீயே பார்துப்பியான்னு கேட்கறீங்க.” என்றான். கணேசன் குழம்ப… அர்ஜுன் மெதுவாக அங்கே இருந்து நழுவ பார்க்க…. ஆரு அவனைப் போகவிடாமல் பிடித்தவள், “இரு எங்க போற? மாட்டினியா…” என்றாள். கணேசன் யாரா இருக்கும் என்று யோசித்தவர், “மீராவா…” என்று சந்தேகமாகக் கேட்க… அர்ஜுன் “ஆமாம்பா நல்ல பொண்ணு இல்லபா….” என்றான். “நல்ல பொண்ணு தான் ஆனா… பெரிய இடம். நம்ம ஆளுங்க இல்ல… அதனால அவங்க யோசிப்பாங்க.” “உங்களுக்கு ஓகே தான பா… அதெல்லாம் நாம பார்த்துக்கலாம். மீரா ரொம்ப உறுதியா இருப்பா…. அதனால பிரச்சனை இல்லை.” “ஆனா… உங்க அம்மா கண்டிப்பா ஒத்துக்கமாட்டா…” என்றார் கணேசன். “அம்மாவை நான் பார்த்துகிறேன். இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். நான் என் படிப்பை முடிச்சு… ஆருவுக்கும் கல்யாணம் பண்ணிட்டுதான் நான் பண்ணிக்கப் போறேன். எப்படியும் நாலஞ்சு வருஷம் ஆகிடும். அதுக்குள்ள அம்மாகிட்ட நான் சம்மதம் வாங்கிடுவேன்.” அர்ஜுன் நம்பிக்கையோடு சொல்ல…. கணேசனும் இந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் அதிகம் நடப்பதால் ஒன்று பெரியதாகப் பிரச்சனை வராது என்று தான் நினைத்தார். ஆனால் பிரச்சனை விஷவரூபம் எடுக்கப் போகிறது என்று பாவம் அவருக்கும் தெரியவில்லை. வருண் இருந்த இரண்டு நாட்களும் ஒருவரை ஒருவர் லேசாகப் பார்த்துப் புன்னகைப்பதும், இரவு உணவை இருவரும் ஒன்றாகச் சாப்பிடுவதும் என்று நன்றாகப் பொழுது சென்றது. வருண் ஊட்டிக்குச் சென்றதும், மீராவிற்கு வீடு வழக்கம் போல் இருந்தது. வருண் மீராவை செல்லில் அழைத்துப் பேசினான். நேரில் போல் தயக்கம் இல்லாமல்… இருவராலும் பேசிக்கொள்ள முடிந்தது. அந்த வார சனிக்கிழமை இரவு ரெயிலில் ஆதிக்குப் பெண் பார்க்க அர்ஜுனை தவிர மற்ற அனைவரும் கிளம்பி சென்றனர். கடையைப் பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்று அர்ஜுன் செல்லவில்லை. வீட்டிற்கு ஒரு செக்யூரிட்டி ஏற்பாடு செய்துவிட்டு அர்ஜுன் கடைக்குச் செல்ல… மீராவும் கடைக்கு வந்து அலுவலக அறையில் அமர்ந்து, அர்ஜுன் கொடுத்த வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தாள். அங்கே காலையில் திருச்சியில் இறங்கி, ஒரு பெரிய ஹோட்டல்லில் ரூம் எடுத்து தங்கிய ஆதியின் குடும்பம், பத்து மணி ஆனதும் ரஞ்சனா வீட்டிற்குப் பெண் பார்க்க சென்றனர். அவர்களை வீட்டின் வாசலுக்கே வந்து ரஞ்சனவின் பெற்றோர் வரவேற்றனர். அவர்களும் வேறு உறவினர்கள் யாருக்கும் சொல்லவில்லை என்பதால்… வெறும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அங்கிருந்தனர். எல்லோரும் ரஞ்சனாவை ஆவலுடன் எதிர்பார்க்க… ரஞ்சனாவும் அழகு பதுமையாக வந்து ஹால் சோபாவில் அமர்ந்தாள். அவள் அப்பா எல்லோரையும் அறிமுகம் செய்ய… முகத்தில் புன்னகையுடன் கரம் குவித்தாள். எல்லோருக்கும் ரஞ்சனவை நேரில் பார்த்ததும் ரொம்பத் திருப்தியாக இருந்தது. ஆதிக்கும் அவளை ரொம்பப் பிடித்துவிட்டது. வித்யா பெண்ணைப் பிடிச்சிருக்கா என்று கேட்க… ஆதி “பிடிச்சிருக்கு, ஆனா… நான் கொஞ்சம் தனியா ரஞ்சனாகிட்ட பேசணும்” என்றதும். வித்யா அதற்குப் பெண்வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்தார். ரஞ்சனா வீட்டின் கீழே இருந்த ஒரு அறையிலேயே இருவரையும் பேச சொல்லி அனுப்பி வைத்தனர். ரஞ்சனா வெட்கப்பட்டு அமைதியாக நின்றாள். ஆதி சிறிது நேரம் நின்று அவளை ரசித்தவன், “உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்க, ரஞ்சனா பிடிச்சிருக்கு என்று தயங்கி கொண்டே சொல்ல… “உங்க அம்மா, அப்பாவுக்காகச் சொல்லாத, உண்மைய சொல்லு. நிஜமாவே எண்ணை பிடிச்சிருக்கா?” ஆதி மறுபடியும் கேட்க… “பிடிச்சிருக்கு…” என்று இந்த முறை அழுத்தமாக ரஞ்சனா சொல்ல… ஆதி மலர்ந்த முகத்துடன், “எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு.” என்றான். “ரஞ்சனா, நாங்க கார்மெண்ட்ஸ் பாக்டரி அண்ட் ஷோ ரூம் வச்சிருக்கோம். எனக்கு ஒரு தம்பி இருக்கான். அவனும் படிச்சு முடிச்சுப் பிசினஸ் தான் பார்ப்பான். நான் எங்க அம்மா, அப்பாவை விட்டுத் தனிக் குடித்தனம் வர மாட்டேன். அதோட நானும், என் தம்பியும் சேர்ந்து தான் பிசினஸ் செய்வோம்.”