“எதுக்கு இதெல்லாம் இப்பவே சொல்றேனா… ஒருவேளை உனக்குத் தனிக்குடித்தனம் போகணும்னு ஆசை இருக்கலாம்… அதே மாதிரி உன் கணவன் தனியா பிசினஸ் செய்யணும்னு ஆசை இருக்கலாம். அதனால் அப்படி எதாவது இருந்தா இப்பவே சொல்லிடு. ஏன்னா நம்ம எதிர்பார்ப்பு வேற வேறையா இருந்து, அப்புறம் நாம கல்யாணம் செஞ்சிகிட்டா பின்னாடி பிரச்சனை வரும். அதுக்கு நாம முன்னாடியே எல்லாத்தையும் தெளிவா பேசுறது நல்லது.” “அதே மாதிரி உங்க வீட்ல நீயும், உன் தங்கையும் தான். அதனால உங்க அம்மா, அப்பாவை பார்த்துக்கிற பொறுப்பு நமக்கும் இருக்கு. அதை நான் கண்டிப்பா மறுக்க மாட்டேன். நாம அவங்களை நல்லாவே பார்த்துக்கலாம். இப்ப நீ என்ன சொல்ற? கல்யாணத்துக்கு ஓகே வா…” ஆதி கேட்க… ரஞ்சனா ஆதியின் பேச்சில் இருந்த உறுதியையும், தெளிவையும் பார்த்து மகிழ்ந்தவள், சம்மதம் என்றாள். ஆதியும் ரஞ்சனாவும் சிரித்த முகத்துடன் அறையை விட்டு வெளியே வர… அவர்களைப் பார்த்த பெரியவர்களும் சந்தோஷபட்டனர். ஆதி ஹாலில் வந்து அமர்ந்ததும், அவனுக்கு ரஞ்சனாவின் தங்கை சஞ்சனா ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க… ஆதி அப்போது தான் அவளை நன்றாகப் பார்த்தான். அவள் ரஞ்சனா போல் அழகி இல்லை. ஆனால் பார்க்க நன்றாகத் தான் இருந்தாள்.
“எங்க அக்காவை பிடிச்சிருக்கா?” ஆதியிடம் சஞ்சனா கேட்க… “அதுக்குப் பதில் உங்க அக்காகிட்ட சொல்லி இருக்கேன், நீ அவளிடமே கேள்.” ஆதி ரஞ்சனாவை மாட்டிவிட… அங்கே அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டு கொண்டிருத்த ரஞ்சனா வெட்கப்பட்டாள். ஆரூ ரஞ்சனாவை கேள்வி கேட்டுத் திணறடித்துக் கொண்டிருந்தாள். அப்போது அர்ஜுனிடமிருந்து ஆதிக்கு போன் வந்தது. ஆதி போன்னை எடுத்ததும், “ஆதி, பொண்ணு பார்த்துடீங்களா… உனக்குப் பிடுசிருக்கா… ஓகே தான….” அர்ஜுன் கேள்வி மேல் கேள்வி கேட்க… பார்த்தாச்சு, பிடிச்சிருக்கு.. ம்ம் ஓகே என்று புன்னகையுடன் பதில் சொன்ன ஆதியையே எல்லோரும் பார்த்திருந்தனர். ஆதி அர்ஜுனிடம் கடையைப் பற்றி விசாரிக்க… “ஒன்னும் பிரச்சனை இல்லை… மீரா வந்து ஹெல்ப் பண்றா.” என்றதும், ஆதி “ஓ… சரி… சரி…” என்று சிரித்துக்கொண்டே போன்னை வைத்தான். ஆதி எல்லோருக்கும் பொதுவாக அர்ஜுன் போன் பண்ணான் என்று சொல்ல…. “அர்ஜுன் எங்க ரெண்டாவது பையன். B.Tech., கடைசி வருஷம் படிக்கிறான். அவனுக்காகத் தான் ஆதிக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்றோம். அவன் மேற்படிப்பு படிக்க ஆஸ்திரேலியா போய்டுவான். அவன் போறதுக்குள்ள கல்யாணம் வைக்கணுமாம். அப்ப தான் அவன் பிசினஸ் பார்த்திக்கிட்டா… அவங்க அண்ணன் அவங்க அண்ணியோட வெளிநாடு எல்லாம் ப்ரீயா சுத்தி பார்க்க முடியுமாம். எங்க ஆதியும், அர்ஜுனும் அண்ணன் தம்பி மாதிரி இல்லாம நல்ல ப்ரண்ட்ஸ் மாதிரி தான் இருப்பாங்க.” வித்யா பெருமையாகச் சொன்னவர், தன் மொபைலில் இருந்த அர்ஜுனின் போட்டோவை எடுத்து தன் வருங்கால மருமகளுக்குக் காட்ட…. ரஞ்சனா போட்டோவை வாங்கிப் பார்த்தவள், அவள் பெற்றோரிடம் கொடுக்க… அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே… அதை வாங்கிப் பார்த்த சஞ்சனா மனதில் சஞ்சலம் உண்டானது. அவள் அர்ஜுன் போடோவையே பார்க்க… ஆரு அவளிடம் இருந்த செல்லை வாங்கியதும் தான் சஞ்சனா சுயநினைவுக்கு வந்தாள். ஆருவை பார்த்து சிரித்த சஞ்சனா, “ஏன் இவங்க மட்டும் வரலை?” அவள் ஆர்வமுடன் கேட்க…. “அவங்க வந்து என்ன செய்யப் போறாங்க? பொண்ணு ஆதி அண்ணனுக்குத் தானே பார்க்க வந்திருக்கோம்.” ஆராதனா வெடுக்கன சொன்னவள், திரும்பி சென்று தன் அம்மாவின் அருகே அமர்ந்தாள். அவளுக்கு ஏனோ சஞ்சனாவை பிடிக்கவில்லை. கல்யாணம் மே மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவர்கள், நிச்சயம் தை மாதம் பிறந்ததும் வைத்துகொள்வோம் என்று எல்லோரும் பேசி முடிவு செய்து, ஆதி குடும்பத்தினர் ரஞ்சனா குடும்பத்தாரிடம் விடை பெற்று… அன்று மதிய ரெயிலிலேயே சென்னைக்கும் திரும்பி விட்டனர். அர்ஜுனின் வீட்டில் நிச்சயத்திற்கு நாள் பார்ப்பது… கல்யாண தேதி குறிப்பது, வரவேற்புக்கு மண்டபம் பார்ப்பது என்று எல்லோருக்கும் வேலை சரியாக இருந்தது…. நாட்களும் ரெக்கை கட்டி பறந்தது. அர்ஜுனுக்கு அவனது செவன்த் செம் ரிசல்ட் வந்துவிட்டது. அவன் தான் அவர்களின் காலேஜ் டாப்பர். இன்னும் மீதி இருப்பது கடைசிச் செம் தான், இனி இன்டர்ன்ஷிப் தான் செல்ல வேண்டும். ஏற்கனவே அர்ஜுன் ஆஸ்திரேலியா சென்று படிக்க ஸ்பான்சர் தரும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அர்ஜுன் படிப்பு முடிந்து அவர்கள் கம்பனியில் இரண்டு வருடம் வேலை பார்த்து, தன் சம்பளத்தில் இருந்து சிறிது சிறிதாக அவர்கள் கொடுத்த பணத்தைக் கொடுத்தால் போதும். பிறகு அங்கே தொடர்ந்து வேலை செய்வதோ அல்லது அதை விட்டு விலகுவதோ அர்ஜுனின் விருப்பம். அர்ஜுனுக்கு என்ன செய்வது என்று தெறியவில்லை? அவன் தான் இந்தப் படிப்பு படிக்க விரும்பினான். ஆனால் இப்போது மீராவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ஏற்கனவே தனியா இருக்கா… இப்போ நானும் விட்டுட்டு ஆஸ்திரேலியா போயிட்டா, ரொம்பப் பீல் பண்ணுவா என்று நினைத்தான். அர்ஜுன் தான் சூர்யாவிற்கும் அதே நிறுவனத்திடம் சொல்லி மேல் படிப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடு செய்தான். ஆனால் இப்போது அவனே குழப்பத்தில் இருந்தான். அவனின் குழப்பத்தைப் பார்த்த சூர்யா, அர்ஜுன் அவனின் அண்ணனின் நிச்சயத்துக்குத் திருச்சிக்குச் சென்றிருந்த போது, கல்லூரியின் மதிய வேளையில் மீராவை சென்று பார்த்தவன், அர்ஜுனின் மேற்படிப்பு படிக்கும் ஆசை, அவனுக்குக் கிடைத்த ஸ்பான்சர். ஆனால்… இப்போது அர்ஜுன் மனதில் இருக்கும் குழப்பம் என்று எல்லாவற்றையும் சொன்னவன், “உன் கைல தான் மீரா இருக்கு, அர்ஜுன் ஆஸ்திரேலியா போறதும், போகாததும்.” என்று சொல்லிவிட்டு வந்தான். மீராவிற்கு அர்ஜுன் ரெண்டு வருஷம் ஆஸ்திரேலியா போகணும் என்றதும், முதலில் அழுகை தான் வந்தது…தன்னால் அவனைப் பிரிந்து இருக்க முடியாது என்றே தோன்றியது. கல்லூரியில் இருக்க முடியாமல் வீட்டிற்கு வந்து விட்டாள். தனிமையில் தன் அறையில் அழுது கொண்டு இருந்தாள். மாலை வரை அழுதவள், பின் தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். நல்லவேளை சூர்யா சொன்னாங்க. இல்லைனா, இதே அர்ஜுன் சொல்லி கேட்டிருந்தா… அவங்க முன்னாடியே அழுதிருப்பேன். அப்புறம் அவங்க போன மாதிரி தான் என்று நினைத்தவள், அர்ஜுன் ஆஸ்திரேலியா சென்று படித்து வரட்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள். தன்னால் அவன் படிப்பு கெடுவது நியாயம் இல்லை என்பதை உணர்ந்திருந்தாள். அர்ஜுனின் குடும்பம் விடியற்காலையில் தங்கள் உறவினர்களை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய பஸ்சிலும், காரிலும் கிளம்பி மதியம் திருச்சி வந்து சேர்ந்தனர். அர்ஜுனுக்கு மீரா நிச்சயத்துக்கு வரவில்லை என்று கோபம். அவர்கள் வெறும் முக்கியமான உறவினர்களை மட்டும்தான் அழைத்துக் கொண்டு போகின்றனர். வித்யா ஆதியிடம் உன் நண்பர்களை எல்லாம் திருமணதிற்கு அழைத்தால் போதும் என்று சொல்லிவிட்டார். பிறகு தான் மட்டும் எப்படிப் போவது என்று தான் மீரா தானும் திருமணத்திற்கு வருவதாகச் சொல்லிவிட்டாள். மதியம் திருச்சி சென்று சேர்ந்தவர்கள், தங்களுக்கு என்று எடுத்திருந்த அறைக்குச் சென்று சிறிது நேரம் ஒய்வ்வெடுத்துப் பின் மாலை ஆனதும் நிச்சயத்திற்குக் கிளம்பினார்கள். அர்ஜுன் மண்டபம் செல்லும் முன் மீராவை அழைத்துப் பேசிவிட்டே சென்றான். மீராவிற்கு அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்து அழுகை வந்தது. எப்படித் தனக்காக ஒன்றொன்றும் பார்த்து பார்த்துச் செய்கிறான். வருண் இந்த அளவுக்குத் தன்னோடு பேசுவது அர்ஜூனால் தான். எப்படியாவது அவன் மேற்படிப்பு படிக்க அவனை ஆஸ்திரேலியா அனுப்பி விட வேண்டும் என்று நினைத்தாள். அங்கே அர்ஜுனின் குடும்பத்தினர் கோவில் சென்றுவிட்டு அங்கிருந்து ஊர்வலாமாகச் சீர் வரிசை தட்டுடன் நிச்சயம் செய்ய மண்டபத்திற்குச் சென்றனர். வாசலில் வந்து நின்ற ஆதிக்கு ஆரத்தி எடுக்க வந்த சஞ்சனாவின் கண்கள், அர்ஜுனின் மீது தான் இருந்தது. நிச்சயம் முடிந்து பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து நிற்கும் போது, ஆதியின் நண்பர்கள் யாரும் வரவில்லை என்பதால்… அர்ஜுன் தான் ஆதிக்கு மாப்பிள்ளை தோழனாக அவன் அருகில் நின்றான். அதே போல் ரஞ்சனாவுடன் ஆருவும், சஞ்சனாவும் நின்றனர். ஆதி அர்ஜுனை ரஞ்சனாவுக்கு அறிமுகம் செய்ய… “அண்ணி நல்லா இருக்கீங்களா…” என அர்ஜுன் முறையோடு தான் அழைத்துப் பேசினான். அதைப் பார்த்து ரஞ்சனாவிற்குச் சந்தோஷமாக இருந்தது. சஞ்சனா அர்ஜுனிடம் வந்து ,”நான் தான் உங்க அண்ணியோட தங்கச்சி.” என்று அவளே அறிமுகப்படித்தி கொண்டாள். அவள் இப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருப்பதாகச் சொன்னவள், “நீங்க..” என்று வேண்டுமென்றே கேட்டாள். அவளுக்கு ஏற்கனவே அர்ஜுனை பற்றி வித்யா சொன்னது தெரியும். இருந்தாலும் அவனுடன் பேச்சை வளர்க்க தெரியாதது போல் கேட்க…. அர்ஜுன் உறவினர்களுக்குள் இது மாதிரி பேச்சுச் சகஜம் என்று நினைத்து…. அவள் கேட்டதற்குப் பதில் சொன்னான். அவனுக்குச் சஞ்சனாவின் மனதில் வேறு எண்ணம் இருப்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆரு, “அன்னைக்கு எங்க அம்மா அர்ஜுன் அண்ணனை பத்தி சொல்லும் போது… நீங்க அங்க தான இருந்தீங்க.” என்று நேரடியாகக் கேட்க… தடுமாறிய சஞ்சனா, “இல்லை மறந்திட்டேன்.” என்றாள். ஆரு, யாரு நீ மறந்திட்ட என்று நினைத்தவள், ஒன்றும் சொல்லாமல் அர்ஜுனை பார்க்க… அவள் பார்வையில் தெரிந்த எச்சரிக்கையைப் புரிந்து கொண்ட அர்ஜுன், அங்கிருந்து மண்டபத்திற்கு வெளியே சென்று நின்று கொண்டான். மீராவோடு பேசலாம் என்று நினைத்து அர்ஜுன் அவளைச் செல்லில் அழைத்தான். “நிச்சயம் முடிஞ்சுதா… என்ன பண்றீங்க?” “நிச்சயம் முடிஞ்சது போட்டோஸ் எடுத்திட்டு இருக்காங்க, சாப்பிட்டதும் கிளம்பிடுவோம்.” என்றவன், மெதுவான குரலில் “நீயும் வந்திருக்கலாம் மீரா… உன்னைப் பார்க்காம இருக்க முடியலை.” என்று உண்மையிலேயே வருந்தி சொல்ல. “ஆமாம் ஒரு நாளே விட்டுட்டு இருக்க முடியலை.. எப்படி ஆஸ்திரேலியா போகப் போறீங்க?” மீரா கேட்க…. அதிர்ந்த அர்ஜுன், “உனக்கு எப்படித் தெரியும்?” என்றான்.