மறு நாள் அவர்கள் கடையில் மாலை வேலையில் டீ குடித்துக் கொண்டே… அர்ஜுன் கணேசனிடம் மீராவின் அப்பாவுடன் பேசியதை சொல்ல… அதைக் கேட்ட ஆதி, “என்னடா உன்னோட மாமனார் விட்டா… உன்னை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கிடுவார் போலிருக்கு.” என்று கேலி செய்ய… “மீரா என்ன சொன்னா அர்ஜுன்? உன்னை அவங்க அப்பா கம்பெனில சேர சொன்னாளா…” கணேசன் கேட்க…. “இல்லை, அப்படி எதுவும் அவ சொல்லலை. நானா கேட்டதுக்கும் உங்களுக்குன்னு பிசினஸ் இருக்கும் போது, நீங்க எதுக்கு இங்க வேலை பார்க்கனும்னு தான் சொன்னா…” அர்ஜுன் சொல்ல… அதைக் கேட்ட கணேசன் மனதில் மீராவை பற்றி உயர்ந்த எண்ணம் தோன்றியது. மறு நாள் ஊரில் இருந்து வந்த மீனாக்ஷியிடம், அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்… மீரா பிறந்தாநாள் அன்று வந்த மீராவின் நண்பர்கள், பிறந்தநாள் கொண்டாட்டம், நடந்த விருந்து, கடைசியில் ராம்நாத்துடன் அவர்கள் பேசிவிட்டே சென்றது என்று எல்லாவற்றையும் சொல்ல… கேட்ட மீனாக்ஷிக்கு ஆத்திரம் வந்தது. எவ்வளவு தைரியம்? அதுவும் நான் இல்லாத போது என்று கொதித்தவள், ராம்நாத்திடம் “பார்த்தீங்களா வீட்டுக்கே ஆம்பளை பசங்களைக் கூட்டிட்டு வந்து கொட்டம் அடிக்கிறதை…” என்று வத்திவைக்க… “உனக்குத் தெரியாம எதுவும் தப்பா பேசாத… கொட்டம் அடிக்கனும்னு நினைக்கிறவங்க கூட அக்கா, தங்கைய கூட்டிட்டு வர மாட்டங்க. அதுவும் மீரா அப்படிப்பட்ட பொண்ணு இல்லை…” ராம்நாத் மீனாட்சியைக் கடிந்துகொள்ள… அவளுக்கு இன்னும் ஆத்திரம் பெருகியது. அன்று இரவு உணவை சாப்பிட மீரா வந்த போது… மீனாக்ஷி வேண்டும்மென்றே, “கண்டவங்க வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சிடாங்க. என்னோட தங்க நெக்லஸ் ஒன்னு காணோம். இன்னும் எனென்ன காணாமப் போகப்போகுதோ…” என்று புலம்ப…. மீராவிற்குக் கட்டுப் படுத்த முடியாத அளவிற்குக் கோபம் வந்தது. அவள் அறைக்கு வேகமாகச் சென்றவள், கையில் அவள் வைர நெக்லஸ் கொண்டு வந்து மீனாக்ஷியின் முன் வைத்துவிட்டு “இந்த வைர நெக்லஸ்ஸ எடுத்துக்கோங்க. என்னோட ப்ரண்ட்ஸ் கீழயும், மேல என்னோட ரூம்க்கு மட்டும் தான் வந்தாங்க. அவங்க உங்க ரூம் முன்னாடி கூட வரலை… வீணா அவங்க மேல திருட்டு பழி போட வேண்டாம். அவங்க அப்படிபட்டவங்க இல்லை…” “நான் என்னோட படிப்பு முடிஞ்சதும், வேலை வாங்கிட்டு வெளியூர் போய்டறேன். அதுவரை என்னை நிம்மதியா இருக்கவிடுங்க” என்றவள், அவள் அறைக்குச் சென்று கதவை சாற்றிவிட்டுப் படுக்கையில் விழுந்து குமுறி அழுதாள். ரொம்பச் சந்தோஷம் என்று நினைத்த மீனாக்ஷி, அந்த வைர நெக்லஸ்சை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றாள். அர்ஜுன் அன்று இரவு போன் பண்ணும் போது மீரா எடுக்கவில்லை. அர்ஜுன் அவள் குரலில் இருந்தே அழுதிருப்பதைக் கண்டுபிடித்து விடுவான் என்று நினைத்தவள், அவன்தான் தூங்கிவிட்டதாக நினைத்து கொள்ளட்டும் என்று பேசாமல் இருந்து விட்டாள். அர்ஜுனுக்குக் கண்டிப்பாகத் தெரியும் அவள் தூங்கி இருக்க மாட்டாள் என்று எதோ பிரச்சனை என்றும் நன்றாகப் புரிந்தது. மறுநாள் கல்லூரிக்குச் சீக்கிரம் வந்த மீராவிற்கும் முன்பாகவே அர்ஜுன் அங்கே வந்து அவளுக்காகக் காத்திருந்தான். மீரா காரைவிட்டு இறங்கும் போதே… எதிரே வந்து நின்றவன், அவளின் முகத்தையே பார்க்க… அதைப் பார்த்ததும் மீராவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. “என்ன அர்ஜுன் என்னோட முகத்தையே பார்கறீங்க?” “நேத்து அழுதியா மீரா…” “இல்லையே…” “பொய் சொல்லாத மீரா… நீ அழுதிருக்க உன்னோட முகத்தைப் பார்த்தாலே தெரியுது, கண்ணெலாம் வீங்கி இருக்கு, எதாவது பிரச்சனையா மீரா மறைக்காம சொல்லு.” “அதெல்லாம் இல்லை… நான் ரொம்ப நேரம் துங்கினேன். அதனால தான் கண்ணு வீங்கி இருக்கிற மாதிரி இருக்கு. வேற ஒன்னும் இல்லை.” அர்ஜுன் மீராவை சந்தேகமாகப் பார்த்தான். ஆனால் மீரா அவனிடம் உற்சாகமாகப் பேச…. “மீரா… நீ மத்தவங்கட்ட நடிக்கிற மாதிரி என்கிட்டே நடிக்காத.” அர்ஜுன் கோபப்பட…. “அர்ஜுன், நான் எப்பவும் உங்ககிட்ட மட்டும் தான் என்னோட இன்னொரு பக்கத்தைக் காட்டி இருக்கேன். நேத்து வழக்கம் போல எங்க சித்தி பேசினாங்க. நான் என்னைப் பத்தி பேசி இருந்தா பொருத்துருப்பேன். ஆனா அவங்க உங்க எல்லோரையும் ஒரு மாதிரி பேசிட்டாங்க. அதனால தான் மூட் அவுட், இப்ப நார்மல் ஆகிட்டேன்.” என்றாள் மீரா. “ரொம்பக் கஷ்டமா இருக்கா மீரா…” “அதெல்லாம் ஒன்னும் இல்லை, நான் நல்லா தான் இருக்கேன்.” என்று அர்ஜுனை சமாளித்து, அவன் இன்டர்ஷிப் செய்யும் கம்பெனிக்கு அனுப்பி வைத்தாள். ஆதியின் கல்யாணத்திற்கு முகுர்த்த புடவை எடுக்கப் பெண் வீட்டினரையும் வர சொல்லி அழைக்க… அவர்களும் நேராக ஹோட்டலில் வந்து இறங்கி குளித்துக் கிளம்பி காலை உணவிற்குக் கணேசன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் ரஞ்சனவை தவிர மற்ற மூவரும் வந்திருந்தனர். ஆதிக்கு ரஞ்சனாவை அழைத்து வரவில்லை என்று வருத்தம். கணேசனும், வித்யாவும் வந்தவர்களை வரவேற்று டிபன் சாப்பிட அழைத்துச் சென்றனர். ரஞ்சனாவின் பெற்றோருக்கு அவர்கள் வீட்டை பார்த்ததும் ரொம்பத் திருப்தியாக இருந்தது. சஞ்சனா அர்ஜுனை தேட, அவன் அங்கே இல்லை. அவளுக்கு யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. ஆருவிடம் கேட்கலாமா என்று நினைத்தவளுக்கு, அன்று மண்டபத்தில் ஆரு பேசியது நினைவுக்கு வர… இவகிட்ட கேட்டா அவ்வளவுதான், நீ எதுக்குக் கேட்கிறன்னு கேட்பா? என்று நினைத்தவள் வாயை மூடிக்கொண்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்துச் சிறிது நேரம் கழித்துக் கடைக்குக் கிளம்பினர். ஆரு அவளுக்குப் புடவை செலக்ட் செய்ய மீராவை வர சொல்லி இருந்தாள். அதனால் மீரா அவர்கள் புடவை எடுக்கச் சென்ற கடைக்கு வர…. அர்ஜுனும் சிறிது நேரத்தில் அங்கே வந்தான். அர்ஜுனும், மீராவும் தெருமுனை வரை ஒன்றாகத் தான் வந்தனர். கடைக்குள் வரும் போது தான் தனித்தனியாக வந்தனர். அர்ஜுனை பார்த்ததும் சஞ்சனாவின் முகம் மலர்ந்தது. அவன் எல்லோரையும் பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு ஆதியின் அருகே சென்று நின்று கொண்டான். ரஞ்சனா வீட்டினருக்கு மீராவை ஆருவின் தோழி என்று வித்யா அறிமுகம் செய்தார். ஆருவும், மீராவும் பேசிக்கொள்வதைப் பார்த்து சஞ்சனாவுக்கு எரிச்சலாக வந்தது. ஆருவும், மீராவும் ஒரு பக்கமாக நின்று புடவை பார்க்க… இங்கே ரஞ்சனாவிற்குச் சஞ்சனா புடவை தேர்ந்து எடுத்து கொண்டிருந்தாள். அவள் எடுத்த புடவை எல்லாம் கன்றாவியாக இருந்தது. ஆதி நொந்து விட்டான். என்னோட அழகான ரஞ்சனா… இவ எடுக்கும் புடவையைக் கட்டினா அவ்வளவுதான் என்று நினைத்தவன். வித்யாவை பார்த்து “என்னமா இது?” என்று புலம்ப….அவர் “நீ செலக்ட் பண்ணுடா…” என்று சொல்லிவிட்டு, ரஞ்சனாவின் அம்மாவோடு அந்தப் பக்கம் சென்றுவிட்டார். ஆதிக்கு அவர்கள் அந்தத் துறையிலேயே இருந்தாலும், பட்டு புடவை தேர்ந்து எடுக்க எல்லாம் தெரியவில்லை. அவன் அர்ஜுனை பரிதாபமாகப் பார்க்க… அவன் மீராவை ஜாடை காட்டினான். ஆரு என்று ஆதி அழைத்ததும், அவளோடு சேர்ந்து மீராவும் திரும்பி ஆதியை பார்க்க… அவன் “ஆரு, நீ வந்து புடவை செலக்ட் பண்ணு.” என்றவன், நீயும் செலக்ட் பண்ணு என்று மீராவிடம் ஜாடையில் சொன்னான். மீராவும் ஆருவோடு வந்து நின்று புடவை பார்த்தாள். வித்யா முகுர்த்ததுக்கு ஒன்று, இங்கே வரவேற்புக்கு ஒன்று என்று இரண்டு புடவைகள் தேர்ந்தெடுக்கச் சொன்னார். மீரா நிச்சயதார்த்த போட்டோவில் ரஞ்சனாவை பார்த்திருந்ததால்… அவளுக்கு ஏற்ற மாதிரி புடவை பார்த்தாள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனாவிற்குக் கோபமாக வந்தது. இவள் யாரு என் அக்காவிற்குப் புடவை எடுக்க என்று நினைத்தாள். அதனால் வேண்டுமென்றே மீராவை புடவை தேர்ந்து எடுக்கவிடாமல், அவள் குறுக்கே செல்ல…. அதைக் கவனித்த அர்ஜுன் அவளைத் திசை திருப்புவதற்காக அவளிடம் பேச்சுக் கொடுத்தான். அர்ஜுன் சஞ்சனாவுடன் பேச ஆரம்பித்ததும், சஞ்சனா புடவை பார்ப்பதை மறந்து விட்டு அர்ஜுனுடன் பேச ஆரம்பித்தாள். அர்ஜுன் அவள் படிப்பை பத்தி கேட்க… அவளும் பதில் சொல்ல… அடுத்து அர்ஜுன் திருச்சியைப் பற்றிக் கேட்க…. சஞ்சனாவும் திருச்சியின் புகழை பரப்பியவள், “நீங்க கல்யாணத்துக்கு வரும் போது, நான் உங்களுக்கு ஊரை சுற்றி காமிக்கிறேன்.” என்றாள். இவர்கள் இங்கே பேசி கொண்டிருக்கும் போதே மீரா புடவை தேர்ந்து எடுத்துவிட்டாள். மீரா முகுர்த்ததுக்கு இரண்டு புடவைகளைத் தேர்வு செய்தவள், வரவேற்புக்கும் இரண்டு புடவைகள் தேர்ந்து எடுத்தாள். நான்கையும் அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு “செல்லில் போட்டோ எடுத்து ரஞ்சனாவிற்கு அனுப்பி அவங்களுக்கு எந்தப் புடவை பிடிச்சிருக்ன்னு கேளுங்க. அவங்களோட கல்யாண புடவை அவங்க செலக்ட் பண்றது தான் நல்லது. பிடிக்கலைனா வேற பார்க்கலாம்.” என்று ஆதியிடம் சொல்ல… ஆதிக்கு மிகவும் சந்தோஷம். “நல்ல ஐடியா மீரா.” என்றவன், அர்ஜுனோடு சேர்ந்து அந்தப் புடவைகளை நன்றாக விரித்து வைத்து, செல்லில் போட்டோ எடுத்து… ரஞ்சனாவிற்கு அனுப்பிவிட்டு, ஆதி தனியாகச் சென்று அவளுக்குப் போன் செய்தான். தன் அக்காவிடம் சென்று, உனக்கு யாரோ ஒரு தெரியாத பொண்தான் புடவை செலக்ட் செய்தாள் என்று போட்டுக் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த சஞ்சனாவின் எண்ணத்தில் மீரா ஒரு லோட் மண்ணைப் போட்டுவிட்டு, ஆருவிற்குச் சேலை பார்த்து கொண்டிருந்தாள். அர்ஜுன் அவர்களோடு நின்று பேசிக்கொண்டிருந்தான். ஆதி போன் பேசிவிட்டு வந்தவன், “அவளுக்கு அந்த மரூன் புடவை கல்யாணத்திற்கும், நீல கலர் புடவை வரவேற்புக்கும் எடுத்துகிறேன்னு சொல்றா…” என்று சொல்ல… எல்லோரும் கல்யாண பொண்ணுக்கு பிடிச்ச மாதிரியே புடவை எடுத்தாச்சு என்று சந்தோஷபட்டனர். ஆருவிற்கு மீரா அழகான வண்ணங்களில் புடவை தேர்ந்து எடுத்து கொடுத்தாள். பின் வித்யாவிற்கும் இன்னும் சில நெருங்கிய உறவினர்களுக்கும் புடவை எடுத்ததும், எல்லோரும் ஹோட்டலுக்குச் சாப்பிட செல்ல… மீரா அவள் வீட்டுக்கு கிளம்பினாள். “நான் கடைக்குப் போறேன். நான் காலையில சாப்பாடே கொஞ்ச நேரம் முன்னாடி தான் சாப்பிட்டேன். அதனால இப்ப பசி இல்லை.” என்று சொல்லி அர்ஜுன் அங்கிருந்து நழுவி விட்டான். மீரா சென்று அவள் காரில் ஏறியவள், காரை எடுக்காமல் காத்திருக்க… ஐந்து நிமிடம் கழித்து அர்ஜுன் வந்து காரில் ஏறினான். “எனக்குத் தெரியும், நீங்க வருவீங்கன்னு.” மீரா சிரித்துக்கொண்டே சொல்ல… அவள் கன்னத்தைப் பிடித்துச் செல்லமாகக் கிள்ளிய அர்ஜுன், “என்னைக் கடையில விட்டுட்டு போ. அவங்க சாப்பிடதும் கடைக்குத் தான் வருவாங்க.” என்றான். மீராவும் அர்ஜுனை அவர்கள் கடை முன்பு விட்டுவிட்டு சென்றாள். அர்ஜுன் நினைத்தது போல்…. சாப்பிட்டதும் கார்மெண்ட்ஸ் சென்று பார்த்தவர்கள், அடுத்து கடைக்கு வந்தனர். சஞ்சனா எவ்வளவு பெரிய கடை, பாக்டரி. நம்ம அக்கா குடுத்து வச்சவ என்று நினைத்தவள், நாமும் இந்த அர்ஜுனை கல்யாணம் பண்ணிகிட்டா லைப்ல சூப்பரா செட்டில் ஆகிடலாம். அதுக்கு எப்படியாவது முயற்சி பண்ணனும் என்று நினைத்து அர்ஜுனிடம் பேச செல்ல… “அப்பா எனக்குப் பசிக்குது, நான் போய்ச் சாப்பிட்டு வரேன்.” என்று அர்ஜுன் அங்கிருந்து சென்று விட்டான். சஞ்சனாவிற்கு எரிச்சலாக வந்தது. அர்ஜுனும் சரி, மீராவும் சரி சஞ்சனாவை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்துச் சஞ்சனா வீட்டினரும் கடையில் இருந்தே விடைபெற்று அவர்கள் ஊருக்கு கிளம்பினர். அந்த வருடத்தின் இறுதி தேர்வுகள் முடிந்து, ஆதியின் கல்யாண வேலையில் எல்லோரும் பிஸியாக இருந்தனர். மீராவின் ரசனைகளும், தேர்வுகளும் சிறப்பாக இருப்பதால்… அவளிடம் மண்டபத்தின் அலங்கார பொறுப்பைக் கொடுத்தனர்.
அவளையும் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக நினைப்பதால் தான் அவளுக்கும் ஒரு வேலையைக் கொடுத்தனர். அதை நினைத்து மீராவிற்கு மிகவும் மகிழ்ச்சி. அவள் சந்தோஷமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். வருண் அந்த வருட தேர்வு முடிந்து லீவ்வுக்கு அவன் வீட்டிற்கு வந்திருந்தான். ஒரு ஞாயிறு அன்று மூடி வெட்ட சலூனுக்கு வந்தவன், அங்கே அர்ஜுனை பார்த்துவிட்டு, அவனே அர்ஜுனிடம் சென்று ஹாய் என்றான். பேப்பர் படித்துக் கொண்டிருந்த அர்ஜுன் குரல் கேட்டு யார் என்று நிமிர்ந்து பார்க்க… அங்கே வருண் நிற்பதை பார்த்து முகம் மலர்ந்தான். “ஹாய் வருண், ஊட்டியில இருந்து எப்ப வந்த?” “நான் போன வாரமே வந்துட்டேன்.” “அப்படியா இந்த மீரா கூட நீ வந்தது பத்தி ஒன்னும் சொல்லலை… ஹப்பா… நீ வந்துட்டியா உங்க அக்கா இனிமே ஒழுங்கா வீட்ல இருப்பா. இல்லைனா.. பொழுது போகலைன்னு கோவில் குளத்துகிட்ட போய் உட்கார்ந்துகிறது, பார்க்கல சின்னப் பிள்ளைங்களோட சேர்ந்து விளையாடுறதுன்னு இருப்பா.” அர்ஜுன் சிரித்துக் கொண்டே சொல்ல… அதைக் கேட்ட வருண் முகம் மாறினான். அர்ஜுன் வருணுடன் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு கிளம்ப… வருணும் முடி வெட்டி கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். வீட்டுக்கு வந்த வருண் எதோ யோசனையிலேயே இருந்தவன், மதியம் உணவு அருந்தும் போது… அவனே மீராவை இன்டெர்காமில் சாப்பிட அழைத்தான். ராம்நாத் சாப்பிட வந்தவர், தன் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவதைப் பார்த்து மகிழ்ந்தவர், அவரும் அவர்களுடன் சாப்பிட உட்கார்ந்தார். அதைப் பார்த்த மீனாக்ஷியின் முகத்தில் வெருப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. “அப்பா, நான் இந்த வருஷத்தில இருந்து சென்னையிலேயே படிக்கப் போறேன். எனக்கு இங்கயே ஒரு ஸ்கூல்ல சீட் வாங்கிக் கொடுங்க.” என்றான் வருண். “எதுக்கு இப்ப நீ ஸ்கூல் மாறனும்?” மீனாக்ஷி கேட்க… “எனக்கு ஹாஸ்டல்ல இருக்கப் பிடிக்கலை… அதுவும் சென்னையிலேயே பெரிய ஸ்கூல்ஸ் இருக்கும் போது, நான் ஏன் ஹாஸ்டல் போகணும்?” என்று வருண் பதில் கேள்வி கேட்க… மீனாக்ஷி “அதெல்லாம் இல்லை… நீ அங்க தான் படிக்கணும்” என்றார். உடனே கோபப்பட்டுத் தட்டை தள்ளிவிட்டு எழுந்த வருண், “என்னைத் திரும்ப ஹாஸ்டல் போகச் சொன்னா… நான் வீட்டை விட்டு எங்கையாவது ஓடி போய்டுவேன்.” என்று மிரட்ட… இப்போது பதறிய மீனாக்ஷி, “டேய்… அப்படி எதுவும் பண்ணிடாதடா… நீ இங்கயே இருந்து படி. நான் நாளைக்கே உனக்கு ஒரு நல்ல ஸ்கூல்ல சீட் வாங்கித் தரேன்.” என்று பணிந்து போக… வருண் அப்படி வாங்க வழிக்கு என்று சொல்லி சிரித்தவன், தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தான். நடந்ததை எல்லாம் ராம்நாத்தும், மீராவும் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர். வருண் மீராவுடன் நன்றாகப் பழகினான். விடுமுறை தினம் என்பதால் இருவரும் சேர்ந்து காலையில் ஷட்டில் விளையாட சென்றனர். அங்கே அர்ஜுனும் வர, மூவரும் சேர்ந்து விளையாடினர். அடிக்கடி வருணும், மீராவும் வெளியே செசென்று வர ஆரம்பித்தனர். மீனாக்ஷி எதாவது சொன்னால் வருண், “எனக்கு வீட்ல தனியா இருக்கப் போர் அடிக்காதா… நீ இப்படி எதாவது சொன்னா நான் வீட்ட விட்டு போய்டுவேன்.” என்று மிரட்ட… மீனாக்ஷி இப்போது நாட்டில் இருக்கும் நிலவரத்தை அறிந்து அதோடு வருணின் இரண்டும் கெட்டான் வயதை நினைத்து, எதாவது செஞ்சிட போறான் என்று அவனுக்குப் பணிந்து போனாள். அதோடு மீராவும்தான் தன் படிப்பு முடிந்ததும் ஊரை விட்டு போறேன்னு சொல்லி இருக்காளே… அதனால ரெண்டு வருஷம் தானே தொலையட்டும் என்று நினைத்துப் பேசாமல் இருந்தாள். மீரா இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அதைப் பார்த்து மகிழ்ந்த அர்ஜுன், ஹப்பாடா இனிமே நிம்மதியா ஆஸ்திரேலியா போகலாம். மீரா தனியா இருக்கா மாட்டா என்று நினைத்து சந்தோஷப்பட்டான். திருச்சியில் சஞ்சனா ரஞ்சனாவிடம் “அக்கா நீ கல்யாணம் பண்ணி போயிட்டேனா நான் எப்படி உன்னை விட்டுட்டு இருப்பேன்?” என்று கண்கலங்க… அதை உண்மை என்று நினைத்த ரஞ்சனா “இங்க இருக்கிற சென்னை தான, நாம அடிக்கடி பார்க்கலாம். நீ வருத்தபடாத.” என்று தங்கைக்கு ஆறுதல் சொல்ல… “அக்கா… நான் சென்னையில வந்து பீஜி பண்றேன். அப்ப அடிக்கடி உன்னைப் பார்க்கலாம். நீ தான் அப்பாகிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கித் தரனும் ப்ளீஸ்…” சஞ்சனா கெஞ்ச… அவளின் திட்டத்தை அறியாத ரஞ்சனா சரி என்றாள்.