ஆதியின் திருமணத்திற்குப் பத்திரிக்கை கொடுக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. மீராவின் வீட்டிற்குப் பத்திரிக்கை கொடுக்கக் கணேசன், வித்யா, அர்ஜுன் மற்றும் ஆரு சென்றனர். மீனாக்ஷிக்குக் கணேசனை நன்றாகத் தெரியும். அவள் அவர்களும் பிசினஸ்ஸில் இருப்பதால், ராம்நாத்தை பார்க்க வந்திருப்பதாக நினைத்து வந்தவர்களை வரவேற்று அமரவைத்து நன்றாகப் பேசி கொண்டிருந்தாள். அப்போது ராம்நாத்தும் அங்கு வந்து அவர்களை வரவேற்றுப் பேசிக்கொண்டிருந்தார். மீனாக்ஷி அவர்களுக்குப் பழரசம் கொடுத்து உபசரித்தாள். மீராவிற்கு அவர்கள் வருவது தெரியாது. அதனால் அவள் அறையில் இருந்தாள். கணேசனும், ராம்நாத்தும் அவர்கள் தொழிலை பற்றிப் பேச… வித்யா வீட்டை சுற்றி தன் பார்வையை ஓட்டினார். மீரா இவ்வளவு வசதியான வீட்டு பொண்ணா… ஆனால் அவள் ஒரு நாளும் அப்படி நடந்து கொண்டதில்லை என்று நினைத்தவர், “மீரா எங்க? கொஞ்சம் வர சொல்றீங்களா… அவளுக்கு நாங்க வர்றது தெரியாது, நாங்க திடிர்னு தான் கிளம்பி வந்தோம்.” என்று மீனாட்சியிடம் சொல்ல… மீனாக்ஷியின் முகம் மாறியது. இவங்க எதுக்கு அவளைத் தேடுறாங்க என்று நினைத்துக் கொண்டே…. அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் மீராவை அழைத்து வர சொல்லிவிட்டு வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தார். அர்ஜுன் மீனாக்ஷியை தான் கவனித்துக் கொண்டு இருந்தான். பாரு மீரான்னு சொன்னதும், இந்த அம்மா மூஞ்சி மாறுவதை, இருக்கட்டும் கல்யாணத்திற்கு அப்புறம் உனக்கு இருக்கு கச்சேரி என்று நினைத்துக் கொண்டான். வேலை செய்யும் பெண் வந்து தன்னை மீனாக்ஷி அழைப்பதாகச் சொல்லவும், மீரா இன்னைக்கு என்ன குற்ற பத்திரிக்கையோ என்று பயந்து கொண்டே தன் அறையில் இருந்து வெளியே வந்தவள், மேலிருந்தே கீழே எட்டி பார்த்தாள். அப்போது அர்ஜுனும் மேலே பார்க்க… மீரா இடைவரை ஒரு சின்ன டாப்பும், த்ரீ போர்த் பாண்ட்டும் அணிந்து கொண்டு நிற்பதை பார்த்தவன், முகத்தில் சிரிப்பு வர அதைக் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டான். இவங்க வராதா சொல்லவே இல்லையே என்று ஆச்சர்யபட்ட மீரா, வேகமாக அவள் அறைக்குச் சென்று ஒரு சுடிதாரை மாட்டி கொண்டு கீழே இறங்கி வந்து கணேசனையும், வித்யாவையும் வரவேற்றுவிட்டு அர்ஜுனை பார்த்து புன்னகைத்தவள், ஆருவின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். மீனாக்ஷி இருந்ததால் மீரா அமைதியாக இருந்தாள். அது அர்ஜுன் குடும்பத்தினர் அனைவருக்கும் புரிந்தது. மீனாக்ஷிக்குக் குழப்பமாக இருந்தது. இவளுக்கு இவங்களை ஏற்கனவே தெரியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பொதுவான பேச்சு வார்த்தை முடிந்து கணேசன் தன் மூத்த மகன் திருமணத்திற்கு அவர்களை அழைக்க வந்ததாகச் சொன்னவர், பத்திரிக்கையை ஒரு தாம்பாளத்தில் வைத்து கொடுக்க…. ராம்நாத்தும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். ராம்நாத் பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்தவர், கல்யாணம் திருச்சியிலா என்று கேட்க… கணேசன் “ஆமாம், ஆனா இங்க சென்னையில வரவேற்பு வச்சிருக்கோம்.” என்றார். ராம்நாத் தான் குடும்பத்துடன் வரவேற்புக்கு வருவதாகச் சொல்ல… “மீராவை நீங்க எங்களோட கல்யாணத்துக்கு அனுப்பி வைக்கணும். நான் அவளைப் பத்திரமா பார்த்துகிறேன்.” வித்யா மீராவின் அப்பாவிடம் கேட்க… அவர் மீராவை பார்த்தார். அவளுக்குப் போக விருப்பம் என்று அவள் முகமே சொல்ல… “சரி அழைச்சிட்டு போங்க.” என்று அவர் சம்மதம் கொடுக்க… மீராவின் முகம் மலர்ந்தது. மீராவும், அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை கவனமாகத் தவிர்த்தனர். இருவரும் மீராவின் வீட்டிற்கு அவர்கள் காதலிப்பது இப்போது தெரிய வேண்டாம் என்று நினைத்தனர். மீராவும் ஆருவும் தோழிகள் அதனால் தான் தெரியும் போல என்று மீனாக்ஷி நினைத்துக் கொண்டாள். கணேசன் ராம்நாத்திடம் விடைபெற… அவர் சாப்பிட்டு போகலாமே என்றார். “இல்லை இன்னொரு நாள் வரோம், இப்ப நிறைய வேலை இருக்கு.” என்றவர் வித்யாவை பார்க்க… அவர் மீனாட்சியிடம் “நீங்க எல்லோரும் கண்டிப்பா வரவேற்புக்கு வரணும்.” என்று சொல்லி கிளம்ப… அர்ஜுனும் ராம்நாத்திடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான். மீரா அவர்களைக் கார் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தாள். திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை தான் வைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை மதியமே ஒரு ஏசி பஸ்சில் உறவினர்களுடன் கணேசனும், வித்யாவும் திருச்சியை நோக்கி கிளம்பினார்கள். இரவு உணவிற்குத் திருச்சிக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்தனர். அங்கே மூன்று நாட்கள் ஹோட்டலில் தங்கினால் அதிகச் செலவு ஆகும் என்று ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தனர். பஸ்சில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் இருந்தனர். சிலர் திருமணத்தன்று வருவதாகவும், இன்னும் சிலர் வரவேற்புக்கு வருவதாகவும் சொல்லி இருந்தனர். கணேசனின் தம்பி குடும்பம், வித்யாவின் பெற்றோர்கள், வித்யாவின் அக்கா குடும்பம், இன்னும் சில உறவினர்கள் அதோடு மீரா, சூர்யா மற்றும் ஆதியின் நண்பர்கள் தான் பஸ்ஸில் இருந்தனர். கணேசனும் அவரது நண்பர்களும் காரில் வந்தனர். முதலில் ஒரு பிள்ளையார் கோவிலில் நிறுத்தி சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் இருந்த சரவணபவன் சென்று மதிய உணவு அருந்திவிட்டுக் கிளம்பினார்கள். வீட்டில் இவ்வளவு பேருக்கு பந்தி பரிமாறினால்… கிளம்ப நேரம் ஆகிவிடும் என்று ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர். ஆதி, ஆதியின் நண்பர்கள், அர்ஜுன் மற்றும் சூர்யா எல்லோரும் கடைசி இரண்டு வரிசையில் அமர்ந்து இருந்தனர். உறவினர்களின் சின்னப் பிள்ளைகளுடன் சேர்ந்து மீரா விளையாடி கொண்டு வந்தாள். அர்ஜுன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். “டேய்… உன்னோட ஆளு என்னடா எப்பவும் சின்னப் பசங்களோடையே விளையாடுறா.” சூர்யா கிண்டல் செய்ய… “ம்ம்…. அதை ஏன்டா கேட்கிற, நாங்க முதல் தடவை வெளிய போன போதும் அங்கிருந்த குட்டீஸ் கூடத்தான் டா விளையாடினா. எங்க போனாலும் இதே வேலை தான்.” அர்ஜுன் சலித்துக்கொண்டவன், அவனுக்கு முன் சீட்டில் அமர்ந்து இருந்த சின்னப் பிள்ளைகளை எழுப்பி, “போங்க… அங்க ஒரு அக்கா இருக்காங்க பாருங்க, அவங்க கூடப் போய் விளையாடுங்க. உங்களை எல்லாம் பார்த்துக்கத் தான் அவங்க வந்திருக்காங்க.” என்று மீராவை கைகாட்டி அவர்களை அனுப்பிவிட்டு, அந்தச் சீட்டில் கால் நீட்டி படுத்து விட்டான். அவனுக்குக் கல்யாண அலைச்சல் அதிகம். அதனால் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. சூர்யா ஆருவை பார்க்க… அவள் யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். வாயே மூட மாட்டா போலிருக்கு சூர்யா நினைக்க, அப்போது ஆருவும் எதேட்சையாகச் சூர்யாவை பார்த்தாள். இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்க்க… சூர்யா என்ன? என்பது போல் அவளைப் பார்த்துப் புருவத்தை உயர்த்த…. ஒன்னும் இல்லை என்று தலையசைத்த ஆரு திரும்பி அருகில் இருந்தவருடன் பேச ஆரம்பித்தாள். சூர்யாவின் கண்கள் அவன் கட்டுப்பாட்டையும் மீறி அடிக்கடி ஆருவிடமே சென்றது. இது என்ன வம்பா போச்சு என்று நினைத்தவன், ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க துவங்கினான். இரவு எட்டு மணிக்கு திருச்சிக்கு சென்று சேர்ந்தவர்களை ரஞ்சனாவின் அப்பாவும், சஞ்சனாவும் வந்து வரவேற்றனர். அவர்கள் வீட்டில் இருந்து பக்கத்தில் தான் இவர்களுக்குப் பார்த்த வீடு இருந்தது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் உறவினர்கள் எல்லாம் கீழே இருந்த அறைகளிள் தங்கிக்கொள்ள, முதல் மாடியில் இருந்த அறைகளில் ஆருவும், மீராவும் ஒரு அறையிலும், மீதம் இருந்த இரண்டு அறைகளில் ஒன்றில் கணேசனும், அவரது நண்பர்களும் தங்கிக்கொள்ள… மற்றொரு அறையில் அர்ஜுனும், சூர்யாவும் தங்கிக் கொண்டனர். இரண்டாம் மாடியில் இருந்த அறைகளில் ஆதியும், அவன் நண்பர்களும் தங்கிக் கொண்டனர். எல்லோரும் அலுப்பு தீர குளித்துக் கீழே இறங்கி வந்தனர். அவர்களுக்கு உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டதும் ஹாலில் ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர். ஆருவிற்கு மீரா மெஹந்தி போட்டுவிட… அதைப் பார்த்து வந்திருந்த உறவினர்கள் குழந்தைகளும் வந்து கை நீட்ட…. மீரா குழந்தைகளுக்கு அராபிக் டிசைன் போட்டு விட்டாள். அவள் அழகாகப் போட்டுவிடுவதைப் பார்த்து பெரியவர்களும் வந்து கைநீட்ட… மீரா அவர்களுக்கும் போட்டுவிட்டாள். நிறையப் பேருக்குப் போட்டதில் அவள் விரல்கள் வலிக்கத் தொடங்கியது. அடிக்கடி விரல்களை நீட்டி, மடக்கி கொண்டாள். ஆனால் அப்போதும் கேட்பவர்களுக்குப் போட்டுவிட்டுக் கொண்டே தான் இருந்தாள். மீராவை கவனித்த வித்யாவின் அக்கா, “பாவம்… அவளை விடுங்க, எத்தனை பேருக்கு போடுவா… அவளுக்குக் கை வலிக்கும்.” என்றதும் தான் மனசில்லாமல் அவளை விட்டனர். “நாளைக்குக் காலையில போட்டுவிடறேன், சாயங்காலம் தான வரவேற்பு . ஒரு மணி நேரம் வச்சிருந்தா போதும்.” என மீரா அவர்களுக்குச் சமாதானம் சொல்ல… அவளின் நல்ல குனத்தை அனைவரும் மெச்ச… வித்யா தனது அக்காவிடம், “மீரா எவ்வளவு வசதியான வீட்டு பொண்ணு தெரியுமா, இருந்தாலும் எல்லோர்கிட்டயும் பிரியமா இருப்பா…” என்றார். எல்லோரும் படுக்கச் சென்ற பின்னர் மீராவும் ஆருவும் மொட்டை மாடிக்கு சென்றனர். ஆதியும் அவன் நண்பர்களும் இரண்டாவது மாடியின் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மீரா ஆருவின் இன்னொரு கைக்கு மெஹந்தி போட்டுவிட… அர்ஜுனும், சூர்யாவும் அங்கே வந்து அவர்களோடு அமர்ந்தனர். மீரா மற்றவர்களுக்கு அராபிக் டிஸைன் தான் போட்டாள். ஆனால் அருவிற்குக் கை முழுவதும் நெருக்கமாகப் போட்டுவிட்டாள். ஆருவிற்குப் போட்டுவிட்டு தன்னுடைய இடது கையில் மீரா அவளே அவளுக்கு அராபிக் டிஸைன் போட்டு கொண்டாள். அப்போது ஆதியும் வந்து அவர்களுடன் உட்கார்ந்தான். மீராவிற்குக் கை ரொம்ப வலிக்க ஆரம்பித்துவிட்டது. அதைக் கவனித்த அர்ஜுன், ஒரு கப்பில் சுடு தண்ணிர் கொண்டு வந்து மீராவை அதற்குள் சிறிது நேரம் கையை வைத்துக் கொள்ளச் சொன்னவன், அவள் விரல்களைப் பிடித்து நீவி விட்டான். “விடுங்க அர்ஜுன், யாரவது வரப்போறாங்க.” “அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க, எல்லோரும் தூங்கிட்டாங்க.” என்ற அர்ஜுன் ஆருவை பார்த்து, “நீ ப்யூட்டி பார்லர்ல போய் மெஹந்தி போட வேண்டியது தான, எதுக்கு டி என் பொண்டாட்டி கையை உடைக்கிற?” என்று அவளை வம்பிழுக்க… ஆரு என்னது பொண்டாட்டியா என்று வாயைப் பிளந்தவள், “கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி இவளுக்குக் கூஜா தூக்குகிறியே… கல்யாணத்துக்கு அப்புறம் என்னை யாருன்னு கேட்ப போல…” அவள் பதிலுக்கு அர்ஜுனை வம்பிழுக்க, “அது என்ன கல்யாணத்துக்குப் பிறகு, இப்பவே கேட்கிறேன். நீ யாரு? கல்யாணத்திற்கு வந்திருக்கச் சொந்தகாரா பொண்ணா…” அர்ஜுன் தெரியாதவர்களிடம் கேட்பது போல் கேட்டுவைக்க… அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க… ஆரு அர்ஜுனை அடிக்கக் கை ஓங்க… சூர்யா வேகமாக, கைல மருதாணி இருக்கு என்று ஆருவிற்கு நியாபகப் படுத்தினான். சூர்யாவை பார்த்துத் தேங்க்ஸ் என்றவள், “நாத்தனார்னா சும்மாவா… அதெல்லாம் நான் கொடுமை பண்ணுவேன். ஏன் உன் பொண்டாட்டி என்ன தேஞ்சா போய்டுவா?” ஆரு கெத்தாகக் கேட்க… “நீ பெரிய கொத்தனாராவே இருந்தாலும், என் பொண்டாட்டிய கொடுமை படுத்துற வேலை எல்லாம் வச்சுக்காத…. உனக்குத் தான் இன்னொரு அண்ணி இருக்காங்கள்ள… நீ அவங்ககிட்ட உன்னோட வீறாப்ப காட்டு.” என அர்ஜுன் சொல்ல… “ஏன் என் பொண்டாட்டி மட்டும் என்ன பாவம் செஞ்சா?” ஆதி கேட்க…” “யு டூ பிக் பிரதர்.” என்றவள் தொடர்ந்து, “நீங்க எல்லாம் எனக்கு அண்ணன்களா… தூ…. போங்கடா… எனக்கும் ஒருத்தன் வருவான், அப்புறம் இருக்கு உங்களுக்கு.” என்றாள் கெத்தாக… “நாங்களும் அந்தப் பாவப்பட்ட ஜென்மம் யாருன்னு பார்க்க ரொம்ப ஆவலாதான் இருக்கோம்.” அர்ஜுன் நக்கலடிக்க… ஆருவிற்குக் கோபம் வந்து விட்டது. அவள் எழுந்து தனியே சென்று நின்று கொண்டாள். நடந்ததைப் பார்த்துகொண்டிருந்த சூர்யாவுக்கும் அர்ஜுனின் மீது கோபம் தான். “எதுக்கு இப்ப அவளை வம்பு இழுக்குறீங்க?” மீரா அர்ஜுன் முதுகில் அடித்தவள், “ஆரு, நீ இங்க வா… நான் உனக்குக் கை முன்னாடி பக்கமும் மெஹந்தி போடுறேன்.” அவள் கூப்பிட… ஆரு திரும்பாமல் நின்றாள். ஆதியும், அர்ஜுனும் எழுந்து ஆருவின் அருகே சென்று, இருவரும் அவள் தோளில் கை போட்டு கொண்டனர். ஆதி “சீ.. இதுக்கெல்லாம் யாரவது கோவிச்சிப்பாங்களா.” என்றான். அர்ஜுன் ஆருவை இழுத்துக் கொண்டு மீராவின் அருகே வந்து, “உனக்கு இல்லாத உரிமையா… நீ மீராவை கொத்தனார் கொடுமை, சாரி… நாக்கு ஸ்லிப் ஆகிடுச்சு, நீ நாத்தனார் கொடுமை தாராளமா பண்ணிக்கலாம்….. வேணா ரெண்டு அடி கூட அடிச்சிக்கோ.” என்றவன், மீராவிடம் சும்மா என்று கண்ஜாடை காட்ட… மீரா அர்ஜுனை பார்த்து சிரித்தவள், ஆருவின் கையில் மெஹந்தி போட ஆரம்பித்தாள். “உனக்குக் கை வலிக்கும் வேண்டாம் மீரா” ஆரு சொல்ல… “நான் என்ன தினமுமா போடறேன், இன்னைக்கு ஒரு நாள் தான பரவாயில்லை. நான் இது மாதிரி கல்யாணத்திற்கு எல்லாம் போனது இல்லை.” “எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே எங்க அம்மா, அப்பா பிரிஞ்சுட்டாங்க. சின்ன வயசுல எங்க தாத்தா, பாட்டி கூடப் போய் இருக்கேன். அப்புறம் விவரம் தெரிஞ்சதுகப்புரம் என்கிட்டே எங்க அம்மா, அப்பாவை பத்தியே பேசுறாங்கன்னு… நான் யார் வீட்டு கல்யாணத்துக்கும் போனது இல்லை.” “இப்ப மூன்னு வருஷமாதான் எங்க அப்பாவோட இருக்கேன். எங்க சித்தி என்னை எந்தக் கல்யாணத்துக்கும் அழைச்சிட்டு போக மாட்டாங்க. நான் ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்கக் கல்யாணம் இதுதான். அதுவும் இது நம்ம வீட்டுக் கல்யாணம் இதுல வேலை செய்ய எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை, சந்தோஷம் தான்.” மீரா ஆருவிற்கு மெஹந்தி போட்டபடியே பேசிக்கொண்டிருந்தாள். அவள் இதுவரை தன்னைப் பற்றி அர்ஜுனை தவிர யாரிடமும் சொன்னது இல்லை. இன்று தான் மனம் திறந்து பேசுகிறாள். அவள் சொன்னதைக் கேட்டு ஆளுக்கொரு சிந்தனையில் இருக்க… சூர்யாவிற்கு அன்றைக்குப் பார்த்த ஆல்பத்தில், மீரா எல்லாப் புகைப்படத்திலும் ஏன் தனியாக இருந்தாள் என்று இப்போது புரிந்தது. “உங்க அம்மா எங்க மீரா இருக்காங்க? அவங்க உன்னைப் பார்க்க வருவாங்களா?” ஆரு கேட்க… “அவங்க லண்டன்ல இருக்காங்க, அவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. எப்பவாவது தான் இந்தியா வருவாங்க. என்னை எதாவது பொது இடத்துக்கு வர வச்சு பார்த்திட்டு போய்டுவாங்க.” என்றாள். அவள் குரலில் வருத்தமோ, சோகமோ இல்லை… எதோ தகவல் சொல்வது மாதிரி சொல்லிவிட்டு அவள் வேலையைப் பார்த்தாள். மீரா மெஹந்தி போட்டதும் எல்லோரும் எழுந்து படுக்கச் சென்றனர். மறு நாள் காலையில் மீராவும், ஆருவும் தாமதமாகத் தான் எழுந்தனர். மீரா நேற்று மெஹந்தி போடாமல் விட்டவர்களுக்கு இன்று போட்டுவிட்டு கொண்டிருந்தாள். ஆளுக்கொரு வேலை இருந்தது. சஞ்சனா இந்த வீட்டிற்கும், அவள் வீட்டிற்கும் நடையாக நடந்தும், அர்ஜுனுடன் அவளால் பேச முடியவில்லை… அவன் சூர்யாவோடே இருந்தான். மாலையில் முதலில் ஆண்கள் கிளம்பி மண்டபத்திற்குச் சென்று விட்டனர். பெண்கள் மட்டும் மெதுவாகக் கிளம்பி கொண்டு இருந்தனர். மண்டப வாசலில் காரில் இருந்து இறங்கிய மீராவை பார்த்த அர்ஜுன் “வாவ்…” என்றான்.
மீரா சந்தன நிறத்தில் அடர் சிகப்பு நிற பார்டர் வைத்த பட்டு புடவை அணிந்து இருந்தாள். அவள் அணிந்து இருந்த சிவப்பு நிற ஜாக்கெட்டில் அழகான வேலைப்பாடுகள் செய்யபட்டு இருந்தது. கழுத்தில் ஒரு ஆரமும், சின்ன நெக்லஸ்சம் அதற்குப் பொருத்தமான தோடும், கை நிறைய வளையல்களும் போட்டிருந்தாள். தலையில் மல்லிகை பூ வைத்து மிதமான ஒப்பனையில் கண்ணையும், மனதையும் கவர்ந்தவளை விட்டு பார்வையை அர்ஜூனால் திருப்பவே முடியவில்லை.