வரவேற்பு முடிந்த மறுநாளே வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்கள் எல்லோரும் சென்றுவிட்டனர். ஆதியும், ரஞ்சனாவும் ஒரு வாரம் ஹனிமூன் சென்று வந்தனர். அர்ஜுன் அவர்கள் கடையையும் பார்த்துக் கொண்டு ஆஸ்திரேலியா போகத் தேவையான வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் அர்ஜுனும், மீராவும் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. அர்ஜுன் ஆஸ்திரேலியா செல்வதை நினைத்து, மீரா தனிமையில் அழுது கறைந்தாலும், நேரில் அர்ஜுனை பார்க்கும் போது, தான் சாதாரணமாக இருப்பதாகக் காட்டிகொள்வாள். இருவரும் தினமும் நள்ளிரவு வரை போன்னில் பேசி கொண்டிருப்பது வழக்கமாகியது. ஆதியும், ரஞ்சனாவும் ஹனிமூன்னில் இருந்து திரும்பி வந்ததும், அவர்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியது. வீட்டு வேலைக்கு ஆள் இருந்ததால் சமையல் வேலையை வித்யாவும், ரஞ்சனாவும் சேர்ந்து செய்தனர். கணேசனுக்கும், அர்ஜுனுக்கும் மதிய உணவு கடைக்கே சென்றுவிடும். ஆதி மட்டும் வீட்டிற்கு வந்து சாப்பிடுவான். வித்யா ஆதி வருவதற்கு முன்பே சாப்பிட்டுவிட்டு, அவர் அறைக்குச் சென்றுவிடுவார். ஆதியும், ரஞ்சனாவும் சேர்ந்து சாப்பிடுவார்கள். பின் ஆதி சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு கடைக்குச் செல்வான். இரவில் அனைவரும் எப்போதும் போல் சேர்ந்து உணவு அருந்துவார்கள். இப்படியே சிறிது நாட்கள் செல்ல… அர்ஜுன் ஆஸ்திரேலியா செல்வதற்கு விசா வந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அவன் கிளம்ப வேண்டும். வித்யா அவனுக்குத் தேவையான பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி, தனி மிளகாய் பொடி, சாம்பார் பொடி எல்லாம் தயார் செய்தார். மீரா அர்ஜுன் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க மிகவும் வாடிவிட்டாள். அர்ஜுனும் அப்படித் தான் இருந்தான். அவர்கள் இருவரையும் கவனித்த கணேசன், அவர்களை அழைத்துக் கடையில் தன் அறையில் வைத்து பேசினார். “ரெண்டு பேரும் ஏன் இப்படி டல்லா இருக்கீங்க? இந்தப் பிரிவு நீங்க ஒருத்தர் மீது ஒருத்தர் வச்சிருக்கும் அன்பை இன்னும் அதிகமாக்கும். இப்படித் தள்ளி இருக்கும் போது கண்டிப்பா ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிஞ்சிபீங்க.” கணேசன் எடுத்து சொல்ல… இருவரும் சரி என்று கேட்டுக் கொண்டனர். அர்ஜுன் ஆஸ்திரேலியா கிளம்பும் முன்தினம் இருவரும் பெசன்ட் நகர் பீச்சில் மீராவின் காரில் அமர்ந்து இருந்தனர். மீரா அர்ஜுனின் தோளில் சாய்ந்து இருந்தாள். அர்ஜுன் மீராவை ஒரு கையால் அனைத்துக் கொண்டு, மறு கையால் அவளின் கைவிரலை வருடிக்கொண்டு இருந்தான். இருவரும் பேசாமல் மொனமாக இருந்தனர். இருவருக்கும் பேச தெம்பும் இல்லை. இருவருக்கும் இனி இரண்டு வருடம் கழித்துத் தான் பார்போம் என்பதே மனதில் பாரமாக இருந்தது. இப்படியே இருவரும் இரண்டு மணி நேரம் இருந்தனர். அப்போது அர்ஜுனின் செல்லில் வித்யா அழைத்தார். “அர்ஜுன், மணி எட்டு ஆகுது. காலையில 2 மணிக்கு உனக்கு ப்ளைட். இன்னும் வீட்டுக்கு வராம எங்க இருக்க?” என்றதும், அர்ஜுன் அடைத்திருந்த தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு, “வரேன் மா.” என்றான். வித்யா சீக்கிரம் வா என்று போன்னை வைத்துவிட்டார். அர்ஜுன் கிளம்பப் போகிறான் என்றதும், மீரா அவனை இறுக்கமாக அனைத்துக் கொண்டாள். விட்டால் அவன் போய் விடுவானோ என்று பயம், அர்ஜுனுக்கு அவளின் தவிப்புப் புரிந்தது. ஆனால் அவனால் இப்போது வேறு என்ன செய்ய முடியும்? அர்ஜுன் மீராவின் முகத்தை நிமிர்த்தியவன், “கிளம்பட்டுமா மீரா….” என்றதும், மீராவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது. “ப்ராமிஸ் மீரா… ரெண்டு வருஷம் தான், ப்ளீஸ் பொறுத்துக்கோ. அப்புறம் உன்னை விட்டு எங்கையும் போக மாட்டேன்.” மீரா அவனைத் தவிப்பாகப் பார்க்க….அர்ஜுன் அவள் நெற்றி, கண்ணம், என்று முத்தமிட்டவன், கடைசியில் அவள் இதழில் ஒரு அழுத்தமான முத்தம் வைத்து அவளைவிட்டு விலகியவன், இதற்கு மேல் இருந்தால், தன்னால் அவளை விட்டு போக முடியாது என்பதை உணர்ந்து… வேகமாகக் காரில் இருந்து இறங்கி, “bye மீரா.” என்று சொல்லிவிட்டு, அவன் வந்த வண்டியில் சென்று ஏறினான். மீரா திகைத்து விழிக்க… அர்ஜுன் “ம்ம்.. காரை எடு…” என்றதும், மீரா காரை ஓட்ட… அர்ஜுன் அவள் பின்னே பைக்கில் சென்றான். மீரா வீட்டின் அருகே வந்ததும், காரை நிறுத்திவிட்டு இறங்கி திரும்பி பார்க்க… அர்ஜுன் அவளின் தெரு முனையில் பைக்கோடு நின்றவன், அங்கிருந்தே கை ஆட்டிவிட்டுச் சென்றான். அர்ஜுன் சென்றதும் மீரா சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தாள், அர்ஜுன் திரும்பி வருவானோ என்று… ஆனால் அர்ஜுன் திரும்பி வரவில்லை… மீரா வீட்டிற்குள் சென்றவள், உணவு அருந்தாமல் நேராக அவள் அறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்ததும், இதுவரை கஷ்டப்பட்டு அர்ஜுனின் முன்பு அழுது விடக் கூடாது என்று அடக்கி வைத்திருந்த அழுகை குமுறிக் கொண்டு வந்தது. பைக்கை இரண்டு தெரு தள்ளி வந்து நிறுத்திய அர்ஜுன், அப்படியே பைக்கின் முன்பே சாய்ந்து படுத்துவிட்டான். அவனால் மீராவிடம் சரியாகச் சொல்லிக்கொள்ளக் கூட முடியவில்லை. எப்படித்தான் ரெண்டு வருஷம் அவளைப் பார்க்காம இருக்கப் போறோமோ என்று நினைத்தவன், வண்டியை கிளப்பி வீடு நோக்கி சென்றான். அர்ஜுன் வீட்டிற்குள் வந்ததும், நேராக டைனிங் அறைக்குச் சென்று குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து குடித்து, தன்னை நிலை படுத்திக் கொண்டான். வித்யா “சீக்கிரம் சாப்பிட வா, அர்ஜுன்.” என்றதும், சாப்பிட அமர்ந்தவன், எதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு எழுந்து கொண்டான். தன் அறைக்குச் சென்று எல்லாவற்றையும் சரி பார்க்க… மீரா ஒவ்வொன்றையும் அழகாக அடுக்கி வைத்திருந்தாள். அர்ஜுன் அவன் இரண்டு பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே வர… “பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் எடுத்துகிட்டியா.” கணேசன் கேட்க… அர்ஜுன் அவன் தோளில் இருக்கும் பையில் இருப்பதாகச் சொன்னான். வித்யா அர்ஜுனை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, சாமிக்கு காணிக்கையை அவன் கையால் முடிந்து வைக்கச் சொன்னவர். “இதை நீயே நல்லபடியா உன் படிப்பு முடிச்சு திரும்பி வந்ததும், நம்ம கோவில் உண்டியல்ல போடறேன்.” என்று வேண்டிக்கச் சொன்னார். அர்ஜுன் அவர் சொன்னதோடு சேர்த்து, மீராவோட வந்து போடறேன் என்று வேண்டிக் கொண்டான். அர்ஜுனுக்கு அவன் அப்பா கணேசன் திருநீர் பூசிவிட… அவன் தன் அம்மா, அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். எல்லோரும் சேர்ந்து ஏர்போர்ட் வந்தனர். அர்ஜுனுக்கு முன்பே சூர்யா வந்திருந்தான். அவன் பெற்றோரும் வந்திருந்தனர். அர்ஜுன் வந்ததும் அவனும், சூர்யாவும் சென்று முதலில் முடிக்க வேண்டிய பார்மாலிடீஸ் முடித்து விட்டு வந்தனர். அர்ஜுன் கிளம்பும் நேரம் ஆனதும் எல்லோரிடமும் விடைபெற….. ஆரு அழுவதும், பின் கண்ணைத் துடைப்பதுமாக இருந்தாள். ஆதியும் டல்லாக இருந்தான். அர்ஜுன் ஆருவின் அருகே வந்தவன், அவளைத் தோளோடு அனைத்து கிளம்பட்டுமா என்றான். ஆரு பதில்சொல்லாமல்.. சரி என்று தலையை மட்டும் ஆட்ட…. “ஏன் ஆரு என்னைப் போகும் போது டென்ஷன் பண்ற?” அர்ஜுன் கேட்க… ஆரு கண்ணீரை அடக்கி புன்னகைத்தாள். அர்ஜுனும் பதிலுக்குப் புன்னகைத்தவன், ஆதியிடமும், ஆருவிடமும், “மீராவை நல்லா பார்த்துக்கோங்க, ப்ளீஸ்…” என்று சொல்ல… ஆதி “அதை நீ எங்களுக்குச் சொல்லனுமா… நாங்க பார்த்துப்போம், நீ கவலைபடாம போயிட்டு வா.” என்றான். அர்ஜுன் சற்று தள்ளி நின்ற ரஞ்சனாவிடம் “போயிட்டு வரேன் அண்ணி.” என்றதும், அவள் பதிலுக்கு “சரி, பத்திரமா போயிட்டு வாங்க…” என்றாள். அர்ஜுன் தன் பெற்றோர்களின் அருகே சென்றவன், வித்யாவை அனைத்துக் கொண்டு “போயிட்டு வரேன் மா…” என்று சொல்ல… வித்யா அழுதுவிட்டார். அவரை மற்ற எல்லோரும் சமாதானம் செய்ய… கண்ணைத் துடைத்தவர், “பத்திரம் அர்ஜுன், வேற நாடு பார்த்து நடந்துக்கோ…” என்றார். அர்ஜுன் சரி மா என்று கேட்டுக் கொண்டான். அர்ஜுன் எல்லோரிடமும் விடைபெற்றுக கொள்ள…. சூர்யாவும் எல்லோரிடமும் சொல்லிகொண்டவன், கடைசியாக ஆருவை பார்த்து போயிட்டு வரேன் என்று தலை அசைக்க… ஆருவும் பதிலுக்குத் தலை அசைத்தாள். அர்ஜுனும், சூர்யாவும் உள்ளே சென்றவுடன் தான் மற்றவர்கள் வீட்டிற்குக் கிளம்பினார்கள். அர்ஜுன் நடந்து கொண்டே, தன் செல்லை எடுத்து மீராவை அழைத்தான். மீரா வேகமாகச் செல்லை எடுத்து அர்ஜுன் என்றாள். “மீரா… கிளம்பிட்டேன்டா, ஏர்போர்ட் வந்துட்டேன். எல்லோரும் என்னை வந்து ஏர்போர்ட்ல விட்டுட்டு, இப்போ தான் கிளம்புறாங்க. நான் இங்க மத்த பார்மாலிடீஸ் முடிச்சிட்டு வந்து கால் பண்றேன்.” என்று சொல்லிவிட்டுப் போன்னை வைத்தான். அதே போல் எல்லாப் பார்மாலிடீஸ்ம் முடிந்ததும், சூர்யாவின் அருகே தன் பையை வைத்துவிட்டு சற்று தள்ளி சென்று மீராவை அழைத்தான். மீரா முகம் கழுவி… தண்ணீர் குடித்து ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு அர்ஜுன் போனுக்காகக் காத்திருந்தவள், அவன் அழைத்ததும் உடனே எடுத்தாள். அர்ஜுனும் கிளம்பும் போது அவள் வருத்தபடுவது மாதிரி பேச வேண்டாம் என்று கலகலப்பாகப் பேசினான். “அப்புறம் மீரா இனிமே ஒரே ஜாலியா… என் தொல்லை இல்லாம நிம்மதியா இருப்ப…” “ஆமாம், கண்டிப்பா….” “எனக்கு ஆஸ்திரேலியால ஒரு அழகான கேர்ள் ப்ரண்ட் கிடைக்கனும்னு ப்ரே பண்ணிக்கோ மீரா.” “உங்களுக்குத் தான நல்லலலா….அழகானனனன…. கிழவி கிடைக்கும்.” “பொறாமை படாத மீரா… உன்னைக் கழட்டி விட மாட்டேன், ஆஸ்திரேலியால டைம் பாஸ் பண்ண ஆள் வேண்டாமா… நீயே சொல்லு.” “டேய்… ஆத்திரத்தை கிளப்பாத, நீ மட்டும் எதாவது கேர்ள் ப்ரண்ட் பிடிச்ச… அடுத்த ப்ளைட் பிடிச்சு வந்து உன்னைக் கொன்னுடுவேன், நியாபகம் வச்சிக்கோ.” “அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது. நான் அங்க கேர்ள் ப்ரண்ட் வச்சிருந்தாலும், உனக்கு என்ன தெரியவா போகுது?” அர்ஜுன் சொல்லி கொண்டிருக்கும் போதே மீரா போன்னை வைத்துவிட்டாள். அர்ஜுன் ஹலோ மீரா… என்று கத்தி கொண்டிருக்க, சூர்யாவின் மொபைல் அடித்தது. அவன் அர்ஜுனை பார்த்து மீரா என்றவன், போன்னை எடுத்து ஹலோ என்றதும், “சூர்யா அண்ணா…. அர்ஜுன் அங்க யாராவது பொண்ணு கூடப் பேசினா, நீங்க எனக்கு உடனே சொல்லிடனும். இது ஆரு மேல ப்ராமிஸ்.” மீரா வேகமாகச் சொல்ல…. சூர்யா, அட இவளுக்கு எப்படித் தெரியும் என்று யோசிக்கும் போதே… அர்ஜுன் சிரித்துக் கொண்டே அவனிடம் இருந்து செல்லை பிடிங்கி, “என்ன என்னை வேவு பார்க்க ஆள் செட் பண்றியா?… அதெல்லாம் உதவாது, சூர்யாவை ஏமாத்த எனக்குத் தெரியாதா…” என்றவன் தொடர்ந்து… “ஏன் மீரா என் மேல நம்பிக்கை இல்லையா? நான் அப்படிச் செய்வேனா?” அர்ஜுன் ஆழ்ந்த குரலில் கேட்க…. “நீங்க அப்படிச் செய்ய மாட்டீங்கன்னு தெரியும், இருந்தாலும்… இங்க ஒரு சஞ்சனா வந்த மாதிரி… அங்க எதாவது சபந்தனா வந்துட்டா…” மீரா கவலைப்பட…. அர்ஜுன் “எனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் வரும்னு நினைக்கிற…” என்று மேலும் மீராவை வம்பு இழுக்க… “செருப்பு வரும், வேண்டாம் என்னை அசிங்கமா திட்ட வச்சிடாதீங்க. அங்க ஒரு பொண்ணு கூட அழகா இருக்காது. எல்லாப் பொண்ணுக்கும் ஏற்கனவே ஆள் இருக்கும். உங்களை ஒருத்தியும் திரும்பி பார்க்கமாட்டா ” மீரா பல்லை கடித்துக் கொண்டு சாபம் விட…. “போதும் தாயே மலை இறங்கு, எனக்கு யாரும் வேண்டாம். என்னோட மீரா மட்டும் போதும். சந்தோஷமா… நான் யாரையும் பார்க்கமாட்டேன், நிம்மதியா இரு.” “எனக்குத் தெரியும், நீங்க சும்மா என்னை வம்பு இழுத்தீங்க.” “தெரியுதுல… அப்புறம் என்ன? சரி டா ப்ளைட்டுக்கு கால் பண்றாங்க, பத்திரமா இரு. தனியா சுத்தக் கூடாது. ஆருவோட போ… அடிக்கடி நம்ம வீட்டுக்கு போயிட்டு வா…நாம டெய்லி ஸ்கைப்ல பேசலாம், போயிட்டு கால் பண்றேன். முழிச்சிட்டு இருக்கக் கூடாது, போய்த் தூங்கு.” அர்ஜுன் நடந்து கொண்டே பேச….. “சரி நீங்க போயிட்டு மறக்காம கால் பண்ணுங்க.” என்றாள். “நான் உன்னை மறப்பேனா… போனதும் கால் பண்றேன், bye” அர்ஜுன் சொல்ல… மீராவும் “bye” என்றாள். இருவரும் போன்னை அனைக்க மனம் இல்லாமல் அடுத்தவர் வைக்கட்டும் என்று காத்திருக்க… இருவருமே வைக்கவில்லை. அர்ஜுன் நடந்து கொண்டே மீரா என்று அழைக்க, மீரா அர்ஜுன் என்றாள். இப்படியே இருவரும் மாற்றி… மாற்றி ஒருவரின் பேரை மற்றவர் சொல்ல… சூர்யா அர்ஜுனிடம் இருந்து போன்னை பிடிங்கி “மீரா… ப்ளைட் உள்ள போகணும் bye…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான். அர்ஜுன் சூர்யாவை பார்த்து முறைத்துக் கொண்டே நடந்தான். மீரா அர்ஜுனை நினைத்துக் கொண்டே படுக்கையில் விழுந்தாள்.