அத்தியாயம் 12_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,886
“என்னைக் காட்டிக்க போறவன்னு நினைச்சு தான் டி அன்னைக்கு நான் உன்னைக் கூப்பிட வந்தேன். ஆனா இப்ப தான் நீ என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போறியே?”
“இப்பவும் கட்டிக்கிட்டவன்னு நினைச்சு கொண்டு போய் விடுங்க”
“சரி, கொண்டு போய் விடுறேன். சென்னைக்கே உன் கூட வரேன். ஏன்னா அது வரைக்கும் உன் கூட இருக்கலாம்ல? இப்ப படு”, என்று சொல்லி கட்டிலில் படுத்தான. அப்போதும் அவனுடைய காதல் அவளை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.
“என்ன நின்னுட்டே இருக்க? படுக்கலையா?”, என்று கேட்டான் விக்ரம்.
அவள் ஒரு போர்வையை எடுத்து தரையில் விரிக்க “அதான் பக்கத்துல வரக் கூடாதுன்னு சொல்லிட்டீயே? அப்புறம் என்ன? ஒரே கட்டில்ல படுத்தா நான் ஒண்ணும் உன்னை ரேப் பண்ணிற மாட்டேன்”, என்று சுள்ளென்று எரிந்து விழுந்தான்.
அவனை அடி பட்ட பார்வை பார்த்தவள் “ஒரே கட்டில்ல படுத்து உங்களை சோதிக்க கூடாதுன்னு தான் கீழே படுக்குறேன். வேற ஒரு காரணமும் இல்லை”, என்று சொல்லி விட்டு விரித்த போர்வையில் படுத்து விட்டாள்.
விக்ரமும் அமைதியாக படுத்து விட்டான். ஆனால் இருவருக்கும் உறக்கம் தான் வர வில்லை. நாளை இந்நேரம் அவள் இங்கே இருக்க மாட்டாள் என்று எண்ணி இருவருக்கும் வேதனையாக இருந்தது.
அடுத்த நாள் காலை வேளை சாதாரணமாக இருக்க இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ள வில்லை.
“எப்ப கிளம்பனும்?”, என்று கேட்டாள் ரேகா.
“கிளம்ப வேண்டியது தான். வா அம்மா அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிட்டு போகலாம்”, என்று சொல்லி கீழே அழைத்துச் சென்றான்.
சாரதாவும் சேதுபதியும் ஹாலில் அமர்ந்து பேப்பரில் மூழிகியிருக்க அவர்கள் அருகில் சென்று அமர்ந்தார்கள்.
அவளைப் பார்த்த விக்ரம் “சொல்லு”, என்று சைகை செய்தான். “நீங்களே சொல்லுங்களேன் பிளீஸ்”, என்று அவள் விழிகளால் அவனிடம் கெஞ்ச வேறு வழியில்லாமல் பேச ஆரம்பித்தான்.
“அம்மா, அப்பா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“என்ன விக்ரம்?”, என்று கேட்டார் சேதுபதி. அவன் தயங்கி அமைதியாக இருக்க “என்ன ஆச்சு விக்ரம்? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு. ரேகா முகமும் சரியில்லையே?”, என்று கேட்டாள் சாரதா.
ரேகாவுக்கு எப்படி விஷயத்தைச் சொல்ல என்று சங்கடமாக இருந்ததால் அவனே சொல்லட்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
“அது வந்து மா.. ரேகா இப்ப சென்னை போறாளாம்”, என்றான்.
“சென்னைக்கா?”, என்று கேட்ட சேதுபதி குழப்பமாக ரேகாவைப் பார்க்க அவளோ அவரைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
“நீ என்ன டா சொல்ற? ரேகா எதுக்கு போகணும்? அவ வேலைக்கு எல்லாம் போகலைன்னு சொன்னாளே? ரேகா இவன் என்ன மா சொல்றான்?”, என்று கேட்டாள் சாரதா.
ஏதாவது சொல்லேன் என்ற பார்வையை அவனை நோக்கி ரேகா வீச “இனி நீயே சொல்லிக்கோ”, என்று எண்ணி அமைதியாக இருந்து விட்டான் அவன்.
இனி அவன் எதுவும் பேச மாட்டான் என்று தெரிந்து கொண்ட ரேகா “இல்லை அத்தை, ஏற்கனவே செஞ்சிட்டு இருந்த புராஜெக்ட் பாதில விட்டுட்டு வந்துட்டேன். அதை முடிச்சுக் கொடுக்கணும்னு கூப்பிடுறாங்க. நான் போயிட்டு வரட்டுமா?”, என்று கேட்டாள் ரேகா.
“இவ்வளவு தானா நான் பயந்தே போயிட்டேன். தாராளமா போயிட்டு வா மா. ஆனா வேலை முடிஞ்சதும் வேலை வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துரணும் சரியா? என்னங்க நான் சொல்றது சரி தானே?”, என்று கேட்டாள் சாரதா.
“சரி தான் சாரதா, ரேகா உன் வேலை முடிஞ்ச அப்புறம் அத்தை சொன்னது மாதிரி ரிசைன் பண்ணிட்டு வந்துரு மா. அதுக்கு அப்புறமும் வேலைக்கு போகணும்னு ஆசைப் பட்டா நம்ம ஆஃபிஸ்க்கு வந்து அட்மின் வேலை பாரு சரியா?”, என்றார் சேதுபதி.
“உங்க பையன் மனசு மாறாம நான் எப்படி இங்க வர முடியும்?”, என்று எண்ணிக் கொண்டு “சரி மாமா”, என்றாள் ரேகா.
“அவன் எங்க பஸ் ஏத்தி விடுவான்? சென்னைல போய் விட்டுட்டு தான் வருவான். அப்படித் தானே விக்ரம். காரை எடுத்துட்டு போ”, என்றாள் சாரதா.
சரி என்று சொல்லி விட்டு விக்ரம் அறைக்குச் செல்ல அவனுடன் ரேகாவும் சென்றாள். சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி விட்டார்கள். கனத்த மனதுடன் இருவரும் கீழே செல்ல பிரிவு அவர்களை வாட்டுகிறது என்று புரிந்து கொண்டு “கொஞ்ச நாள் தானே? சீக்கிரம் ஓடிரும்”, என்று ஆறுதல் சொல்லி அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள் சாரதாவும் சேதுபதியும்.
அவர்களுக்கு இருப்பதும் பிரிவு வலி தான். ஆனால் அது நிரந்தரமான வலியாக மாறி விடுமோ என்ற பயம் தான் ரேகாவுக்கும் விக்ரமுக்கும் அதிகமாக இருந்தது.
காரில் போகும் போது இருவருக்குள்ளும் மௌனமே நிலவியது. இருவரும் எதுவுமே பேசிக் கொள்ள வில்லை. அவளை பிரிய போகிறோம் என்று அவனும் இனி அவனை எப்போது பார்ப்பது என்று அவளும் எண்ணிக் கொண்டே வந்தார்கள்.
மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலில் நிறுத்தி இருவரும் சாப்பிட்டார்கள். சாப்பிடும் போது முதல் நாள் நினைவு தான் இருவருக்கும் அதிகமாக வந்தது. அதன் பின் மீண்டும் அமைதியான பயணம் தொடர்ந்தது. மாலை ஆறு மணி போல் அவளுடைய ஹாஸ்டல் அருகே இருந்த மரத்தடியில் காரை நிறுத்தினான்.
தான் சொல்லாமலே அவன் சரியாக அந்த இடத்துக்கு வந்ததைக் கண்ட ரேகாவுக்கு அவன் தீவிரமான காதல் மேலும் புரிந்தது. ஆனால் புரிந்து என்ன செய்ய? அதை அடைய அவளுக்கு கொடுத்து வைக்க வில்லையே? கார் நின்றாலும் அவள் அங்கிருந்து இறங்க வில்லை. இறங்கு என்று அவனும் சொல்ல வில்லை.
மாலை மங்கி லேசாக இருள் கவிழ ஆரம்பித்திருந்தது. மனதுக்கு இதமான அந்த மாலைப் பொழுதில் தேவதை போல தன்னருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தான் விக்ரம்.
இவளை இப்ப இங்க விட்டு விட்டு போகணுமா என்று அவனுக்குத் தவிப்பாக இருந்தது.
“இனி இவனை எப்ப பார்க்க போறோமோ?”, என்று நினைத்துக் கொண்டே அவனை திரும்பி பார்த்து “போறேன்”, என்னும் விதமாய் தலையசைத்தாள். அவனும் சரி என்று தலையசைத்தான். ஒரு வார்த்தை கூட இருவரும் பேச வில்லை.
இறங்குவதற்காக அவள் கார் கதவை திறக்க போக அவளுடைய மற்றொரு கரத்தைப் பற்றினான் விக்ரம். கதவை திறக்காமல் என்னவென்று அவள் திரும்பி பார்க்க “சாரி டி, என்னால முடியலை. பிளீஸ்”, என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்று அவள் யோசிக்கும் போதே அவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி நடுங்கிக் கொண்டிருந்த அவள் இதழ்களில் தன்னுடைய இதழ்களைப் பொறுத்தினான்.
கிடைத்தது வாய்ப்பேன்று ரேகா கைகளும் அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தன. அவள் கண்கள் கிறக்கத்துடன் மூடிக் கொண்டதையும் அவள் கரம் தன்னுடைய கழுத்தை இறுகப் பற்றியதையும் பார்த்த விக்ரமுக்கு அவள் இதழ்களை விட்டு விலக முடிய வில்லை. அவளை விட்டு விலக முடியாமல் அவள் இதழ்களுக்குள் கரைந்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அவள் உதடுகளில் இருந்து விலகினாலும் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளை இறுக அனைத்துக் கொண்டான். அவள் கழுத்தில் அவனுடைய சூடான மூச்சு பதிந்து அவளை இம்சித்தது. அவன் முதுகில் படிந்த அவள் கைகள் அவனை இறுக்கிக் கொண்டது.
அவன் உதடுகளின் பரிசமும் அவன் மீசையின் ரோமமும் அவள் கழுத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்த தவித்துப் போனாள் ரேகா.
அவன் அதன் பின்னரும் அவளை விட்டு விலகாமல் தன்னுடைய தேடலை தன்னுடைய கைகளால் அவள் உடலில் நடத்த ஆரம்பிக்க திகைத்தாள் ரேகா. கார்க் கதவு மூடியிருந்ததால் தங்களை மறந்து இருவரும் மற்றவரின் அணைப்பில் தங்களை மறந்து இருக்க ஒரு காரின் ஹாரன் சத்ததில் அவளிடம் இருந்து விலகினான். இதயம் தடதடக்க தலை குனிந்து அமர்ந்திருந்தாள் ரேகா. அவள் கை கால்கள் எல்லாம் நடுங்கியது. தயக்கத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
தன்னுடைய உணர்வுகளை அடக்க ஸ்டேரிங்கில் தன்னுடைய கைகளைக் குத்தினான். அவளை வெறும் முத்தத்தோடு பிரிந்து செல்வது அவனுக்கு தான் அவஸ்தையாக இருந்தது. அவள் வேண்டும் என்றும், அவளை தனக்கென்று எடுத்துக் கொள்ளச் சொல்லியும் அவன் மனது வேண்ட அவன் உணர்வுகள் அவனை பாடாய் படுத்த ஆரம்பித்தது. அவனைக் கட்டுப் படுத்துவதே அவனுக்கு கடினமாக இருந்தது. அவளை திரும்பி பார்க்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது.
அவன் தவிப்பைப் பார்த்த ரேகா அதற்கு மேல் அவன் நிலையை கண் கொண்டு பார்க்க முடியாமல் “சாரி விக்ரம், நான் வரேன்”, என்று சொல்லி விட்டு இறங்கிச் சென்று விட்டாள்.
போகும் அவளின் முதுகை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான் விக்ரம். ரேகா போன பிறகு காரில் அவள் வாசமே வீசுவது போல இருந்தது. அவள் தலையில் இருந்த மல்லிகை பூவின் நறுமணம் இப்போதும் அவன் நாசியில் நுழைந்து அவனை இம்ஸிப்பது போலவே இருந்தது. இது வரை நிகழ்ந்த நினைவுகளை அசை போட்ட படி அமர்ந்திருந்தவனுக்கு அங்கிருந்து செல்லவே முடியவில்லை. அவள் திருப்பியும் தன்னுடன் வந்து விடமாட்டாளா என்று ஏங்கிப் போனான்.
ஒரு கால் மணி நேரம் கழித்து தான் காரை எடுத்துக் கொண்டு சென்றான்.
மாடி காரிடாரில் நின்று அவன் கார் செல்வதைப் பார்த்த்க் கொண்டு இருந்த ரேகா அவன் சென்றதும் அவளுடைய அறைக்குள் வந்து அமர்ந்தாள். மணி ஏழு ஆகியிருந்தது. விளக்கு போடாததால் அறையில் இருள் சூழ்ந்திருந்தது. இது தான் இனி என்னோட நிலைமை.
“இனி வாழ்க்கை முழுக்க எனக்கு இருட்டு தான். என் வெளிச்சம் என்னை விட்டு போய் விட்டது”, என்று எண்ணிக் கொண்டாள்.
தன்னை அழைக்க வந்த யாரென்று தெரியாத ஒருவன் மீது காதல் உணர்வுகளை விதைத்து அவனை கணவனாகவும் அடைந்து வாழக் கொடுத்து வைக்காத இந்த நிலையை அறவே வெறுத்தாள். ஆனால் ஒவ்வொருவருக்கும் அமையும் வாழ்க்கை அழகான புதிர் என்று அவளுக்கு யார் சொல்வது?
அதற்கு விடை கண்டு பிடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே சந்தோஸமாக வாழ்வார்கள். சிலர் விடை கண்டு பிடித்தே வாழ்க்கையைத் தொலைப்பார்கள். இதில் விக்ரம் ரேகா இருவரும் இரண்டாவது ரகமோ? யாருக்கு தெரியும்?