Skip to content
Post Views: 4,998
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 4
மாலை ஆறு மணி. டி நகரில் இருந்த AC ஹாலில், அர்ஜுன் தன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல… அப்போது தான் நிகழ்ச்சி தொடங்கியது. நல்ல வேளை இன்னும் ஆரம்பிக்கலை என்று நினைத்தவன், தன் குடும்பத்தினர் எங்கே என்று தேட… அவர்கள் அனைவரும் முன் வரிசையில் அமர்ந்து இருந்தனர். அர்ஜுன் சென்று அவர்கள் அருகில் அமர்ந்தான்.
முதல் நிகழ்ச்சி வரவேற்பு நடனம், நான்கு பேர் சேர்ந்து ஆடினார்கள். அது முடிந்ததும் அடுத்து பாட்டுக்கு ஆராதனாவும், இன்னும் சிலரும் சேர்ந்து ஆடினார்கள். மொத்தமே பத்து நிமிடம் தான் ஆடினார்கள். ஆராதனாவிற்கு இது தான் முதல் மேடை நிகழ்ச்சி. அதனால் அவள் முகத்தில் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது… நாட்டியம் நன்றாக ஆடினாள். ஆனால் முகத்தில் பாவத்தைக் கொண்டு வரமுடியவில்லை. எல்லோரும் போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்தனர்.
ஆடி முடித்து வந்த ஆராதனாவை அவள் குடும்பம் மொத்தமும் கொண்டாடியது. நல்லா ஆடின, அழகா இருக்க, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு என்று எல்லோரும் சொல்ல… ஆராதனா சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள்.
அடுத்த நிகழ்ச்சியாக நாட்டிய நாடகம் தொடங்கியது… முருகன் வள்ளி காதலையும், திருமணம் முடிந்ததும் வள்ளி, தெய்வானைக்கு இடையில் முருகன் படும் பாட்டையும், நாட்டியமாக ஆடினார்கள்.
முதலில் முருகன் வர அடுத்து வள்ளியாக மேடைக்கு வந்தது மீரா. நரிக்குறவ பெண்கள் மாதிரி உடை அணிந்து இருந்தாள். விலை உயர்ந்த ஆடையும், ஆபரணமும் அணிந்து அதற்கேற்றார் போல் அலங்காரமும் செய்து இருந்ததால்… பார்பதற்கு தெய்வீக கலையுடன் அழகாக இருந்தாள்.
மேடை ஏறிய மீரா ஒரு இடத்தில் நிற்கவில்லை…. சுற்றி, சுழன்று ஆடினாள். காதல்… கோபம்… பொறாமை என்று எல்லாப் பாவனைகளையும் தத்ருபமாகக் காட்டினாள். அவள் ஆட்டத்தில் எல்லோரும் மெய்மறந்து அமர்ந்து இருந்தார்கள்.
பரதநாட்டியம் டிவியில் வந்தாலே ஓடும் அர்ஜுன், இன்று தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான். முருகனும், தெய்வானையும் ஆடும் நேரத்தில் மீரா சென்று பரதநாட்டிய உடை மாற்றிவிட்டு வர, அதில் இன்னும் லட்சணமாக இருந்தாள். கடைசிக் காட்சியாக முருகன், வள்ளி தெய்வானையுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல் இருந்தது, அனைவர் மனதையும் கவர்ந்தது… அந்த நாட்டிய நாடகம் மட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது.
அடுத்த நிகழ்ச்சி தொடங்க… மீரா கீழே சென்று முன் வரிசையில் அமர்ந்தாள். ஆராதனாவிற்கு இந்தப் பக்கம் மீரா அமர்ந்திருக்க, அந்தப் பக்கம் அவளது அம்மா, அடுத்து அவள் அப்பா, அடுத்து ஆதி கடைசியாக அர்ஜுன் அமர்ந்திருந்தான்.
ஆராதனாவிடம் அவளது அப்பா “கால் வலிக்குதாடா…” என்று கேட்க, அவள் இல்லை என்றாள். அடுத்து அமர்ந்திருந்த ஆதி “நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரட்டா..” என்று கேட்க, ஆராதனா வேண்டாம் என்றாள். இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்த வித்யா “பத்து நிமிஷம் ஆடினதுக்கு இந்த உபசரிப்பா… அதோ அந்தப் பொண்ணு ஒரு மணி நேரம் ஆடிட்டு வந்து, அவ பாட்டுக்கு உட்கார்ந்திருக்கா… இதுல நடுவுல வேற போய் டிரஸ் மாத்திட்டு வந்தா, அவகிட்ட இப்படிக் கேட்டா கூடப் பரவாயில்லை, உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை” என்றார்.
அவர்கள் பேசி கொண்டிருந்ததைக் கேட்ட மீராவிற்குச் சிரிப்பாக வந்தது. அவளுக்குத் தெரியாது அது தான் அர்ஜுனின் குடும்பம் என்று… அந்த இடம் இருட்டாக இருந்ததால்… அவள் அர்ஜுனை இன்னும் பார்க்கவில்லை. அர்ஜுனும் அவள் கீழே வந்து உட்கார்ந்ததைக் கவனிக்கவில்லை.
விழா முடிந்ததும் எல்லோருக்கும் நினைவு பரிசு கொடுக்கபட்டது. மீரா தான் அந்த நாட்டிய பள்ளியில் சீனியர் என்பதால் முதலில் அவளுக்குத் தான் நினைவு பரிசு கொடுத்தனர். அவள் மேடைக்குச் சென்று பரிசு வாங்கிய போது, அவளைப் பற்றி ஒலிபெருக்கியில் ஒருவர் பேசினார்.
மீரா அவர்களது நாட்டிய பள்ளியிலேயே சிறந்த மாணவி என்றும், அவள் பல விருதுகளையும், பரிசுகளையும் வாங்கித் தங்களைப் பெருமை படுத்தியுள்ளதாகவும், அவள் தனது எட்டு வயதில் இருந்து நாட்டியம் கற்று வருவதாகவும், அவள் பரதம் மட்டும்மின்றி இன்னும் பிற மாநில நடனங்களிலும் தேர்ச்சி பெற்றவள் என்றும் அறிவித்தார்.
மீரா பரிசு வாங்கிய போது, அந்த அரங்கத்தில் இருந்த அனைவருமே கைதட்டி அவளை உற்சாகப் படுத்தினார்கள். அர்ஜுன் மீராவின் குடும்பத்தினர் வந்திருப்பார்கள் என்று அவளையே பார்க்க… மேடையில் இருந்து இறங்கியவள், கீழே வந்து ஆராதனா பக்கத்தில் அமர்ந்து, அவளுக்கு அடுத்து அமர்ந்திருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
பிறகு மற்றவர்கள் சென்று பரிசு வாங்க, ஆராதனாவும் சென்று வாங்கி வந்தாள். நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வெளியே வந்தனர். அர்ஜுன் வீட்டில் எல்லோரும் காரில் வந்திருந்தனர். அதனால் அவர்கள் கார் பார்கிங் செல்ல… அர்ஜுன் தனது பைக்கை எடுக்கச் சென்றான்.
கார் பார்கிங்ல் ஆராதனா வாங்கிய நினைவு பரிசை அவளது அப்பா, அம்மா, அதி என்று எல்லோரும் மாற்றி மாற்றி அவர்கள் கையில் வாங்கி அழகு பார்க்க, அதைப் பார்த்த மீரா முகத்தில் புன்னகை மலர்ந்தது. மீராவை பார்த்த வித்யா “நீ ரொம்ப நல்லா ஆடின மா” என்று சொல்ல… மீரா பதிலுக்கு “தேங்க்ஸ்…” என்றாள்.
ஆராதனாவும், மீராவும் வெவ்வேறு நேரங்களில் நாட்டிய பள்ளிக்கு செல்வதால், இன்று தான் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். “ரொம்ப நல்லா ஆடினீங்க மீரா, நீங்க ஆடும் போது மத்தவங்க ஆடுறதை பார்க்க முடியலை. கண்ணு உங்களைவிட்டு நகர மாட்டேங்குது.” ஆராதனா சொல்ல… அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த மீரா “நீங்களும் நல்லா ஆடினீங்க.” என்றாள்.
அப்போது ஆதியின் செல் அடிக்க எடுத்து பேசியவன், “வந்துட்டே இருக்கோம்டா..” என்று சொல்லி போன்னை வைத்தவன், போலாமா என்று கேட்க…. ஆராதனா மீராவிடம் bye என்று சொல்லி காரில் ஏறினாள். கேட் அருகில் பைக்குடன் நின்ற அர்ஜுனின் அருகில் சென்று ஆதி காரை நிறுத்த…
“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது, கார் எடுத்திட்டு வர இவ்வளவு நேரமா…”
“சாரி அர்ஜுன், நான் மீராகிட்ட பேசிட்டு இருந்தேன். அது தான் லேட். “என்று ஆராதனா சொல்ல… மீரா என்றவுடன் ஆர்வமாய், என்ன பேசின என்று கேட்க வந்தவன், இப்போது வேண்டாம் பிறகு கேட்போம் என்று நினைத்து “நீங்க வீட்டுக்கு போங்க. நான் கடைக்குப் போயிட்டு வரேன்.” அர்ஜுன் சொல்ல… சரி என்று ஆதி காரை எடுத்தான்.
Advertisement
ஆதி சென்றதும், அர்ஜுன் மீராவை தேட… அப்போது அவனைக் கடந்து சென்ற காரில், பின் சீட்டில் மீரா கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள், வண்டியை டிரைவர் ஒட்டிக்கொண்டு சென்றார்.
அர்ஜுனுக்கு நினைக்க… நினைக்க ஆச்சரியமாக இருந்தது.
இவ்வளவு சிறப்பா மீரா நடனம் ஆடுவதைப் பார்க்க, அவங்க வீட்ல இருந்து ஏன் யாரும் வரலை? ஒரு வேளை மீரா இப்படி அடிக்கடி மேடையில் ஆடுறது வழக்கம் என்பதால் வரவில்லையா. இல்லை பணக்காரங்களுக்குப் பிள்ளைங்களோட நிகழ்ச்சிக்குப் போகக் கூட நேரம் இருக்காதா என்று யோசித்துக் கொண்டே சென்றான்.
அன்று இரவு தோட்டத்தில் கணேசனும், ஆதியும் தங்கள் தொழிலை பற்றிப் பேசி கொண்டிருக்க… அர்ஜுன் மெதுவாக ஆராதனாவிடம் இன்னைக்கு ப்ரோக்ராம் நல்லா இருந்துச்சு இல்லை என்று ஆரம்பிக்க….
“ஆமாம் சூப்பர் இல்ல, அதுவும் மீரா ஆடின நாட்டியம் ரொம்ப அழகு. அவ குறத்தி வேஷத்திளையும் எவ்வளவு அழகா இருந்தா. நான் அவளைப் பற்றிக் கேள்வி பட்டிருக்கேன், இன்னைக்குத் தான் பார்கிறேன்.” ஆராதனா அவளாகவே மீராவை பற்றிப் பேச…
அதற்காகக் காத்திருந்த அர்ஜுன், “அப்ப நீ இன்னைக்குத் தான் அவளை நேர்ல பார்கிறியா? அப்ப இன்னைக்கு அவகிட்ட நீ என்ன பேசின?” என்று கேட்டவனின் குரலில் இருந்தே… அவனின் ஏமாற்றத்தை உணர்ந்த ஆராதனா, “உனக்கு மீராவை தெரியுமா?”என்று கேட்க….
Advertisement
திடுகிட்ட அர்ஜுன் ஆராதனாவை பார்க்க… அவள் அர்ஜுனை ஆராயும் பார்வை பார்த்து கொண்டிருந்தாள். இனி இவளிடம் இருந்து மறைக்க முடியாது என்பதை அறிந்த அர்ஜுன் “அவ எங்க காலேஜ் தான். அது தான் கேட்டேன்.” என்றான்.
“மீரா உங்க காலேஜா…. ஐயோ நானும் உங்க காலேஜ்ல சேர்ந்திருக்கக் கூடாதா… நானும், மீராவும் ப்ரண்ட்ஸ் ஆகி இருப்போமே” ஆரு சந்தோஷத்தில் குதிக்க….
அர்ஜுன் “எங்க காலேஜ்ல மக்குப் பசங்களைச் சேர்த்துக்க மாட்டாங்க.” என்றவன், ஆரு அவனைப் பார்த்து முறைப்பதை பொருட்படுத்தாமல் “நீ டான்ஸ் கிளாஸ்ல மீராவை பார்த்தது இல்லை.” அவன் சந்தேகமாகக் கேட்க…
“இல்லை நான் காலையில பாட்ச், மீரா சயந்திரம் பாட்ச். ஆனா… எப்பவும் எங்க மேம் மீராவை பத்தி புகழ்ந்து பேசுவாங்க. அதனால தெரியும்.” என்றாள்.
“ஓ அப்படியா…” என்று அர்ஜுன் சொன்ன போது, கணேசன் தூங்கலாம் இன்னைக்கு ரொம்ப லேட் என்றதும், எல்லோரும் உள்ளே சென்றனர்.
Advertisement
மறுநாள் கல்லூரிக்குச் சீக்கிரம் வந்த அர்ஜுன், இன்னும் யாரும் வராததால் அப்படியே பெஞ்சில் கால் நீட்டி படுத்துவிட்டான். சிறிது நேரத்தில் யாரோ அவனைத் தட்டியதும் கண் திறந்து பார்க்க எதிரில் சூர்யா நின்றிருந்தான்.
“என்ன அர்ஜுன் காலையில தூங்கிற?”
“ஹாய் சூர்யா…. நேத்து தூங்க லேட் ஆகிடுச்சு, அது தான் கொஞ்சம் டையர்டா இருக்கு.”
“அப்படியா… சரி வா கான்டீன் போய் டீ குடிச்சிட்டு வரலாம், கொஞ்சம் பிரெஷா இருக்கும்.” சூர்யா சொல்ல…. அர்ஜுனும் சரியென்று அவனுடன் கான்டீன் சென்றான். டீ வாங்கிக் கொண்டு இருவரும் ஓரமாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர்.
“எதாவது ப்ராப்லம்மா அர்ஜுன். நீ இந்த மாதிரி டல்லா இருந்து பார்த்ததே இல்லை. அது தான் கேட்கிறேன்.”
“ம்ம்… என்னை மீரா ரொம்ப டிஸ்டர்ப் பண்றா சூர்யா. நான் அவளைப் பத்தி நினைக்கவே கூடாதுன்னு நினைச்சேன். ஆனா… இப்ப அவளைத் தான் ரொம்ப நினைக்கிறன். இதனை நாள் என் கண்ணல படாதவ, நான் படிப்பு முடிக்கக் கொஞ்ச நாள் இருக்கும் போது, எதுக்கு என் கண்ணல படனும்?”
“அர்ஜுன், நீ மீராவை லவ் பண்றியா?”
அர்ஜுன் மெளனமாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவன், பிறகு சிறிது நேரம் சென்று “ஆமாம்” என்றான்.
error: Content is protected !!