“ஏன் டி புருஷன் கடமையை மறந்து தூங்குறான், அவனை எழுப்பி விடுவோம்னு இல்லாம… நல்லதா போச்சுன்னு படுத்து தூங்குற, உன்னை என்ன பண்றது?”
“நீங்க உங்க வேலைய சரியா பண்ணாம தூங்கினா… அதுக்கு நானா பொறுப்பு..” மீரா அர்ஜுனை சீண்ட… அதற்குமேல் அர்ஜுன் சும்மா இருப்பானா… அவன் மீராவின் மேல் பாய… அவர்கள் இல்லறம் நல்லபடியாகத் துவங்கியது.
மூன்று வருடங்கள் கழித்து….
அவர் குரலை கேட்டு வந்த ரஞ்சனா “குடுங்க அத்தை, நான் சாப்பாடு குடுக்கிறேன்.” என்றவள் ராஜு, ரிஷி ஒழுங்கா வந்து சாப்பிட்டா… பெரியம்மா இன்னைக்கு உங்களைக் கேம்ஸ் விளையாட மால் கூடிட்டு போவேன்.” என்றதும், ஒரே மாதிரி இருந்த இரு ஆண் குழந்தைகள் ஓடி வந்தது.
ரஞ்சனா அவர்களுக்கு உணவுட்ட…. ஒழுங்காகச் சாப்பிட்டவர்கள், “பெரியம்மா… தம்பி பாப்பா எப்ப வரும்?” என்று கேட்டுக் கொண்டே மேடிட்டிருந்த அவள் வயிற்றை வருட… ரஞ்சனா சிரித்தவள் “உங்களுக்கு எப்ப பாரு இதே கேள்வி தானா டா… வரும், சீக்கிரம் வந்து உங்களோட விளையாடும்.” என்று சொல்ல… அப்போது அர்ஜுனும், மீராவும் உள்ளே நுழைந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் ராஜுவும், ரிஷியும் அவர்களிடம் ஓட…மீரா அவர்களிடம் “ஒழுங்கா சாப்டீங்களா… இல்ல, இன்னைக்கும் பாட்டிய ஓட வச்சீங்களா….” என்று கேட்க… “நாங்க சமத்தா சாப்பிட்டோம் மா.” என்று இருவரும் ஒரே குரலில் சொல்ல… அதைக் கேட்ட வித்யாவும், ரஞ்சனாவும் சிரித்தனர்.
சூர்யாவும், ஆருவும் அவர்கள் பெண் ஸ்ரீயுடன் வந்திருந்தனர். அன்று இரவு எல்லோரும் சேர்ந்து உணவு அருந்தும்போது “என்னைத் தான் ரெண்டு பேரும் ஓட வைப்பானுங்க, ஆனா…. அதே அவங்க பெரியம்மா சொன்னா மட்டும் கேட்பானுங்க.” என்றார் வித்யா பெருமையாக….
அதற்கு அர்ஜுன் “மீரா அவங்க ரெண்டு பேர் கிட்டயும், பெரியம்மா வயித்துக்குள்ள பாப்பா இருக்கு, அதனால அவங்களை ஓட வைக்கவோ, கத்த வைக்கவோ கூடாது….. அப்ப தான் பாப்பா வெளிய வந்ததும், உங்களோட விளையாடும் இல்லைனா… இவங்க கெட்ட பசங்கன்னு உங்களோட சேராதுன்னு சொல்லி வச்சிருக்கா மா… அதனால தான்.” என்றான்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஐஷு “பாட்டி பேசாம நீங்களும் உங்க வயித்துக்குள்ள பாப்பா இருக்குன்னு சொல்லிடுங்க, இவங்க உங்ககிட்டயும் சேட்ட பண்ண மாட்டங்க.” என்று அறிவாக யோசனை சொல்ல… அதைக் கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சூர்யா இருந்ததால் வித்யா எழுந்து உள்ளே ஓடி விட்டார்.
ரஞ்சனா சிரிக்க முடியாமல், சிரிப்பதை பார்த்த ஆதி “ரஞ்சு போதும் நிறுத்து, நீ சிரிக்கிறதை பார்த்தா இன்னைக்கே குழந்தை பிறந்திடும் போல இருக்கு….” என்றான்.
அன்று இரவு அர்ஜுன் அவர்கள் அறையில் கட்டிலில் படுத்திருக்க… அப்போது வேகமாக ஓடி வந்த ராஜுவும், ரிஷியும் அவன் வயிற்றில் உட்கார்ந்து குதிக்க… அர்ஜுன் “அம்மா…” என்று அலறியவன், “டேய் பசங்களா அந்த இடத்தில தான் டா கிட்னி இருக்கு… அதைச் சட்னி ஆக்கிடாதீங்க டா.” என்றவன், “இப்ப உங்களுக்கு என்ன டா வேண்டும்?” என்று கேட்க…
“எங்களை நாளைக்கு வெளிய கூட்டிட்டு போங்க.” என்று ராஜுவும், ரிஷியும் சேர்ந்து சொல்ல…. “வெளிய தான கூட்டிட்டு போறேன், அதுக்கு ஏன் டா இந்தக் குதி குதிக்கிறீங்க, இப்படி உங்க அம்மா வயித்தில குதிச்சிடாதீங்க…. அவளுக்குப் போட்ட தையல் பிரிஞ்சிடும். என் பொண்டாட்டி பாவம்.” அர்ஜுன் சோகமாகச் சொல்ல…
“நீங்க கூட்டிட்டுப் போனா குதிக்க மாட்டோம், இல்லைனா அம்மா வயித்துல குதிச்சிடுவோம்.” என்று இருவரும் மிரட்ட… “எல்லாம் நேரம்…” என்றவன், “சரி போங்க, போய் உங்க ஐஷு அக்காவோட படுங்க.” என்றதும். ராஜுவும், ரிஷியும் எழுந்து கீழே அவர்கள் அறைக்குச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் மீரா வந்து அர்ஜுனின் அருகே அமர… அர்ஜுன் அவளை இழுத்து தன் மடியில் போட்டு கொண்டவன். “ஏன் டி அமைதியா ஒரு பிள்ளை பெற சொன்னா… இப்படி ரெண்டு தீவிரவாதிகளைப் பெத்து விட்டிருக்க…” என்று சீண்ட…
“யாரு… என் பசங்க தீவிரவாதீங்களா….அவங்க வீரம் விளைஞ்ச மண்ணுல பொறந்தவங்க, அப்படித் தான் வீரமா இருப்பாங்க.” மீரா பெருமையாகச் சொல்ல…
அவளைப் பார்த்து சிரித்த அர்ஜுன் “உன் பையனுன்களை விட்டு குடுக்க மாட்டியே… மீரா எதுக்கும் பசங்ககிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கோ…. வயித்துல குதிச்சிட போறாங்க.” என்று எச்சரிக்க…
“இந்தப் பயம் அன்னைக்கு இருந்திருக்கணும், விடியற்காலையில பாஞ்சா…இப்படி தான் பிள்ளை பொறக்கும்.” என்று மீரா அர்ஜுனை வம்பிழுக்க…
மீராவின் உதடுகளை வருடியபடி “ம்ம்… இந்த வாய் இருக்கு பாரு… வாய். அர்ஜுன் அவுட்ன்னு கத்தி என்னைத் திரும்பி பார்க்க வச்சது, அன்னைக்கு விழுந்தவன் தான், இன்னும் எந்திரிக்களை…” என்ற அர்ஜுன் குனிந்து மீராவின் இதழில் முத்தமிட…அவளும் அவன் கழுத்தை ஆனந்தமாகக் கட்டி கொண்டாள்.
அந்த வார ஞாயிற்றுகிழமை அர்ஜுனும், மீராவும் ராஜு, ரிஷியை அழைத்துக் கொண்டு அவர்கள் முதன்முதலில் சென்ற ரெசார்ட்க்கு சென்றனர். ராஜு, ரிஷி இருவரும் பீச் மணலில் விளையாட…அர்ஜுனும், மீராவும் அவர்களை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தனர். ராஜுவும், ரிஷியும் முக ஜாடையில் அர்ஜுனை போல் இருந்தாலும், நிறத்தில் மீராவை போல்… நல்ல நிறமாக இருந்தனர்.
சிறிது நேரம் விளையாடி களைத்தவர்கள் எழுந்து வந்து, ராஜு அர்ஜுனின் மடியிலும். ரிஷி மீராவின் மடியிலும் அமர…. பெற்றவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளைச் சிறிது நேரம் கட்டி கொண்டு கொஞ்சினர்.
மீரா முதன்முதலில் அவளும், அர்ஜுனும் இந்த இடத்திற்கு வந்த போது… அவள் மடியில் வந்து அமர்ந்த குழந்தையை நினைத்து பார்த்தாள். அன்று தனக்கும், அர்ஜுனுக்கும் இப்படி ஒரு குழந்தை கிடைக்குமா என்று நினைத்தோமே… இன்று கடவுள் தங்களுக்கு என்று இரண்டு குழந்தைகளைக் கொடுத்திருப்பதை நினைத்து மகிழ்ந்தாள். அர்ஜுனுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியும் என்பதால்… அவளைத் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.
மீரா அர்ஜுனை காதலாகப் பார்த்தாள். இதெல்லாம் இவனால் அல்லவா…. அவன் தனக்காக என்னவெல்லாம் செய்தான், அவன் அம்மாவோடு போராடி, தன்னைக் கைபிடித்து, பின் தான் கர்ப்பம் அடைந்த போது… அவள் அம்மா அருகில் இல்லாத குறை தெரியாமல்…. தன்னைத் தாங்கி, இரு குழந்தைகளைப் பெற்ற போது…அவளையும், குழந்தைகளையும் கண்ணைப் போல் பார்த்து கொண்டானே… இவன் கிடைக்கத் தான் என்ன தவம் செய்தோமோ என்று நினைத்தவள், அதை அப்படியே அர்ஜுனிடம் சொல்ல…
“நான் சொல்ல வேண்டியதை நீ சொல்ற…நீ கிடைக்க நான் தான் மீரா கொடுத்து வைத்திருக்கணும்.” என்ற அர்ஜுன் மீராவின் நெற்றியில் லேசாக முட்டினான். காதலிப்பதும் காதலிக்கபடுவதும் ஒரு வரம் தான். ஒருவர் மீது ஒருவர் உயிரே வைத்திருக்கும் அந்தக் காதலர்களை இன்று போல் என்றும் வாழ வாழ்த்துவோம்.