ஆதி கார்மெண்ட்ஸ் பார்த்துக்கொள்ள, கணேசனும், அர்ஜுனும் கடையைப் பார்த்து கொண்டனர். கல்லூரி விடுமுறை என்பதால் மீராவால் அர்ஜுனை இரண்டு நாட்களாகப் பார்க்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்தவள் ஆருவிடம், “எனக்குக் கொஞ்சம் டிரஸ் வாங்கணும். உங்க கடைக்குப் போகலாமா…” என்று கேட்க… ஆருவிற்கு அவள் எதற்குச் சொல்கிறாள் என்று புரிந்ததால் சரி என்று அழைத்துச் சென்றாள்.
அன்று விடுமுறை நாள் அதோடு பண்டிகையும் நெருங்கி வருவதால் கடை அதிகக் கூட்டமாக இருந்தது. கீழ் தளம் முழுதும் பெண்களுக்கான உடைகள் இருந்தது. மீரா கடைக்குள் சென்றதும் அர்ஜுனை தான் தேடினாள். அவன் அங்கே இல்லை. மீரா மேல் தளத்திற்குச் செல்ல… அவளைத் தடுத்த ஆரு, “இப்ப எதுக்கு மேல போற? இங்க தான் லேடீஸ் செச்ஷன். இங்கையே பாரு.” என்று சொல்ல…. “இரு ஆரு… நான் இப்ப தான முதல் தடவை வந்திருக்கேன். கடை புல்லா பார்த்திட்டு அப்புறம் டிரஸ் பார்க்கலாம்.” என்றாள் மீரா.
ஆரூ மனதிற்குள், நீ யாரை தேடுறேன்னு எனக்குத் தெரியாதா என்று நினைத்தவள், “சரி வா போகலாம்.” என்று மீராவை அழைத்துக் கொண்டு மேல் தளத்திற்குச் செல்ல… அதில் குழந்தைகளுக்கான உடைகள் இருந்தது…. அங்கேயும் அர்ஜுன் இல்லை. மீரா அங்கே தேடிவிட்டு அங்கேயும் அவன் இல்லை என்றதும், அதற்கும் மேல் தளத்திற்குச் செல்ல… அங்கே ஆண்களுக்கான உடைகள் இருந்தது. அங்கே தான் அர்ஜுனும் இருந்தான். பணம் வாங்கும் கவுன்டரில் அமர்ந்து மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
அர்ஜுன் மீரா வந்ததைக் கவனிக்கவில்லை… கடை வேறு ரொம்பக் கூட்டமாக இருந்தது. மீரா அர்ஜுனை பார்த்துக்கொண்டு அங்கயே ஓரமாக நின்றுவிட்டாள். ஆரு அவளைத் தொல்லை செய்யாமல் அங்கு வேலை செய்யும் பெண்களிடம் சென்று பேச… அர்ஜுன் உள்ளுணர்வு எதோ சொல்ல… நிமிர்ந்து பார்த்தவன், அங்கே சற்று தள்ளி தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மீராவை பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்தான்.
மீராவை பார்த்துப் புருவத்தை உயர்த்தியவன், அவன் செல்லில் அவளை அழைத்தான். மீரா போன்னை எடுத்து ஹலோ என்றதும், “என்ன மேடம் திடீர்ன்னு, நாங்க எல்லாம் ஒழுங்கா வேலை செயறோமான்னு பார்க்க வந்தியா…” என்று கேட்க….
“ஆளையே பார்க்க முடியலை அது தான் வந்தேன்.” மீரா சிணுங்கலாகச் சொல்ல… அவள் பேச்சில் இருந்தே அவள் தன்னை எவ்வளவு தேடி இருக்கிறாள் என்று உணர்ந்தவன். “இரு கொஞ்ச நேரத்தில வரேன்.” என்று சொல்லி போன்னை வைத்தான்.
மீரா ஆருவிடம் சென்று நிற்க, அவள் மீராவை அழைத்துக் கொண்டு அதற்கு மேல் தளத்திற்குச் சென்றாள். அங்கே தான் குடொன் இருந்தது. அங்கே சில பெண்கள் அமர்ந்து துணி பார்சல்களைப் பிரித்து அடுக்கி கொண்டு இருந்தனர்.
ஆருவை பார்த்ததும் அந்தப் பெண்கள் சிரித்துக் கொண்டே வந்து “ஹாய் ஆருக்கா எப்படி இருக்கீங்க?” என்று கேட்க… ஆருவும் “நல்லா இருக்கேன், நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
நல்லா இருக்கோம் என்று சொன்னவர்களின் பார்வை மீரா மீதே இருக்க, ஆரு “இவங்க மீரா, என்னோட ப்ரண்ட்.” என்று அவர்களுக்கு மீராவை அறிமுகப்படுத்த… மீரா அவர்கள் ஒவ்வொருவரிடம் கைகுலுக்க…. அவர்களும் மாலா, ஷீபா, சித்ரா, வாணி என்று தங்கள் பெயர்களைச் சொல்லி கை குலுக்கி அறிமுகமாகினர். சிறிது நேரத்திலேயே அவர்களோடு இயல்பாகப் பழகிய மீராவை அவர்களும் இயல்பாக மீரா அக்கா என்று அழைத்துப் பேச ஆரம்பித்தனர்.
ஆரு, தான் கீழே சென்று தன் அப்பாவிற்கு உதவப் போவதாகச் சொன்னவள், மீராவையும் வருகிறாயா என்று கேட்க… மீரா “நீ போ நான் இங்கயே இருக்கேன்.” என்றாள். ஆரு கீழே சென்றுவிட…. மீரா அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவர்கள் வேலை செய்வதைப் பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள், அந்தப் பெண்கள் எந்தப் புடவையைப் பொம்மைக்குக் கட்டுவது என்று பேசிக்கொள்வதைப் பார்த்து எழுந்து அவர்கள் ஆருகில் சென்றவள், அங்கிருந்த புடவையில் ஒன்றை எடுத்து அதைப் பிரித்துப் பார்க்க… அந்தப் புடவை நீல நிறத்தில் வெள்ளை கல் வைத்த டிசைனர் புடவை, ரொம்ப அழகாக இருந்தது விலை பத்தாயிரம்.
மீரா அந்தப் புடவையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த பொம்மை அருகில் சென்றவள், அங்கிருந்த பொம்மைக்குக் குஜராத்தி மாடலில் அந்தப் புடவையின் டிசைன் வெளியே தெரியும் படி அழகாகக் கட்டினாள்.
அதைப் பார்த்த அங்கிருந்த பெண்கள், “ஹய் ரொம்ப அழகா இருக்கு மீராக்கா.” என்று சொல்ல… மீரா அந்தப் பொம்மையின் தலையில் செயற்கை முடியையை வைத்து அதோடு தன் நெற்றியில் இருந்து பொட்டையும் எடுத்து வைக்க… அந்தப் பொம்மை பார்க்க நிஜமான பெண் போல அழகாக இருந்தது. அப்போது அர்ஜுன் அங்கே வர… அவனைப் பார்த்த பெண்கள் அனைவரும் சென்று தங்கள் வேலையைப் பார்க்க…. அர்ஜுன் வந்ததைப் பார்க்காத மீரா பொம்மையை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அங்கே வந்த அர்ஜுன் சுற்றி பார்க்க… பெண்கள் அனைவரும் அவர்கள் வேலையில் கவனமாக இருந்தனர். அர்ஜுன் மெதுவாக மீராவின் பின்னே சென்று நின்று, அவள் முடியை பிடித்து லேசாக இழுக்க… மீரா வலியில் ஸ்… என்றவள் திரும்பி பார்க்க… அங்கே அர்ஜுன் நிற்பதை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
அவளைப் பார்த்து அர்ஜுன் ரசிக்க…. மீரா அவனைப் பார்த்துச் செல்லமாக முறைத்தவள், “எதுக்கு முடிய புடிச்சு இழுத்தீங்க?” எனப் பொய்யாகக் கோபம் கொள்ள…. “பொம்மைன்னு நினைச்சு இழுத்திட்டேன். நீயும் பார்க்க இந்தப் பொம்மை மாதிரி தான் இருக்க.” என்றான்.
“எப்ப அர்ஜுன் ப்ரீ ஆவீங்க? உங்களைப் பார்க்காம இருக்க முடியலை…” மீரா அவனுக்கு அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல…
“கொஞ்ச நாள் பொறுத்துக்க மீரா… இன்னும் நாலு நாள்ல ப்ரீ ஆகிடுவேன். அப்புறம் திரும்பி தீபாவளிக்கு தான்.” என்று சொன்னவன், அப்போது தான் மீரா நெற்றியில் பொட்டு இல்லாமல் இருப்பதைக் கவனித்தான்.
“எங்க மீரா பொட்டு?” என்றதற்கு மீரா “பொம்மைக்கு வச்சிட்டேன்.” என்றாள். அர்ஜுன் மீராவை பார்த்து முறைத்தவன், பொம்மையில் இருந்த பொட்டை எடுத்து மீராவின் நெற்றியில் வைக்க… அதை அங்கே வேலை செய்யும் பெண்கள் கண்டும், காணாதவர்கள் போல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
“அந்தப் பொம்மைக்கு இப்ப பொட்டு இல்லை.” மீரா சிணுங்க…. அர்ஜுன் வாணியை அழைத்து அவளிடம் பத்து ரூபாயை கொடுத்து “போய்ப் பொட்டு வாங்கிட்டு வா…” என்றான்.
“பெரிய கல் வச்ச பொட்டு வாங்கிட்டு வா, மத்த பொம்மைகளுக்கும் வைக்கலாம்.” என்றவள், அடுத்து “வாணி, வளையல் வாங்கிட்டு வா…” என்றாள்.
“அர்ஜுன், இன்னும் ஒரு நூறு ருபாய் கொடுக்க… அப்படியே செயின்னும் வாங்கிட்டு வா… போட்டா அழகா இருக்கும்.” என்று வரிசையாக அடுக்க… அர்ஜுன் மீராவை பார்த்து முறைத்தவன், தன் பர்ஸை எடுத்து அவள் கையில் கொடுத்து, “நீ என்னமும் பண்ணு, எனக்கு வேலை இருக்கு.” என்று சென்றுவிட…..
மீரா சிரித்துக் கொண்டே அவன் பர்ஸை தன் தோள் பையில் வைத்தவள், “நீ இரு வாணி, நான் போய் வாங்கிட்டு வரேன்.” என்று அங்கிருந்து செல்ல… அவள் சென்றதும், அங்கிருந்த பெண்கள் தங்களுக்குள் எதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
அரை மணி நேரம் கழித்து வந்த மீரா, அழகான பொட்டுக்கள், வளையல், கம்மல், செயின் என்று நாலைந்து டிசைன்கள் வாங்கி வந்தவள், அதிலிருந்து எடுத்து அந்தப் பொம்மைக்குப் போட…. அந்தப் பொம்மை பார்க்க கல்யாண பெண் போலவே இருந்தது. அதைப் பார்த்த சித்ரா, “மீரா அண்ணி இந்தப் பொம்மைய எதாவது பையன் பார்த்தா நிஜமான்ன பொண்ணுன்னு தள்ளிட்டு போய்ட போறான்.” என்று கேலி செய்ய…. “அண்ணியா… இது எப்ப இருந்து?” மீரா வாய்யை பிளக்க….
“அது அர்ஜுன் அண்ணன் உங்களைத் தேடி வந்து பார்த்திட்டு போனாரே… அப்ப இருந்து.” என்ற ஷீபா கண்சிமிட்ட…
“எங்களுக்கு அர்ஜுன் அண்ணன் பத்தி தெரியாதா…. அவர் இதுக்கு முன் யார்கிட்டயும் இப்படிப் பழகி நாங்க பார்த்தது இல்லை. இதுக்கு முன்னாடியும் ஆரு அக்கா ப்ரண்ட்ஸ்… அர்ஜுன் அண்ணாவோட படிக்கிற பொண்ணுங்க எல்லாம் வந்திருக்காங்க. ஆனா… அர்ஜுன் அண்ணன் யார்கிட்டயும் இப்ப உங்ககிட்ட பேசின மாதிரி, பேசி நாங்க பார்க்கவில்லை.” மாலா சொல்ல…
மீராவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் ஆமாம் என்றும் சொல்லவில்லை… இல்லை என்றும் சொல்லவில்லை. அவள் பாட்டிற்கு அந்தப் பொம்மைக்கு நெற்றி சுட்டி வைத்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் முகம் சிவந்து…. மலர்ந்து இருந்தது. அப்போது அங்கே ஆரு வர… பெண்கள் தங்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.
“சூப்பர்.. நீயா மீரா டிரஸ் பண்ண…” ஆரு கேட்க… மீரா ஆமாம் என்றாள். ஆரு வாணியை அழைத்து “இதைக் கொண்டு போய்க் கீழே டிஸ்ப்ளே வை.” என்று சொல்ல…. வாணி அந்தப் பொம்மையை எடுத்துக் கொண்டு லிப்ட்டில் கீழே சென்றாள்.
“உனக்குப் போர் அடிக்குமேன்னு வந்தேன்.” ஆரு சொல்ல….
“இல்லை ஆரு எனக்கு இந்த வேலை செய்யப் பிடிச்சிருக்கு. நீ போய் அங்கிளுக்கு ஹெல் பண்ணு. நான் இன்னும் ரெண்டு, மூண்ணு பொம்மைக்கு டிரஸ் பண்ணிட்டு வரேன்.” என்ற மீரா அடுத்து எந்தப் புடவை கட்டுவது என்று தேடிக் கொண்டிருந்தாள்.
அப்போது கீழே சென்ற வாணி மீண்டும் அந்தப் பொம்மையோடு மேலே வர… ஆரு “ஏன்…” என்று கேட்க…. யாரும் எதுவும் சொல்லிவிட்டார்களோ என்று மீரா கவலையாகப் பார்க்க…
“இந்தப் பொம்மைய போய்க் கீழ தான்கா வச்சேன். உடனே ஒரு பொண்ணு வந்து இந்தப் புடவை மாதிரி இன்னொன்னு இருக்கானு கேட்டுச்சு… அப்ப இன்னொரு பொண்ணு வந்து அதுக்கும் இந்தப் புடவை தான் வேணும்னு கேட்குது… அது தான் உங்க அப்பா இந்தப் புடவையவே பாக் பண்ணி குடுக்கச் சொல்லிட்டாரு…. இதே மாதிரி புடவை இன்னொன்னு இருக்கு, அது அந்த இன்னொரு பொண்ணுக்கு.” என்ற வாணி வந்த வேலையைப் பார்க்க…
“மீரா, உன்னால தான் ரெண்டு புடவை வித்திருக்கு.” ஆரு சந்தோஷமாகச் சொல்ல… “அந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்கு அதனால தான்.” என்ற மீரா… அடுத்து இளம் மஞ்சளில், ஆரஞ்சு கலர் பார்டர் வைத்து உடல் முழுதும் தங்க வேலை பாடுகள் செய்து இருந்த புடவையை எடுத்து பொம்மைக்குக் கட்ட ஆரம்பித்தாள்.
இப்படியே வரிசையாக மீரா தேர்வு செய்து பொம்மைக்குக் கட்டி கீழே அனுப்பிய மூன்று புடவைகளும் அப்போதே விற்றுவிட…. மீராவை அந்தப் பெண்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள். மாலை ஆரு வந்து மீராவை அழைத்துக் கொண்டு முதல் தளத்தில் இருந்த அலுவலக அறைக்குச் செல்ல…. அங்கே கணேசனும், அர்ஜுனும் இருந்தனர்.
ஆரு மீராவை அறிமுகப்படுத்த வாய் திறக்க… அதற்குள் அர்ஜுன் வேகமாக “அப்பா இவ மீரா.” என்றான்.