பகுதி – ௪
அந்த பெண் வண்டி எடுத்து போகவும், வெற்றி நின்றதைப் பார்த்த சந்திரனுக்கு தன் தவற்றை உணர்ந்து வருத்தப் பட்டான்.
“உன் செயல், எங்கே வந்து விட்டு இருக்கு பாரு” ஆதங்கமாக சொன்னான் வெற்றி.
“சாரி சார்”..
“சரி விடு, என்ன தான் பண்றாள் என பார்த்துக்கலாம்”… தன் அறை நோக்கி சென்று அமர்ந்தான்.
“அந்த கோப்புக்களை எடுங்க சந்திரன்”.
இரண்டு கோப்புக்களையும் எடுத்து வந்தான். அதான் சந்திரன். வெற்றி கட்டளையை உணர்ந்தே செயல் படுத்துவான். இது தான் எள்ளு என்றால் எண்ணெயோடு நிற்பது.
“உடம்பை அடையாளம் காட்டிட்டாங்களா ?”
“ஆமாம் சார். உடை, அங்க அடையாளங்களும் பொருந்தினது சார், ஒப்படைத்தாச்சு”.
“ஓ… சரி, உடற் கூறாய்வு அறிக்கையை எடுங்க”, சந்திரன்.
அந்த அறிக்கையை மேலே எடுத்து தந்தான்.. வாசித்தவன்..
“விசம் கலந்த மது அருந்தியதால் மரணம்” என்றான்.
“ஆமாம் சார், அன்று கொஞ்சம் குடித்திருக்கிறார்..அதில் தான் விஷம் கலந்திருந்திருக்கு சார்”.
“தற்கொலையா …கொலையா …? நீ என்ன நினைக்கிற சந்திரன்?”.
“தற்கொலைக்கு தான் வாய்ப்பு அதிகம் சார்”.
“அப்ப ஏன் குடிச்சுட்டு வெளியே வந்து விழுந்து கிடக்கிறார். உள்ளே தானே படுத்திருக்கணும். விசபாட்டில், மாத்திரை அட்டை போன்ற தடயம் எதுவும் கிடைத்ததா?”.
வழக்கு சம்பந்தமாக சேகரித்தப் பொருட்கள் இருந்த பை எடுத்து, பொருட்களை மேசையில் பரப்பினான்.
அதில் இருந்தவை பேனா, கைகடிகாரம், மூக்குகண்ணாடி, சின்ன முகவரி புத்தகம், நிகழ்ச்சி பற்றிய குறிப்பு ஏடு, அழகிய கைக்குட்டை, வண்டி சாவி..மேலும் ஒரு சின்னசாவி.
“இது என்ன சாவி சந்திரன்…லாக்கர் சாவியா ?”
“தெரியலை சார்..அவர் கணக்கு வச்சிருந்த வங்கிகளில் இல்லன்னு சொல்லிட்டாங்க..எதுவும் இரகசிய கணக்கு இருக்கிறதான்னு விசாரித்துக் கொண்டு இருக்கிறோம் சார்”.
“அவங்க கொடுத்த புகாரின் நகலை எடுங்க…உடல் கிடைத்த முகவரி அந்த பொண்ணு தந்தாங்களா ?”
“இல்லை சார், அந்த வீடு மாறியது அவங்களுக்கே தெரியலை”.
“இந்த வீடு எதனால் பிடித்தார் என கண்டுபிடிச்சா .. எதுவும் துப்பு கிடைக்கலாம்”.
“சரி, அவங்களை விசாரித்து வருவோம்.. எங்கே இருக்கிறாங்க, என கேட்டு ..வண்டி ரெடி பண்ணுங்க”.
கண்ணன் என்ற பெயர் பலகை பித்தளையில் எழுதி இருந்தது. பாடகர் வீடு..கொஞ்சம் பெரிய வீடு தான். முன்புறம் சிறிய காலி இடம் அதில் செடிகள் மரங்கள் இருந்தன.
அழைப்புமணியை அழுத்த…வேலைக்கார பெண்மணி வந்து திறந்தார்..வரவேற்பு அறையில் இருக்கையைக் காண்பித்து, “உட்காருங்கள் அம்மா வருவாங்க” ..என்று சென்றார்.
வந்தவள் மிகவும் சோகமாக இருந்தாள். வெற்றி அவளின் நிலை கண்டு ‘இளம் வயது பாவம்’ என்று தோன்றியது.
“சாரி மா .. வேற வழி இல்ல..உங்களை தொந்தரவு பண்றோம். இதான் எங்கள் நடைமுறை” என வருந்தும் குரலில் தொடங்கினான்.
“பரவாயில்லை சார், கேளுங்கள்” என்றாள்.
“உங்களுடன் வேற யாருமில்லையா ? சொந்தக்காரங்க ..?” சுற்றுமுற்றும் பார்த்து கேட்க…சந்திரனைப் பார்க்க, அவன் விசாரணையை பதியத் தொடங்கினான்.
“அன்றே சொன்னேன் அல்லவா, காதல் கல்யாணம் என, எங்களுக்குள் வயது வேறுபாடு அதிகம் என்று, என் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை சார்…. திரைத்துறை ஆள் என்பதும் ஒரு காரணம். பதிவுத் திருமணம்தான் செய்தோம். அவர் நண்பர் மூர்த்தி அன்று என்னுடன் வந்தாரே அவர் மனைவி பகலில் வந்து பேச்சுத் துணைக்கு இருந்தாங்க, இப்ப ஊருக்கு போயிருக்கிறாங்க, இரவு இவங்க இருப்பாங்களே”.
“அவர் பக்க உறவுகள்..?”.
“அவர், பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்துட்டாங்க. அவங்க மாமா வீட்டில்தான் வளர்த்தாங்களாம், அங்கே பிரச்சனை என்று சென்னை வந்ததால் தொடர்பு விட்டுப்போச்சு … கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்தார்”.
“இது இரண்டு பேருக்கும் முதல் திருமணம் தானே”.
“ஆமாம் சார்”…
“எப்படி உங்களுக்குள் பழக்கம் வந்தது?”.
“என் தோழிக் கல்யாணத்தில் நாங்க சேர்ந்து பாடியிருக்கிறோம் சார்”.
“இசைக்கச்சேரியிலா?”
“இல்ல சார் .. அவர் நண்பரின் தம்பி கல்யாணம், அங்கே ஏற்பாடு செய்திருந்த ‘கரோக்கி பார்’ல பாடினார்”.
“அப்படின்னா ?”
“திரைப்பாடல்கள் இசை மட்டும் ஒலிக்க, நாம் பாடகர்களுக்கு பதிலாக அந்த இடத்தில் பாடலாம், அப்படிப்பட்ட ஒலிப்பான் இருக்கு..அதில் பாடினோம். அங்கே என் தோழிகள் வற்புறுத்தலால், நானும் ஒரு பாட்டு பாடினேன்”.
“நீங்களும் பாட்டு பாடுவீங்களா?
“இல்ல சார் சும்மா கேட்டு பாடுவது தான் “ஓ.. அப்புறம், அந்த கரோக்கி வச்சிருந்தவர்… எங்கள் இருவரையும் சேர்ந்து ஒரு டூயட் பாடச் சொன்னார்.
எனக்கு தயக்கம்..நான் இசை கற்றுக்கொள்ள வில்லை, பாடினதும் இல்லை. கண்ணன், மிகவும் என்னை ஊக்கப்படுத்தி, எனக்கு எளிதாக இருக்கும் பாட்டு எடுத்துக் கொடுத்தார் ..அதை பாடினோம் சார். அதில் தான் தொடங்கியது எங்கள் பழக்கம்”.
“அப்புறம் சாட், பூங்கா என்று சந்திப்புகள்…”
“யார் முதலில் காதலை சொன்னது…?”
அவர் தான், ஒரு வாரத்திலேயே அவரோட காதலைச் சொன்னார். எனக்கு மகிழ்வாக இருந்தது.
எங்க வீட்டில் கல்யாண ஏற்பாடு பண்ணினார்கள். அப்பா வழி ஒன்றுவிட்ட அக்கா, தன் பையனுக்கு என்னை பெண் கேட்டு வந்தாங்க….. அந்த மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்த்தார். சொந்தம் விட்டு போகாது என்று இரண்டு பக்க வீட்டிலும் பிடித்திருந்தது…நான் இவரை காதலிப்பதாக சொல்லி மறுக்கவும்..பெரிய பூகம்பமே வெடித்தது”.
“எங்கப்பாவிடம் சம்மதம் பெற எங்கள் கல்யாணத்திற்கு முன்பே, இந்த வீட்டை என் பெயரில் எழுதி வைத்தார் கண்ணன் …ஆனாலும் எங்கப்பா சம்மதிக்கவே இல்லை, அவ்வளவு காதல் என் மீது எப்படி என்னைப் பிரிந்தார் என்றே தெரியலையே” என கண்கலங்கினாள்.
“இப்பவும் வரலையா … ?”
“அப்பா அக்காள் மகன் அல்லவா, சொந்தங்கள் மத்தியில் அவமானமாக உணர்ந்து, என் அண்ணன் வீட்டுக்குப் போய்விட்டார்…. எங்கம்மா இரண்டு வருடம் முன் தவறிட்டாங்க”.
“எங்களுக்கு தாமதமாக தான் தெரிய வந்தது, நாங்களும் போகவில்லை”.
“உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது ?”
“மகிழ்வாக தான், கச்சேரி இல்லாதப்ப நிறைய இடங்கள் கூட்டி போவார், என் கூட தான் நேரத்தைக் கழிப்பார்”.
“நீங்க அவரோடு இசைக்கச்சேரி போவீங்களா.. சேர்ந்து பாடுவீங்களா ?”
“சார், அது சும்மா கல்யாண வீட்டில் பாடியது…பாடகி இல்லையே, கச்சேரியில் எப்படி பாட முடியும்…கல்யாணம் முடிந்த புதிதில் அதிகம் போய் இருக்கிறேன்”.
“அடிக்கடி சண்டை வருமா ? ஏன் தனியாக வீடு பிடித்து இருக்கிறார் ?”
“சார், கணவன் மனைவி என்றால் சண்டை இல்லாமலா, நீங்க கேட்பது போல் இல்ல…..அந்த வீடு அவரோட இசைப் பயிற்சிக்காக பிடித்தது”.
“இங்கே நீங்க அனுமதிக்கலை என்றே தனி வீடு எடுத்ததாக சொல்றாங்களே”.
“எனக்கு தொல்லையாக இருக்கும் என்றே பிடித்தார். அதான் சார் உண்மை”.
“இந்த புது வீடு பற்றி ஏன் உங்களுக்கு தெரிவிக்கல ? தினம் போன் பண்ணுவார்னு சொன்னீங்களே..ஒரு வருடமாக சொல்லல அல்லவா ?”
“தெரியல சார், அது மட்டும்தான் என் குழப்பமும்…ஆனால் கொஞ்ச நாட்களாக ரெம்ப சோர்வாக, எப்பவும் யோசனையாக இருந்தார்”.
“அவர் இறப்பு தற்கொலையா ? இல்லை கொலையா ?நீங்க என்ன நினைக்கீறீங்க மா?
“அவர் கோழை இல்லை சார்..அவர் பார்க்காத கஷ்டமா ?
“குடிப்பாரா ?”
“ஆமாம், அவர் இருக்கும் துறை அப்படி..சிலசமயம் குடிப்பார்”.
“வீட்டில் வைத்து குடிப்பாரா ?”
“இல்லை சார்..பார்ட்டி…மற்றும் நண்பர்கள் சேர்ந்தால் தான்”
“குடித்தால் இங்கே உள்ளே விட மாட்டீங்களாமே ?”
“அது, அவர் குடிப்பதைக் கட்டுப்படுத்த சொல்வது சார்”.
“என் கல்யாணத்தின் பொழுதே குடியை நிறுத்தி விடுவதாக வாக்கு கொடுத்திருந்தார். அவர் நண்பர்களோடு சேரும்போது, அதை மீறி குடித்துவிட்டு வந்து விடுவார், இதனால்தான் வாக்குவாதம் வரும்”.
“வேற பெண்கள் தொடர்பு…முன்னமே காதல் எதுவும் உண்டா?”
“அப்படி எல்லாம் இல்லை சார், என் மேல் உயிர் சார் அவருக்கு” என கண்கலங்கி சொல்லவும்..தன் கேள்விகளை நிறுத்தி, தேவைப்பட்டால் மீண்டும் வருவேன்… எனக் கிளம்பினான்.
வண்டியில் அமர்ந்து கிளம்பவும் சந்திரனிடம் “கண்ணனோட நண்பன் முகவரி இருக்கிறதா?”
“இருக்கு சார்..ஆனால் அவர் சொந்த ஊர் போய் இருக்கிறார் போல. நாளை வந்துவிடுவாராம்”.
“ஓ…சரி” என அந்த பாடகன் கண்ணனின் நாட்குறிப்பை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு வீட்டின் முன் வண்டியில் இருந்து இறங்கினான்…. “நாளை பார்ப்போம்” என விடைபெற்று வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.
சற்று நின்று பார்த்த சந்திரன், வெற்றி திரும்பி பார்க்கவும், நெருங்கி “டேக் கேர், சாரி சார் “ …என ஒரு சலுயூட் வைத்து வண்டியில் ஏறிச் சென்றான்.
—————————
இரண்டு அடுப்பில் ஒன்றில், சப்பாத்தி மாவை அரைவேக்காடு போட்டு, அடுத்திருந்த அடுப்பில், சப்பாத்தி வளை வைத்து அதில் போடவும் ..சப்பாத்தி உப்பி அழகாக எழும்பி வந்தது அந்த ‘புல்கா’…
அம்மா சூடாக போடப் போட அருகே மேடைத் திண்டில் அமர்ந்து, அதை அப்படியே சுட சுட, பனீர் பட்டர் மசாலாவோடு மொக்கி கொண்டு இருந்தாள் நம் வம்பு நிருபர்.
ஒரு அரைக்கால் சட்டை, மேலே ஒரு பருத்தி டாப், அடுப்படியில் விரித்த தலையுடன் அன்னை அனுமதிப்பதில்லை என்பதால்…ஏற்றி ஒரு கிளிப் போட்டு இருந்தாள்.
“என்ன ருசி ..உன் கைப்பக்குவமே தனி மா…ஐந்து நட்சத்திர உணவு விடுதி கூட தோற்றது போங்க”…என மற்றும் ஒரு துண்டை வாயில் அடக்கிய படி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் தாயே”…
செல்லமாக தலையில் தட்டி, “சாப்பிடும் போது பேசாமல் சாப்பிடு, இந்த வாய் மட்டும் இல்லை என்றால் உன்னை காக்கா தூக்கி போயிடும்”.
“உன்னை பிரிந்ததில் அவ்வளவு மெலிஞ்சுட்டேன் இல்ல மா? உடம்பைத் தேற்றணும்” என கையை மடக்கிப் பலம் காட்டினாள்.
“எத்தனை நாள் இதையே சொல்லுவ, காலில் சக்கரம் கட்டினது போல சுற்றிக் கொண்டே இருந்தால்…அவனுக்கு வயசாகுதுல”
“அவனுக்கு முதலில் கட்டிவையுங்க ..என்னை ஏன் தொல்லை பண்ணறீங்க ?”
“அடிங் கழுதை” …. என அன்னை வையவும்..அழைப்பு மணி ஓசை கேட்டது, தன் தட்டை வைத்துவிட்டு, இன்னும் ஒன்றே ஒன்று மா, போதும்”… தன் விரல்களை ரசித்து சப்பியபடி, கதவைத் திறந்தாள்.
அங்கே வாசலில் முறைத்தப்படி வெற்றி நிற்க ..சீக்கிரமே வந்து இருக்கிறானே …ஆத்தீ சிக்கிட்டோம் போலவே..என திருதிரு என முழித்தாள் மானசா.
அவள் தப்பி ஓட்ப்பார்க்க, அவன் எட்டி கையை பற்ற, எச்சக் கை … கழுவனும் …அவன் விடவில்லை எனவும் …அம்மா …மா…இங்கே ஓடி வாங்க என சத்தம் போட்டாள்.
“என்னடி பேயைக் கண்டாப்பல அலறுற” ..என கண்டகண்ட நாட்டு நடப்பை நினைத்து பதறி வேகமாக வந்தார். அன்னை சத்தம் கேட்கவும், சற்றே வெற்றியின் கவனம் சிதற ….நழுவி தன் கையை விடுவித்து தப்பினாள் மானசா. வெற்றி அவளைத் துரத்தவும் …சோபாவில் ஏறி தாவி, மாடிப்படியில் ஏற ஓடினாள்.
“குரங்கு…குரங்கு..அப்படியே முற்பிறவியை நிருபிக்கிற ..” என கூறிக் கொண்டே தானும் தாவி, மாடிப்படி கைபிடியிலும் தாவி அவளுக்கு முன் ஏறி, நானும் உனக்கு சளைத்தவனில்லை என அவளை முன் போய் நின்றான்.
“இதாண்டா போலீஸ்” ..என மனு கலாய்க்க..மீண்டும் துரத்த அவள் ஓட என வீடே கலவரமாகியது.
“டேய் இதென்ன இவ்வளவு கலாட்டா பண்ற..நாளை இன்னொரு வீட்டுக்கு போறவள் கைகால் உடைந்தால், வெற்றி உனக்கு கொஞ்சமும் பொறுப்பில்லை” என நிரஞ்சனாம்மா திட்டினார்.
“கேளும்மா…என சலுகையாக, அன்னையை நோக்கி ஓடி, அண்ணனாமா இவன்…உங்க அண்ணன் பாரு நீ கிழக்க வெள்ளைக் காக்கா பறக்குதுன்னா…ஆமாம் அதோ பாரு அங்கே ரெண்டு பறக்குதும்பாரு … அப்படி பெறாமல் நேர் மாறா …இவனை ஏம்மா பெத்த ?”
“அம்மா புரியாமல் பேசாதீங்க ..அவள் இன்று என்ன செய்தாள் தெரியுமா ?” என அன்னையிடமும், “பேச்சை மாற்றாத என தங்கையிடமும் சண்டையைத் தொடர்ந்தான்.
“என் வேலையைப் பார்த்தேன்” …
“இனி என் அலுவலகத்திற்கு போன் போட்டு நான் எங்கே போனேன், என்ன செய்றேன்னு விசாரிச்சேன்னு வை…உன்னை” என விரல் நீட்டி எச்சரித்தான்.
“அழகான பெண் குரலில் கேட்கவும், அந்த சந்திரனை எல்லாவற்றையும் ஒப்பிக்காதன்னு சொல்லி வை… நல்லா பயிற்சி கொடு அப்புறம் என்னிடம் பேசு”… என சண்டை பிடித்தாள்.
“சந்திரனை பற்றி தவறாக பேசாத, அவன் கணினி படித்து விட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்த்தவன். அதை விட்டுவிட்டு இங்கே விரும்பி சேர்ந்தான்.
முக அடையாளம் கொண்டே எளிதாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க செயலி உருவாக்கி அதில் 60,000 குற்றவாளிகளின் தகவல்களை இணைத்திருக்கிறான். அதனால் விரைந்து குற்றவாளியை பிடிக்க முடியும் தெரியுமா?
கையைத் தலைக்கு மேல் தூக்கி, இனி உன் சந்திரனை ஒன்றும் சொல்லவில்லை..என்னை பொருத்தருளுவீராக”
“தன் தவறை ஒத்துக்கிறாளா பாருங்க மா ..நீங்க கொடுக்கிற செல்லம்” என அன்னையிடம் திருப்பினான்.
“ஆமா, நான் சொன்னதைக் கேட்டுட்டுத் தான் ரெண்டுபேரும் மறுவேலை பார்ப்பீங்க ..போங்கடா” ..என உள்ளே சென்றார்.
“தொப்பி…தொப்பி” என சிரிக்க…அவள் ‘நங் என’ தலையில் கொட்ட, “அம்மா” என அவள் கத்தி திருப்பி அவனை திருப்பி அடிக்க துரத்த என மீண்டும் வீடு ரணகளமானது.
“என்ன அங்கே சத்தம்” என்ற பிரபாகரனின் குரல், இருவரையும் அமைதியாக்கியது.
“இதுக்காக தானே கத்தின” ..என அவன் நல்லப்பிள்ளையாக எழுந்து நிற்க..”வெவ்வே” ..என அளவம் காட்டினாள் மானசா.
பிரபாகரன், நிரஞ்சனா தம்பதியரின் செல்ல மகள். ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என இருமக்கள். பிரபாகரன் ஒரு ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி, நிரஞ்சனா ஒரு தமிழ் நாட்டு அக்மார்க் அம்மா, பிள்ளைகளோடு ஓடி, அவர்களோடு படித்து, படிக்க வைத்து ஆளாக்கினார். இன்று இருவரும் நல்ல நிலையில். இருமக்களும் ஒன்றாகவே வளர்த்தனர். ரமணிம்மா ரசிகையான நிரஞ்சனாம்மா மகளுக்கு மானசா என பெயரிட்டார்.
அவளும் நன்கு படித்து, விஸ்காம், மற்றும் இதழியல் படித்து இந்தியளவில் புகழ்பெற்ற செய்தி தொலைக்காட்சியில் வேலை செய்கிறாள்…என்ன செய்தி சேகரிக்க என்று ஓடிக்கொண்டு இருப்பவள்.
அன்னை மக்கள் இருவருக்கும் கால்கட்டுப் போட்டு சீக்கிரம் பேரன் பேத்திகளை கொஞ்ச ஆசை. மக்களோ…தங்கள் வேலையில் சாதிக்க ஆசை…தந்தையோ மக்கள் பக்கம்…இதனால் நிரஞ்சனாம்மா நிலை வைப்புத்தொகை இழந்த வேட்பாளராக.
பிரபாகரன் ஒய்வு பெற்றாலும், தன்னைப் போல் இராணுவத்தில் சேர விரும்புவர்களுக்கு பயிற்சி கொடுத்தல் மற்றும் வழிக்காட்டல், கொஞ்சம் சமூக சேவை, வீட்டுத் தோட்ட பராமரிப்பு …என ஆரோக்கியமாக தன் ஒய்வு காலத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டார்.
மாடிப்படிகளில் இறங்கி வந்தமர்ந்தார்.
“வெற்றி இதென்ன பழக்கம் பொம்பளை பிள்ளையை கை நீட்டுறது ?”
“அப்பா அவள் என்ன செய்தாள் தெரியுமா ?”
“அவளோட வேலையைத் தானே பார்த்தாள்… இதே கேள்வியை வேறவங்க கேட்டிருந்தால்..இப்படித்தான் பண்ணுவியா அதுவும் பொது இடத்தில்…நீ ஒரு பொறுப்புள்ள அதிகாரி, இப்படித்தான் நடந்து கொள்வதா? படம் எடுத்தவன் இவளோட நண்பனாக இருக்க போய் சரியாகி விட்டது..இல்லைனா…?”
‘பக்கி, அதையும் போட்டு கொடுத்துட்டாளா ?’
“சாரி பா” என உள்போன குரலில் சொன்னான்.
“தப்பை ஏற்றுக்கொள்கிற மன தைரியமும் வேண்டும்”.
“மன்னிச்சுடுங்க பா.. இனி இது போல் நடக்காது”
“சாரி மனு மா”, என தங்கையிடமும் மன்னிப்புக் கேட்டான்.
“நீ தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பயன்படுத்தாதே மானசா.. இது தப்பு”.
“வேலையையும், உறவையும் போட்டு குழப்பிக்க கூடாது…பொறுப்பான பதவியில் இருக்கிறீங்க, அதற்கேற்ப நடந்துக்கொள்ளுங்கள்”.
“அப்புறம் இன்னும் இதென்ன சின்னப்பிள்ளத்தனமா, வீடு முழுதும், ஓடிக்கொண்டும், அமர வேண்டிய இருக்கையில் மிதித்து தாவுறது, ஓடுறது…. எப்ப பாரு பஞ்சாயத்து பண்றது, கலாட்டா பண்றது…..இது வீடா இல்ல ..?
“அப்பா அது எங்கள் உரிமை…இங்கே நாங்க எப்பவும் சின்ன பிள்ளைத்தனமாகத் தான் இருப்போம், நிச்சயமாக இது உயிர்ப்புடன் இருக்கும் வீடு, அருங்காட்சியகம் அல்லவே அல்ல” என இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
“இவங்க பஞ்சாயத்துக்கு போனால் நம்ம மூக்கு தான் உடையும்…. எல்லோரும் சாப்பிட வாங்க” என நிரஞ்சனம்மா முடித்து வைத்தார்.
உணவருந்தி விட்டு, சிறிது நடை பயிற்சி செய்து கொண்டே நாளைய தன் வேலைகளை யோசித்து மனதில் பட்டியலிட்டு வைத்தான்.
படுக்கையில் படுத்து, அந்த கண்ணனின் நாட்குறிப்பை எடுத்து வாசிக்கத் தொடங்கினான்.
மீண்டும் வருவான்.