Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில்……12

உன்  சுவாசம்  என்  மூச்சில்……12

 

     அழுதுகொண்டே  உறங்கிவிட்ட  எழிலின் அருகில் வந்த தெய்வானை,

“ எழிலு…. எழிலு…. ” என அழைக்க அந்த சத்தத்தில் தலை கனக்க விழிகளை பிரிக்க முடியாது பார்த்த எழில் அங்கு தெய்வானை  அருகில் நிற்பதை பார்த்து பதறி எழுந்து,



Advertisement

“ அத்தை!!!… ” என அழைக்க

“ வா வந்து சாப்புடு.  மதியம் மணி மூணு ஆச்சு. நீ  சாப்புட வருவன்னு நினச்சேன். ஆனா வரல அதான் உன்னைய எழுப்பலாம்ன்னு வந்தேன் ” என கூறி தெய்வானை வெளியே சென்று விட எழில்விழியும் அமைதியாக சென்று முகம் கழுவி உணவு உண்ண சென்றாள்.

      எழில்விழி தட்டில் உணவை அள்ளி வைக்கும் போது தான் நினைவு வந்தது மதியம் தெய்வானை தன்னை சமைக்க சொன்னது வேகமா தெய்வானையிடம் சென்று,

Advertisement

“ அத்தை சாரித்தை நான் மறந்துட்டேன். தூங்கிட்டேனா அதான் சமைக்க முடியல ” என பரிதவிப்புடன் கூறிய எழிலின் முகத்தை பார்த்த தெய்வானை,

Advertisement

    அழுது அழுது முகம் கண்கள் சிவந்து பார்க்கவே பரிதாபமாக நின்றுகொண்டிருத்த எழில்விழியிடம்,

“ பரவாயில்லை  நீ போய் சாப்புடு உன் மாமா அவரே காலையில வயலுக்கு போய்ட்டாரு. அதனால் எனக்கு வேலை இல்ல. நானே சமைச்சுட்டேன் ” என கூறி நகர்ந்துவிட ஏனோ மனதின் அழுத்தம் கூடிக்கொண்டது.

   மெதுவாக சென்று சிறுது உணவை மட்டும் உண்டுவிட்டு மீண்டும் தனது அறைக்கு செல்ல இருந்த எழில்விழியை கண்ட தெய்வானை “ எழில் ” என அழைக்க

Advertisement

“ அத்தை ”

“ இங்க வா ” என அருகில் அழைத்தார்.

 அருகில் சென்றவளிடம்,

“ சாப்பிட்டியா?? ” என கேட்க 

“ ஹ்ம்ம் சாப்பிட்டேன்  அத்தை ”

“ ஹ்ம்ம்…… எழிலு குடும்பம்ன்னா எல்லாம் தான் இருக்கும். சண்டை சச்சரவு எல்லாம் வரும் அதுக்காக கோச்சுக்கிட்டு போய் ரூம்ல உட்கார்ந்து அழுதுகிட்டு தூங்கிட்டா சரி ஆகிடுமா???…

    இங்க என்ன உன்னைய கொடுமையா படுத்திட்டாங்க. தண்ணி தூக்குன்னு சொன்னது அவ்வளவு கோவமா உனக்கு.  முகமே இப்படி சிவந்து போற அளவுக்கு அழுத்துருக்க. உள்ள  போய் படுத்துக்கிட்டா வேலை ஆகிடுமா சோறு பொங்கி சாப்ட முடியுமா??….

     உன் மாமனார் நண்டு பொந்துக்குள்ள காலைவிட்டு கால்  உடஞ்சப்போ நானும் அழுதுகிட்டு முடங்கிருந்தா என் பிள்ளைகளை வளர்த்து  படிக்க வச்சு இப்படி ஆளுக்கொரு உத்தியோகத்துல உட்காரவச்சுருக்க முடியாது. சும்மா எதுக்கெடுத்தாலும் கண்ண கசக்காம உருப்படியான வேலைய செய்ய பழகு ” என தெய்வானை கூறிக்கொண்டிருக்க

   எழில்விழி கலங்கிய கண்களை தெய்வானையிடம் காட்ட பிடிக்காது தலையை அசைத்து சென்றுவிட, தெய்வானையும்  அவர் வேலையை காண சென்றுவிட்டார்.

     அறைக்குள் வந்த எழிலுக்கோ மனம்   முழுவதும் பாரம் மட்டுமே,

“ நாம என்ன பண்ணுனோம்??…. ஒண்ணுமே செய்யல. சொன்ன வேலைய செஞ்சோம். எல்லார்கிட்டயும் அமைதியாதான் இருக்கோம். ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.

    நான் எதுவும் தப்பு செய்றேனோ??…. கல்யாணம் ஆகி பதினஞ்சு நாளுதான் ஆகுது. ஆனா இவ்வளவு கஷ்டமா இருக்கு வாழ்க்கை” என மீண்டும் தனது மனதோடு புலம்ப

“ ஹம்ம்ஹும்….. இது சரி வராது. இப்படி நாம நமக்குள்ள புலம்பிகிட்டே இருந்தா சீக்கிரம் நம்மள பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேர்த்துடுவாங்க. போய் துணிய துவைப்போம்” என தனது வேலைய பார்க்க சென்றுவிட

   இரவு உணவையும் முடித்த பின்பு பாத்திரங்களை துலக்கி விட்டு தனது அறைக்கு செல்ல எத்தனிக்கும் போது வந்த ஸ்வாமிநாதன் எழில்விழியை,

“ எழில் ” என அழைக்க

“ மாமா…. என்ன மாமா எதுவும் வேணுமா??? ”

“ இல்ல ஒன்னும் வேணாம். இன்னைக்கு நீ உன் புருஷன்கிட்ட பேசவே இல்ல. அதான் போனை உன்கிட்ட குடுக்கலாம்ன்னு வந்தேன். பேசிட்டு நீயே வச்சுக்கமா. நான் காலையில வாங்கிக்குறேன் ”

“ இல்ல மாமா நான் நாளைக்கு பேசிக்குறேன். அவுங்க தூங்கிருப்பாங்கள்ள ”

“ ஆமா அவன் தூங்க போறான் நீ வேறமா.  மணி ஒம்பது தானே ஆகுது அவன் தூங்க ரெண்டு மூணு ஆகும். சில நேரம் நைட் டூட்டின்னா  முழுச்சுதான் இருப்பான் நீ பேசு ” என கூறி செல்லை குடுத்துவிட்டு நகர அவளும் அந்த பட்டன் வைத்த அலைபேசியை எடுத்துக்கொண்டு  அவளின் அறைக்கு வந்தாள்.

    அறைக்குள் வந்த எழில்விழிக்கோ கதிரவனிடம் பேச மனசு பரபரத்தது. இந்த ஒரு வாரம் அதிக பட்ச பேச்சே நலம் நலமறியா ஆவல் மட்டுமே. அதிகம் பேசாத எழில்விழி எப்பொழுதும் மவுனத்தின் பக்கம் நிற்க அதிகம் கோவம் கொள்ளும் கதிரவனோ பேதையின் மொழிக்காக மவுனம் காக்க என இருவரின் சுவாசம் மட்டுமே அங்கு சிறுது நேரம் இசைக்கும். 

     இன்று ஏனோ எழிலின் மனதில் கணவனிடம் பேச வேண்டும் என தூண்ட  கதிரவனுக்கு அழைப்பை கொடுத்துவிட்டாள். அழைப்பை ஏற்ற கதிரவனோ,

“ அப்பா என்னப்பா இந்நேரம் கூப்பிடுறிங்க??… ஒன்னும் பிரச்சனையை இல்லையே? ” என கேட்க தலைவனின் குரல் கேட்டவுடன் விழியின் விழிநீர் சுரக்க சிறிதாக விசும்ப ஆரம்பித்தாள் எழில்விழி. அந்த சத்தத்தில்,

“ ஏய்!!… விழி நீயா??… என்ன இந்நேர போன் பண்ணிருக்க எதுவும் பிரச்சனையா என்ன?? ” என கேட்ட கதிரவனிடம்

“ ஏன் பிரச்சனைனாதான் பேசணுமா?? ” என  காலையில் இருந்து மனது அழுத்தத்தில் இருந்ததாலோ இல்லை கணவனை தேடியதாலோ இல்லை இந்த கோவக்காரன் பக்கத்தில் இல்லை என்கிற தைரியத்திலோ  பேச ஆரம்பித்தாள்.

“ ஹான்….  சரி பிரச்சனை இல்ல. அப்போ எதுக்கு போன் பண்ணுன ”

“ சும்மா பேசத்தான் ”

“ சும்மா பேசவா???… உன்கிட்ட சும்மா பேசிகிட்டு இருக்கவா எனக்கு அரசாங்கம் சம்பளம் குடுக்குது ” என கேள்வி கேட்டவனிடம்

என்ன பேசுவது என தெரியாது

“ இல்லங்க…. அது…  அது  நீங்க எப்போ வரீங்கன்னு…. ”  எழில்விழி தயக்கமாக கேட்க

“ வரும் போது வருவேன். என்ன பிரச்சனை உனக்கு?? நான் வந்து இப்போ உடனே ஆகவேண்டிய காரியம் ஏதும் இருக்கா என்ன?? ” என கேட்டவனிடம் பதில் கூறாது கண்ணாடியில் எழில்விழி அவளையே முறைத்துக்கொண்டிருந்தாள்.

“ ஏய்!!!… லைன்ல இருக்கியா???…. ” என கத்தியவனிடம்

“ ஹ்ம்ம்  இருக்கேங்க சொல்லுங்க ”

“ சொல்லவா நீதானே போன் போட்ட அப்போ நீ சொல்லு ”

‘ தெரியாம போனை போட்டுட்டேன் ’ என  மனதில் புலம்பிக்கொண்டு

“ வேற ஒன்னும் இல்லங்க உங்கள பார்க்கணும் போல இருந்துச்சு அதான் உங்க குரலை கேட்கலாம்ன்னு ”

“ பார்க்கணும் போல இருந்தா நம்ம கல்யாண போட்டோவை எடுத்து பாரு எதுக்கு ராத்திரி நீயும் தூங்காம என்னையவும் வேலை செய்யவிடாம போன் போடுற போ போய் தூங்கு ” என கூறிவிட்டு போனை கதிரவன் வைத்துவிட

     எழில்விழியோ கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்து கோவமாக,

“ நேரிலயே அவருகிட்ட அந்த வாங்கு வாங்குவ அப்போ என்ன இதுக்கு நீ இப்போ போனை போட்டு வாங்குறன்னு புரியல. எழிலு…… காலையில இருந்து வாங்குனது  பத்தலன்னு  தூங்கும்போது இவருகிட்டையும் பேச்சு வாங்கணும் இல்லைனா உனக்கு தூக்கம் வராது. போடி நமக்கு வாச்சது அவ்வளவுதான்னு காலத்தை தள்ள  வேண்டியதுதான் ”  என ஏதோ ஏதோ புலம்பிக்கொண்டு கட்டிலில் உறங்கிவிட்டாள்.

    உறக்கத்தில் இருந்த எழில்விழியின் மேல் கனமாக எதோ பொருள் விழுந்தது போல் இருந்தது. அதில் திடுக்கிட்டு எழ அருகில் கதிரவன் உறங்கிக்கொண்டிருந்தான்.  அவனின் கை எழில்விழியை அணைத்திருக்க அதனை கண்டு ஒரு நிமிடம் உறைந்து விட்டாள்.

‘ என்னடா அவரை நினைச்சிகிட்டே படுத்ததுல பக்கத்துல இருக்குறாப்புல இருக்கு. ஆனா கையும் நிஜமா நம்ம மேல இருக்குறாப்புல இருக்கு. அப்போ நிஜமா வந்துட்டாங்களா இல்ல கனவா ’ என புரியாது முழிக்க,

   அவளின் அசைவில் விழித்த கதிரவனோ எழில்விழியை கண்டு புருவம் உயர்த்தி,

“ என்ன ” என  கேட்க  அதில் மேலும் அதிர்ந்து விழியை விரித்து பார்த்தவள் விழி ஈர்ப்பில் சிறு சிரிப்புடன்,

“ என்ன பார்க்குற?? ” என மீண்டும் கதிரவன் கேட்க

‘ இல்ல இது கனவுதான் அதான் சும்மா சிரிக்குறாரு இந்தா  இப்போ டெஸ்ட் பண்ணிடுவோம் ’ என வேகமாக கதிரவனின் கண்ணில் விரலை வைத்து குத்த,

  விழியை ரசனையுடன்    பார்த்துக்கொண்டிருந்தவன் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாக்காததால் அலறி அடித்து லைட் போட அதில் நன்றாக உறக்கம் கலைந்து விழித்தவளோ அதிர்ச்சியாகி பின் பயந்து கதிரவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

    எழில்விழியை திட்டவந்தவனோ எழிலின் விழியில் தெரிந்த அச்சத்தில் ஒன்றும் கூறாது சிறுது நேரம் சென்று,

“ என்ன கனவுன்னு நினைச்சு குத்திட்டியாக்கும்???… ” என கேட்க

மெதுவாக ஆம் என தலை அசைத்தாள்.

“ சரி வந்து தூங்கு. நான் வந்ததே மூணு மணிக்குத்தான். இப்போ நாலு ஆச்சு எனக்கு தூக்கம் வருது ” என கூறி கட்டிலில் படுக்க,

    எழில்விழியும் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்து வேற எந்த சிந்தனையும் இல்லாது வேகமாக கதிரவனின் அருகில் வந்து படுத்து அவனின் மார்பில் தலை வைத்து அணைத்து படுத்துக்கொள்ள கதிரவனும் எழில்விழியை அணைத்து படுத்துகொண்டான் சிறு புன்னகையுடன்.

   காலையில் ஆறு  மணிக்கு  விழிப்பு வந்த   எழில்விழிக்கு இரவு கதிரவன் வந்தது கனவோ என்று பயம் வர வேகமாக அருகில் பார்க்க கதிரவன் உறங்கிக்கொண்டிருந்தான். 

‘ ஐ நாம போன் பண்ணுனவுடன் வந்துட்டாரு ’ என எண்ணி மனம் மகிழ

‘ ஆமா நீ கூப்ட்டுதான் வந்துருக்காரு. அட போடி. வேற ஏதாவது வேலை இருக்கும். பாரு எழுந்தவுடன்  போகணும்ன்னு  சொல்லப்போறாரு ’ என மனசாட்சி கூற

‘ ம்ப்ச் நீ ஓடி போ அங்குட்டு. அவரு எதுக்காகவேணும்ன்னாலும்  வந்துருக்கட்டும் ஆனா இப்போ என் பக்கத்துல இருக்காரு அதுபோதும் இப்போதைக்கு ’ என எண்ணிக்கொண்டு,

    குளிக்க சென்று குளித்துவிட்டு தலையை துடைத்துக்கொண்டு கண்ணாடியில் பொட்டு வைத்துக்கொண்டிருந்த எழில்விழியை கண்ட கதிரவன்,

“ விழி ” என அழைக்க அந்த சத்தத்தில் எழில்விழி புன்னகையுடன் கதிரவனை பார்த்தாள். அவளின் விழியின் மலர்ச்சி கதிரவனுக்கு புன்னகை வர,

“ விழி ” என மீண்டும் அழைக்க

“ என்னங்க ”

“ நான் சாயங்காலம் நாலு மணிக்கு போகணும். இன்னைக்கு நைட் டூட்டி வேற இப்போ காலைல சாப்பிட்டு அப்பா  கூட வயலுக்கு போகணும் அதனால் சீக்கிரம் காலை சாப்பாடு ரெடி பண்ணு” என கூறி  விட்ட தூக்கத்தை கதிரவன் தொடர

‘ என்னது இன்னைக்கே போகணுமா!!!… ’ என எண்ணி எழிலின் மனம் சோர்ந்து போக அமைதியாக சமையல் அறைக்கு சென்றாள்.

      இந்த ஒரு வாரமாக எழில்விழியே சமைப்பதால் அவளின் கைப்பக்குவம் அனைவருக்கும் பிடித்துவிட தெய்வானையும் என்ன சமைப்பது என கூறாது அவள் இஷ்டத்திற்கு சமைக்க விட்டார்.

   காலையில் பொங்கலும் சாம்பாரும் சட்னியும் தயார் செய்துக்கொண்டிருக்கும் போது அனைவருக்கும் டீயும் தயார் செய்துவிட்டாள். வெளியே ஏதோ சத்தம் கேட்க என்னவென்று வேகமா கூடத்திற்கு வந்து பார்த்தாள்.

   அங்கு தெய்வானை சாரதா ஸ்வாமிநாதன் கணேசன் என அனைவரும் நிற்க அங்கு புதிதாக ஒரு நாற்பது ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு  பெண்மணியும் நின்று கொண்டிருந்தார்.

‘  என்ன கத்திக்கிட்டு இருக்காங்க எதுவும் சண்டையோ. அப்போ இன்னைக்கு  ஏதோ சம்பவம் இருக்கும்  போல ’ என மனதில் எண்ணிக்கொண்டு அனைவருக்கும் டீயை குடுக்க வந்த எழில்விழியை கண்டு சாரதா,

“ இந்தா வந்துட்டாங்க  இந்த  வீட்டு மஹாராணி. இவுங்க வேலை செய்ய கூடாதுன்னு வீட்டுல வேலை செய்ய ஆள் வைக்குற அளவுக்கு வந்தாச்சு. எல்லா புது மருமக மவுசுதான் ” என சாரதா நீட்டி முழக்க 

“ ஹ்ம்ம் பழைய மருமக நல்ல பதுவிசா  நடந்தா புதுமருமக மவுசு ஏன் வர போகுது. நான் வரும்போது ஒரு நாலாவது நீ ஒரு வாய் தண்ணி குடுத்துருப்பியா. இந்தா நேத்து வந்த பொண்ணு என்ன அழகா டீயை நீட்டுது” என  அந்த புதிதாக வந்த  பெண்மணி கூற

‘ ஓ சம்பவமே நம்மள வச்சு தானா. என்னனு தெரியலையே ’ என எண்ணிக்கொண்டு சமையல் அறைக்குள் செல்ல பார்த்த எழில்விழியை,

“ ஏய்!!!… நில்லு இங்க என்ன நடக்குது என்ன ஒன்னும் தெரியாத மாதிரி போற ” என சாரதா  கேட்க

“  என்னக்கா ”

“ என்ன என்னக்கா??… நீ தண்ணி தூக்கவேணாம்ன்னு மாமா இவுங்கள ஏற்பாடு பண்ணிருக்காங்க. இங்க என்ன காசு கொட்டியா கிடக்குது கூட்டு. குடுமபத்துல எல்லாரும் தான் இருக்கோம். ஒருத்தர் சவுகரியத்துக்கு எல்லாம் செய்ய முடியாது ” என சாரதா எகிறிக்கொண்டிருக்க அதற்கு ஸ்வாமிநாதன் எதோ கூற வர   

“ ஒருத்தர் சவுகரியத்துக்கு செய்ய முடியாது. அப்போ நீங்க மட்டும் சவுகரியமா இருப்பிங்களோ ” என கேட்டு கொண்டு வந்த கதிரவனை கண்டு ஒரு நிமிடம் அனைவரும் அதிர்ந்து நின்றனர். இவன் எப்போ வந்தான் என எழிலை தவிர அங்கிருந்த எல்லோர் மனதிலும் வந்தது.

   காலை மூணு மணிக்கு வரும்போது விஜயனுக்கு போன் செய்து கதவை                 திறந்துவிட சொன்னதோடு விஜயனும் இன்னும் உறங்கி கொண்டிருப்பதால்  விஜயனை தவிர யாருக்கும் தெரியாது கதிரவன் வந்தது.

   கதிரவன் எழில்விழியை கண்டு,

“ உன்னைய சமைக்க சொன்னே. நீ என்ன பண்ணுற இங்க. போ வேலைய பாரு ” என கூறி அவளை அனுப்பிவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த புது பெண்ணை கண்டு

“ அட வாங்க சின்னமா எப்போ வந்திங்க ” என கேட்க 

“ இதோ இப்போதான் கதிரு.  மாமா தான் வீட்டுல தண்ணி தூக்கணும் வறியா பாப்பாத்தின்னு கேட்டாரு.  நானும் வந்தேன். சும்மா கூட தூக்கித்தறேன்னு சொன்னா மாமா தான் காசு வாங்கிக்கோ இல்லைனா நான் வேற ஆளு பார்த்துக்குறேன்னு சொல்லறாரு ”

“ ஆமா சின்னமா நீங்க காசை வாங்கிட்டே தண்ணிய தூக்கி குடுங்க எத்தனை குடம் என்ன காசுன்னு அப்பாகிட்ட பேசிக்கோங்க. எந்த வேலையும் பலன் இல்லாம செய்யாதீங்க. இந்தக்காலத்துல உழைப்புக்கும் மதிப்புருக்காது ஆளுக்கும் மதிப்புருக்காது ” என கூறி பாப்பாத்தியிடம் எத்தனை குடம் எவ்வளவு காசு என பேசி அனுப்பிவிட    அதுவரை அமைதியாக நின்றுகொண்டிருந்த அனைவரையும் கண்டு பல்லை கடித்த சாரதா 

 “ என்னங்க பார்த்திங்களா…. வீட்டுக்கு மூத்த பையன் நீங்க இருக்கீங்க உங்கள ஒரு வார்த்தை கேட்கல எல்லாம் உங்க அப்பாவும்  தம்பியும். எடுக்குறது தான் முடிவா. அப்போ நீங்க இங்க ஒண்ணுமே இல்லையா?? ” என சாரதா கத்த கணேசனோ,

“ எதுக்கு இப்போ கத்துற??… என்ன இப்போ உங்க… எல்லாருக்கும் உதவியா இருக்கனும்ன்னு தானே அப்பாவும் கதிரும்  இந்த முடிவு எடுத்துருக்காங்க.  அதுல உனக்கு என்ன பிரச்சனை ”

“  ஏன்  அப்போ இத்தனை நாள் ஆள் வைக்கல.  புதுசா வந்த அவ கஷ்டபடக் கூடாது அப்படித்தானே. அப்போ நானு….. ” என சாரதா ஏகத்திற்கு கத்த 

“ ஏய் கத்தாதன்னு  சொன்னே நீ ரூம்குள்ள வா பேசுவோம் ” என கணேசன் அழைக்க

“ இல்ல நீங்க இங்க சொல்லுங்க ”

“ ம்ப்ச் சாரதா  தேவை இல்லாம ஒன்னும் இல்லாததை பெருசு பண்ணாத ”

“ நான் பெருசு பண்ணுறேனா??… ”

“  ஆமா உனக்கு இப்போ என்ன??? ”

“  நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல வேலைக்கு ஆளு வச்சுருப்பாங்களா??… ”

“ நீ என்ன இங்க வேலை பார்த்து கிழிச்சுட்ட  உனக்கு ஒத்தாசைக்கு ஆளு வைக்க. நீ பார்க்குற வேலை என் பொண்டாட்டி வேலை தான். வேணும்ன்னா நீ உன் அப்பா வீட்டுக்கு போயிடு. அதுக்கு வேற ஆளை நா பார்த்துக்கறேன் ” என கணேசனும் கோவத்தில் வரைமுறை இல்லாது பேச அதில் சுவாமிநாதனும் தெய்வானையும் ஒரு சேர,

 “ கணேஷா ” “ பெரியவனே ” என கத்தினர்.

“ ச்சை மனுஷன் நிம்மதியா இருக்க முடியல” என கணேசன் வெளியே சென்று விட சாரதாவும் கணேசனின் வார்த்தைல அறைக்குள் சென்று அழ ஆரம்பித்தாள் 

   அதுவரை அதிருப்தியாக நின்றுகொண்டிருந்த தெய்வானையும் ஸ்வாமினிநாதனிடம் பேச முடியாது கதிரவனிடம்,

“ டேய் கதிரு  என்னடா இது என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம நீங்களா முடிவு  பண்ணுறீங்க” என கேட்க

   அதற்கு ஒன்றும் கூறாது அமைதியாக கதிரவன்  அங்கிருந்த நாற்காலியில் அமர,

“ அப்போ நாங்க எதுக்கு இங்க இருக்கோம்??…” என கேட்ட தெய்வானையிடம்

“ எல்லாம் உங்களுக் காகத்தான் அம்மா  இந்த ஏற்பாடு ”

“ டேய் போடா அங்குட்டு. இம்புட்டு நாளா நாந்தான் பார்த்தேன் வேலைய. இப்போ உன் பொண்டாட்டிய தண்ணி தூக்க சொன்னவுடனே ஆளு வச்சுட்டு இப்போ எனக்குன்னு கதை விடுறியா ” என தெய்வானை கூற

“ அம்மா நிஜமாத்தான் இன்னும் ஒரு வாரத்துல நான் என் பொண்டாட்டிய புதுக்கோட்டைக்கு என் கூட கூட்டிட்டு போக போறேன். அதான் உனக்கு ஒத்தாசைக்கு ஆளு வச்சேன் ” என கூறி கதிரவன் எழ         

 

“ என்னடா சொல்ற தனியா போக போறிங்களா!!…. ஒரு வார்த்தை சொல்லல???” என கேட்ட தெய்வானையின் பார்வை ஸ்வாமிநாதனிடம் செல்ல அவரின் முகமே சொன்னது அவருக்கும் இது புது செய்தி என

“ சொல்லுடா???… நீயா உன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்குற” என தெய்வானை கத்த 

“ என் பொண்டாட்டி எங்க இருக்கணும்னு  நான் தான் முடிவு பண்ணனும். இன்னும் ஒரு வாரம் இங்க இருப்பா. நான் அங்க வீடு பார்த்துட்டு கூட்டிட்டு போறேன்”

“ டேய்!!…” என எதோ பேச வந்த தெய்வானையை பேச விடாது

“ இங்க பாருமா அண்ணே பொண்டாட்டிய  பேசவிட்டு வேடிக்கை பார்க்குற. ஒரு வார்த்தை பேசாம இருன்னு நீ சொல்லவே இல்ல. அதுல அத்தாட்சியும் அண்ணனை வாய்க்கு வந்தத பேசுது. ஆரம்பத்துலையே நீ கண்டிக்காம  இப்போ பெரியவனேன்னு  கத்துனா ஆச்சா.  இதை பார்த்து என் பொண்டாட்டியும்   என்னைய மதிக்கலைன்னா??…. அண்ணன் மாதிரி பொறுமையா போற ஆளு இல்ல நானு. போடி உன் அப்பன் வீட்டுக்குன்னு அனுப்பிட்டு என் வழிய பார்த்துட்டு போயிட்டே இருப்பேன். அதான் அவ்வளவு தூரம் போக வேணாம்னு தனியா போலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் அவ்வளவு தான்” என கூறி கதிரும் சென்றுவிட

  தெய்வானையோ இதுவரை தனக்கு அடிமையாக சிக்கியிருந்த மருமகள் தனியாக செல்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது வெளியே சென்றுவிட,

 ஸ்வாமிநாதனோ, “ பயபுள்ள பொண்டாட்டிய விட்டு ஒரு வாரம் இருக்க முடியாம ராத்ரியோட ராத்ரியா வந்துட்டு. பொண்டாட்டி மதிக்க மாட்டா நான் தனியா கூட்டிட்டு போறேன் என் கிட்டையே  கதை விடுறான். எங்குட்டோ ரெண்டும் சந்தோசமா இருந்தா சரிதான்”

என எண்ணிக்கொண்டு சென்றுவிட்டார்.

   மாலையில் கதிரவனும் கிளப்பிக்கொண்டிருக்க எழில்விழிக்கோ இன்னும் ஒரு வாரத்தில் கதிரவனுடன் செல்வது தெரியாது. காலையில் அவ்வளவு சண்டை நடந்தும் கண்டு கொள்ளாது இருந்துவிட்டாள். அதுதான் எழில்விழியின்  டக்கு.

    கதிரவன் கிளம்பி அவனின் அறையில் எழில்விழியிடம்,

“ போய்ட்டுவரேன்” என கூறி நகர

“ என்னங்க” என மெதுவாக அழைத்தாள் எழில்விழி.

  அதில் அவள் புறம் திரும்பியவன்,

“ இப்போ என்ன??… எப்போ வரேன்னு சொல்லனுமா இல்ல போகாதீங்கன்னு அழ  போறியா” என நக்கல் செய்ய

  அதில் முகமும் அகமும் சுருங்க,

“ இல்லங்க ராத்திரிக்கு உங்களுக்கு சப்பாத்தியும் தக்காளி தொக்கும் வச்சேன். அதான் நீங்க திட்டுவீங்களோன்னு பயமா இருக்கு” என கூறி ஒரு சிறு பையை நீட்ட

அதனை பார்த்த கதிரவன் ஒன்றும் கூறாது  எழில்விழியின் அருகில் வந்து அவன் விழியின் விழியை பார்க்க அதில் தெரிந்த பயமும் தயக்கமும் மனதில் சிறு வலியை உண்டாக்க அதை உணராது வேகமாக அவளை இறுக்க அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து,

“ இன்னும் ஒரு வாரத்துல என் கூட புதுக்கோட்டை  வர தயாரா இரு” என கூறி விடைபெற அவன்  கூறிய செய்தியிலும் செய்த செயலிலும் அதிர்ந்து நின்றாள் எழில்விழி. இதழ் மட்டும் அவளறியாமல்  வெட்கத்தில் புன்னகை பூத்தது.  

 

கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தனா கட்டிப்பிடித்தனா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
சரி தான் இது காதலின் அறிகுறிதான்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!