மாலை வெயிலிலும் அங்கிருந்த கூட்டம் இம்மியளவும் அசையவில்லை. சலசலப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே சென்றது. எந்நேரமும் வெடித்துவிடும் கோவம் அனைவருக்கும்.
இழந்த இழப்பு அத்தகையது. ஒரு கிராமமே வருத்தம்கொள்ளும் நிலையில் அந்த ஊரின் தலைமைப்பணி உள்ளது என்பதை அவர்கள் உணரவே மூன்று ஆண்டுகள் எடுத்திருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் தான் வந்தார் அய்யனார்.
“அய்யனார் ஊற மதிச்சு வர்ற நேரமா இது?” நடுநிலையை அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் கேட்டார்.
“வேலை இருந்ததுங்க” என்றார் அய்யனாரும் சாந்தமாக.
“யோவ் நீ தூங்கி எந்திரிச்சிட்டு வந்து வேலைனு ராவ கூட்டாத” சலசலத்தது கூட்டம் தேவாவின் பேச்சை கேட்டு.
“இவிங்க வந்தாலே ஏதாவது ஏழரைய கூட்டிட்டு தான் இருக்காய்ங்க, டேய் பெரிய மனுசங்க நாங்க பேசுகிறோம், நீங்க கமுக்கமா இருக்குறது நல்லது” என்றான் அய்யனார் பக்கம் ஒருவன்.
“நீங்களே பேசுனா இந்த கூட்டம் எதுக்கு? செத்த செவனேனு இருங்கயா” குரலை உயர்த்தி கூட்டத்தை அமைதிப்படுத்தினார் இளங்கோவன்.
அதனால் வேறொருவர் பேச்சை எடுத்தார், “அய்யனார் ஊர் தலைவரா நீ பண்ண வேண்டிய வேலைய எதுவும் பண்ண மாட்டிக்கிறதா உன் மேல புகார் வந்துருக்கு” புகாரை கேட்டதும் அவர் பார்வை தேவாவிடம் தான் சென்றது.
“புகார் குடுத்தவிங்க யார்னு அழுத்தி சொல்லலாம்ல என்ன இது தூணுக்கு பின்னாடி நின்னுட்டு” உசுப்பிவிடும் வார்த்தைகள் அய்யனாரிடமிருந்து.
நண்பனை பேசியதும் குணாவிற்கு கோவம் வர, “என்ன பார்வை அங்க போகுது? பிராது குடுத்தது நானு, அத விட்டு அங்க என்ன சல்லய கூட்டிகிட்டு இருக்கீங்க?” கேள்வி கேட்டான் குரலை உயர்த்தி.
“ஊர் தலைவர்கிட்ட பேசுற தேவா நியாபகத்துல வச்சு வார்த்தையை விடு” எச்சரித்தார் அந்த கூட்டத்தின் பொது ஆள் ஒருவர்.
“ஊர் தலைவர் மாதிரி நடந்துருந்தா நாங்க ஏன் நடு ஊர்ல நிக்க வச்சு கேள்வி கேக்க போறோம்?” அதே மனிதரிடம் மீண்டும் ஒரு கேள்வியை வைத்தான்.
“என்னங்கடா உங்களுக்கு அவர் பண்ணல? இந்த ஊருக்கு ரோடு போட்டு பாலம் கட்டி, போன வருஷம் மழை பேஞ்சு பயிர் எல்லாம் முங்கி போன நேரம் சோத்துக்கு வழி இல்லாம கிடந்தப்போ கலெக்டர கூட்டிட்டு வந்து நிவாரணம் வாங்கி தந்தது யாரு?
இப்ப மூணு மாசம் முந்தி நாக்க தொங்கப்போட்டு பாத்தீங்களே அந்த ஆடலும் பாடலும். எல்லாம் எங்க அய்யா தான்” கூட்டாளி சொல்ல சொல்ல அய்யனாரின் கைகள் மீசையை கம்பீரமாய் நீவிவிட்டது.
“என்னது பாலம் போட நீங்க அலைஞ்சீங்களா? ரூட்டை குடுக்காதீங்கய்யா… பாலம் போட்டது இவரு தலைவர் ஆனதும் தான், ஆனா அதுக்கான பெர்மிட் என் தாத்தா தலைவரா இருந்த சமயத்துலையே வந்துடுச்சு” – தேவா
“மாப்பிள்ளை ரோடு போட்டேன், நிவாரணம் வாங்கி தர்றேன்னு சொன்னாய்ங்களே, அந்த அழகு ரோடு போட்ட சமயம் நிலத்துல இன்னைக்கு வர தார கொட்டி கெடக்கு. அத சொல்ல மாட்டிக்கிறாய்ங்க. இந்த ஆடலும் பாடலும் கூட நாம பெர்மிஸ்ஸின் வாங்கி பண்ணது தானேடா?”
நண்பனிடம் கேட்பது போல பேசிய வெற்றி பிறகு அய்யனாரை பார்த்து, “ஏங்க உங்க வேலை எப்படி, எந்த அளவுல இருக்கும்னு இந்த ஊருக்கே தெரியும். பக்கத்துல நாலு காவாலி பயலுகல வச்சு ரவுசு காட்டுனா இவிங்க மெரண்டுடுவானுங்க எந்த கேனைப் பயலாவது சொல்லிருந்தா அந்த பேச்சை இத்தோட மறந்துடுங்க” என்றான்.
“என்னமோ நான் இவனுங்கள தான் நம்பி பொறந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க? டேய் எத்தனை பயலுக வந்தாலும் ஒத்தையா நின்னு சமாளிப்பேன்டா.
பக்கத்துக்கு ஊர்காரைங்க கூட எல்லாம் வம்பு பண்ணிட்டு நீங்க நிக்கிறப்போ போலீஸ் பக்கம் போகாம நான் காப்பாத்துனத சொல்லுங்கடா பாப்போம்” இருக்கையிலிருந்து எழுந்து அவர்களை பார்த்து கோவமாக கேட்டார்.
அதுவரை ஒரு ஓரமாக நின்ற குணா அவரை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான், “ம்ம்ம் அதான் பாத்தோமே. நீ மாட வெட்டி, தப்பே பண்ணாதவனை ஒரு நாள் முழுக்க செல்லுல வச்சிருந்தியே”
“எப்பா அய்யனார் தான் அத பன்னானு ஆதாரமே இல்லை, அப்டி இருக்கப்போ அவன் மேல கை வச்சா அவன் போலீஸ தானே கூப்பிடுவான்” நாட்டாமை பெரியவர் ஒருவர் அவர்களிடமே நியாயம் கேட்டார்.
“ஆதாரம் என்ன ஆதாரம்? எங்களுக்கு தெரியாதா என்ன… இந்த ஊர்ல இந்த ஆள மாதிரி மனசாட்சியே இல்லாம வேற யார் இருக்கா” – குணா
“என்னடா மனசாட்சி இல்லாததை நீ பாத்த? பக்கத்துல வைகை ஆத்து தண்ணிய வச்சுக்குட்டும் குடிக்க தண்ணிக்கு சிங்கி அடிச்சப்போ வீட்டுக்கு வீடு தண்ணிய விட்டது நான் தானே?” அய்யனார்.
“எப்பா உலக உத்தமரே, உன் லட்சணம் என்னனு எடுத்து காட்ட எனக்கு ஒரு நாள் போதும். கவர்மெண்ட்ல எவ்ளோ காசு சான்ஷன் ஆச்சு, ஊருக்கு எவ்ளோ வந்து சேர்ந்துச்சுனு நான் எடுத்து காட்டவா? இங்க அத பத்தி பேச வரல, போன உசுருக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா? உன்னால ஏதாவது தான் பண்ண முடியுமா?” வந்தான் தேவா.
“அந்த குளத்தோட ஆழத்தை பத்தி தெருஞ்சும் நீங்க ஏன்யா அவ்ளோ தூரம் வர போறீங்க?” என்றார் அய்யனார் கேலியாக.
“ஓ நாங்க என்ன பண்ணனும்னு நீங்க தான் சொல்லுவிங்களோ? ஏன் தேர்தல்ல ஜெயிச்ச நேரம் ‘மக்கள் வாக்கே மகேசன் வாக்குன்னு’ சொன்ன தலைவர் இப்ப ஊர் மக்கள் சொல்றத கேட்டு தான் டெய்லி பல்லு வெளக்குறதுல இருந்து கழுவுற வர பாக்குறீங்களா”
வெற்றி கேட்ட கேள்வியில் ஆவேசமடைந்த அய்யனாரின் ஆள் ஒருவன் வெறியோடு வந்து வெற்றியின் சட்டையை பற்றி அடித்திட, நண்பனுக்கு துணையாக தேவாவும் குணாவும் உடனே சண்டைக்கு வர அவ்விடமே நொடியில் கபளீகரமானது. கூச்சலும் இரைச்சலும் அதிகமாக ஊர் மக்கள் பலர் சேர்ந்து தான் இருவரையும் பிரித்து நிறுத்தினர்.
அந்த மனிதருக்கான மரியாதை அவ்விடத்தில் அது போல் கொடி கட்டி பறக்கும். இளங்கோவன் கூறினால் அது சரியும் இருக்குமென நம்பி தான் அவர் பேச்சை கேட்டு அய்யனாருக்கு தங்கள் ஆதரவை தந்து அவரை ஊரின் தலைவர் பதவியில் அமர்த்தியது.
பெரியவர் தனக்கு சாதகமாக பேசியும் அய்யனாரின் கோவம் சிறிதும் மட்டுப்படவில்லை, அரசியல்வாதியாக பவனி வர ஆசைகொள்ளும் மனிதருக்கு இதெல்லாம் இந்நேரம் பழக்கப்பட்டிருக்க தான் வேண்டும்,
ஆனால் முகத்திற்கு நேராக இத்தகைய கேள்வியை கேட்கும் மனிதர்களிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நாசமாக்க தான் துடித்தது.
“சரி உங்க கதைக்கே வர்றேன், அந்த ஆள்கிட்ட கேளுங்க, கணக்குப்பிள்ளையோட மக குளத்துல விழுந்த அன்னைக்கே குளத்துல ரொம்ப கொடி வளந்து கெடக்குது சுத்தம் பண்ண ஏற்பாடு பண்ணுங்கன்னு நாங்க மூணு பேர் தான் போய் சொன்னோம். நாங்க சொல்லி ரெண்டு மாசம் ஆகுது.
பன்றேன் பன்றேன்னு சொன்னவரு இன்னைக்கு வர அந்த பக்கமே எட்டி கூட பாக்கல. அப்போ அவன் என்ன கேனையன் சொல்றது-னு தானே இருந்திருக்கார்?” வினவினான் தேவா.
“என்னமோ நான் போன் அடிச்சு சொன்ன ஒடனே கவெர்மென்ட்ல இருந்து ஆள அனுப்புற மாதிரியே பேசிட்டு போற? ஒரு ஒரு வேலையும் நடக்க மூணு மாசம் ஆகும்” என்றார் அய்யனார்.
“சரி நான் சொல்லியே மூணு மாசம் ஆகுது. நீங்க எந்த வகைல நடவடிக்கை எடுக்க முயற்சி பண்ணிங்கனாவது எனக்கு காட்டுங்க. இப்படியே இந்த இடத்தை கலைச்சிட்டு நாங்க கெளம்புறோம்”
பிடிவாதமாக நின்றவனை என்ன சொல்லி ஏமாற்றுவது? படிக்காதவர்கள் அதிகம் என நம்பி தானே தைரியமாக இந்த பதவிக்கு ஆசைப்பட்டது. அதுவும் இவன் வந்து தன்னை கேள்வி கேட்பான் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
“எல்லாத்துக்கும் ஆதாரம் காட்டு ஆதாரம் காட்டுனு சொல்றவன் ஒரு நாள் என்னோட இடத்துல நின்னு பாருடே அப்போ தான் தெரியும் இது எவ்ளோ கஷ்டம்-னு” எந்த நிலையிலும் விளக்கம் மட்டும் கொடுக்க தயாராக இல்லை அய்யனார்.
“அந்த கருமம் புடிச்ச வேலை எல்லாம் இங்க வேணாம். உன்ன என்ன உன் கை காசு போட்டா வேலை பாக்க சொல்லுது?” அருகில் நின்ற ஒருவரின் தோளில் கிடந்த துண்டை எடுத்தவன், “இப்ப என்ன உனக்கு நான் உன்னோட வேலைய பாக்கணுமா?”
அய்யனாரிடமிருந்து பதில் வரவில்லை. துண்டை தரையில் விரித்து தன்னுடைய சட்டையிலிருந்து ஐநூறு ரூபாய் பணம் ஒன்றை அதில் வைத்தான்.
“என் ஊர்ல இந்த மாதிரி காரணமே இல்லாம இனி ஒரு உயிர் பலியாக கூடாதுன்னு என்னால முடிஞ்ச இந்த உதவிய நான் பண்ணுறேன். உங்களால இருவது ரூவா முடிஞ்சாலும் குடுங்க. எவ்ளோ காசு வருதோ அது நம்மளோட குளத்தை சுத்தம் பண்ண மட்டும் தான் ஆகும்.
இதுல வர்ற காச விட அதிகமா பணம் தேவைப்பட்டா, நான் காசு போடுவேன். அப்டி அதுல காசு மிச்சம் ஆச்சுன்னா நம்ம அம்மன் கோவில் உண்டியல்ல போட்டுடுவேன்”
தெளிவாக தகவல் கூறி ஓரமாக நின்றுவிட அங்கு குழுமியிருந்த ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை அதில் வந்து போட்டு சென்றனர்.
அய்யனார் தேவாவை முறைக்க, அவனோ அவரை பார்த்து புருவம் தூக்கி சிரித்தான். அதுவும் ஒரு பக்கம் சிரிப்பை பற்களுக்கிடையில் வைத்து சிரித்தது தன்னுடைய கர்வத்தை குடைவது போல் இருந்தது அய்யனாருக்கு. மக்கள் அனைவரும் பணம் கொடுத்ததும் அங்கிருந்த ஒருவரையே வைத்து பணத்தை எண்ணி கணக்கை காட்டினான்.
“என்னால எதுவும் முடியாதுனு ஊரே கூட்டி அசிங்கப்படுத்துறீங்களா? இன்னைக்கு சரி நாளைக்கு எதுவும் பிரச்சனை வந்தா என்கிட்ட எவனும் வந்து நிக்க மாட்டிங்களா என்ன?” என்றார் ஆவேசமாக.
“எப்பா என்ன இது சத்தெடுக்குற? அவன் என்ன நல்லத தானே செய்றான்” பேரனுக்காக பேசினார் இளங்கோவன்.
“இப்ப எதுக்கு தலைவரே வாலு வாலுன்னு கத்திக்கிட்டு நிக்கிற? சரி நான் செஞ்சதாவே வேணாம். குளத்துக்காக மக்கள் நன்குடை செஞ்சதா வச்சு நீயே இந்த வேலைய முடிச்சு குடேன்?”