“ பிள்ளைகள் ரெண்டும் உன்னைய தேடுனா என்னால சமாளிக்க முடியாது”
“ சரிங்க”
“ எங்க அம்மானால எதையும் சமாளிக்க முடியாது அவுங்களுக்கு வயசாகிடுச்சு”
“ சரிங்க”
“ என்ன சரி சரின்னு போ போய் சீக்கிரம் கிளம்பு நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடுறேன்” என கூறிவிட்டு வீரநாயகம் அங்கிருந்து நகர்ந்துவிட
கனகாவோ வேகமாக அங்கிருந்து சமையல் அறைக்கு சென்று எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதனை கண்ட வீரநாயகம் கனகாவின் முத்த மகள்,
“ அம்மா… அம்மா… யம்மோ…..” என கத்த
“ என்னடி எதுக்கு கத்துற??….”
“ பின்ன என்ன உன் அம்மா வீட்டுக்கு போறத்துக்கு எதுக்கு நீ இப்படி பயந்து பயந்து அப்பா சொல்லறது எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டுற”
“ ஏய் முதல்ல நமக்கு காரியம்தாண்டி பெரிசு பத்து வருஷம் கழிச்சு நானே ஊருக்கு போறதுக்கு அன்னம் தண்ணி ஆகாரம் இல்லாம ரெண்டுநாளா அழுது ஒப்பாரி வச்சு உங்க அப்பத்தாகிட்டையும் அப்பாகிட்டயும் அனுமதி வாங்கியிருக்கேன் எனக்கு காரியம் தான் பெருசு”
“ அது சரி நாங்க என்ன சின்ன பிள்ளைங்களா உன்னைய தேட எனக்கு பதினேழு ஆச்சு இவளுக்கு பதினஞ்சு ஆச்சு சும்மா பிள்ளைங்க தேடும்ன்றத ஒரு காரணமா பேசாம ரெண்டு நாள் சேர்ந்தாப்புல இருந்துட்டு வாம்மா”
“ ஹ்ம்ம் சரி” என கூறிக்கொண்டு மீண்டும் எதையோ தேடிய கனகத்தை கண்டு
“ என்னத்தமா தேடுற??”
“ ஹ்ம்ம் இங்க பருப்பு டப்பால காசு வச்சுருந்தேன் அதான் டப்பாவை தேடுறேன்” என கூறி டப்பாவை கண்டுபிடித்து பணத்தை எடுத்த கனகத்தை கண்டு
“ என்னமா இம்ம்புட்டு காசு வச்சுருக்க”
“ ஹ்ம்ம் என்ன செய்ய எதாவது மிச்சம் பண்ணி இப்படி வச்சாதான் நமக்கு அவசரத்துக்கு உதவும். உங்க அப்பா குடுத்த காசை வச்சு என்ன செய்ய அடிக்கடி போனா அதுவேற. பத்து வருஷம் கழிச்சு போறேனே அண்ணன் பிள்ளைகளுக்கு எதாவது வாங்கிட்டு போக வேணாம்.
இதுல உங்க அப்பத்தா கிழவி நேத்து ராத்திரி நூறு ரூபாயை குடுத்து பாத்து பதனமா போய்ட்டுவா. ரூபா தாளு பத்திரம்ன்னு சொல்லுது. இதுல உங்க அப்பா மறுபடியும் அம்மாகிட்ட காசை வாங்க முடியாதுன்னு போய் உங்க ஸ்வாமிநாதன் பெரியப்பாகிட்ட கடனை வாங்கியாந்துருக்காரு.
“ அப்பா நல்லதானேம்மா சம்பாரிக்குறாரு”
“ சம்பாரிச்சு என்ன செய்ய அம்மாகிட்ட கணக்கு காட்டனும்ல நூறு ரூபாய் பத்தாதுன்னு சொன்னா உங்க அப்பத்தா உன் ஆத்தாவீட்டுக்கு போகவேணாம்ன்னு சொல்லிடும் அதான் கமுக்கமா இருந்தேன். இந்த டப்பாக்குள்ள வச்ச காசை வச்சு போய்ட்டு வந்துடலாம்ன்னு நினைச்சேன். அதுக்குள்ள உங்க அப்பா காசு குடுத்துட்டாரு சரி சரி பார்த்து பத்திரமா இருந்துக்கோங்க சரியா”
“ ஹ்ம்ம்…. ம்மா நீ பார்த்து போ அங்க எல்லாரையும் கேட்டதா சொல்லுமா’
“ சரி சரிடா தங்கங்களா” என கனகம் கூறிவிட்டு வீரநாயகத்துடன் கிளம்பிவிட்டார்.
பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு நின்றுகொண்டிருந்த கனகத்திடம் வீரநாயகம்,
“ கனகு பஸ்ஸு வர கால் மணி நேரமாகும்”
“ சரிங்க”
“ ஹ்ம்ம் அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும்’
“ என்னங்க”
“ ஸ்வாமிநாதன் அண்ணாகிட்ட காசு வாங்க போனேன்ல”
“ ஆமா’
“ அப்போ அவரு கதிருக்கு பொண்ணு பார்க்க சொல்லி சொன்னாரு”
“ அதுக்கென்னங்க தாராளமா நல்ல இடமா பார்த்துடுவோம்ங்க”
“ பார்ப்ப…. பார்ப்ப….. ஏன் பார்க்காம????…. உனக்கு என்ன??…. எதாவது பிரச்சனைனா இந்த கதிரு பைய என்னையல போட்டு அடிப்பான். உனக்கு என்ன” என எறிந்துவிழ
வீரநாயகத்தின் இந்த திடீர் கோவத்திற்கான காரணம் புரியாது கனகம் முழிக்க,
“ என்ன முழிக்குற??…. இங்க பாரு கதிருகூட எல்லாம் எந்த பொண்ணும் வாழ முடியாது சரியா. பெத்த ஆத்தா, அப்பன் கூட பொறந்த பொறப்புன்னு யாரையும் மதிக்கமாட்டான். இதுல வாழப்போற பொண்ணை மட்டும் நல்லா வச்சுக்குவானா சொல்லு. அதனால அவனுக்கு பொண்ணு பார்க்குற வேலையெல்லாம் வேணாம் சரியா” என முறைப்புடன் கூறிய வீரநாயகத்தின் மீது மனதில் புசுபுசுவென எரிய கோவத்தை வெளியே காட்டாது அமைதியாக
“ ஏங்க அப்புறம் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க???”
“ ஹ்ம்ம் நீ உன் அம்மா வீட்டுக்கு போயிட்டு அங்க எதாவது சொந்தக்காரன் கேப்பான் பொண்ணு இருக்கா மாப்பிளை இருக்கானு. கேட்ட உடனே பொசுக்குன்னு இருக்குன்னு சொல்ல கூடாது பாரு அதான்”
“ ஹ்ம்ம்” என தலையை அசைத்துவிட்டு கனகம் பேருந்தில் ஏறி சென்றுவிட வீரநாயகமும் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
“ என்ன அன்னம் இவ்வளவு வேகமா எங்க கிளம்புற” என வெங்கடேசன் கேட்க,
“ அட உங்க சின்னம்மா கந்தலெட்சுமி இருக்குல்ல”
“ ஆமா”
“ அதுக்கு கண்ணு ஆபெரேஷன் பண்ணிருக்குல”
“ ஆமா அதான் நேத்து நீயும் உன் ரெண்டாவது பொண்ணு சரஸ்வதியும் போய் பார்த்துட்டு வந்திட்டீங்களே அப்புறம் என்ன”
“ அட நீங்க வேற இன்னைக்கு இந்த கனகு பிள்ளை வருதாம். ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்”
“ அடேங்கப்பா!!!….. கனகு இங்க வந்து ரொம்ப நாலு ஆச்சுல்ல”
“ ஹ்ம்ம் ஆமாங்க”
“ சரி சரி போயிட்டுவா நான் கொஞ்ச நேரம் உறங்குறேன்” என வெங்கடேஷன் உறங்க அன்னம் கந்தலெட்சுமி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கந்தலட்சுமி வீட்டில் கனகாவை கண்ட அன்னம்,
“ என்ன கனகு எப்பிடியோ வெள்ளாறுல இருந்து வைகைக்கு ஒரு வழியா வந்து சேர்ந்துட்ட” என கேட்டுக்கொண்டு வர
“ மதினி வாங்க வாங்க. நானே உங்களையும் அண்ணனையும் பார்க்க வரணும்ன்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே வந்திட்டீங்க”
“ பின்ன நீ பார்க்க வரதுக்குள்ள உன் புருஷன் மூக்கு வேர்த்து உன்னைய கூட்டிட்டு போய்ட்டா என்ன செய்ய அதான் நானே ஒரு எட்டு போய் பார்த்துடலாம்ன்னு வந்துட்டேன்”
“ அது என்னமோ சரிதான் மதினி நான் வாங்குன வரம் அப்பிடி ஆமா வீட்டுல எல்லாரும் சவுக்கியமா??”
“ ஹ்ம்ம் எல்லாரும் நலன்தான்”
“ நம்ம சரசை (அன்னத்தின் ரெண்டாவது மகள் ) எங்க குடுத்திருக்கிங்க மதினி??”
“ எங்க இங்க உள்ளுருளையே கொடுத்துட்டேன். நம்ம வீட்டுக்கு அடுத்த தெருல தான் இருக்கா”
“ சரி சரி மதினி நம்ம கடைசி பாப்பா எழிலு என்ன செய்து. ரொம்ப சின்னதுல பார்த்தது. படிக்குதா பிள்ளை??….”
“ எங்க…….” என எழில்விழி பற்றி கூறிக்கொண்டே அவளுக்கு வரன் பார்ப்பதையும் கூறிய அன்னலெட்சுமியிடம்,
“ ஏன் மதினி எப்பிடி மாப்பிள்ளை எதிர்பார்க்குறீங்க??” என வாய் கேட்டாலும் காலையில் வீரநாயகம் பேசியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“ ஒன்னும் பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்ல கனகு. பிள்ளை ரொம்ப அமைதி அதுக்கு ஏத்தாப்புல பார்க்கணும். அதோட வரப்போறவரு எதாவது வேலையில இருக்கனும்” என கூறிக்கொண்டு தனது சகோதரி பொன்னுத்தாயி கொண்டுவந்த வரனையும் பற்றி கூறி,
“ என்னமோ போ கனகு இந்த பொன்னு மேல இருக்குற கோவத்துல உன் மகளுக்கு ஒரு இன்ஸ்பெக்டர்ன்னா என் மகளுக்கு ஒரு கான்ஸ்டபிளாவது அமையாதான்னு கேட்டுபுட்டேன். அதுக்காண்டியாவது என் மகளை ஒரு அரசாங்கத்து உத்தியோகத்துல இருக்கறவருக்கு குடுக்கணும்ன்னு ஆசை.
ஏன் கனகு உங்க பக்கம் ஏதாவது நல்ல சம்பந்தம் இருக்குமா??” என கேட்ட அன்னலெட்சுமியின் குரலில் இருந்த ஏக்கமும், ஆசையும், தாயின் பரிதவிப்பும், வயது மூப்பின் பயமும் கனகுவை வேற எதையும் சிந்திக்க வைக்காது,
“ இருக்கு மதினி” என கூறிவிட அன்னலெட்சுமியின் விழிகள் பளிச்சிட்டது
“ யாரு கனகு???”
“ ஸ்வாமிநாதன் மாமாவ நியாபகம் இருக்கா மதினி”
“ யாரு???” என யோசித்த அன்னலெட்சுமியிடம்
“ அதான் எனக்கு கல்யாணத்துக்கு எங்க வீட்டுக்காரருக்கு எல்லாம் முன்ன நின்னு செஞ்சாங்கள.”
“ ஹ்ம்ம் ஆமா ஆமா நியாபகம் வந்துடுச்சு. அவரு தங்கமான மனுஷனாச்சே. ஆனா அந்த வீட்டம்மா வாய்தான்…..” என இழுத்த அன்னலெட்சுமியிடம்
“ அட என்ன மதினி அவருக்கு மொத்தம் அஞ்சு பிள்ளைகள் அதுல மூத்த பையனுக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொம்பள பிள்ளை இருக்கு. அடுத்த ரெண்டு மகள்களையும் பக்கத்தூருல ஒரே குடும்பத்துல அண்ணன் தம்பிக்கே கட்டிக்குடுத்துட்டாங்க.
நாலாவது தான் கதிரு அவனுக்குத்தான் அவுங்க வீட்டுல பொண்ணு பார்க்குறாங்க பொண்ணை கூட என் வீட்டுக்காரர பார்க்க சொல்லிருக்காங்க. கடைசி ஒரு பையன் அவனும் படிச்சுகிட்டு இருக்கான் ” என சற்றே பெருமையாக பேசினார் கனகம்.
“ அப்போ மாப்பிள்ளை தம்பி என்ன பண்ணுறாப்புல.”
“ எல்லா நீங்க எதிரிபார்க்குறமாதிரி கான்ஸ்டபில் தான்” என கனகம் கூறிக்கொண்டிருக்கையிலே
“ அப்போ இந்த சம்பந்தத்தை முடிச்சிடலாம் கனகம்” என உற்சாகத்துடன் கூறிய அன்னலட்சுமி எதோ யோசித்தவராக,
“ ஏன் கனகு பையனுக்கு ஏதும் கெட்ட பழக்கம் இல்லையே” என தயங்கி கேட்க
“ அது எல்லாம் இல்ல மதினி. ஆனா……” என இழுத்த கனகுவிடம் படபடக்கும் இதயத்துடன்
“ என்ன இழுக்குற கனகு…..”
“ இல்ல அது பையன் நல்ல பையன் தான் ஆனா அவனுக்கு கோவம்ந்தான் மூக்குக்கு மேல வரும் அதோட அவரு சொல்றதுதான் சட்டம்ன்னு இருப்பாரு”
“ இது ஒரு விஷயமா எந்த ஆம்பளைக்குத்தான் கோவம் வராது அதுவும் சும்மா இருக்குறவங்களுக்கே சுர்ர்ன்னு கோவம் வருது. இதுல இந்த தம்பி உத்தியோகத்துல இருக்கு. கோவம் வராமலா இருக்கும்”
“ இல்ல மதினி யாருகிட்டயும் சிரிச்சு எல்லாம் பேசமாட்டாப்புல சிடுசிடுன்னு தான் இருக்கும் முகமே”
“ இது எல்லாம் ஒரு காரணமா. அது எல்லாம் என் மக பார்த்துக்குவா. அவ மட்டும் என்ன பல்லு சுளுக்கிக்குற அளவா பேசுவான்னு நினைக்குற. சரியான அமைதி. அவ வாய துறந்து அவளா பேசுனாதான் அவளுக்கு பேச தெரியும்ன்னு தெரியும் மத்தவங்களுக்கு. அதனால இது எல்லாம் ஒரு காரணம் இல்ல ஒழுங்கா நாளைக்கு காலையில வந்து ஜாதகத்தை வாங்கிட்டு போ இந்த இடத்தை முடிக்கபாப்போம் கனகு” என கூறி அன்னலட்சுமி விடைபெற கனகு மனதிலோ,
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ