“ ஹ்ம்ம்… என்ன” என புருவத்தை தூக்கிய கதிரிடம் எதுவும் கூறாது வேகமாக குடத்துடன் வீட்டிற்குள் சென்ற எழில்விழியின் சற்றுமுன் விரிந்த விழியின் அசைவை நினைத்து தன்னை மறந்து ரசனையுடன் நின்றுவிட,
எழில்விழி வீட்டிற்குள் வந்த வேகத்தில் எதார்த்தமாக வாசலை பார்த்த அன்னலெட்சுமியும் அங்கு நின்று கொண்டிருந்த கதிரை கண்டு அதிர்ந்து பின் பரபரப்பாக,
“ அப்பு வாங்க… வாங்க…” என அழைக்க அன்னலெட்சுமியின் குரலில் திரும்பிய கதிர் அங்கு அன்னலெட்சுமியை கண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாது நிற்க
“ அட!!… வாங்கப்பு உள்ள வாங்க. அண்ணா மதினி யாரும் வரலையா??” என பார்க்க அவரின் உறவுமுறையை வைத்தே அவர் எழிலின் அம்மா என புரிந்துகொண்ட கதிர்
“ இல்ல யாரும் வரல” என தனக்கே உரிய மிடுக்கோடு கூறி அலட்சிய பாவனையுடன் வீட்டிற்குள் நுழைய அங்கு இருந்த வெங்கடேசனும் கதிரை கண்டு ஒரு நிமிடம் ஜெர்க்காகி,
“ வா…. வாங்கப்பு….. எப்பிடி இருக்கீங்க??…. என்ன இம்புட்டு தொலைவு மச்சான் கூட சொல்லலையே??” என கேட்ட வெங்கடேசனிடம்
“ இல்ல இங்க ஒரு கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு வந்தேன் அதான் அப்படியே…..”
“ அப்படியே??….”
கதிர் “ ஹம்ம்ஹும்ம்” என செருமி
“ அதான் அப்பிடியே கல்யாண பட்டு எங்க எடுக்கலாம்ன்னு கேட்க வந்தேன் ” திமிராக கேட்ட கதிரிடம் வேற என்ன கேட்பது என தெரியாது
“ உங்களுக்கு எங்க சவுகரியமோ அங்க எடுக்கலாம்” என வெங்கடேசன் கூறிக்கொண்டிருக்கையில் அன்னலெட்சுமி காபி கொண்டு வந்து கொடுக்க அதை குடித்துவிட்டு கையில் வைத்திருந்த கவரையும் அன்னலெட்சுமியிடம் குடுத்துவிட்டு விடைபெற,
அதுவரை உள் அறைக்குள் இருந்த எழில்விழி பதடத்தில் நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.
‘ யாரு இவரு என்ன தில்லு நீ தான் வேணும்ன்னு வீட்டு வாசலுக்கு வந்து சொல்றாரு. அம்மா அப்பா பேசுறதை வச்சு பார்த்தா…. அவரோ??…. அச்சச்சோ!!!….. என்னனு யோசிக்க முடியலையே ’ என எண்ணிக்கொண்டு அமைதியாக அடுக்களையில் இருந்த அன்னலெட்சுமியிடம்,
“ அம்மா ” என மெதுவாக அழைத்த எழில்விழியை கண்டு
“ என்ன எழிலு?? ”
“ இல்ல… அது… அது…. என்ன சமைக்கட்டும் ”
“ ஒன்னும் வேணாம். இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் தான் இருக்கு இனிமே அடுப்புல நிக்க வேணாம். நானே சமைச்சுக்குறேன் போ போய் வீட்டை பெருக்கு ”
“ ஹ்ம்ம் சரிம்மா ” என கூறிக்கொண்டு நகராமல் அங்கு நின்றுகொண்டிருந்த எழில்விழியை கண்டு
“ என்ன மசமசன்னு நிக்குற போ போய் பெருக்கு ”
“ ஹ்ம்ம். அம்மா நா…. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கவா?? ”
“ ஏய்!!…. உன்னையைத்தான்டி” என அன்னலெட்சுமி எழில்விழியை உலுக்க
“ ஆன்!!!…. அம்மா என்னமா??”
“ என்ன என்னமா. மாப்பிளை உன்கிட்ட என்ன சொன்னாருன்னு கேட்டேன் ”
“ என்கிட்டயா??…. என்கிட்ட என்ன கேட்கப்போறாங்க. ஒன்னும்….. ஒண்ணுமே கேட்களையே. நான் போய் வாசல் தெளிக்குறேன் ”
“ ஏதே!!…. வாச தெளிக்குறியா???… ஏண்டி உன்னைய வீட்டை பெருக்க சொன்னேன் ”
“ ஹ்ம்ம் அதா அதான்ம்மா நான் போறேன் ” என கூறிக்கொண்டு வீட்டை துடைக்கும் குச்சியை எடுக்க
“ ஏய்!!… எழிலு மாப்பை வச்சு என்ன செய்ய போற??”
“ இல்ல இல்லம்மா துடைப்பத்துக்கு பதிலா நான் இதை எடுத்துட்டேன் ” என கூறிக்கொண்டு துடைப்பதுடன் சென்றுவிட தாய் அறியாத சூலா அன்னலெட்சுமி தனக்குள் சிரித்துக்கொண்டார்.
அப்பொழுது அன்னலெட்சுமி அலைபேசி அழைக்க அதனை எடுத்து பேச,
“ இல்லத்தா நாளன்னைக்குதான் குலசாமிக்கு பத்திரிக்கை வைக்க போறோம் ”
“சரிம்மா அப்போ நான் இப்போ அரைமணிநேரத்துல வரேன்”
“ சரித்தா ” என கூறி அலைபேசியை வைத்துவிட்டு தனது வேலையை தொடர,
வீட்டை பெருக்க சென்ற எழில்விழியோ பணியை தொடராது அமைதியாக நாற்காலியில் அமர்ந்து,
“ எதுக்கு வந்துருப்பாக??…. ஹ்ம்ம்… ஒருவேளை நம்மள பார்க்கவா. ச்ச… ச்ச… பொண்ணு பார்க்கவே வரல இப்பவா வரப்போறாங்க. இருந்தாலும் அப்படி சொல்லிருக்க கூடாது நீ தான் வேணும்ன்னு. யாராவது கேட்டு இருந்தா??…
மாநிறம் செம உயரம் நாம அவுங்க கழுத்துக்குதா இருப்போம். அட!!… எழிலு தப்பு… தப்பு…. இப்படியெல்லாம் யோசிக்க கூடாது. நாம கல்யாணம் பண்ணுறவரை எந்த எண்ணமும் வர கூடாது அமைதி அமைதி பேசாம பெருக்குவோம் ”
என தனக்குள் பேசிக்கொண்டு பாதி பெருக்க
“ ஹ்ம்ம் நிஜமா நம்மள பாக்கவே இம்புட்டு தூரம் வந்துருப்பாங்க. இருக்காது…. இருக்காது…. ஹ்ம்ம்… இருக்குமோ??… நம்மள போட்டோல பார்த்து என்ன நினைச்சிருப்பாங்க??…. புடுச்சுருக்குமா???
ச்ச… ச்ச… பிடிக்காமலையா கல்யாணம் வரைக்கும் வந்துருக்கும். எனக்குத்தான் போட்டோ காட்டல. எனக்கு காட்டலைன்னா அவரும் பார்க்கமாலையா இருந்துருப்பாங்க. அது எல்லாம் பார்த்துருப்பாங்க. அதான் துணிச்சலா நீதான் வேணும்ன்னு கேட்ருப்பாங்க ” என எண்ணிக்கொண்டிருக்கையில் எழிலு இன்னுமா பெருக்குற என அன்னலெட்சுமி கேட்க அந்த சத்தத்தில்
“ இதோ.. இதோ… முடிஞ்ச்சுடுச்சும்மா” என கூறி கதிர் பற்றி சிந்தனையிலையே வேலையை முடித்தாள்.
சரியாக அங்கு வந்த சரஸ்வதி,
“ என்ன என் தங்கச்சி முகத்துல வெளிச்சம் பயங்கரமா இருக்கு ” என கேட்டுக்கொண்டு ஹாலில் அமர
“ ஒன்னும் ஒன்னும் இல்லக்கா….” என கூறிக்கொண்டு கையில் தண்ணீருடனும் அன்னலெட்சுமியையை அழைத்து வர
“ சரசு வாத்தா”
“ வந்தாச்சு வந்தாச்சும்மா. ஏய் எழிலு இங்கவா ” என கூற
“ என்னக்கா ”
“ ஹ்ம்ம் காலை காட்டு ”
“ எதுக்குக்கா??? ”
“ காட்டுனா காட்டு. சும்மா எதுக்கு என்னன்னு கேள்வி கேட்டுகிட்டு ” என கூறி பக்கத்தில் எழிலை அமரவைத்து எழிலின் காலில் இரு சாரமாக சங்கிலி தொங்க திருகாணி மாட்டும் இடத்துல மட்டும் ஐந்து முத்து வைத்த கொலுசை மாட்ட அதனை கண்டு,
“ என்ன!!… என்னக்கா???… எதுக்கு இது??? ”
“ கொலுசு எதுக்கு போடுவாங்க சும்மா இரு ” என கூறி போட்டுவிட அதனை கண்டு அன்னலெட்சுமி
“ என்ன சரசு இது நீ மூணு மாசம் முன்ன உனக்கு வாங்குனதுதானே ”என கேட்க
“ ஆமா ம்மா அதான் ”
“ என்னத்தா நீ ஆசையா சீட்டு போட்டு வாங்குன நீயே இன்னும் போடாம புதுசா வச்சுருக்க அதை எதுக்கு இவளுக்கு போட்டுவிடுற ”
“ பின்ன கல்யாண பொண்ணு காலுல கொலுசு இல்லாம நிக்குது. என்னால இப்போதைக்கு புதுசு வாங்க முடியாது. அவ போட்டுருந்ததையும் உன் மூத்த பேத்தி கேட்டான்னு கொடுத்துட்ட. எழிலும் வயசுப்பிள்ளை அது வயசு எதாவது ஆசைப்பட்டு போடுதா. அதுவும் இல்ல. அதான் என்னோடத கொண்டு வந்தேன். கல்யாண செலவுக்கே நீயும் அப்பாவும் கடன் வாங்கித்தான் செயிரிங்க எதோ என்னால முடிஞ்சது ” என கூற எழில்
எதுவும் கூறாது அமைதியாக சரசுவின் மடியில் படுத்துக்கொள்ள அவளின் தலையை வருடியவாறே
“ எழிலு போற இடத்துல தைரியமா இருக்கனும் சரியா??? ” சரஸ்வதி கூற
“ ஹ்ம்ம் ” என எழில்விழி தலையை ஆட்ட
“ சரி எழிலு அடுப்புல உலை வச்சுருக்கேன் அரிசியை மட்டும் போடு நான் இந்தா வரேன் ” என கூறி அவளை அவ்விடத்தைவிட்டு நகர்த்திவிட்டு அன்னலட்சுமி காலையில் கதிர் வந்தது கூறி,
“ எனக்கு என்னமோ அந்த தம்பி இவளை பார்க்க வந்த மாதிரித்தான் இருந்தது ”
“ அப்போ என்ன உன்னையும் அப்பாவையும் பார்க்க வருவாங்க. அட என்னமா நீ ” என சரஸ்வதி சிரிக்க
“ அட நீ வேறடி. அந்த தம்பி போட்டோவை விட நேருல இன்னும் கம்பீரமா இருந்தாரு. முகமும் ஒன்னு சிரிச்ச மூஞ்சிய இல்ல எந்நேரமும் கடுகடுன்னு இருக்கு. ஒரு பேச்சுக்கு கூட மூஞ்சில சிரிப்பு இல்ல ” என அன்னலெட்சுமி புலம்ப
“ விடுமா கல்யாணம் பண்ணுன நம்ம எழிலு பார்த்துக்குவா” என சரஸ்வதி கூறி சிறுது நேரம் இருந்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
நாட்களும் வேகமாக சென்றுவிட எழில்விழி கதிரவன் திருமண நாளும் அழகாக விடிந்தது.முதல் நாள் இரவு தான் கதிர் வீட்டு ஆள்கள் சென்று எழில்விழியை நிச்சயம் செய்து பொண்ணை அழைத்து வந்தனர்.
திருப்புனவாசல் சிவன் கோவிலில் கதிரவன் எழில்விழியின் கழுத்தில் மங்கலநாணை பூட்டி தனது திருமதியாக்கிக் கொண்டான். திருமணம் நடைபெறும் போது யாரும் எதிர்பார்க்கவண்ணம் கதிர் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடனே எல்லா சடங்கையும் செய்ய அனைவரும் மணமகளின் அழகைக்கண்டு விழிவிரித்தனரோ அதே அளவு கதிரின் புன்னகையும் கண்டனர் கதிரின் வீட்டினர் உட்பட.
திருமணம் முடிந்தவுடன் அனைவரும் மணமகனின் இல்லத்திற்கு செல்ல வேன் ஏற்பாடு செய்திருந்தனர். மதிய விருந்தும் மணமகனின் இல்லத்தில் தான் என்பதால் பாதிபேர் வீட்டில் இருந்தனர். வேனின் முன் இருக்கையில் கதிரும் எழில்விழியும் அமர பின் இருக்கையில் சரஸ்வதி வெங்கடேசனும் அன்னலெட்சுமியும் அமர்ந்திருந்தனர்.
அதற்கு பின் இருக்கையில் கதிரவன் உறவுகள் அமர்ந்துருக்க வண்டி கிளம்பியதும் தனது பக்கத்தில் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்த எழில்விழியை கண்ட கதிரவனுக்கு எதோ மனதில் மெல்லிய சாரல் அடிக்க மெதுவாக இதழ் வளைந்தது.
எழில்விழியோ பயத்தில் கையில் இருந்த பூச்செண்டினை இறுக்கி பிடித்துருக்க அவளின் மருதாணி இட்ட விரல்கள் நடிங்கிக்கொண்டிருந்தது. அதனை கண்டு எதுவும் கூறாது அவளின் பயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கதிரவன்.
அதே நேரம் பாதி தூரம் வண்டி சென்றவுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அன்னலெட்சுமியிடம் சரஸ்வதி,
“ அம்மா எழிலு மாமியாருக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாமா??? ” என கேட்க
“ ஏண்டி??? ”
“ இல்ல ஒரு மாதிரி முகத்தை தூக்கிவச்சுருக்காங்க. அதோட ஒன்னும் நம்மகிட்ட முக குடுத்து பேசல அதான் ”
“ ஹ்ம்ம் கனகம் சொன்னுச்சு கொஞ்சம் நகை எதிர்பார்த்துருப்பாங்க போல அதனாலையே இருக்கும் சரசு”
“ அப்போ எழிலுக்கு ஏதும் பிரச்சனை வருமா ”
“ ச்ச… ச்ச… இல்ல சரசு மாப்பிள்ளை எழிலை அவரு வேலை பார்க்குற இடத்துக்கு கூட்டிட்டுபோய்டுவாங்க அப்படின்னு ஸ்வாமிநாதன் அண்ணா சொன்னாங்க ”
“ அப்போ சரி அதிகம் ஒன்னும் தொணதொணப்பு இருக்காது” என இருவரும் மெதுவாக தங்களின் வெண்கல குரலில் பேச அவர்களில் உரையாடல் முழுவதும் கேட்ட கதிரோ பல்லைக்கடித்தான்.
‘ கல்யாணம் பண்ணி இன்னும் வீட்டுக்கே போல அதுக்குள்ள தனியா போறதை பத்தி பேசுறாங்க. இன்னும் என்ன எல்லாம் இவளுக்கு சொல்லி குடுத்திருப்பாங்க. ஏன் நான் வேணும் என்ன பெத்த அம்மா வேணாமா இவளுக்கு ஹ்ம்ம்’ என அவ்வளவு நேரம் இருந்த இதம் மாறி பழைய கதிராக கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டான்.
தன் பக்கத்தில் இருக்கும் தன் சரிபாதி தன்னை ரசித்தத்தையோ பின் தாயின் உரையாடலில் சரியாக தப்பாக புரிந்து தன்னை மனதில் அர்ச்சித்தத்தையோ அறியாது இன்னும் பயத்தில் அமர்ந்திருந்தாள்.
பின் கதிரின் வீடு வந்துவிட திருமணம் முடிந்து மணமக்கள் இருவரும் அந்த கிராமத்து வீட்டின் முன் நின்றுகொண்டிருக்க ஊர்க்காரர்கள் ஆண் பெண் என அனைவரும் மஞ்சள் பூசியதால் மணமகளின் எலுமிச்சை நிறத்தில் ஆவென பார்த்துக்கொண்டிருக்க மணமகனான கதிரவன் கடுப்புடன் பல்லை கடித்துக்கொண்டிருநதான்.
சுற்றி நடக்கும் எதுவும் தெரியாது பிறந்த வீட்டை பிரிந்த ஏக்கத்தில் குனிந்த தலைநிமிராது கண்ணீரை உள்ளிழுத்து கொண்டிருந்த எழில்விழியிடம் கதிரவனின் பெரிய அக்கா,
“ ஏத்தா எழிலு செத்த குனிஞ்சு வாத்தா. இல்லைனா வாசப்படி ஓடு தலைல தட்டும்” என கூறி ஆழம் சுற்றி வீற்றிக்குள் அழைத்துச்சென்று பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட சொல்ல,
அதே போல் சாமியை வணங்கிவிட்டு கண்ணை துறந்த எழில்விழி தனது எதிரே காலையில் போட்டிருந்த பட்டுசட்டையை கழட்டி கையில் வைத்துக்கொண்டு கையில்லா வெள்ளை பனியனை அணிந்து கொண்டு பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டி எழில்விழியை தனது விழியால் முறைத்துக்கொண்டிருந்தவனை கண்டு பயத்துடன் பார்க்க,
“ என்ன முழிக்குற?… ஏன் மாகாராணி கையை நீட்டி என் சட்டையை வாங்க மாட்டிகளோ???…. போ போயி எதிர்த்தாப்புல இருக்குற ஊரணி குளத்துல இந்த சட்டையை துவச்சுட்டுவா ஒரே கரை ஆகிடுச்சு போ” என கத்தவிட்டு சென்ற கணவனின் முதுகை கண்ணீருடன் வெறித்துக் கொண்டிருந்தாள் எழில்விழி.