Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல்….6

உயிர் உருகும் காதல் எனதே…..6

மூன்று மாதங்கள் கடந்திருந்தது வாசினியின் திருமணம் முடிந்து.வாசினிக்கு புகுந்த வீட்டில் சற்று பொருந்த சிரம்மாக இருந்தாலும் பொருத்திக் கொண்டாக வேண்டிய நிலை.அதை அடிக்கடி தன் தாயுடன் புலம்ப அவருக்கு சின்ன மகளை நினைத்து கவலை அதிகமாகியது.அன்றும் அப்படி தான் வாசினி ஏதோ குறைபாடிவிட்டு போனை வைத்த நேரம் துர்கா வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

“ம்மா…சூடா ஒரு காபி….”என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர,வானாதி ஏதோ யோசனையில் இருக்க,

“என்னம்மா….என்னாச்சு….”



Advertisement

“இப்ப தான் வாசினி போன் பண்ணா….”

“ம்ம் ஆரம்பிச்சிட்டாளா அவ….இன்னைக்கு என்னவாம்…..”

“படிச்சிட்டு சும்மா வீட்டல இருக்காத வேலைக்கு டிரை பண்ணுனு அவங்க மாமியார் சொன்னாங்களாம்….அதுக்கு என்கிட்ட ஒரே புகார் வாசிக்கிறா…..”என்று கவலையுடன் கூற,

Advertisement

“சரியா தான சொல்லியிருக்காங்க….இதுக்கு எதுக்கு உன் பொண்ணு கோச்சிக்கிறா….”என்று துர்காவும் திட்ட,

Advertisement

“என்னடீ நீயும் அவளை திட்டுற…..அவளுக்கு வேலைக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே….மாப்பிள்ளை நல்ல வேலையில இருக்காரு…..சொத்தும் நிறைய இருக்கு….”

“போதும் நிறுத்துமா….என்ன இருந்தா என்ன….வாசினி படிச்சிருக்கா வேலைக்கு போனா அவளுக்கு தான் நல்லது….அவளுக்கு தான் தன்னம்பிக்கை கூடும் அதுக்கு தான் சொல்லுறாங்க….நிர்மலா அத்தை சொல்லுறது தப்புனு எனக்கு தோணலை….போங்க எனக்கு ஒரு காபி கொண்டு வாங்க….”என்று கத்திவிட்டு தலை கவிழ்ந்துவிட,

“என்னாச்சுடீ….”என்று வானாதி பதறினார்.அப்போது தான் மகள் சோர்வுடன் இருப்பதையே கவனித்தவருக்கு அது எதனால் என்பதும் புரிய,

Advertisement

“அச்சோ மறந்துட்டேன்…இருடீ….காபி போட்டு எடுத்துட்டு வரேன்…”என்று சமையலறைக்குள் நுழைய,

“உங்களுக்கு எப்போதும் சின்ன பொண்ணு நியாபகம் தான்….என்னை மறந்துடுங்க….”என்று விளையாட்டு போல் தான் துர்கா கூறினாள்.ஆனால் கோட்டுக் கொண்டிருந்த வானாதிக்கு சுருக்கென்று இருந்தது.அவரும் பெரிய மகளிற்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும் என்று தானே காத்துக் கொண்டு இருக்கிறார்.

“ஏன் நர்மதா என்கிட்ட பேசவே மாட்டேங்குற…..”என்று கற்பகம் சற்று வருத்துடன் கேட்க,

“அப்படியெல்லாம் இல்லை பெரியம்மா….இங்க எனக்கு உடம்புக்கு முடியலை….அதனால தான் வர முடியலை….”என்று கூற,

“நிஜமா தான் சொல்லுறீயா….”

“நான் ஏன் பொய் சொல்லப்போறேன்…”

“……”

“பெரியம்மா உங்களுக்கு துர்காவை பிடிக்கலை….அதுக்காக நான் உங்க கிட்ட பேசாம இருப்பேனா….”என்று நர்மதா சற்று கோபத்துடனே கேட்க,

“அப்பா!! கோபப்பட்டுடியா இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு….” என்ற கற்பகத்தின் வார்த்தையில் நர்மதா சிரித்துவிட,

“இது தான் என் பொண்ணு….சரி சரி இன்னைக்கு ஜோசியர் கிட்ட போகனும் சாய்ந்தரம் வந்துடு….என்ன….”

“ம்ம் சரி வந்துடுறேன்…”என்றுவிட்டு நர்மதா வைத்துவிட்டாள்.அவளுக்கு அத்தனை வருத்தம் தான் அன்று வாசினி திருமணம் முடிந்தவுடன் வீரா,துர்காவின் திருமண பேச்சை நர்மதா கூற,வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டார் கற்பகம்.அவருக்கு துர்காவை தான் நன்கு தெரியுமே இருவரும் பார்க்கும் பொழுதுகள் எல்லாம் முட்டிக்கொள்ளும்.

துர்காவும் வீராவின் அம்மா என்பதற்காகவே இன்னும் அவரை சீண்டிவிட்டு தான் போவாள்.சிறு வயதில் இருந்தே வாயாடி,பேட்டை ரௌடி  என்று அவளை பலமுறை திட்டியது உண்டு அதற்கு ஏற்றார் போல் அவளின் முந்தய திருமண வாழ்வு முறிவு அத்தனை பிடித்தமில்லை அதுவும் ஊரார் முன்பு திமிராக அவள் நின்ற விதம் சுத்தமாக பிடிக்கவில்லை என்று கற்பகம் கூறிவிட அதோடு நர்மதாவும் விட்டுவிட்டாள்.

“என்னடீ ஏதோ போல நிக்குற….”என்று பிரபஞ்சன் கேட்க,

“பெரியம்மா போன் பண்ணாங்க….”

“ம்க்கும் என்னவாம்….”என்றான் பிரபஞ்சன்.அவனுக்கு கற்பகம் துர்காவை விமர்சித்த விதம் பிடிக்கவில்லை.

“ஆம்பளைனா அப்படி இப்படி தான் இருப்பான்…இவ கொஞ்சம் அனுசரிச்சு போயிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது….அந்த பையனும் மனசு மாறியிருப்பான்…..எல்லாம் இவளோட திமிரு…அதான் ஊர் வாயில விழுந்து வைக்குறா….அவளை போய் என் பையனுக்கு எடுக்கவா அது சரியா வராது நர்மதா…..”என்று கூறிவிட பிரபஞ்சனுக்கு அத்தனை கோபம்

“ஒரு பெண்ணு அவளுக்கு நடந்த தப்பை தட்டிக் கேட்டா கூட தப்பு போல….இதே மாதிரி உனக்கு நடந்திருந்தா கூட உனக்கும் உங்க பெரயம்மா இப்படி தான் பேசியிருப்பாங்களா….”என்று மனைவியிடமும் காய்ந்துவிட்டான் பிரபஞ்சன்.அன்றிலிருந்து கற்பகத்திடமும் பேச்சை குறைத்துவிட அவருக்கு வருத்தமாகிவிட்டது.

“என்னங்க நீங்க ஏதோ பெரியம்மா பேசிட்டாங்க அதையே பிடிச்சிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு…அதோட என்னைவிட்டா அவங்களுக்கு யாரும் இல்லை….கொஞ்சம் புரிஞ்சிக்குங்க….”என்று கணவனிடம் தன்மையாகவே கூற,

“சரி சரி எனக்கு ஐஸ் வைக்காத….போயிட்டுவா….”என்றதும் தான் நர்மதாவின் முகமும் தெளிந்தது.மாலை அந்த கோவிலில் கூட்டம் சற்று கம்மியாக தான் இருந்தது.

“பெரிம்மா….பெரிம்மா…..”என்று நர்மதா இரண்டு முறை அழைத்தும் கற்பகம் தன் நிலையில் இருந்து மாறாமல் அமர்ந்திருக்க,

“ப்ச் அந்தாள் ஏதோ சொன்னா அது தான் நடக்கும்னு இருக்கா……”என்று கேட்க,அவளை ஏறிட்டு பார்த்தவரின் கண்கள் கலங்கி இருக்க,

“அச்சோ பெரிம்மா….என்னதிது….சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு….”என்றவளுக்கும் எப்படி அவரை தேற்றுவது என்று தெரியவில்லை.இன்று மாலை ஜோசியரை பார்த்துவிட்டு வீட்டுக்கு கூட போகாமல் நேராக கோவிலுக்கு வந்துவிட்டிருந்தனர்.வந்தலிருந்து இப்படி தான் அவர் அமர்ந்திருந்தார்.

“எனக்கு பின்ன என் பிள்ளைக்கு யாரும் இருக்கமாட்டாங்களா…..எனக்கு பயமா இருக்குமா….அவரு சொன்னதை கேட்ட தான….இன்னும் இரண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்கலனா வீராவுக்கு கல்யாண யோகமே இல்லைன்ற மாதிரி சொல்லிட்டாரு….என்னால தாங்க முடியலைடீ…..”என்று வெடித்து அழுதே விட,அவரை எப்படி தேற்றுவது என்று நர்மதா திணறிக் கொண்டிருக்க,

“நர்மதாக்கா…..நீங்க எங்க இங்க…..”என்று துர்காவின் குரல் பின்னிருந்து கேட்க அதிர்ந்து திரும்பினாள் நர்மதா.

“ஏன் இந்த அதிர்ச்சி….நான் தான் அதிர்ச்சி அடையனும் நீங்க கோவில் வந்ததுக்கு…..”என்று கிண்டல் வேறு செய்ய,நர்மதாவால் முறைக்க மட்டுமே முடிந்தது.ஏற்கனவே கற்பகத்திற்கு இவளை பிடிக்கவில்லை இப்போது இருக்கும் சூழலில் இவள் ஏதாவது கூறி அவர் வார்த்தைகளை விட்டுவிட்டால் நல்லதற்கு அல்லவே என்று மனதில் எழுந்த கலக்கத்துடன் நர்மதா நிற்க,

“அட நம்ம கற்பகம்பாள் அமர்ந்திருக்காளே….”என்று அவரிடம் நெருங்கிவிட்டாள் துர்கா.

“ஏய் துர்கா இரு….”என்று நர்மதா கூறியது அவள் காதில் விழவேயில்லை.

“என்ன கற்பூ…..எப்படி இருக்கீங்க….”என்று அவரின் முன் நின்று தோரணையாக கேட்க,அவளை ஏறிட்ட கற்பகம் எதுவும் பேசாமல் வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டார்.அவரின் கலங்கிய முகத்தை  அருகில் வரும் போதே கவனித்துவிட்டாள் துர்கா.

“அட கற்பூ என் மேல கோபம் இன்னும் போகலை போல….”

“அடியே நீ விளக்கு போட தான வந்த….போட்டுட்டு கிளம்பு…..”என்று நர்மதா அவளை கிளப்ப பார்க்க,அவளோ அடமாக கற்பகத்தின் பக்கத்தில் அமர்ந்தே விட நர்மதாவிற்கு அய்யோவென்று ஆனது.

“என்ன கற்பூவை என்கிட்டேந்து காப்பாத்தலாம்னு பார்க்குறியா….அதெல்லாம் முடியாது நானே பார்க்காத அம்பாளை இன்னைக்கு தான் பார்த்திருக்கேன் விடமாட்டேன்…..”என்றவள் அவரின் புறம் நன்கு திரும்பி,

“அப்புறம் கற்பகாம்பாள் வீட்ல எல்லாரும் நலம் தானே….”என்றுவிட்டு அவரின் தோளில் கை போட்டு,

“நாம கோவிலுக்கு வரதே நம்ம மனசுல இருக்குற சுமையை சாமிக்கிட்ட இறக்கி வைக்க தான்….வந்தோமா இறக்கி வைச்சோமானு போயிடனும்….அத விட்டுட்டு இப்படி உட்கார்ந்து அழுதா அவரும் என்ன தான் செய்வார்….அவருக்கு பல வேலை இருக்கும்ல….உனக்கான நேரம் வரும் போது நல்லது தான நடக்கும்…..முதல்ல கண்ணை துடை….இது நல்லாவே இல்லை….என்னை பார்த்ததும் எகிறிக்கிட்டு வர என் கற்பூவை தான் எனக்கு பிடிக்கும்….சரி சரி அடுத்த முறை பார்க்கும் போது நல்லா சண்டை போடுவோம்….ஓகே பை….”என்று விட்டு நர்மதாவிடமும் தலையசைத்துவிட்டு அவள் நகர்ந்துவிட,

“ப்பா போயிட்டா…சும்மா இருக்காளா இவ….”என்று தன் வாயில் முணுமுணுத்தபடி நர்மதா இருக்க,

“நர்மதா….இவளோட ஜாதகத்தை நாளைக்கு கேட்டு வாங்கிட்டு வா….பொருத்தம் பார்த்துட்டு வரலாம்….”என்ற கற்பகத்தின் வார்த்தையில் சிலையாகிவிட்டாள் நர்மதா.

“என்னடீ என் மூஞ்சியவே பார்த்துக்கிட்டு இருக்க…நாளைக்கு காலையிலேயே நானும் வரேன் சேர்ந்தே போகலாம்…..”என்றுவிட்டு அவர் எழுந்து கொள்ள,

“பெரிம்மாஆஆ….நிஜமா தான் சொல்லுறீங்களா….”என்று நம்பாத பாவனையுடன் கேட்க,

“நிஜமா தான் சொல்லுறேன்….வாயாடீ எப்படி என்னை கிண்டல் பண்ணுற மாதிரி பேசி என் கண்ணை துடைச்சிட்டு போறா பார்த்தியா….”என்றவரின் பார்வை தூரத்தில் சன்னதி முன்பு விளக்கேற்றி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் துர்காவிடம் தான்.இன்னுமும் அவளின் மீது இருக்கும் அபிப்பிராயங்கள் அப்படியே தான் இருக்கின்றன ஆனால் என்னவோ இந்த நிமிடம் அவள் தன்னிடம் பேசியதும் நடந்து கொண்டதும் அவரை அத்தனை அமைதிப்படுத்தியது.

“இத்தனை நாள் வேண்டுன சாமி இன்னைக்கு தான் அவளுக்கும்,எனக்கும் சேர்த்தே கண்ணை திறந்திருக்குனு நினைக்கிறேன்….நல்லதே நடக்கனும் கடவுளே…..”என்று கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிட்டவர்.நர்மதாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்தநாள் காலையிலேயே கற்பகம் கூறியதை போல நர்மதாவை அழைத்துக் கொண்டு வானாதியின் வீட்டிற்கு சென்று விவரத்தை கூற,

“நீங்க என்ன சொல்லுறீங்க….”என்று இன்னும் தன் காதில் விழுந்ததை நம்ப முடியாமல் வானாதி கேட்க,

“உங்க பொண்ணு ஜாதக்கத்தை கொடுங்க….என் பையன் ஜாதகத்தோடு பொருத்தம் பார்க்க போறேன்….”என்று மீண்டும் அழுத்தமாக கற்பகம் கேட்க,

“ம்மா….சீக்கிரம் எடுத்துட்டு வாங்க….போயிட்டு வரலாம்…..”என்று நர்மதாவும் அவரை அவசரப்படுத்த,நடந்து கொண்டிருப்பதை நம்ப முடியாமல் அவர் துர்காவின் ஜாதகத்தை எடுத்து வந்து கொடுக்க,

“நீங்களும் வரீங்க….பெரிம்மா கூப்பிடுங்க….”

“அதுவும் சரி தான்….நீங்களும் வாங்க….போயிட்டு வந்துடலாம்…..”என்று கற்பகமும் அழைக்க,வேகமாக தன் கணவன் படத்தின் முன் கண்களை மூடி நின்றுவிட்டு அவர்களுடன் புறப்பட்டுவிட்டார் வானாதி.மனதெங்கும் இந்த இடம் மகளுக்கு அமைந்துவிட வேண்டும் என்று வேண்டுதல் தான்.அவர்கள் இருவரையும் பார்த்த நர்மதாவும் பாவமாக இருந்தாலும் அவளும் மனதிற்குள் அதே வேண்டுதலுடன் தான் வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!