ராஜசேகர் மற்றும் மரகதம் இருவரின் தந்தையரான தனபால் மற்றும் ராஜகோபால் இருவரும், தங்களுக்கு இருந்த சொற்ப நிலத்தில் விவசாயம் பார்த்து, தம் குடும்பத்தை நடத்தி வந்தார்கள்..கூட்டு குடும்பம்..எனவே, வருமானம் முதல் செலவு வரை பொது..
அவர்கள் நிலத்தில், நடவு, கதிர் அறுப்பு
போன்ற சமயத்தில், கூலி வேலைக்கு ஆட்கள் வருவார்கள்..
சேகர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான் செங்கோடன்,செந்தாமரை தம்பதியர்..அவர்களின் ஒரே புதல்வி பாரிஜாதம்..
அவர்கள் ஊரில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக, வேலை தேடி இவர்கள் ஊருக்கு வந்தார்கள்..
ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் உதவியோடு, அவ்வூரில் உள்ள ஆற்று ஓர இடத்தில், குடிசை போட்டுக் கொண்டு, அங்கு யார் வேலைக்கு கூப்பிட்டாலும், சென்று வந்தார்கள்..
அப்படி, தனபாலின் வயலில் கதிர் அறுக்கும் வேலைக்கு வந்தார்கள்..
அவர்களோடு, அவர்கள் பத்து வயது மகளையும் அழைத்து வந்தார்கள்..
ஊர் ஊராக சுற்றி திரிவதால், அவளை பள்ளியில் சேர்க்கவில்லை..எங்கு அவர்கள் வேலைக்கு சென்றாலும்,அவர்கள் கூடவே சென்று, விளையாண்டு கொண்டிருப்பாள்..பிறகு வேலை முடிந்ததும், அவர்களோடு வீட்டுக்கு செல்வாள்..
அவர்கள் வயலில் தான், முதன் முதலில் அவளை சந்தித்தார் சேகர்..
மாநிறமாய், முட்டை கண்களோடு, துறுதுறுவென சுற்றி திரிந்த அவளை, கண்டதும் பிடித்து விட்டது..அவளிடம் கேட்கும் கேள்விகளுக்கு, குழந்தை தனமாய் பதில் அளிக்கும் அவளை, வேண்டும் என்றே வம்பிழுப்பது அவரின் வேலை..
நல்ல சிவந்த நிறத்தில்,உயரமாய், அழகாய் இருக்கும் ராஜசேகரை கண்டால், அவளுக்கும் பிடித்தமே..
[the_ad id=”6605″]
முதலாளிகள் யாரும் அவளோடு பேசியதில்லை..இதுவரை வயல் வேலைக்கு சென்ற இடத்தில்..இங்கு ஒருவன், தேடி வந்து பேசி வம்பிழுக்கவும், அவளுக்கும் அவர் மேல் ஒரு பிடித்தம்..குழந்தை தனமான பிடித்தம்..
இருவரின் பிடித்தமும், எப்பொழுது காதலாக மாறியது என்று இருவருக்கும் தெரியாது..
அவள் பெரிய பெண் ஆகி, அவரிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்ததும், அதை உணர்ந்தார் சேகர்..
அவரும் கல்லூரி விடுதியில் இருந்ததால், அடிக்கடி அவளை பார்க்க முடியவில்லை..
விடுப்பில் வரும் போதும், அவர் கண்ணில் அவள் படுவதில்லை..
இளநிலை படிப்பு முடிந்து, முதுநிலை கல்விக்கு கல்லூரியில் விண்ணப்பம் போட்டு, காத்திருந்த வேளையில் தான், மீண்டும் அவளை சந்தித்தார்..
தாவணி பாவாடையில், குமரி பெண்ணாக..
அவர்கள் ஊரின் எல்லையில் இருக்கும் மாந்தோப்பில்..
அவரை கண்டதும், வெட்கத்தில் ஓட போனவளை வழி மறித்தார்..
அவள் கண்ணில் பயம்..சுற்றிலும் யாரும் இல்லை..
“வழி விடுங்க சின்னையா. நான் போனும்..”
“போலாம் இரு..என்ன எப்போ பாரு, என்னை கண்டா ஓடுற??”
“அம்மா தான் சொன்னுச்சு..ஆம்பளைங்க கூட பேச கூடாதுன்னு..”
“அது,முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட, அப்படி நடக்க சொல்லி இருப்பாங்க..என்னை தெரியாதா உனக்கு..??புதுசு மாதிரி ஓடுற..”
அவர்கள் பேச்சு வளர்ந்தது..
அதன் பிறகு அவர்கள், அடிக்கடி அந்த மாந்தோப்பில் சந்தித்து கொண்டார்கள்..
பேசிக் கொண்டார்கள்..
அவர் மறுபடியும் படிக்க சென்ற போது, கண்ணில் நீரோடு அனுப்பி வைத்தாள் பாரிஜாதம்..
மீண்டும் இரண்டு ஆண்டுகள்.. அடிக்கடி சந்திக்க முடியவில்லை..விடுப்பில் மட்டும், அவர்கள் சந்திப்பு நடந்தது..
படிப்பு முடிந்து, வேலைக்கு முயன்று கொண்டிருந்தார்..
அன்று அவருக்கு, பி ஆர் குரூப் ஆப் கம்பெனிஸில் இருந்து, வேலைக்கான உத்தரவு வந்தது..
வீட்டில் அனைவர்க்கும் மகிழ்ச்சி..
அக்கா தங்கை அனைவர்க்கும் திருமணம் ஆகி இருந்தது..
இவருக்கும் வேலை கிடைத்ததில், வீடே ஆனந்தத்தில் திளைத்தது..
அந்த விஷயத்தை, பாரிஜாதத்திடம் சொல்ல, தாங்கள் வழக்கமாய் சந்திக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றார்..
அங்கு உள்ள படித்துறையில் காத்திருந்தாள் அவள்..
அது, ஊருக்கு வெளியே இருக்கும் கோவில்..குறிப்பிட்ட நேரம் தவிர, யாரும் வர மாட்டார்கள்..
இவர்கள் இருவர் மட்டுமே,யாரும் இல்லாத நேரத்தில் சந்தித்து கொள்வார்கள்..
அன்று மகிழ்ச்சியுடன் வந்த சேகரை கண்டு,
“என்ன மாமா?? ரொம்ப சந்தோஷமா இருக்கீக..??”
அவர் மகிழ்ச்சி, இவளையும் தொற்றிக் கொள்ள கேட்டாள்..
அவரை மாமா என்று அழைக்க சொல்லி பழக்கி இருந்தார் சேகர்..
“எனக்கு வேலை கிடைச்சிருக்கு, பாரு..”
“அப்படியா மாமா..எங்க??”
“பட்டணத்துல தான்..”
“ஓ..”
[the_ad id=”6605″]
அவள் முகம் சுருங்கிப் போனது..
“என்ன பாரு?? முகமே சுருங்கி போச்சு..உனக்கு சந்தோசம் இல்லியா??”
“அதெல்லாம் இல்ல மாமா..ரெண்டு நாளா, வலது கண்ணு துடிக்குது..என் அம்மா வேற, எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனுமுன்னு, என் தூரத்து உறவுக்கார மாமா மகனை கல்யாணம் பண்ணி வைக்க, அப்பாரை போய் பேசிட்டு வர சொல்லி, ஒரு வாரமா தொண தொணக்குது..
எனக்கு பயமா இருக்கு மாமா..”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது பாரு..நான் வேலையில சேர்ந்துட்டு, கொஞ்ச நாளுல வந்து, உன்னை பொண்ணு கேட்குறேன்..”
“உங்க வூட்டுல ஒத்துக்க மாட்டாங்க மாமா..நாம, வேற வேற இனம்.. எங்க வூட்டுலயும், எங்க அப்பாரு கோபக்காரரு..வேற இனத்துல கொடுக்க மாட்டார்.. இப்போ பணம் இல்லாம, ரோசிச்சுக்கிட்டு இருக்காரு..இல்லைனா, இந்நேரம் என் கல்யாணத்தை முடிச்சுட்டு தான், மறு வேலை பார்ப்பார்..
நீங்களும் வெளியூர் போறீங்க..”
அவள் கண்களில், கண்ணீர் வழிந்து இறங்கியது..
அவள் கைகளில் அழுத்தம் கொடுத்தவர்..
“எல்லாத்தையும் குழப்பிக்காத பாரு..நான் திரும்பி வந்ததும், நம்ம கல்யாணம் தான்..
என் தங்கச்சி மரகதத்துக்கு மட்டும், நம்ம விஷயம், அரசல் புரசலா தெரியும்..எதுவும் பிரச்சனை வந்தா, அவ நமக்கு உதவுவா.. வீட்டுக்கு கடை குட்டின்னு, அவ சொன்னா, அப்பா கேட்பார்..
உன் அப்பா கிட்ட பேச வேண்டியது, என் பொறுப்பு..
நீ இப்படி அழுத்துகிட்டே இருந்தா, நான் எப்படி சந்தோசமா போய், வேலையில சேருறது..??”
அவள் முகம் தெளியவில்லை..
அவரும், சற்று நேரம் சமாதானம் செய்து பார்த்தார்..அவள் அழுகை நிற்கவில்லை..
ஒரு ஆயாசத்துடன்,
“சரி, நான் இந்த வேலைக்கு போகலை..இங்க, பக்கத்து ஊர்ல எதுவும் வேலை கிடைக்குதான்னு பார்க்குறேன்..”
“ஏன் மாமா?? உங்க படிப்புக்கு பெரிய வேலை கிடைச்சிருக்கு. இதுக்கு போகாம,என்ன பண்ண போறீங்க?? இங்க எல்லாம், அவ்ளோ பெரிய வேலை கிடைக்குமா??”
“நீ தான், அழுதுட்டே இருக்கியே..”
“நான் அழல மாமா. போய்ட்டு வாங்க..”
கண்களை வேகமாய் துடைத்தவள் மேல், ஒரு இலை வந்து விழுந்தது..
நிமிர்ந்து பார்த்தாள்..
கோவில் மரத்தில் இருந்து வந்து விழுந்திருந்தது..
அந்த மரத்தில், வேண்டுதலுக்காக மஞ்சள் கயிறு,தொட்டில் எல்லாம் கட்டுவது, ஊர் வழக்கம்..
அவள் கண்ணில் மஞ்சள் கயிறு பட்டது..எழுந்து சென்று, அதில் ஒன்றை எடுத்தவள்..
“மாமா, இதை என் கழுத்துல கட்டிட்டு போங்க மாமா..”
“என்ன பாரு??என் மேல நம்பிக்கை இல்லியா??ஊர் அறிய நம்ம கல்யாணம், ஜாம் ஜாமுன்னு நடத்த நினைச்சு இருக்கேன்..
இங்க யாருமில்லாத இடத்துல, ஒருத்தருக்கும் தெரியாம, இப்போ என்ன அவசரம்..??”
“எனக்காக மாமா..என் திருப்திக்கு.. என் மனசு கிடந்து அடிச்சுக்குது..”
அவள் கண்களின் கெஞ்சலில், அவளை அம்மனின் முன்னே அழைத்து சென்று, அவள் கழுத்தில் தாலி கட்டினார் சேகர்..
அவள் முகத்தில், சிறிது புன்னகை எட்டி பார்த்தது..
“இப்போ சந்தோசமா??”
மகிழ்ச்சியாய் தலை அசைத்தவள்..
“பத்திரமா போய்ட்டு வாங்க மாமா..”
அவள் கன்னத்தில் தட்டி விட்டு, விடை பெற்றார்..
அவர் திரும்பி வரும் போது, அவருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி அறியாமல் சென்றார்..
அவர் வேலையில் சேர்ந்து, அங்கு நிலை பெற்று, ஊருக்கு திரும்பும் போது, அவர் பாரிஜாதம், உயிருடன் இல்லை என்ற செய்தி தான் கிடைத்தது..
இடிந்து போய் அமர்ந்து விட்டார் சேகர்..
“ஏதோ அணைக்கட்டுல, நீர் வரத்து அதிகம் ஆயுடுச்சுன்னு திறந்து விட்டாங்களாம்..மழை வேற நம்ம ஊருல இந்த வருஷம் அதிகம்..அதுல இந்த தண்ணியும் வந்து, ஆத்தோர குடிசை எல்லாம் அடிச்சுக்கிட்டு போயிடுச்சு..அதுல, இந்த செங்கோடன் குடும்பம் முழுசும், முழுகி இறந்து போய்ட்டாங்க..இன்னும் பத்து பதினைஞ்சு பேர்..
அவங்க சொந்தம் தான் எல்லோரும்..
அந்த பிள்ளை பாரிஜாதம், துறுதுறுன்னு இங்கேயே சுத்தும்..பாவம் சின்ன வயசு..”
சேகரின் அம்மா, ஊருக்கு வந்த மகனிடம்,வழக்கமாய் ஊர் கதைகளை சொல்லுவது போல, புலம்பி விட்டு சென்றார்..
மகனின் மனம் அறியாமல்..
மகனின் திகைத்த முகத்தை பார்க்கவில்லை..
உடனே, அவள் குடிசை இருந்த இடத்துக்கு சென்று பார்த்தார் சேகர்..அங்கு, அப்படி ஒன்று இருந்ததற்கான தடயமே இல்லை..
மனம் வெதும்பி, சில நாள் சுற்றி திரிந்தார்..
வேலைக்கு விடுப்பு போட்டு விட்டு..
மகனின் நிலை பார்த்து விசாரித்த தனபாலிடம், மேம்போக்காய் தன் காதலை சொன்னார்..
சற்று அதிர்ந்த அவர்,அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, ஊரில் இருந்து மரகதத்தையும் வரவழைத்து, ஆறுதல் சொல்ல வைத்தார்.. அவர் மனதை மாற்ற, தனபாலும் அவர் மனைவியும், அவரோடு சென்னைக்கு சென்று, கூடவே இருந்து அவரை பார்த்துக் கொண்டார்கள்..
சில மாதங்களில், அவர் சற்று தேறி வந்தார்.அதன் பின் அவர் வாழ்க்கை, சற்று இயல்பாய் சுற்ற ஆரம்பித்த வேளையில், அவர் முதல் அக்கா பொற்கொடியின் கணவருக்கு, அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போய் கொண்டிருந்தது..திடிரென்று, சற்று மோசம் ஆனது..
அங்கு உள்ள பெரிய மருத்துவமனையில், அவரை சேர்த்து பார்த்தார்கள்..
பொற்கொடியின் கணவர், மளிகை கடை வைத்திருந்தார்..
உடல் நிலை காரணமாக, அடிக்கடி கடை திறக்க முடியவில்லை..
எனவே, கடையும் நஷ்டத்தில் இருந்தது..சேகர் தான், கடன் மேல் கடன் வாங்கி, மருத்துவ செலவு பார்த்தார்..
ஊரில் இருந்து ராஜகோபாலும், நிலத்தை விற்று, கொஞ்சம் பணம் அனுப்பினார்..
கடைசியாய், ஒரு அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க வைக்க முடியும் என்று மருத்துவர் சொன்னார். அதற்கு, லட்சங்களில் பணம் செலவாகும் என்றும் கூறினார்..
குடும்பமே திகைத்து, விழித்து கொண்டு நிற்கும் போது, பிரமிளாவின் தந்தை பொன்னுசாமி, இவர்களின் அனைத்து தேவையும் பூர்த்தி செய்வதாய் கூறினார்..
பதிலுக்கு அவர் கேட்டது சேகரை..அவரை, தங்கள் மகளுக்கு திருமணம் முடித்து, வீட்டோடு மாப்பிள்ளையாய் அனுப்ப கோரினார்..
தனபால் தம்பதியர், ஒரே மகனை அனுப்பவும் மனம் இன்றி, மகளின் வாழ்வும் கத்தி மேல் நிற்கும் நிலையில், கண்ணீரில் கரைந்தார்கள்..
மரகதம் வசதியான வீட்டில் மருமகளாய் போனாலும், மாமியார் மாமனாரை மீறி, இவர்களுக்கு உதவ முடியவில்லை..
கடைசியில், மகனை பொன்னுசாமிக்கு விட்டு கொடுப்பதே ஒரே வழி.இல்லையேல், மகள் இரு பிள்ளைகளை வைத்து கொண்டு, நிர்கதியாய் நிற்பார் என்று புரிந்து, சேகரிடம் பேசினார்கள்..
அவர்களின் பேச்சை, முதலில் தீவிரமாய் மறுத்தார் சேகர்..
தனபாலின் வேண்டுதல், தாயின் கண்ணீர், அக்காவின் நிலை எல்லாம் சேர்த்து, அவரை சூழ்நிலை கைதி ஆக்கியது..
“அந்த பிள்ளை பாரிஜாதம், உயிரோட இருந்தா கூட சரி சேகரு.. அதுவும் இல்ல..இப்போ எங்களுக்கும், வேற வழி இல்ல..உன் அக்கா நிலையை நினைச்சு பாரு தம்பி..”
அவர்கள் கரைத்ததில், இவரும் கரைந்தார்..
பிரமிளாவை திருமணம் செய்ய சம்மதித்தார்..
பலி ஆடு போல, திருமண சந்தையில் நின்றார்..
பிரமிளாவிற்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை..
தந்தைக்காக சம்மதித்தார்..
அவர் ஒரே பெண் என்பதால்,பொன்னுசாமி, தன் மகளை திருமணம் செய்யும் ஒருவன் தான், அத்தனை சொத்துக்கும் வாரிசு..
தன் கம்பெனி அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும்..அதற்கு திறமை வாய்ந்த ஒருவன் வேண்டும்..அவன், வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் தான் நல்லது..அதனால், அவர் எல்லாவற்றையும் யோசித்து,சேகரை தேர்ந்தெடுத்தார்..
நடுத்தர வர்க்கம். இவர் சொல்வதை கேட்டு, மகளுடன் அனுசரித்து வாழ்வான் என்று..
இரு மனங்களும் சேராமல், இரு குடும்ப தேவைக்காக, திருமணம் நடந்தது..
பொன்னுசாமி சொன்ன படி, சேகரின் அக்கா கணவர் அறுவை சிகிச்சைக்கு உதவினார்..அதன் பிறகு, அவர்கள் மளிகை கடையை சீர் செய்து கொடுத்தார்..
மற்ற பெண்களுக்கும், கொஞ்சம் பணம் கொடுத்தார்..
அவரிடம் உதவி பெற்றதால், பிரமிளாவிற்கு இவர்களை கண்டால் இளக்காரம் தான்…
யாரையும் மதிக்க மாட்டாள்..
மாமனார் மாமியார், யாருக்கும் மரியாதை கிடைக்காது..
அவரின் குணத்துக்கும் சேகருக்கும் ஒத்து வராமல், பல நாள் முட்டிக் கொண்டு தான் கிடப்பார்கள்..
அப்பொழுதெல்லாம் அவருக்கு ஒரே ஆறுதல், நடராஜ் தான்.. அவரின் கல்லூரி தோழர்..கல்லூரி நட்பு, அதன் பிறகும் தொடர்ந்தது..
அவர் பாரிஜாதத்தை பார்த்ததில்லையே தவிர, அனைத்தும் தெரியும்..
இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்களில், அவருக்கும் திருமணம் ஆனது..
மகளின் குணத்துக்கு பொன்னுசாமி கூறும் ஒரே சமாதானம்..
“தாய் இல்லாம வளர்ந்த பொண்ணு. அதான், கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டேன்..”
அவர் மனைவி ராஜம்மா,அவளின் பதின் வயதில், ஒரு விபத்தில் இறந்து விட்டார்..
அதற்கு முன்பே, பிரமிளா இப்படி தான்..
[the_ad id=”6605″]
எவராலும் அவரை மாற்ற முடியாது..அது பொன்னுசாமிக்கு தெரியும்..மகளை விட்டு கொடுக்க முடியாமல், இவ்வாறு கூறுவார்..
மருமகளின் குணம் அறிந்து, சேகரின் பெற்றோர், உடன் பிறந்தோர், அனைவரும் ஒதுங்கி கொண்டார்கள்..
அவர்கள் பேச்சு வார்த்தை கூட, நின்று போனது..
சேகர், தன் பெற்றோரை மட்டும், அடிக்கடி சென்று பார்த்து வருவார்..அவர்கள் பழைய படி,சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள்..
மரகதம் மட்டும், அண்ணனிடம் அவ்வவ்போது பேசுவார்..
அவர், சற்று வசதி என்பதால், பணத்துக்கு வர மாட்டார் என்று தெரிந்து, பிரமிளா கண்டு கொள்ள மாட்டார்..
இப்படி சென்று கொண்டிருந்த வாழ்வில் திருப்பு முனை போல, சேகர் பாரிஜாதத்தை சந்தித்தார்..
அவர்கள் கட்டுமான கம்பனிக்கு நிலம் பார்க்க, ஒரு கிராமத்துக்கு சென்ற போது, அருகில் இருந்த கல் குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..
அந்த முதலாளியின் இடத்தை தான், பார்க்க சென்றிருந்தார்..
அவர் குவாரியில் அது சம்மந்தமாய், அந்த முதலாளியிடம் பேசி கொண்டிருக்கும் போது, இவரை பார்த்து விட்டு வேகமாய் வந்த அவள்,
“மாமா..”
கண்ணில், உயிரை தேக்கி வைத்து கொண்டு அழைத்தாள்..
பழக்கப்பட்ட குரலில், அதிர்ந்து திரும்பினார்..
பாரிஜாதம் நின்றாள்..கருத்து, இளைத்து, அடையாளமே தெரியாமல், அந்த கண்கள் மட்டும் அப்படியே, அவரை ஈர்த்த முட்டை கண்கள்..
“பாரு..”
திகைப்பில் இருந்து வெளியே வராமல் அழைத்தார்..
நான் தான் என்று, ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்..
“நீ??இங்க??”
“இந்த பிள்ளையை தெரியுமா??இங்க தான் வேலை பார்க்குது..வெள்ளதுல கரை ஒதுங்குச்சு. நம்ம ஊர் ஜனங்க தான் காப்பாத்துனாங்க..”
குவாரி முதலாளி தகவல் சொன்னார்..
அவளை தனியே அழைத்து சென்று விசாரித்தார்..
“எல்லோரையும் வெள்ளம் அடிச்சுக்கிட்டு போயிடுச்சு மாமா..நானும், என் தூரத்து சொந்தம் ஒரு அத்தையும் தான், இந்த ஊர்ல ஒதுங்கி பொழச்சோம்..
நம்ம ஊருக்கு எப்படி வாரது..?? நீங்க எங்க இருக்கீங்க.??.பட்டணத்துல இருந்தா, எப்படி கண்டுபிடிக்க?? ஒண்ணும் புரியல மாமா..
அந்த அத்தைக்கும் ஒண்ணும் தெரியல..
கொஞ்சம் பணம் சேர்ந்துட்டு, உங்களை பார்க்க ஊருக்கு வரலாமுன்னு நெனச்சு கிட்டு இருந்தேன்..
அந்த அம்மனே, உங்களை என் கண்ணு முன்ன கொண்டு வந்துடுச்சு..”
கண்களில் கண்ணீர் வழிய, தன் கதையை சொல்லி முடித்தாள்..
அவள் கழுத்தில், அவர் கட்டிய மஞ்சள் கயிறு கிடந்தது..
அது அவரை கேள்வி கேட்டது,உன்னையே நினைத்து கொண்டு ஒரு ஜீவன் இருக்கும் போது, நீ இன்னொருத்தியை மணந்து வாழ்கிறாய். இது சரியா??
அதற்கு பதில் சொல்ல முடியவில்லை அவரால்..
அவள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து,
“என்ன மாமா, ஒண்ணுமே பேச மாட்டேங்குறீங்க??”
“உன்னை பார்த்த திகைப்புல, பேச்சு வரல பாரு..”
“வெள்ள அறிவிப்பு வந்தும்..கிளம்ப தாமதம் ஆக்கிப்புட்டாங்க எங்க ஆளுங்க..அதுனால தான், இவ்ளோ கஷ்டம் எல்லோருக்கும்..”
“ஆமா, எல்லோருக்கும் இப்போ கஷ்டம்..”
ஏதோ யோசனையில் கூறினார்..
அதன் பிறகு, அந்த இடத்தை பேசி முடித்தார்..அவளையும் அவள் அத்தையையும், ஒரு நல்ல வீடு பார்த்து குடி வைத்தார்..
அங்கு, அவருக்கு கட்டுமான வேலை ஆறு மாசம் இருந்தது..
அதை மெதுவாய் செய்து கொண்டு, அங்கேயே தங்கினார்..
மாதம் ஓரிரு முறை, சென்னை சென்று வந்தார்..
பரிஜாதத்திடம் உண்மையை சொல்லும் தைரியம் வரவில்லை அவருக்கு..
அவளும் அவரை நம்பியதால், எதுவும் கேட்கவில்லை..
அந்த ஊர் கோவிலில் வைத்து, அவள் கழுத்தில் தங்கத் தாலி அணிவித்தார்..
அவர் ஆசை பட்ட காதல் வாழ்வை, அவளோடு வாழ்ந்தார்..
அவ்வவ்போது குற்ற உணர்வு ஏற்படும்.. அதை சமாதானம் செய்து கொள்வார்..
அவர்கள் காதல் வாழ்வுக்கு சான்றாக, அவள் கருவுற்றாள்..
விஷயம் கேள்விப்பட்ட
அன்று, சேகருக்கு உலகையே வென்ற உணர்வு ஏற்பட்டது..