Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 1

அத்தியாயம் 1

 

காலை ஒன்பது மணி. தயங்கி தயங்கி அந்த வீட்டினுள் அடியெடுத்து வைத்திருந்தாள் பல்லவி. 


Advertisement

 

அந்த பெரிய வளாகத்தினுள் நுழையும் பொழுதே ஒரு வித பயம் இருந்தது தான்.

Advertisement

Advertisement

 

கேட்டில் இருந்த காவலர் அவளை தடுத்து நிறுத்தும் பொழுது ஒருவித பயத்தில் நின்றவள் என்னவோ சொல்ல, அதை அவர் உள்ளே தகவல் கொடுக்கவும் பின் செல்லுமாறு தலையசைக்கவும் தான் வீட்டினுள் நுழைய முடிந்தது.

Advertisement

 

பல்லவியைப் பார்த்துவிட்டு “ம்மா யாரோ வந்திருக்காங்க!” என்று சொல்லிவிட்டு பள்ளி சீருடையில் இருந்த பெண் தனது மதிய உணவை தன் பேக்கீல் வைத்துக் கொண்டு கிளம்பித் தயாராக, 

 

“இதை சாப்பிட்டு போ பாப்பா!” என்று தோசையுடம் வந்திருந்தார் சமையல் செய்யும் பெண்.

 

“பாப்பா இல்ல தேவிக்கா. அஞ்சலி சொல்லுங்க!” என்று சொல்லி அந்த பெண் பேகை மாட்டிக் கொள்ள,

 

“அதிருக்கட்டும் பாப்பா. சாப்பிட்டு போ” என்று மீண்டும் கூறினார் சமையல் செய்யும் பெண்.

 

“பசிக்கல. இப்ப சாப்பிட்டா ஸ்னாக்ஸ் பாக்ஸ்ல இருக்குறது அப்படியே வீட்டுக்கு வரும். பரவால்லயா? “ என்று சொல்ல,

 

“அம்மா திட்டுவாங்க பாப்பா!” என்றார் கடைசி முயற்சியாய்.
“கேட்க நான் இருக்க மாட்டேன். நீங்க காதுல வாங்கிக்கோங்க!” என்று சொல்லி சிரித்துவிட்டு அஞ்சலி வாசல் அருகே செல்ல,

 

“சாப்பிடாம போறியா நீ?” என மேலிருந்து குரல் வர, அன்னை குரலை கண்டு கொண்டு கண்களை சுருக்கி நின்றாள் அஞ்சலி.

 

பல்லவி அதை எல்லாம் சிறு புன்னகையுடன் பார்த்து நிற்க, “உன்னை தான் அஞ்சலி!” என்று வந்த அவள் அன்னை லதா அதன்பின் தான் பல்லவியைக் கண்டார்.

 

“பல்லவி?” என கேள்வியாய் அவர் அழைக்க, ஆம் என்று அவளும் தலையசைத்தாள்.

 

“ஏன்டா வாசல்லேயே நிக்குற?” என்று அருகில் வந்துவிட்ட லதா,

 

“வீட்டுக்கு யாரும் வந்தா உள்ள கூப்பிட்டு உக்கார வைக்க கத்துக்கோ அஞ்சலி. நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா?” என அதட்ட,

 

 

“ம்மா! ஸ்கூல்க்கு டைம் ஆச்சு. அந்த டென்ஷன்ல மறந்துட்டேன்!” என்ற அஞ்சலி பல்லவிபுறம் திரும்பி,

 

“சாரி!” என்று சொல்லி கண்ணசைக்க, தலையசைத்து புன்னகைத்தாள் பல்லவியும்.

 

“பல்லவி உன் அத்தை பொண்ணு அஞ்சலி” என்று லதா சொல்லவும்,

 

“அப்படியா?” என கொஞ்சம் ஆச்சர்யமாய் பார்த்தவள்,

 

“ஓகே ரொம்ப லேட். ம்மா பை. பை அக்கா!” என பல்லவியிடமும் சொல்லிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஹாலுக்கு வெளியே ஓடிவிட்டாள் அஞ்சலி.
“ஏய் சாப்பிட்டு போ டி!” என்ற குரல் அவளை எட்டவே இல்லை.

 

“இவளை திருத்தவே முடியாது!” என்று சொல்லி பல்லவி பக்கம் திரும்பியவர்,

 

“எப்படி இருக்க டா? அம்மா எப்படி இருக்காங்க?” என லதா கேட்க,

 

“நல்லாருக்கேன். அம்மாவும் நல்லாருக்காங்க. நீங்க எப்படி இருக்கிங்க?” என்றாள் தயக்கத்தோடு.

 

அத்தனை சாந்தமான முகம் லதாவிற்கு. சிறு புன்னகையுடன் பார்த்திருந்தாலும் மனதில் கொஞ்சம் சஞ்சலம் தான்.

 

“ஹ்ம் டா!” என்றவர் சாப்பிட அவளை அழைக்க,

 

“இருக்கட்டுமே! அம்மா வெய்ட் பண்ணுவாங்க!” என்றாள் பல்லவி.

 

ஒரு பெருமூச்சைக் கொடுத்தவர், “இப்ப ஈஸ்வர் வந்திடுவான் டா. பேசுவோம்!” என்றார்.

 

சரி என்று அமர்ந்திருந்தவளுக்கும் கொஞ்சம் அதிகமாகவே பயமும் தயக்கமும் தான் ‘இப்படி வந்து அமர்ந்திருக்கிறோமே’ என்று.

 

லதாவுக்குமே கிட்டத்தட்ட அதே நிலை தான். மகனும் தன் கணவனும் என அவர்களிடம் பேசவே பயம் தான் இதை.

 

ஆனாலும் மகனிடம் நான்கு நாட்கள் முன் இதை பேசி இருக்க, “வர சொல்லுங்க பார்த்துக்குவோம்!” என்றிருந்தான் அவன்.

 

எப்படியும் கணவர் பார்வைக்கு செல்லும் தான் என்றாலும் அதை மகனே சொல்லட்டும் என அவன் பொறுப்பில் கொடுத்துவிட்டார் லதா.
வந்த இவ்வளவு நேரத்திலும் முறை சொல்லி எல்லாம் பல்லவி அழைக்கவில்லை. அதை கவனித்தாலும் சட்டென்று அப்படி அழைக்க அவளுக்கும் எப்படி தோன்றும் என்று தான் தோன்றியது லதாவிற்கு.

 

பல்லவி. சித்ராவின் ஒரே மகள். கணவன் இறந்து பல வருடங்கள் ஆகிறது. ஒரு வருடத்திற்கு முன் தான் சித்ராவின் மாமியார் மாமனார் இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் இறந்திருந்தனர்.

 

பெரிய வசதியான வாழ்க்கை இல்லை என்றாலும் நிம்மதியான வாழ்க்கை தான் இதுவரையிலும் பல்லவி சித்ராவிற்கு. தன் பாட்டி தாத்தா இறந்த நேரம் தான் பல்லவி கல்லூரி முதல் ஆண்டில் அடி எடுத்து வைத்திருந்தாள்.

 

அதுவும் நன்றாய் படிக்கும் பெண். கூடவே தன் குடும்பத்தின் புரிதலும் அதிகம் அவளுக்கு. தந்தை இல்லாமல் அன்னை படும் கஷ்டம் புரிந்து நடப்பவள். கூடவே நல்ல மதிப்பெண் என எளிதாய் குறைந்த கட்டணத்தில் கல்லூரி சேர்ந்திருந்தாள் பல்லவி.

 

அன்னை சித்ரா தையல் கற்றவர். தெரிந்தவர் அக்கம் பக்கத்தினர் என அவர்களுக்கு வீட்டிலேயே துணிகளை தைத்து கொடுக்க, தாத்தா இருந்தவரை அவரின் வருமானமும் என கையை கடிக்காத வாழ்க்கை தான் அவர்களுடையது.

 

இப்பொழுது கடந்த ஒன்றரை வருடங்களும் கிட்டத்தட்ட நரகம் என்ற நிலை தான் அன்னைக்கும் மகளுக்கும். 

 

மகளுக்கு என சில சேமிப்புகள் இருந்ததும் இந்த ஒரு வருடங்களில் கரைய ஆரம்பித்ததில் பயந்து வந்தது சித்ராவிற்கு.

 

இதோ கல்லூரிக்கு ஒரு மாதமாக செல்லவில்லை பல்லவி. அதுவும் படிப்பை முடிக்காமல் வேலை கேட்டு என மாமன் வீட்டில் இப்படி அமர்ந்திருக்க, இன்னும் படபடவென்று தான் வந்தது அவளுக்கு.

 

லதாவின் கணவன் மகேஸ்வரன். தன் வீட்டின் ஒரே மகன் அவர். மகேஸ்வரனின் சித்தி மகள் தான் சித்ரா. சிறுவயது முதலே பெரிதாய் பேச்சு வார்த்தைகள் கிடையாது இரு குடும்பங்களுக்குமே.

 

மகேஸ்வரனின் அன்னை தன் கணவன் கொஞ்சம் முன்னேறி வரும் நேரமே தன் தங்கையுடனான பேச்சு வார்த்தைகளை நிறுத்திக் கொண்டிருந்தார். 

 

சித்ரா மகேஸ்வரன் உறவு என்று வெளியில் எங்கேனும் விழாக்களில் பார்த்தால் தெரியும் என்ற அளவில் தான் இருந்தது.

 

மகேஸ்வரனும் தன் அன்னையை போல தான் உறவுகள் சொந்தங்கள் என அவ்வளவு பேச்சுக்கள் வைத்துக் கொள்வதில்லை.

 

சித்ராவுமே இத்தனை வருடங்களில் இப்படி யார் முன்னும் சென்று நிற்க வேண்டிய நிலை வந்தது இல்லை. இப்பொழுது மகளை அனுப்பவும் அவர் தயாராகவே இல்லை.

 

இப்படி ஒரு அண்ணன் இருப்பதை மட்டும் தான் சித்ரா மகளிடம் சொல்லி இருந்தார்.

 

“வேலை கேட்டு தானே ம்மா போறோம். அப்படியே கரஸ்ல கூட படிச்சுக்கலாம்ல? கேட்டு பார்ப்போம்!” என்று பல்லவி சொல்ல, உறவினர் ஒருவர் மூலம் லதாவின் அலைபேசி எண் வாங்கி பேசி இருந்தனர்.

 

லதாவிற்கு முடியாது என்று சொல்லவும் முடியவில்லை சரி என்று கூறவும் முடியவில்லை.

 

இதுவரை தன் கணவனின் தனிப்பட்ட தொழில் சார்ந்த எந்த முடிவுகளும் லதா கவனத்திற்கு வந்ததே இல்லை.

 

தான் சொல்லி கணவன் கேட்கவா என தோன்றினாலும் இத்தனை வருடங்களில் உதவி என்று கேட்காத ஒரு பெண் அதுவும் அவளின் இப்போதைய நிலை தெரிந்த பின் மறுக்க முடியவில்லை லதாவிற்கு.

 

அதைக் கொண்டு சித்ராவிடம் சம்மதம் சொல்லி கணவனுக்கு பேசும் முன் மகன் கீர்த்திஸ்வரனிடம் பேசி இருந்தார் லதா.

 

மகனும் தந்தை தொழிலில் இணைந்து ஒரு வருடம் கடந்திருந்தது. கட்டுமானத் தொழில் நிறுவனம். சென்னையில் அவர்களுடையதற்கு என்று தனி அடையாளம் உண்டு.

 

அலுவலகம் வளசரவாக்கத்தில் இருக்க, சுற்றி அனைத்து இடங்களிலும் வேலைகள் நடந்தது கொண்டிருந்தது.

 

பல்லவியின் படிப்பை பற்றி எல்லாம் சொல்லி இருக்கவில்லை லதா. இப்படி அப்பாவின் தங்கையின் மகள். வேலைக்கு கேட்கிறாள் என்று மட்டுமே கூறி இருக்க,

 

“என்னம்மா ரெக்கமன்டேஷன் எல்லாம்?” என்று சிரித்தான் அவன்.

 

“அப்பாகிட்ட கேளு ஈஸ்வர். அந்த பொண்ணும் அவங்க அம்மாவும் மட்டும் தான் இருக்காங்களாம். இப்ப கொஞ்சம் கஷ்டப்படுறாங்க போல!” என்று சொல்ல,

 

“ம்மா! அப்பாகிட்ட நான் என்னனு சொல்ல? கேட்பாங்களா?” என்று தான் முதலில் கீர்த்திஸ்வரனும் கேட்டிருந்தான்.

 

“நீ சொன்னா கேட்பாங்க. அதான் உன்கிட்ட வந்தேன்!” என்று மட்டும் சொல்லி இருந்தார் மகனிடம்.

 

வெளியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் பண்ணிரண்டாம் வகுப்பு சான்றிதழ்கள் வைத்து எங்கே செல்ல? என்று பல்லவிக்கு தெரியுமே!

 

குறைந்தபட்சம் கல்லூரி இளங்கலையாவது இப்போதைய சூழலுக்கு முடித்திருந்தால் தான் ஓரளவு நல்ல வருமானம் பெற முடியும் என பல்லவிக்கும் தெரிந்திருந்தது.

 

உறவினர் ஒருவர் தான் இப்படி உனக்கு ஒரு மாமா இருக்கிறாரே என நியாபகப்படுத்தி இருக்க, அன்னையிடம் பல்லவி கேட்டிருந்தாள் வேலைக்கு கேட்போமா என்று.

 

“அவங்ககிட்ட போய் நிக்கனுமானு யோசிக்குறேன் டா!” என சித்ரா முதலில் வேண்டாம் என்று தான் நினைத்தார்.

 

“எதாவது ஒரு வேலை இருக்கும்ல? நான் தான் கொஞ்சம் டைப்பிங் கத்துட்டு இருந்தேன்ல? கேட்டு பார்ப்போம் ம்மா. வெளில தெரியாத இடத்துல கேட்கவும் போகவும் பயமா இருக்கு. அதான்” என்று மகள் சொல்லும் பொழுது வேண்டாம் என்று சொல்ல மனமில்லாமல் தான் அனுப்பி வைத்தார்.

 

பல்லவி எண்ணமும் அந்த நேரத்தில் என அவ்வளவு தான் யோசித்தது. தேவைக்கு என கொஞ்சமாய் சம்பளம் கிடைத்தாலும் போதும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து கொஞ்சமா மை சேமிக்க முடிந்தால் அடுத்த வருடத்தில் கல்லூரியைப் பற்றி யோசிக்கலாம் என்ற அளவில் அவள் நினைத்து வைத்திருந்தாள்.

 

மாடியில் இருந்து யாரோ இறங்கி வரும் சத்தத்தில் பல்லவி நிமிர்ந்து பார்க்க, 

 

“வா கண்ணா!” என்று அழைத்தார் லதா.

 

“ஈஸ்வர்! நான் சொன்னேனே! பல்லவி. சித்ரா த்தை பொண்ணு!” எஸ் சொல்லவும் தான் கேள்வியாய் பார்த்தபடி வந்தவன்,

 

“ஓஹ்!” என்றான்.

 

ஆனாலும் இத்தனை குட்டிப் பெண்ணை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

 

“செர்ட்டிஃபிக்கெட் இருக்கா?” என கீர்த்திஸ்வரன் அவளிடம் கேட்க, தன் கையில் இருந்தவற்றை பார்த்த கையோடு லதாவையும் பார்த்தாள் பல்லவி.

 

“குடு டா!” என்றவர் புன்னகைக்க, அதை நீட்டிவிட்டு என்ன சொல்வானோ என்று பார்த்தபடி நின்றாள்.

 

அதை பார்வையிட்டவன் கண்கள் சுருங்கி பின் விரிந்து பின் கோபமாய் முறைப்பில் வந்து நின்றது அன்னையிடம்.

 

அதை புரிந்து கொண்டவரும் என்ன சொல்வானோ என்பதாய் தயங்கினாலும் கெஞ்சலாய் பார்த்து வைத்தார் மகனை.

 

அதில் அமைதியாய் திரும்பவும் அந்த ஃபைலை அவளிடம் நீட்டிவிட்டு, “இன்ஃபார்ம் பண்றேன்!” என்று மட்டும் ஈஸ்வர் அவளிடம் சொல்ல, அவனையும் லதாவையும் என மாற்றி மாற்றி கண்கள் அலைபாய கண்டாள் பல்லவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!