ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 8
அத்தியாயம் – 8
அவன் மெல்ல அவள் வாயிலிருந்து கையை எடுக்க, சட்டென்று அவனை விட்டு தள்ளி நகர்ந்து சென்றவள், “என் பர்மிஷன் இல்லாம என்னை தொடுற வேலை வச்சுக்காத!” என்று எச்சரித்தாள், அவளது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன…
”நான் வேணும்னு தொடல, நீ கத்துனதால தான் அப்படி பண்ண வேண்டியதா போச்சு, உனக்கு பிடிக்கலனா ஐம் ஸாரி,” என்று அவன் இரு கரங்களையும் விரித்து, சட்டென்று ஒரு ஸாரி சொல்லிவிடவும், அவளுக்கு அதற்கு மேல் அதற்காகக் கோபம் கொள்ள இயலவில்லை, அவனது அந்த உடனடி மன்னிப்பு அவளது ஆக்ரோஷத்தை ஒரு நிமிடம் தணிக்கச் செய்ய, சற்று நிதானித்தவள், “சரி சொல்லு… எதுக்கு திரும்ப திரும்ப திருடன் வேஷத்துல வர்ற? நீ தான் ரன்வீர்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு, இன்னமும் ஏன் இந்த மாஸ்க்?” என்று வினவினாள்…
Advertisement
அவளை ஒரு குறும்பான பார்வை பார்த்தவன்.. “சீக்ரட்டா என்னை நீ கிளிப்பிங் எதுவும் எடுத்துடக் கூடாதே, அதான் இந்த முன்னெச்சரிக்கை!” என்று சொல்லிவிட்டு அவன் சத்தமாக சிரிக்க, அவளோ அவனை ஆத்திரத்துடன் முறைத்தாள்…
”ஓகே ஓகே… ஜோக் அபார்ட்” என்று சொன்னவன், மெல்ல எழுந்து அவளது அறையைத் தனது லேசர் விழிகளால் அலசத் தொடங்கினான்…
”இப்போ என்ன தேடுற?” என்றாள் அவள் சந்தேகத்துடன்…
Advertisement
”சாப்பிட ஏதாவது இருக்கான்னு தான் தேடுறேன், நீ தான் எதுவும் கொடுக்க மாட்டேங்குறியே, ஸோ நானே தேடி எடுத்துக்கிறேன்,” என்று சொன்னவன், மேஜையின் பக்கம் நகர்ந்தான். அப்போது அவனது கண்ணில் ஒரு சிறிய குழந்தையின் புகைப்படம் ஈர்க்க, மேஜையின் மீதிருந்த அந்த அழகிய பிரேமை கையில் எடுத்தவன்,
”ஹவ் க்யூட்!” என்று ரசித்துக் கூற, மிருதுளாவிற்கு கோபம் கூடியது…
Advertisement
”அது நான் தான்!” என்று அவள் எரிச்சலுடன் சொல்ல, ரன்வீர் அந்தப் புகைப்படத்தை இன்னும் நெருக்கமாகப் பார்த்துவிட்டு..
”ஓ அப்படியா!” என்று வியந்தவன், புகைப்படத்தில் இருந்த அந்த சிறுமியையும், முன்னால் நிற்கும் மிருதுளாவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “நம்பவே முடியலையே… சின்ன வயசுல இவ்வளவு அழகா, சமத்தா இருந்த பொண்ணு… இப்போ எப்படி இவ்வளவு பெரிய ரௌடியா மாறிட்ட?” என்று கிண்டலாகக் கேட்டான்…
அவன் சொன்ன ரௌடி என்ற வார்த்தை அவளை மேலும் சீண்டியது. “நான் ரௌடியா? நீ பண்றதுக்கு பேரு தான் ரௌடித்தனம்! அடுத்தவங்க வீட்டுக்குள்ள ராத்திரியில நுழைஞ்சுட்டு என்னை ரௌடின்னு சொல்றியா?” என்று அவள் விரலை நீட்டிப் பேச, ரன்வீர் அந்தப் புகைப்படத்தை மீண்டும் மேஜையிலேயே வைத்துவிட்டு நிமிர்ந்தவன்,.. ”இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? நான் எவ்வளவு கூலா இருக்கேன் பாரு… நீயும் கொஞ்சம் கூலா இரு,” என்றான் தனது குரலில் ஒரு சிறு சலனமும் இல்லாமல்…
”எப்படி என்னால கூலா இருக்க முடியும்? இது என் ரூம், இங்கே அத்துமீறி நுழைஞ்சிருக்க நீ!” என்று அவள் கூறிட, அவன் ஒரு மெல்லிய கேலிச் சிரிப்பை உதிர்த்தபடி… “ஆமா… அத்துமீறி நுழைஞ்சுதான் இருக்கேன். ஆனா, அத்துமீறி இதுவரைக்கும் நான் எதுவும் பண்ணலையே மிருதுளா?” என்று அவன் இழுத்துக் கூற, அவளது கண்கள் கோபத்தில் விரிந்தன.
Advertisement
”ஓ! அப்போ அந்த எண்ணம் வேற உனக்கு இருக்கா?” என்று அவள் எகிறிட, அவளது ஆக்ரோஷம் அவனைக் கொஞ்சம் கூடப் பதற்றமடையச் செய்யவில்லை.
”அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தா… இப்போ உன்கூட இவ்வளவு நிதானமா, இவ்வளவு தூரம் நின்னு பேசிட்டு இருக்க மாட்டேனே?” என்று அவன் அழுத்தமாக சொல்ல, மிருதுளா ஒரு நிமிடம் பேச்சற்றுப் போனாள்.
அவனது அந்த லேசர் கண்கள் இப்போது அவளை ஊடுருவிப் பார்த்தன, அந்தப் பார்வையில் ஒருவிதமான நேர்மையும், அதே சமயம் சொல்ல முடியாத ஒரு ரகசியமும் கலந்திருந்தது, அவன் அவளைக் காயப்படுத்த வரவில்லை என்பது அவளது உள்ளுணர்விற்குப் புரிந்தாலும், அவனது இந்த அசாத்திய துணிச்சல் அவளை எரிச்சலூட்டியது…
“பேச்சை மாத்தாதே ரன்வீர், நீ எதுக்காக இங்கே வரேன்னு எனக்குத் தெரியணும்! உன்னோட பிளான் தான் என்ன? என்கிட்டருந்து உனக்கு என்ன வேணும்? இல்லைன்னா… என் வீட்ல இருந்து ஏதாவது தேவைப்படுதா?” என்று அவள் சரியாகக் கணித்து, அவனைத் துளைத்தெடுப்பது போல் வினவினாள்…
மிருதுளாவின் இந்தக் கூர்மையான கேள்வி ரன்வீரை ஒரு நிமிடம் திகைக்க வைத்தது. ‘இவ நான் நினைச்சதை விட ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காளே… இன்ட்ரஸ்டிங்!’ என்று மனதிற்குள் வியந்தவன், தனது முகபாவனையில் எந்த மாற்றமும் காட்டாமல் அவளை ஏறிட்டான்.
உண்மையில் அவன் அந்த ரகசியப் ஃபைலுக்காகத்தான் வந்திருந்தான். ஆனால், இப்போது அதைச் சொன்னால் மொத்தத் திட்டமும் பாழாகிவிடும் என்பதால்,
”எனக்கு உன்கிட்டருந்தோ, உன் வீட்ல இருந்தோ எதுவும் தேவை இல்லை மிருதுளா, ஒருமுறை உன்னை ஒரு டிராஃபிக் சிக்னல்ல பார்த்தேன்… என்னமோ தெரியல, பார்த்ததுல இருந்தே உன் நினைப்பு தான் ஓடிக்கிட்டு இருக்கு,. டீன்ஏஜ் பசங்க மாதிரி பின்னாடி சுத்திச் சுத்தி வந்து உனக்கு ப்ரொபோஸ் பண்ண எனக்குத் தெரியாது, அதான்… எனக்குத் தெரிஞ்ச இந்த தனி வழியில இறங்கிட்டேன்,” என பாதி மெய்யும் பாதி பொய்யும் கலந்து ஒரு அதிரடியான பதிலை
கூலாகச் சொல்லிவிட்டு அவளது எதிர்வினைக்காகக் காத்திருந்தான்…
அவன் கூறியதை கேட்ட மிருதுளாவின் விழிகளோ மேலும் அதிர்ச்சியில் விரிந்தன, ஒரு பெரிய பிசினஸ் மேக்னட், நள்ளிரவில் தன் அறைக்குள் திருடன் போல் புகுந்து, இப்படி ஒரு காரணத்தைச் சொல்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
”என்னது… சிக்னல்ல பார்த்தியா? அதுக்காகவா இப்படித் திருடன் மாதிரி உள்ள வந்த? இது என்ன பைத்தியக்காரத்தனம்!” என்று அவள் திக்கித் திணறிப் பேச, ரன்வீர் மெல்ல எழுந்து அவளை நோக்கி வந்தவன்… “பைத்தியக்காரத்தனம்னு சொல்லலாம்… இல்ல ஒரு பிடிவாதம்னு சொல்லலாம். ஆனா, இந்த தைரியமான கண்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கணும்னு தோணுச்சு, வந்தேன். இப்போ பார்த்தாச்சு,” என்றான் அவளது கண்களை நேருக்கு நேராகச் சந்தித்தபடி…
அவனது அந்த லேசர் விழிகளில் இப்போது தெரிந்த மென்மை அவளுக்கு ஒருவிதமான குழப்பத்தைத் தந்தது, அவன் பொய் சொல்கிறானா? அல்லது உண்மையிலேயே தன்னைத் தேடி தான் வந்தானா? என்பதும் புரியவில்லை..
இந்த மர்மமான இரவில், ஒரு திருடனைப் போல வந்தவன் இப்போது ஒரு காதலனைப் போலப் பேசுவதை அவளது அறிவு மறுத்தாலும், மனதும் ஏனோ தடுமாறியது…
அவள் யோசிப்பதை ஒரு மெல்லிய புன்னகையுடன் அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ தன்னைச் சமாளித்துக் கொண்டு, “என்னால நீ சொல்ற கதையை நம்ப முடியல, தயவு செய்து இங்கிருந்து போயிடு,” என்றாள். அவன் தன்னைத் தேடித்தான் வந்தேன் என்று சொன்ன விஷயம், அவளுக்குள் ஒரு இனம் புரியாத நடுக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது…
ஆனால், ரன்வீர் அடுத்த நொடி செய்த காரியம் அவளது உலகத்தையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது, அவள் அறவே எதிர்பாரா விதமாய், அத்தனை நேரம் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டிருந்த அந்த முகமூடியை அவன் மெல்லக் கழற்றினான்.
நிலவொளியும் அறையின் மங்கலான விளக்கு வெளிச்சமும் அவனது தீர்க்கமான முகத்தில் விழுந்து பிரதிபலித்தன.
”நான் பொய் சொல்றதா நினைக்கிறியா மிருதுளா? சத்தியமா இல்ல, எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு… ஐ லவ் யூ!” என்று கூறி, சட்டென்று அவளுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்தான்…
மிருதுளா அப்படியே விக்கித்துப் போனாள், ஒரு பக்கம், அந்தத் திருடன் வேறு யாருமல்ல, இன்று மாலையே தான் பார்த்த அந்தப் பெரிய பிசினஸ் மேன் ரன்வீர் தான் என்பது அவனது முகம் தெரிந்ததும் உறுதியானது. மறுபக்கம், அத்தனை கர்வமும் அதிகாரமும் கொண்ட ஒரு மனிதன், தனக்காக இப்படி நள்ளிரவில் தன் அறைக்குள் மண்டியிட்டுத் தனது காதலைச் சொல்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை…
அவளது இதயம் தாறுமாறாகத் துடித்தது, இதற்கு முன்னால் அவளிடம் யாரும் இப்படி நேரடியாக மண்டியிட்டுப் பிரபோஸ் செய்ததே கிடையாது, பிஸ்னஸ் உலகில் உச்சத்தில் இருப்பவன், ஆயிரக்கணக்கானோர் வியந்து பார்க்கும் ஒரு ஆளுமை, இன்று ஒரு சாமானியப் பெண்ணான தன் முன்னால் மண்டியிட்டுக் கிடப்பது அவளுக்கு என்னவோ போல இருந்தது.
அவனது அந்த லேசர் கண்கள் இப்போது அவளது கண்களை ஆழமாகப் பார்த்தன, அதில் மர்மமோ, ஏளனமோ இல்லை. மாறாக, ஒரு தூய்மையான ஈர்ப்பும், அவளைத் தன்னுடைத்தாக்கிக் கொள்ளும் பிடிவாதமும் மட்டுமே தெரிந்தன…
மிருதுளா அப்படியே சிலையாக உறைந்து நின்றிருக்க, மண்டியிட்டிருந்த ரன்வீர் மெல்ல எழுந்து நின்றான், அவனது முகத்தில் இப்போது ஒரு நிதானமான புன்னகை தவழ்ந்தது,
அவளது அதிர்ச்சியை அவன் ரசிப்பது போலத் தெரிந்தது.
”என்னாச்சு… ரொம்ப ஷாக்கிங்கா இருக்கா? ம்ம்… கண்டிப்பா ஷாக்கிங்கா தான் இருக்கும், ஆனா என்ன பண்றது? என்னால தான் பொறுமையா வெயிட் பண்ண முடியல,” என்றான் ஆழமான குரலில், முகமூடி இல்லாத அவனது முகம், அந்த நிலவொளியில் இன்னும் தீர்க்கமாகவும், வசீகரமாகவும் தெரிந்தது.
அவளது மிக அருகில் வந்து, அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தவன்… “உன்னோட பதிலை நீ இப்போதே சொல்லணும்னு அவசியம் இல்ல மிருதுளா, நிறைய டைம் எடுத்துக்கோ… யோசி. இப்போ நான் போறேன். ஆனா, உன் பதிலை கேட்க நான் கண்டிப்பா திரும்ப வருவேன்,” என்று அழுத்தமாக கூறினான்…
அவன் சொன்ன விதம், அது வெறும் காதல் விண்ணப்பம் மட்டுமல்ல, ஒரு பிடிவாதமான ஆளுமையின் ஆக்ரோஷமான அறிவிப்பு போலவும் அவளுக்குத் தோன்றியது…
அடுத்த நொடி, லாவகமாகத் திரும்பிப் பால்கனி பக்கம் சென்றவன் ஒரு சிறு சத்தமும் இன்றி, அந்த உயரமான மதில் சுவரை ஒரு மேகத்தைப் போலக் கடந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் இருளுக்குள் மாயமாக மறைந்தான்…
மிருதுளா அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் திகைத்து நின்றாள். அவளது இதயம் இன்னும் சீராகவில்லை, அவளது அறையில் நிலவிய அந்த நிசப்தம் இப்போது அவளுக்குப் பெரும் இரைச்சலாகத் தெரிந்தது, காதுகளில் அவன் சொன்ன அந்த மூன்று வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒரு ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டே இருந்தது…
அவளது இதயம் இன்னும் சீராகவில்லை, கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன, ஒரு சாதாரணத் திருடன் என்று நினைத்தவன், ஒரு பெரும் தொழிலதிபராகத் தன் முன்னால் தோன்றி, இப்போது தன் அறையிலேயே மண்டியிட்டுப் பிரப்போஸ் செய்திருப்பதை அவளது மூளை நம்ப மறுத்தது.
’நடப்பதெல்லாம் கனவா இல்ல நிஜமா?’ தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள், வலித்தது. அப்படியானால் இது நிஜம் தான்.
மெல்ல நடந்து சென்று மெத்தையின் ஓரத்தில் அமர்ந்தாள். அவன் அமர்ந்திருந்த அதே இடம்… இன்னும் அவனது இருப்பின் வெப்பம் அங்கே எஞ்சி இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
’எ… எனக்காகவா வந்தான்? எனக்காக மட்டும்தான் வந்தானா?’ அவளது உள்ளுணர்வு ஏதோ ஒரு மர்மத்தை உணர்த்தினாலும், ரன்வீர் கொடுத்த அந்த அதிரடியான காதல் அதிர்ச்சியில் அந்த சந்தேகம் அடிபட்டுப் போனது, ஒரு பக்கம் அவன் திருடன் போல் அத்துமீறி நுழைந்த கோபம் இருந்தாலும், மறுபக்கம் அத்தனை உயரத்தில் இருக்கும் ஒரு மனிதன், தன் முன்னால் மண்டியிட்டுக் கிடந்த அந்த நிமிடம் அவளை என்னவோ செய்தது.
அவளது தாய் தந்தை மறைவிற்குப் பிறகு, அவளது உலகம் தாத்தா மற்றும் இந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே சுருங்கிப் போயிருந்தது, யாரிடமும் அதிகம் பேசாத, ஒருவிதமான தனிமைக்குள் தன்னை ஒளித்துக் கொண்ட அவளுக்கு, ரன்வீரின் இந்த அதிரடி வருகை ஒரு பெரும் நிலநடுக்கத்தைப் போல இருந்தது.
’அவன் சொன்ன அந்த சிக்னல்… அங்கே உண்மையிலேயே என்னைப் பார்த்திருப்பானா? இல்லைனா இவ்வளவு துணிச்சலாக இவன் இப்படி செய்வானா?’ குழப்பம் அவளைத் துளைத்தது.
அன்று இரவு அவளுக்குத் தூக்கம் என்பதே வரவில்லை, ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்த நிலவை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த இருட்டில் எங்கே பார்த்தாலும் ரன்வீரின் அந்த முகமூடி இல்லாத தீர்க்கமான முகமும், அவனது அந்த ஊடுருவும் விழிகளும் தான் தெரிந்தன…
அவன் மீண்டும் வருவான் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். அவனது வருகைக்காக அவள் பயப்பட வேண்டுமா? அல்லது எதிர்பார்க்க வேண்டுமா? என்று தெரியாத ஒரு விசித்திரமான தவிப்பில், அந்த இரவு விடியலை நோக்கிக் மெல்ல நகர்ந்தது…
