Skip to content
Post Views: 1,811
அதே சமயம் இருவரின் இதழிலும் வழிந்த அழகிய புன்னகை அந்த நேரத்து நிறைவை அடுத்தவருக்குள்ளும் சொல்லாமலேயே கடத்தி சென்றிருந்தது.
சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த யமுனாவை பக்கவாட்டாக அணைத்துக்கொண்ட கங்கா, “அக்கா..” என்றிருந்தாள் ஆதுரமாய்.
Advertisement
மறுபுறத்தில் இருந்து அணைத்த கிருஷ்ணா, “மாமா, சூப்பர் அக்கா. அவருக்கு விசயத்தை சொன்னப்ப கூட.. இப்படி நடக்கும்ன்னு நானே எதிர்பார்க்கல..!” என மெல்லிய குரலில் சொல்ல,
‘அப்போ எல்லாத்தையும் செஞ்சது நீயா..?!’ என்ற ஆச்சரியம் உடன்பிறப்புக்கள் இருவருக்கும்.
Advertisement
Advertisement
“அப்பா தான் உன் போனை உடைச்சது..” என்று கிருஷ்ணா சொன்னதும் யமுனா சந்தேகம் உறுதியானதில் பெருமூச்சு எழுந்தடங்கியது.
“அது அன்னைக்கே எனக்கு தெரியாது அக்கா. நேத்து மத்தியானம் அம்மா அப்பா கூட பேசினதுல மாமா பத்தி பேசிட்டே.. அவங்க கூட நீ பேசாம இருக்கவும், கல்யாண ஏற்பாடு பத்தியும் பேசினதை நா கேட்டுட்டேன்.
Advertisement
எனக்கு உடனே என்ன செய்யன்னு தெரியல. உன்கிட்ட சொன்னா உன்னாலையும் எதுவும் செய்ய முடியாது.
ஏன்னா நம்ம பங்காளிங்கள்ல சிலரை நமக்கு தெரியாம காவலுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க அப்பா.
அதையும் பாத்துட்டு தான் உன் போன்ல இருந்து சிம்மை கழட்டி எடுத்துட்டு போய் என் ப்ரண்ட் போன்ல போட்டு செக் பண்ணேன்.
நல்ல வேல ரொம்ப தேட வைக்காம, “யமுனா எதும் பிரச்சனையா..? நீ ஓகே தானே..?” ன்னு எஸ்எம்எஸ் மெசேஜ் நிறைய அந்த நெம்பருக்கு வந்திருச்சு..
நிச்சயமா இது மாமாவா தான் இருக்குமுன்னு நினைச்சாலும், அதுவா.. ன்னு ஒரு சந்தேகத்தோட தான் கால் பண்ணேன்.
நா கிருஷ்ணா பேசறேன்னு சொன்னதுமே மாமா, “சொல்லு மாப்புள.. நல்லா இருக்கீயா..?
ட்ரஸ் சரியா இருந்துச்சா..? உனக்கு பிடிச்சிருந்துச்சா..? பட்டாசெல்லாம் வெடுச்சாச்சா..?” ன்னு கேட்டார்.
அதோட உன்னோட அக்கா போன் என்னடா ஆச்சு..? வாட்ஸ் அப்ல சிங்கிள் டிக் வந்ததும் நெட் பிரச்சனையோன்னு எஸ்எம்எஸ் பண்ணியும் ரிப்ளை வரல..
கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப் ன்னு வருதுன்னு கேட்டதுமே, அவர் தான்னு கன்ஃபார்ம் ஆகி விசயத்தை சொன்னேன். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவரு.
“எனக்கு விசயம் தெரியுமுன்னு காட்டிக்காம அமைதியா யமுனா கூட இரு. கண்டிப்பா உன் அக்கா கழுத்துல தாலி என் கையால தான் ஏறும்..” ன்னு உறுதியா சொல்லவும் தான் நானும் எதுவும் தெரியாத மாதிரி இருந்துட்டேன்.
உனக்கு அப்பா முடிவு பண்ணியிருந்த ஆளை பத்தி எனக்கு நல்லா தெரியும் க்கா.. சரியான பொறுக்கி. இவனுக்கு போய் உன்னைய கட்டி வைக்க பார்த்தா விடுவேனா..?
எப்படி திட்டம் போட்டு மாமாவ வரவச்சேன் பாத்தியா..?” என புன்னகையோடு மெல்லிய குரலில் தன் வீர சாகசத்தை சொன்னவன் இப்போது அவளுக்கு தெய்வமாய் தான் தோன்றினான்.
‘அவன் மட்டும் இப்படி ஒரு விசயத்த செய்யாம போயிருந்தா இங்கே நடக்க இருந்த அந்த கல்யாணத்த நிறுத்த என்னால முடுஞ்ச எல்லாத்தையும் நான் செஞ்சிருப்பேன் தான்.
ஆனா இப்போ தயாவோட இந்த கல்யாணம் அதுவும் என் பெத்தவங்க கண்பார்வையில நடக்க காரணம் கிருஷ்ணா தானே..’ என்ற எண்ணம் அத்தனை மகிழ்வை கொடுத்தது அவளுக்கு.
அந்த மகிழ்வோடு அவனை வாஞ்சையாய் அவள் அணைத்துக்கொண்டு, “தேங்க்ஸ் டா..” என்றாள் குரல் கமற.
“என்ன க்கா..!” என சலுகையாய் அவன் கொஞ்ச,
கங்கா அவர்கள் இருவரையும் சேர்ந்தாற் போல அணைக்க, மூவரின் பாசப்பிணைப்பை புன்னகை ததும்ப ஆதுரமாய் பார்த்து நின்றான் தீனதயாளன்.
“அப்புறம்.. எல்லாம் நல்லபடியா முடுஞ்சது. கிளம்பலாமாடா..?” என ஜெயசீலனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தங்கமணி தீனாவின் தோளில் லேசாக தட்டி கேட்க,
அதே மாறா புன்னகையோடு அவர் புறம் திரும்பிய தீனா அவரை அணைத்துக்கொண்டு, “தேங்க்ஸ் ண்ணா..” என்றிருந்தான்.
“நல்ல ஜோடிடா நீங்க..! நீங்க ஒருத்தர ஒருத்தர் கட்டிப்பீங்கன்னு கல்யாணத்த பண்ணி வச்சா, இப்படியா அடுத்தவங்கள கட்டிக்கிட்டு.. தேங்க்ஸ் சொல்லிட்டா நிப்பீங்க..” என கிண்டலாக சொன்ன போதும், ஆதரவாய் அவன் தோளை தடவிவிடவும் தவறவில்லை அவர்.
தீனாவின் மீதான அதீத உரிமையை தங்கமணி வெளிப்படுத்த படுத்த, ஜெயசீலனின் மனமோ தீயாய் தகிக்க தொடங்கியது.
அதிலும் இன்று தீனாவின் முகத்தில் இருக்கும் புன்னகை… அதை பொறுக்க முடியவில்லை அவரால்..
இப்படி ஒரு திருமணம் நடக்கும் என்பதையும் அவர் கற்பனை கூட செய்து பார்க்கவில்லையே..!
“அவன்ற மொதலாளி வந்து பொண்ணு பாக்க போகோனுமுன்னு நிக்கும் போது போயித்தே ஆகோனும், போகாம இருக்க முடியாது..
பொண்ணு பார்த்தாக்க எல்லா ஆச்சுதா..? என்ன எதுன்னு முடுவு எடுக்க போறது நாந்தானே..” என சகுந்தலாவிடம் சொல்லிவிட்டு,
விருப்பமே இல்லாது வந்தவர் தீனா மாங்கல்யம் சூட்டும் போது அவனையே பார்த்திருந்த பார்வைக்கான அர்த்தம் அவரன்றி யாரறிவார்..?
எதிர்பார்த்த எந்த நிகழ்வும் நடக்காமல் எதிரே பாராத பலவும் நடந்துவிட்ட அதிர்வில் இருந்த சொந்தங்கள் ஒவ்வொருவராய் விலகிச்செல்ல தொடங்கினர்.
இறுதியாய் யமுனா தீனாவை சேர்ந்தவர்கள் மட்டும் அங்கிருக்க முத்தரசனை நெருங்கிய யமுனா,
“உங்க மனசை வேதனைப்படுத்தி பாக்கனுமுன்னு ஒருநாளும் நா நினைச்சது இல்லப்பா.
ஆனா என்னோட வாழ்க்கை.. இவர தவிர வேற யாராலையும் முழுமை அடையாதுன்னு நா புருஞ்சுக்கிட்ட நொடியில இருந்து இவர வேற யாரோவா என்னால பார்க்க முடியல.
உங்க மகள பத்தி உங்களுக்கு தெரியுமேப்பா.. எப்பவும் எதுலையும் தீர்க்கமா முடிவெடுப்பா. அவ முடிவு எப்பவும் தப்பா இருக்காதுன்னு பெருமையா பேசுவீங்களே..?
அந்த நம்பிக்கை தான் உங்க சம்மதத்தை வாங்கிட முடியுமுன்னு திடமா என்னை நினைக்க வச்சது.
நம்ம இணை யாருன்னு முடிவு பண்ணறது அந்த ஆண்டவன்னா.. அவர் ஏற்படுத்தி கொடுத்திருக்கற இந்த பந்தத்தை மதிச்சு எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா..”
என்றவள் தீனதயாளனோடு அவரின் பாதம் பணிய உடனடியாக எந்த எதிர்வினையும் புரிய முடியாத படி மகளின் வார்த்தைகள் அவரின் மனதை ஆக்கிரமித்திருந்தது.
அதை உணர்ந்த மரகதம் அங்கிருந்த தட்டில் பூவை எடுத்து உறைந்து நின்ற கணவரின் கையில் திணிக்க,
உறைநிலை கலைந்தவரும் தன்னிச்சையாக அதை அவர்களின் மேல் போட்டு, “நல்லா இருங்க..” என்றிருந்தார் மனதாரவே.
ஆனால் அதற்கு மேல் அங்கு அவரால் நிற்க முடியாத படி முன் பேசிய வார்த்தையும், யமுனாவின் வீங்கிய முகமும் படுத்த அந்த கோவிலை விட்டு வெளியேறினார் அவசரமாக.
யமுனா மரகதத்தை எதிர்பார்ப்போடு பார்க்க, “நல்லபடியா பொழச்சுக்கடீ..” என்றுவிட்டு, கங்காவின் கையை பிடித்தபடி அவரும் வெளியேற யமுனாவின் விழிகள் கலங்கி போனது.
திருமணம் முடிந்து தாய் தந்தை புகுந்த வீட்டிற்கு நல்லவிதமாக வழியனுப்பி வைக்கும் போதே அந்த கனத்தின் கணத்தை ஏற்பது பெண்களுக்கு கொடுமையானது தானே..!!
அவ்வாறிருக்க, ‘இப்படி அவர்களை வருத்திவிட்டோமே..’ என்ற வருத்தத்தோடு இந்த பிரிவு வலியும் கூடிப்போக யமுனா என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியாமல் போனது.
தீனாவிற்கு அவளின் நிலை புரிந்தாலும் இப்போது அவனாலும் தான் என்ன செய்ய முடியும்..?
கோவிலின் உள்ளே நின்று அவளை ஆறுதலுக்காக கூட அணைக்க முடியாதே..!!
அதனால் அவன் இயலாமையோடு தங்கமணியை காண தன் கண்களை மூடித்திறந்தவர், ஜெயசீலனிடம் சென்று,
“பொண்ணோட குடும்பம் இப்படி மனசு வருந்தி போறது சரியில்ல. வாங்க போய் முறையா சொல்லிட்டு பொண்ணை அழச்சுட்டு கிளம்பலாம்..” என அழைக்க,
மறுக்க முடியாத நிலையில் தீனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரோடு வெளியேறினார்.
அங்கு முத்தரசனிடம் மரகதம் ஏதோ தீவிர விவாதத்தில் இருப்பது கண்ணில் பட அவ்விடம் விரைந்த தங்கமணி,
“சார், ஒரு நிமிஷம்..” என அவரின் கவனத்தை தன் புறம் திரும்பியவர்,
“உங்க பொண்ணோட வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும் அதுக்கு நா கேரண்டி.
நானும் ரெண்டு பொண்ணுக்கு அப்பா தான். உங்க மாப்பிள்ளை மட்டும் என் பொண்ணுங்கள தங்கச்சி ஸ்தானத்துல வச்சு பார்க்காம போயிருந்தா என்னோட மூத்த மகள இவருக்கு தான் கட்டிக்கொடுத்திருப்பேன்.
பத்து வருஷமா அவனை நான் பார்க்கிறேன். அந்த அளவு நம்பிக்கையான ஆள் தான் உங்க மாப்பிள்ளை.
உங்க மக ஆசைப்பட்டவன் தப்பானவனோ..? அவ வாழ்க்கை என்னாகுமோ..? ங்கறது தான் உங்க கவலைன்னா அதுக்கு அவசியமே இல்லை..” என்று உறுதியாய் சொல்ல,
ஏற்கனவே கங்கா மூலமாய் அவர் யாரென அறிந்திருந்தவர்களுக்கு அவரின் இந்த வார்த்தை ஒரளவு நிம்மதியை கொடுத்தது என்றே சொல்லலாம்.
ஆனாலும் உடனே ஏற்றுக்கொண்டு விட ஏதோ ஒன்று தடையாக இருக்க,
“அதான் கல்யாணம் பண்ணியாச்சே. இனி நாங்க தடுக்கவா போறோம். அவங்க வாழ்க்கை அவங்க கையில..” என சொன்னாலும் தந்தையாய் அவரின் வலியும் வருத்தமும் தங்கமணிக்கு புரிவதாய்.
ஆனால், ‘இப்படியான அவசரத்திற்கும்.. அவசியத்திற்கும் அவர்களை தள்ளியதும் இவர் தானே..!’ என்ற எண்ணம் முத்தரசனின் மீதான கரிசனத்தை ஓரம் கட்டியிருந்தது.
அதனால், ‘இது உடனே சரி செய்ய முடியாத ஒன்று.. காலம் தீனாவை இவருக்கு புரிய வைக்கும்..’ என நினைத்தவர் ஜெயசீலனை கண்ணால் அவரிடம் பேச சொல்ல,
‘அவெனுக்கு முதலாளின்னா இவென் சொல்லறத நா செய்யனுமாக்கும்..’ என்ற அலட்சியம் வந்த போதும்,
‘இவெனோட புள்ளைய கட்டிகொடுக்க வேற நினச்சிருக்காப்பிடியா..?!
இந்த ஆளு கூட அவென் இழையறதே பாத்தா, இவென வுட்டுபோட்டு வேற பக்க வேலைக்கு கூட அந்த பய போவமாட்டானோட்ட இருக்கு..
அதுக்கொசரமே இவென அனுசரிச்சு போவேண்டி கெடக்கு.. எல்லா என்ற நேரோ..’ என மனதில் புலம்பினாலும் வெளியே தெரியாத படி மறைத்துக்கொண்டு,
முத்தரசனிடம் வந்தவர், “பொண்ண நாங்க அழச்சிட்டு போறோம்..” என்றவர் அப்போது அங்கு வந்த தீனாவை யாருமறியாமல் முறைக்கவும் தவறவில்லை.
இது யமுனா கண்ணில் பட்டது அவர் அறியவில்லையே..!!
அவரின் பார்வைக்கும், தீனாவின் திருமண மறுப்பிற்கும் நிச்சயம் ஏதோ சம்மந்தம் உண்டு என்பதும்,
சற்றுமுன் தீனா சொன்ன விசயத்திற்கும்.. இவருக்கும் இருக்கும் சம்மந்தத்தையும் எண்ணியபடி யமுனா இருக்க..
தன்னவள் தன் கை சேர்ந்த தருணத்தை மட்டுமே நினைவில் வைத்து.. நிம்மதியோடு அவளின் கரத்தை பற்றிக்கொண்டு முகம் மலர நின்றிருந்தான் தீனதயாளன்.
வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது
error: Content is protected !!