Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 6

நதி 6


Advertisement

தீனதயாளனோடு சென்ற கங்காவை தொடர போன யமுனா, எதிரில் வந்த வசந்தியிடம் அவசரமாக விசயத்தை சொல்லி,
“தச்சத கணக்கு பாத்து பஹதூர் அண்ணாகிட்ட சொல்லிடுங்கக்கா..” என்றுவிட்டு கீழ்தளம் நோக்கி ஓடினாள்.

Advertisement

Advertisement

கீழிறங்கும் போதே தனக்கு தெரிந்த ஒருவரை அழைத்த தீனா, 

Advertisement

“அண்ணே.. ஆட்டோ ஸ்டேண்டுல இருந்து ஒரு ஆட்டோவ கம்பெனிக்கு அனுப்பிவிடுங்க..” என்று சொல்லியிருக்க, யமுனா கீழே வரும் போது ஆட்டோவும் வந்திருந்தது.
பின் இருக்கையில் இருவரையும் ஏறச்சொன்னவன், அடிபட்ட கையை அழுத்தி பிடித்து கொள்ளுமாறு.. சைகையில் காட்டி கங்காவின் கரத்தை யமுனாவிடம் ஒப்படைத்தான்.
ஆட்டோ ஓட்டுநரின் அருகே இருந்த இடத்தில் தான் அமர்ந்து, “ண்ணே, **** கிளினிக் போங்க..” எனச் சொல்ல, ஆட்டோ வேகமாய் அங்கு சென்று சேர்ந்தது.
இது போன்ற சம்பவங்கள் அவனுக்கு புதிதில்லை. அப்படி நடந்தால் பாதிக்கப்பட்டவரை ஆட்டோ வைத்து அனுப்பிவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விடுவான். 
இல்லையென்றால் உடன் வேறு யாரையாவது ஏற்பாடு செய்து அனுப்புவானே தவிர.. இது போன்று செய்தது இல்லை.
ஏதோ ஒன்று, ‘அவர்களை நீயே கவனி..’ என்று உந்த, அதுக்கு கட்டுப்பட்டு வந்து நிற்கிறான் மருத்துவமனையில்.
நர்ஸிடம் விசயத்தை சொல்லி இருவரையும் உள்ளே டாக்டரை பார்க்க அனுப்பிவிட்டு வெளியே அமர்ந்தான் அவர்கள் வருவதற்காக.
கையை ஆராய்ந்த டாக்டரும், நர்ஸிடம் டிரஸ்ஸிங் செய்ய வைத்து டிடி போட சொல்ல, அதற்கென அழைத்து வரப்பட்ட கங்கா பயந்து அழுகையை கூட்டினாள்.
யமுனா ஊசி மருந்து வாங்கவென உள்ளேயே இருக்கும் மெடிக்கல் ஷாப்புக்கு சென்றிருக்க அது வேறு அவளுக்கு அச்சத்தை கூட்டிவிட்டது.
தீனாவிற்கு ஏனோ அந்த சிறு பெண்ணின் பயமும், அழுகையும் மனதை பிசைய அவளிடம் விரைந்தவன்,
“என்னம்மா.. என்னாச்சு..?” என்றான் பரிவாக.
“ஊசி போட சொன்னாங்க. இப்ப கையில ஏறுனதே வலிக்குது..” என்றாள் அழுதுகொண்டே.
“அச்சோ, அதெல்லாம் வலிக்காதுடா ம்மா..” என்றான் தீனா சொல்ல,
யமுனா ஊசி மருந்தை கொண்டுவந்ததும், அதற்காகவே காத்திருந்த நர்ஸ் அதை வாங்கவுமே கங்காவிற்கு பீதியில் விழி பிதுங்கியது.
சாதாரணமாக ஊசிக்கு பயப்படுபவள் இல்லை தான் கங்கா. 
ஆனால் இன்று நடந்த சம்பவம் கொடுத்த அதிர்வில், அவளுக்கு ஊசி என்றதுமே அது அவளின் கையில் ஏறி நின்ற அந்த நிமிடம் மனதில் உலா வர.. அது தன்னாலேயே பயத்தை உண்டாக்கியிருந்தது‌.
அதனை கண்டுகொண்டவன், “ஆமா, கேட்க நினைச்சேன்.. உன்னோட பேரென்ன..?” என்றான் அவளின் கவனத்தை திசை திருப்ப வேண்டியே.
“எம்பேரு கங்கா. இது என்னோட அக்கா யமுனா..” என்றாள் நர்ஸ் அந்த மருந்தை சிரின்ஜில் ஏற்றுவதை பீதியோடு பார்த்து தேம்பிக்கொண்டே.
“அப்போ காவேரியும், நர்மதாவும் வீட்டுல இருக்காங்களோ..?” என்றான் இதழ்களை அழுந்த கடித்து நமுட்டு சிரிப்போடு.
சட்டென யமுனாவிற்கு அவன் கிண்டல் புரிந்துவிட, ‘ஓவர் நக்கல் ய்யா உனக்கு..’ என்பதான பார்வையை அவன் மீது வீச, 
அவன் கேள்வி புரியாது குழம்பிய கங்காவோ அழுகை மறந்து அவனின் முகத்தை பார்த்திருந்தாள் குழப்பமாகவே.
அவளின் பார்வையை கண்டு, “இல்ல.. மகாநதின்னு ஒரு சீரியல் விஜய்டிவில வருதே.. அதுல வர்ற ரெண்டு கேரக்டர் இங்கே இருக்கு. மீதி வீட்டுலையா..? ன்னு கேட்டேன்..” என்றான்.
அவன் அவளின் கவனத்தை தன் புறம் திருப்பியதுமே நர்ஸூக்கு ஜாடை காட்டியிருக்க, கங்கா அறியாத படி அவளின் கையில் லாவகமாய் ஊசியை போட்டிருந்தார் அந்த அனுபவம் வாய்ந்த நர்ஸூம்.
அதைக்கூட உணராது, “காவேரி.. நர்மதா.. எல்லாம் எங்க வீட்டுல இல்ல. எங்களுக்கு தம்பி மட்டும் தான். அவன் பேரு கிருஷ்ணா. அவன் இப்ப நயன்த் படிக்கறான்..” என்றாள் வெகுளியாய்.
“ஓ.. அப்படியா..! சரி, வா கிளம்பலாம்..” என தீனா திரும்ப,
“எங்கே..?” என்றாள் புரியாமல்.
அவள் புறம் திரும்பி, “வீட்டுக்கு தான்.. போக வேணாமா..?” என்றான் தீனா புன்னகையோடு.
“அப்ப ஊசி போட வேணாமா..?” என்றாள் கங்கா மகிழ்ச்சியில் விழிவிரித்து.
“அதெல்லாம் போட்டு ரொம்ப நேரமாச்சு கண்ணு..‌” என நர்ஸ் சிரிக்க, 
‘என்ன போட்டாச்சா..! வலிக்கவே இல்லையே..?’ என அதிசயத்தவள், 
பின், ‘இதுக்கா இத்தன ஆர்ப்பாட்டம் செஞ்சோம்..!’ என நினைத்து அசட்டு சிரிப்பை உதிர்த்தாள் அழகாய்.
அதில் தீனாவின் இதழும் தாராளமாய் புன்னகைக்க, அருகிருந்து பார்த்திருந்த யமுனாவிற்கு ரெக்கையின்றி பறக்கும் நிலை தான்.
‘அச்சோ..! என் கண்ணழகா.. நீங்க சிரிக்கும் போது இவ்வளவு அழகா இருந்தா எப்படி..? 
இந்த நர்ஸூ வேற உத்து உத்து பாத்தே கண்ண வைக்கறாளே.. உங்களுக்கு சுத்தி தான் போடனும்..’ என மனதுக்குள் நெட்டி முறித்து கொஞ்சிக்கொண்டாள் ரசனையோடு அவனை பார்த்தபடி.
அவன் சிரிக்கும் போது உடன் சேர்ந்து சிரிக்கும் கண்ணழகில் சொக்கி நின்றவளுக்கு, தான் இருக்கும் இடம் நினைவில் எழ சுதாரித்து,
“ரொம்ப தேங்க்ஸ்ங்க..” என அவனின் பார்வையை தன் புறம் திரும்ப வேண்டி சொன்னாள். 
திரும்பி தன் மார்பு வரை இருந்தவளின் முகத்தை குனிந்து பார்த்திருந்தவனின் விழிகள், அவளின் அந்த குட்டி விழியோடு உறவாட ஏதோ உணர்வுஅலை அவனுள்.
அதன் இழுவிசை தாங்காது.. அவள் விழியிலிருந்து தன் விழியை கட்டாயப்படுத்தி பிரிக்க முயன்றவாரே,
“உங்க வீடு எங்கே பாப்..” என ஆரம்பித்து, அவளின் முறைப்பில் எச்சிலை விழுங்கி, “ங்க..” என முடித்திருந்தான்.
அதுவரை பயத்தால் எதையும் உணராத கங்கா, தன் அக்காவை அவன், “பாப்பா..” என இருமுறை அழைத்து.. தன் அக்காவின் முறைப்புக்கு தடுமாறியதை கண்டு, 
“என்ன பாப்பாவா..! அவளுக்கு வயசு என்ன தெரியுமா..?” என்றவள் அதை சொல்லிவிட்டு குறுநகை புரிய,
“ஏய் வாலு பொண்ணே.. வந்த உடனே கைய வச்சிட்டு சும்மா இல்லாம டேமேஜ் பண்ணிட்டு.. என்ன சிரிப்பு.. 
உன்னோட அக்கா சைஸூக்கு அவ வயசு அதிகமா இருந்தாலும் பாத்தா பாப்பா மாதிரி தானே தோணுது..” என்ற தீனா, 
‘கேட்ட கேள்விக்கு பதில் என்ன..?’ என கண்ணால் யமுனாவிடம் வினவினான்.
அவனின் கிண்டலில் கடுப்பாக இருந்தவள், அவனின் கண்ஜாடையில் சொக்கி.. தன்னை மறந்து அவள் இருக்கும் இடத்தை சொல்ல, 
‘ஓ.. அதான் அன்னைக்கு நடு ரோட்டுல டேன்ஸ் ஆடுனாளா..!’ என நினைத்து ஆட்டோவை அழைத்திருந்தான்.
இப்போதும் வந்தது போலவே அமர்ந்து லேசாக திரும்பி கங்காவிடம்,
“ஆமா உங்க ஊரெது..?” என்றான் இலகுவாக.
“புதுக்கோட்டை தாண்டி பதினஞ்சு கிலோமீட்டர்ல இருக்க **** தான் எங்க ஊர். நீங்க எங்கே இருக்கீங்க..?” எனக்கேட்க,
“நானா.. நா கம்பெனில தான்..” என்றதும்,
“அய்யே, நா வேலைக்கு எங்கிருக்கீங்கன்னு கேட்கல. நீங்க எங்க தங்குவீங்க. உங்க வீடு எங்கே..? அப்படி கேட்டேன்..” என விளக்க,
“நானும் அதான் சொன்னேன். நா கம்பெனில தான் இருப்பேன்..” என்றதும்,
“அப்போ.. அது உங்க கம்பெனியா..‌?” என்றாள் அதிர்ந்து.
வாய்விட்டு சிரித்தவன், “மணியண்ணனுக்கு தெரிஞ்சா என்னைய தொரத்திடுவாரு. 
ஏன் கங்கா.. அவ்வளவு பெரிய கம்பெனி வச்சிருந்தா, சொந்தமா வீடு வச்சிருக்க மாட்டேனா..?” என்றான் இலகுவாகவே.
அதில் இருந்த உண்மை புரிய, மீண்டும்‌ அசட்டு சிரிப்பை தந்த கங்கா, “அப்ப உங்க ஊரு.. உங்களுக்கு யாருமில்லையா..?” என விசாரிக்க,
“ஏன் இல்ல. எல்லாம் ஊருல இருக்காங்க. என்னோட சொந்த ஊர் பொள்ளாச்சி தாண்டி போகனும்..” என்று அவனும் அவளோடு இலகுவாக பேசியபடி வர யமுனாவிற்கு அத்தனை கடுப்பானது. 
“இங்கே ஒருத்தி குத்துக்கல்லாட்டமா இருக்கேன்.. என்ன விட்டுட்டு அவளோடவே பேச்சு. 
இதுல நா பாப்பாவாம்.. அவள பேர் சொல்லி பேசறத பாரு..” என முணுமுணுத்துக்கொண்டவள்,
அதே கடுப்பில், “ஏய், வாய மூடிட்டு அமைதியா வாடி..” என அதட்டிவிட,
கங்காவிற்கு யமுனாவை தெரியும் என்பதால் அதை பெரிதாக எடுக்காமல் அமைதியாகிவிட, 
தீனாவிற்கு, ‘தான் உரிமையோடு வயது பெண்ணிடம் பேசியதில் தன்னை தவறானவனாக நினைக்கிறாளோ..?’ என தோன்ற, முன்புறமாக திரும்பிக்கொண்டவனும் அமைதியாகி போனான்.
இருவரும் அமைதியானதும் ஆட்டோவில் வரும் போது இருந்த பதட்டமும் நீங்கியிருக்க, தன் கண்ணழகனை இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை விடுவாளா.. யமுனா..?
தங்கையை நோட்டமிட அவளோ.. இப்போது வெளியே தெரியும் திருப்பூர் வீதியை ஆவலாக பார்த்திருந்தாள்.
அவள் இப்போதைக்கு தன்னை கவனிக்கமாட்டாள் என உறுதியானதும்,
வெளிப்படையாகவே அவனின் பிம்பத்தை அவனுக்கு முன் இருந்த கண்ணாடி வழியாக ஆசையாக பார்த்திருந்தாள்.
ஏதோ யோசனையில் அவன் மீசையை தடவுவதும், கையால் கலைந்த தன் முன்உச்சி முடியை கோதுவதும் என யமுனாவின் ரசனைக்கு வித்திடும் விதமாய் அவனின் செய்கைகளும் இருக்க காண இரு கண் போதவில்லை பேதைக்கு.
சிறிது நேரம் யமுனா பேசியது பற்றிய சிந்தனையில் கவனிக்காத தீனா.. ஏதோ உந்துதலில் கண்ணை நிமிர்த்தி கண்ணாடியை பார்க்க, 
அதில் அப்பட்டமாக தெரிந்த  கன்னியின் பார்வையில் அதிர்ந்து.. பின் அதை ஆராய.. சில நொடியில் கண்டு கொண்டான்.. ‘தன்னை பின் தொடரும் பார்வைக்குரியவள் பாவையை..’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!