இன்னமும் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தவர்களை,
“இங்க வாயை பார்த்திட்டு உட்கார்ந்து இருந்தால்.. உங்க வேலையை எல்லாம் வந்து நான் பார்க்கவா..?”
என ஹரிஹரன் அதட்டலாய் கேட்கவே,
“ஸாரி சர்..”
சட்டென்று கணினியில் திரும்பி விட்டனர். நளினி சென்று மறுநொடியே வினோதகனும் தன் கேபினுள் சென்று மறைந்துவிட அவனை தொந்தரவு செய்யாமல் மீண்டும் கலந்துரையாடல் அறைக்கு திரும்பி விட்டனர்.
“என்ன டா இப்படி ஆகிடுச்சு.. நளினி இப்படி நடந்துப்பாங்கன்னு
நினைக்கவே இல்ல.. நம்ம முன்னாடியே வினோவை இப்படி பேசுறாங்க.. வினோதகனை தெரிஞ்ச எல்லாருக்கும் அவன் மேல அபிமானமும் மரியாதையும் நிறைய இருக்கும்.. ஆனா அவனோட மனைவி கிட்ட
இந்த பேச்சு எல்லாம் ரொம்ப அபத்தமா தெரியுது டா..”
தாங்கமாட்டாமல் வருத்தமாய் கார்த்தி கூற,
“இவனையும் சொல்லாத.. முன்னாடியே அவங்களை உள்ள கூப்பிட்டு பேசி இருந்தால் இந்த டிராமா நடந்து இருக்காதுல..?”
என்று ஹரி சொல்ல,
“அவன் என்ன நினைச்சு அப்படி பிடிவாதமா இருந்தான்னு அவன் மனசுக்கு மட்டும் தான் தெரியும்.. கேட்டாலும் அவனோட பர்ஷனல்ல வெளியே மூச்சு விட மாட்டான்.. சரியான கல்லுளி மங்கன்… விடுங்க எல்லாம் சரியா ஆகும்.. இதை பத்தி எதுவும் அவன்கிட்ட பேச வேண்டாம்..”
என பெருமூச்சுடன் கூறினான். நண்பர்களாய் சமீப காலமாக வினோதகன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கண்டு மனம் பொறுக்கவில்லை..!!
இவர்கள் பேசிக் கொண்டிருக்க மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டு அங்கிருந்து நழுவினாள் ஈஸ்வரி.
இங்கே தன் அறையில் சிலையாய் அமர்ந்திருந்த வினோதகனின் கண் முன்னே நளினியின் கலங்கிய முகம் மட்டுமே நிழலாடியது.
அவள் கலங்கி அவன் பார்த்ததே இல்லை.. எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் அழுத்தமாய் நிற்பாளே அன்றி அழுததோ சுணங்கியதோ கிடையாது.. நளினி கடைசியாய் அழுது அவன் பார்த்தது அவள் அன்னையின் இறப்பின்போது தான்..!! அன்றும் அருகில் இருந்தும் அவனால் நெருங்க முடியவில்லை. இன்றும் அதே நிலைமையே..!!
“அத்தனை பேச்சு பேசுவா.. ஆனால் என்னோட சின்ன வார்த்தையை கூட தாங்க முடியாது.. உன்னை தெரிஞ்சு தானே டி நானும் பொறுமையா அமைதியா விலகி விலகி போனேன்.. ம்ச்..”
அப்படியே நாற்காலியில் சாய்ந்து எவ்வளவு நேரம் தன்னை மறந்து அமர்ந்திருந்தானோ இனிமேலும் வேலை எதுவும் ஓடாது என்பதனை உணர்ந்து நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான். அங்கே காத்திருக்கும் கலவரம் பற்றி அறியாமல்..!!!
வழமையை விட விரைவாகவே வந்துவிட்டவனை வரவேற்க மொத்த குடும்பமும் ஹாலில் காத்திருந்தது.
‘மூணு துருவமும் ஒரே இடத்தில் கூடி இருக்காங்களே.. என்னவோ..’ என்று வந்ததுமே நெருடலாக அதனைக் காட்டிக் கொள்ளாமல்,
“வாங்க அண்ணா.. வாங்க அண்ணி.. எப்போ வந்தீங்க..?”
என்று கேட்கவே,
“வாய் தான் எப்போ வந்தீங்கன்னு கேட்குதே தவிர முகம் ஏன் வந்தீங்கன்னுல பார்க்குது..”
என அவனின் மூத்த அண்ணன் வடிவேலன் தன் பெரிய மீசையை நீவிக் கொண்டே விறைப்பாக கேட்க,
“சரியா சொன்னீங்க ண்ணா.. இதே நாம வந்து இருக்கோம்ன்னு தெரிஞ்சிருந்தா நடுஜாமம் வரையும் வீடு வந்திருக்க மாட்டான்..”
என வினோவை முறைத்துக் கொண்டே இளைய அண்ணன் இளங்கோ சொல்ல,
‘ஆஹா.. எப்பவும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் பஞ்சாயத்து வரும்.. இன்னைக்கு எடுத்ததுமே வா..?’ என பரிதாபமாய் விழித்தபடி தன் கடைசி அண்ணான மணிமாறனை உதவிக்கு பார்க்க அவனோ உதட்டை பிதுக்கி மறுப்பாய் தலையசைத்தான்.
பள்ளி பருவத்தில் இருந்தபோதே
பெற்றோரை இழந்த வினோதகனை வளர்த்தது எல்லாம் அவனின் மூன்று சகோதரர்களும் தான்.. வடிவேலன் மற்றும் இளங்கோவை விட பல வருடங்கள் இளையவன் என்பதால் அவர்களிடையே தலைமுறை இடைவேளை அதிகமாகவே இருந்தது.
மதுரை பக்கத்தில் ஒரு கிராமம் தான் அவர்களின் சொந்த ஊர்..
வடிவேலனும் இளங்கோவும் ஊரில் தங்கள் பரம்பரை நிலபுலன்களை பராமரித்து சம்பாத்தியம் செய்துவர மணிமாறனும் வினோதகனும் படித்து அதற்கான வேலையுடன் சென்னையை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர்.
“ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க அண்ணா.. என்ன சொல்லிட்டேன் இப்போ..? நான் நீங்க வரக் கூடாதுன்னு நினைப்பேனா..!!”
“எங்க தம்பியா இருந்த வரையும் நீ அப்படி இல்ல தான்.. எப்போ கல்யாணம்ன்னு ஒன்னு பண்ணியோ அப்போ இருந்தே நீ வேற மனுஷனா தானே இருக்க..!!நம்ம குடும்பத்தில் நடக்காத கூத்து எல்லாம் இங்க நடக்குது.. அதை எதையும் நாங்க கேட்க கூடாது..
ஏன் உன்னோட நல்லது கெட்டதுல கேள்வி கேட்க அப்பா அம்மாக்கு மட்டும் தான் உரிமை இருக்குன்னு நினைக்கிறீயோ..!! உன்னை பெத்தவங்க ஸ்தானத்தில் இருந்து வளர்த்த எங்களுக்கும் இருக்கு டா..!!”
வடிவேலன் தன் கனத்த குரலில் சத்தமிட்டபோதும்,
“உரிமை இல்லைன்னு சொல்லல அண்ணா.. இப்ப என்ன நடந்திடுச்சுன்னு இவ்வளவு கோபமா இருக்கீங்க..”
என்று தணிவாகவே கேட்டான். எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்தாலும் தன் அண்ணங்களிடம் குரல் உயர்த்தி ஒரு பொழுதும் அவன் சண்டையிட்டது கிடையாது.
“இன்னும் என்ன நடக்கணும் தம்பி… அந்த பொண்ணை கண்ணாலம் கட்டுறேன்னு நீ நின்னபோது எவ்வளவோ வேண்டாம்னு நாங்க தடுத்து பார்த்தோம்.. ஆனா பிடிவாதமா நின்னு கட்டிக்கிட்ட.. எப்படியாவது நல்லா இருந்தா சரின்னு தான் நாங்களும் சம்மதிச்சது.. ஆனா இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு வருஷத்துல இப்படி வெட்டிக்கிட்டு நிற்கறீங்க..!! எதோ போதாத காலம் தவறான பாதைல போயிட்ட… அதை விட்டு தொலைச்சுட்டு புதுசா ஒரு வாழ்க்கையை பார்ப்போம்ன்னு சொன்னால் இப்பவும் அதே பிடிவாதம் பிடிக்கிற.. நல்லது சொல்ற எங்களை பொல்லாப்பாக்கி விலகி போற..”
“அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் தான் அண்ணி.. மத்தபடி வெட்டிக்கிட்டு போற உறவு இல்ல எங்களுது..”
“இதையே இன்னும் எத்தனை நாள் சொல்லி எங்க வாயை அடைக்கலாம்ன்னு பார்க்கிற வினோ..?? உன்னை ரெண்டுல ஒன்னு சொல்ல வைக்கிற முடிவோட தான் இங்க வந்தோம்.. ஆனா உன்னோட பதிலையும் சேர்த்து அந்த புள்ள நளினி சொல்லிட்டு போயிடுச்சு..”
என்று இளங்கோ சொல்லவே திடுக்கிட்ட வினோ,
“நளினியை போய் பார்த்தீங்களா..?”
என அதிர்வுடன் கேட்க,
“நாங்க ஒன்னும் தேடி போகல வினோ தம்பி.. நாங்க வந்த கொஞ்ச நேரத்திலே அவ தான் இங்க வந்தா.. விவாகரத்து கேட்டு கேஸ் கொடுத்து இருக்காமே.. என்ன தெனாவெட்டா பேசிட்டு போச்சு தெரியுமா..!!”
என்று இளைய அண்ணி சொல்லவும் அவனுக்கு சுவற்றில் போய் முட்டிக் கொள்ள தான் தோன்றியது.
“பொம்பள புள்ள அவளே வேணாம்னு உதறிட்டு பேசுறா.. நீ அவ தான் வேணும்ன்னு ரோஷமில்லாம கெஞ்ச போறீயா..?? போடின்னு தூக்கி போட்டு வா.. நம்ப ஊர்ல நம்ம ஜனத்தில் அழகான குணமான பொண்ணா பார்த்து நான் உனக்குக் கட்டி வைக்கிறேன்..!!
பொண்ணா அவ..? ஏன் நம்ம மலரும் தான் பட்டணத்து புள்ள.. ஆனா அது என்ன அழகா மணிமாறன் தம்பியை அனுசரிச்சு ஒத்துமையா வாழுது.. ஆனா இந்த நளினி..? குட்டியா முடியை வெட்டிக்கிட்டு டங்கு டங்குன்னு நடந்துக்கிட்டு வெடுக்கு வெடுக்குன்னு பேசிக்கிட்டு எப்பப்பா அவ சங்காத்தமே நமக்கு வேணாம் தம்பி..”
என்று பெரிய அண்ணி கலாவதி பொரிந்து தள்ள ஏறும் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியாமல் கைகளை கட்டி நின்றான்.
‘ஆபிஸ்ல நடந்தத மனசுல வைச்சுக்கிட்டு அதை வீட்ல காட்ட வந்திருக்கா..! சதிகாரி..!!’
அழ வைத்து விட்டோமோ என வருந்திய தன்னையே நிந்தித்துக் கொண்டவன்,
‘என் நேரம் இவங்க வரும்போதா இதெல்லாம் நடக்கணும்..!! டிவோர்ஸ் பேச்சே வீட்டுக்கு தெரியாம வைச்சு இருந்தேன்.. இப்போ இதை ஒன்ன பிடிச்சுக்கிட்டு என்னலாம் செய்ய போறாங்களோ..’
என்று சோர்ந்து வர எல்லா பக்கமும் தானே நின்று போராடுவது போல தொய்வாக இருந்தது.
அவனின் முகம் பார்த்து மணிமாறன் என்ன உணர்ந்தானோ,
“அவனுக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்க அண்ணா.. ஒரே நேரத்தில் போட்டு அழுத்தினால் பாவம் என்ன செய்வான்..”
என தம்பிக்கு பரிந்து சொல்ல வடிவேலனும் அவனின் வாடிய முகத்தில்,
“வேலை முடிஞ்சு வந்தவன் களைச்சு போயிருப்பான்.. அவனுக்கு குடிக்க எதாவது கொடுங்க… அப்புறம் பேசலாம்..”
சிறிய இடைவேளைக்கு பின் தொடரும் என்று நிறுத்தி வைக்க விட்டால் போதும் என்பதாய் தன் அறையினுள் சென்றவன் நெடுநேரம் ஆகியும் வெளியே வராமல் போக அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள் மலர்..!!
அறை கதவை தட்டிய சில நொடிகளில் திறக்கப்பட இறுகிய முகத்துடன் வந்து நின்ற கொழுந்தனை காண பாவமாகவும் இருந்தது.
“இந்தாங்க வினோ…” என கப்பை நீட்டிய மலர்,
“உங்ககிட்ட பேச தான் எல்லாரும் காத்திட்டு இருக்காங்க.. சீக்கிரம் கீழ வருவீங்களாம்..”
என்று சொல்ல அவன் முகம் பாவனை சலிப்பை காட்டியது.
“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அண்ணி.. நான் அப்புறம் பேசிக்கிறேன்..”
“இப்படி சொல்லி எவ்வளவு நேரம் எல்லாரையும் அவாய்ட் பண்ண போறீங்க.. உங்களுட்ட பேசணும்னு தான் பசங்களை கூட அழைச்சுக்காம எல்லாரும் கிளம்பி வந்திருக்காங்க..”
“நான் என்ன தான் செய்யுறது அண்ணி.. என்ன சொன்னாலும் என் மனசு மாற போறது இல்ல.. திரும்ப திரும்ப பேசி என்ன பிரயோஜனம்…”
“அது ஏன் உங்களுக்கும் புரிய மாட்டேங்குது… நீங்க திரும்ப திரும்ப பேசினாலும் நளினி மனசு மாறவே போறது இல்ல.. அப்புறம் எதுக்காக இழுத்து கட்ட பார்கறீங்க..”
என்று அழுத்தமாய் சொல்ல அவள் பார்வையை தவிர்த்து,
“இது வேற அண்ணி..” என்றான் உள்ளே சென்று விட்ட குரலில்.. மற்றவர்கள் போல் அன்றி எப்போதும் உடன் இருக்கும் மலரிடம் அவனின் எந்த காரணங்களும் செல்லாது..!!
“எல்லாம் ஒன்னு தான் வினோ.. இன்னைக்கு ஆபிஸ்ல நடந்ததும் எனக்கு தெரியும்.. ஈஸ்வரி கால் பண்ணி சொன்னா.. நான் மணிமாறன் கிட்ட கூட சொல்லல.. எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா..? உங்க அண்ணனுங்களுக்கு தெரிஞ்சா இன்னும் கொதிச்சு போயிடுவாங்க…”
“உங்க பிரெண்டுனு ஆபிஸ்ல நடக்கிற எல்லாத்தையும் இங்க ஒப்பிச்சுட்டு இருக்காளா அவ.. நாளைக்கு போய் பேசிக்கிறேன்..”
என்று அவன் பல்லை கடிக்க,
“அவளும் மனசு தாங்காம தான் சொன்னாள்.. அவளை எதுவும் சொல்லாதீங்க.. உங்க பொண்டாட்டி செய்யுற எல்லாத்தையும் எப்போதும் போல இனியும் மூடி மறைக்க முடியாது.. இத்தனை முரண்டு பிடிக்கும் பொண்ணை ஏன் கட்டாயப் படுத்துறீங்க..”
என்று மலர் சொல்லவே,
“ஐயோ அண்ணி.. நீங்க எல்லாம் வெளியே இருந்து பார்க்கறீங்க.. உங்களால அவளை புரிஞ்சுக்க முடியாது.. அவ ஒரு பிடிவாத குழந்தை மாதிரி அண்ணி.. நானும் இல்லைன்னா இந்த உலகத்தில் அவ தனிச்சு போயிடுவா அண்ணி.. அவளை அப்படி ஒரு நாளும் நான் விட மாட்டேன்..”
என்று ஆயாசமாய் சொல்ல,
“அவ பேச்சு செயல் எல்லாம் தெளிவா தான் இருக்கு வினோ.. எனக்கு இப்ப நீங்க தான் பிடிவாதம் பிடிக்கிற குழந்தை மாதிரி தெரியுறீங்க…!” என்றதற்கும் மேல் சொல்ல ஒன்றும் இல்லை என்னும் பாவனையில் மலரும் சென்றுவிட மீண்டும் அறையில் வந்து கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.
ஒரே நாளில் இத்தனை நெருக்கடிகளை சமாளிக்க முடியவில்லை. அவனுக்கு ஆதரவாய் அவனை புரிந்துக் கொள்ள ஒரு ஜீவனும் இல்லையே..!! வீசும் ஏசி காற்றும் மூச்சை நிறுத்துவதை போல் இருக்க நிம்மதி தேடி வீட்டினை அடைந்தவன் அது இங்கேயும் கிட்டாத விரக்தியில் கார் சாவியை எடுத்துக் கொண்டு யார் கண்ணிலும் படாமல் கிளம்பிவிட்டான்.
சாலையில் நடுநிசி வரையினில் இலக்கின்றி சுற்றி திரிந்தவன் நடுநிசி ஆனபோதிலும் வீட்டிற்கு திரும்ப மனமில்லை. அங்கே அண்ணன்களை எதிர்கொள்ளும் மனநிலையில் வினோதகன் இல்லை. ஆனால் இன்னும் எத்தனை நேரம் இப்படியே சுற்றுவது..?? சில நொடிகள் யோசித்து மீண்டும் காரை இயக்கியவன் நேராக கொண்டு நிறுத்திய இடம் நளினியின் அப்பார்ட்மெண்ட் தான்..!!
இவனை கண்டதும் வணக்கம் வைத்த செகியூரிட்டி,
“என்ன சார்.. உங்களை பார்த்தே ரொம்ப நாளாச்சு.. மேடம் மட்டும் இருக்கவும் நீங்க வெளிநாடு எங்கேயும் போயிட்டீங்க நினைச்சேன்..”
என்று கண்ணாடி அருகே குனிந்து விசாரிக்க,
“ஆமா.. இப்போ தான் வரேன்..” என முடித்துக் கொண்டவன் காரை பார்க்கிங் போட்டுவிட்டு மாடியேறினான்.
அவளின் வீட்டினை அடையும்வரை இல்லாத தயக்கம் வாசலில் வந்து நின்றபோது குறுகுறுக்க ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு மறுக்கையை காலிங் பெல்லிடம் கொண்டு செல்வதும் எடுப்பதுமாக தடுமாறியவன் இறுதியாய் அழுத்திவிட அங்கே மறுபக்கம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.
மீண்டும் இருமுறை அழுத்தியவன் எந்த பதிலும் இல்லை எனவும்,
‘தூங்கிட்டாளோ..?’ என தோன்ற கோபத்தில் முகம் சிவக்க,
‘இவளால நான் தெரு தெருவா பைத்தியக்காரன் மாதிரி அலையுறேன்.. பண்றது எல்லாம் பண்ணிட்டு நிம்மதியா தூங்குறாளா..’
என்ற எரிச்சல் மேலிட்டது. வேகமாய் கதவின் பிடியை திறக்க பார்த்தவன் அது உள்பக்கம் பூட்டபட்டிருக்கவும் தன் கார் சாவியுடன் கோர்க்கப்பட்டிருந்த மற்றொரு சாவியை நுழைத்து திருக சட்டென்று திறந்துக் கொண்டது.
வெளிச்சம் இன்றி வீடே இருண்டு கிடக்க மெல்ல அடியெடுத்து உள்ளே சென்றவனுக்கு இரண்டு வருடங்கள் வாழ்ந்த வீட்டின் சொடுக்கியை இருளிலும் கண்டுக்கொள்ள சிரமம் எதுவுமில்லை.
மின்விளக்கின் வெளிச்சத்தில் அவ்விடத்தை பார்வையால் துலவ எத்தனை எத்தனை நினைவுகள் இங்கே..!! அனைத்தும் குறும்படம் போல் அவன் மனக்கண்ணில் நிழலாடி இம்சித்தது.
‘வெளியே எவ்வளவு பிரச்சனை.. குழப்பம்.. சண்டையை ஃபேஸ் பண்ணாலும் வீட்டுக்குள்ள வந்ததும் எல்லாமே மறந்து ஒரு பிளேசண்ட் ஃபீல் கிடைக்கணும் வினு.. எனக்கு பிக்சர்ஸ் விட பெயின்டிங்ஸ் ரொம்ப பிடிக்கும்.. அதனால் வால்ஸ் முழுக்க குட்டி குட்டி ஆர்ட்ஸ் கொண்டு அலங்கரிச்சேன்.. ஃபர்னிச்சர்ஸ் எனக்கு பிடிச்சா மாதிரி கிரியேட்டிவ்வா அரேஞ் பண்ணேன்.. இதில் உனக்கு என்ன வந்துச்சு…?’
‘எல்லாம் சரி தான் நளினி.. ஆனா உனக்கு க்ரியேடிவ்வா தெரியுறது.. வெளியே இருந்து பார்க்க கன்னா பின்னான்னு ஒரு ஒழுங்கே இல்லாத மாதிரி இருக்கே..!!! அழகழகா பில்டிங் கட்டும் மேடம் இப்படி சொந்த வீட்டு உள்ள குதறி வைச்சா உன் திறமை மேலே மத்தவங்களுக்கு சந்தேகம் வராது..? அதனால கொஞ்சம் நீட்டா வைச்சுக்கலாமே டா..’
என சுற்றி வளைத்து செல்லம் கொஞ்சி அவன் கூறினாலும் மூக்கு விடைக்க முறைத்தவள்,
‘யூ இடியட்.. என்னோட இரசனை உனக்கு குப்பை மாதிரி தெரியுதா…??’
‘அப்படி சொல்லல டி..’
‘வேற எப்படி..?? ப்ளைன்னா இதெது இங்கன்னு அடுக்கி வைக்க இது என்ன மியூசியமா..? இல்ல வீட்ல இப்படி இருந்தா தான் நீட்ன்னு எதுவும் ரூல் புக் இருக்கா..?
ஏன் தான் எப்பவும் அங்கிள்ஸ் மாதிரியே யோசிக்கிறியோ…!! ம்ச்.. போடா..’
என சலிப்பாய் அவள் தோள்களை உதறி விலகி சென்றபோது,
‘உண்மையை சொன்னது ஒரு குத்தமா..?’ என பாவமாக தான் விழித்து நின்றது எல்லாம் நினைவில் தோன்றிட அவள் பிடிவாதம் போல அங்கே எதுவும் மாறவில்லை.
அவனுக்கு தான் சுவர்களில் அள்ளி தீட்டப்பெற்ற வடிவங்களும் ஆங்காங்கே தொங்கிய கலைபொருட்களும் மீண்டும் காண தன்னுள் தொலைந்த எதுவோ ஒன்று மீண்டும் உயிர்த்தது போல் ஒரு இதமான உணர்வை கொடுத்தது.
இங்கே மாற்றம் அவன் மனதில் தானோ…???
அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெறித்து கிடந்த அவளின் காலணிகளும் சோஃபாவில் வீசப்பட்டிருந்த கைப்பையில் இருந்து சிதறி கிடந்த மேக்புக் முதலான பொருட்களும் நளினி எந்த மனநிலையில் வந்திருப்பாள் என்பதை காட்சிப்படுத்த அறையில் தான் இருப்பாள் என அங்கே சென்றான்.
அறைக்கதவு லேசாய் தொட்டபோதே திறந்துக் கொள்ள கட்டிலில் அவள் இல்லை. மாறாக ஸ்டெடி டேபிளில் தலைசாய்த்து படுத்து இருந்தாள். அந்த மேசையின் விளக்கு மட்டுமே அங்கே ஒளியாய் இருந்தது.
பெரிய விளக்கை போட்டுவிட்டு அவள் அருகில் சென்றவன்,
“நளினி..” என்று அழைத்து அவள் கைகளை பற்றி உலுக்க,
“ம்ம்ம்..” என்ற முனங்கினாளே தவிர துளியும் அசையவில்லை.
அவள் மயக்கத்தில் இருப்பது போல் தோன்ற,
‘என்னாச்சு இவளுக்கு.. உடம்பு சரியில்லையோ..’
கோபம் குறைந்து பயமே அதிகரித்தது.
“நளினி.. ஹே.. இங்க பார்..” என்று அவளை தோளோடு நிமிர்த்தி கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றான். அவள் கண்களை லேசாய் திறந்து திறந்து மூட இதழ்களோ என்னவோ மிழற்றியது.
புருவங்கள் சுருங்கிட எதையோ யோசித்து மெல்ல அவள் முகம் அருகே தன் முகத்தைக் கொண்டுச் செல்ல அவனின் சந்தேகத்தை உறுதி செய்தது அவளிடம் இருந்து வந்த மதுவின் வாடை..!!
கண்கள் விரிய,
“அடிப்பாவி.. இந்த பழக்கம் வேற பழகி இருக்கியா…”
என வாய்விட்ட அதிர்ந்திட அதில் மீண்டும் கண்களை லேசாக திறந்த நளினி அவளுக்கு வெகு அருகில் இருக்கும் வினோதகனை கண்டு,
“டேய்… நீ ஏன்டா வந்த.. போ.. போ.. என் முன்னால வராத.. போடா..” என பிதற்றலாய் மொழிந்து அவன் கன்னத்தில் தன் கூர் நகம் கொண்ட விரல்களால் கீறி தள்ளிவிட,
“போதையில மட்டையானாலும் என்னை துரத்த மட்டும் மறக்க மாட்டா..” என பல்லை கடித்தவன்,
“வலிக்குது டி.. ராட்சசி.. கையை எடு..”
என தோளில் அவளை தாங்கியபடி தன் கன்னத்தில் கீறும் கைகளை விலக்கிவிட அதீத போதையில் இருந்த காரணத்தால் அவனிடம் போராட முடியாமல் துவண்டு அவன்மீதே சரிந்தாள்.
சட்டென்று நளினியின் எடையை முழுவதையும் தன்னில் தாங்கி கொண்டவன்,
“தன்னிலை இழக்குற அளவுக்கா குடிப்பா..? எப்படி வீட்டிற்கு வந்திருப்பா..!! யாரோட வந்திருப்பா..!! போதையில் ஏதாவது ஆபத்தில் மாட்டி இருந்தா என்ன ஆகியிருக்கும்… அந்த அடிப்படை அறிவு கூட வேணாம்..”
என நினைக்க நினைக்க கோபமாய் பொங்க சுய நினைவின்றி இருப்பவளிடம் கத்தி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்தவன் அவளை அப்படியே தூக்கி கட்டிலில் கிடத்தினான்.
மெத்தையில் தன் மேனி விழுந்த கணம் சுகமாய் அதில் சுருண்டுக் கொள்ள,
நளினி அருகில் ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்திருந்த வினோதகன்
எத்தனை முயன்றும் தவிர்க்க முடியாமல் அவள் முன் நெற்றி முடியை மிருதுவாய் கோதிவிட்டான்.
‘இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்காளோ…?? அவள் மனதில் என்ன இருக்கிறது என்று இப்போது வரையிலும் அவனுக்கு புதிராக தான் இருக்கிறது.
கனத்த மனதோடு மெத்தையில் இருந்து எழுந்தவன் சற்று முன் அவள் இருந்த நாற்காலியில் சென்று தளர்வாய் அமர்ந்து விட்டான்.
நளினி இத்தனை தீவிரம் காட்டும்போது எங்கே தானே ஒரு கட்டத்தில் வெறுத்து விலகி விடுவோமோ என தோன்றிட அதே நினைப்பில் மிச்ச இரவும் கழிந்தது.
மறுநாள் பொழுது புலர்ந்த வேளையில் பெரும் தலைவலியுடன் கண்விழித்தாள் நளினி..
தலையில் இருபக்கம ஊசியாய் குத்த கண்களை சுருக்கி தலையை தாங்கி எழுந்து அமர்ந்த நளினி,
“ஸ்ஸ்.. அம்மா.. வலிக்குதே…” என முனங்க,
“ம்ம்.. நேத்தி நல்லா மட்டையாகிற போது அந்த அறிவு இருந்து இருக்கணும்..” என நக்கலாய் கேட்ட குரலில் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.