கல்யாணம் என்ற பேச்சு அம்மா மகளிடையே சிறு சிறு உரசலாய் தொடங்கி நாட்கள் செல்ல செல்ல பெரும் வாக்குவாதமாய் வெடிக்க ஆரம்பித்தது.
நளினி காலம் முழுவதும் தனித்தே இருந்து விடுவாளோ என்பது ஜெயாம்மாவின் பெரும் மன உளைச்சலாய் இருக்க அன்பாகவும் அறிவுரையாகவும் கட்டளையாகவும் திருமணம் என்ற ஒன்றை அவள் மனதில் திணிக்க முயன்றார்.
இத்தனை வருடங்களாய் எந்த கட்டுப்பாடுகளும் வகிக்காமல் தோழிக்கு தோழியாய் இருந்த தன் ஜெயாம்மா திடீரென பழைய காலத்து அம்மாக்கள் போல மாறி நடந்துக் கொள்வது நளினியும் திணிறினாள்.
சண்டைகள் முற்றி ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தைகள் குறையவே அன்னை மட்டுமே தன் உலகம் என இருந்தவளுக்கு இந்த ஒதுக்கம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அன்றும் அப்படித்தான்.. இரவு உணவு உண்ணும் சமயம் அருகில் அமர்ந்திருந்த நளினியை கண்டும் காணாது தன் தட்டில் மட்டுமே கவனமாய் இருந்த ஜெயாம்மாவை திரும்பி திரும்பி பார்த்தவள்,
“ஆனா.. ஜெயாம்மா.. நீயும் ஒரு டிப்பிகல் அம்மா தான்னு நிரூபிச்சுட்டே ல..”
என ஆற்றாமையோடு சொல்ல,
“தன் பிள்ளையோட வாழ்க்கைன்னு வரும்போது எல்லா அம்மாவும் ஒரே மாதிரி தான்.. எப்படியோ போன்னு விட்டுட்டு போக நினைக்க மாட்டாங்க…”
என்றார் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்..!!
“போறேன் போறேன்னு சொல்லாத ம்மா.. கேட்கவே கடுப்பா இருக்கு.. இப்ப ஓடுற காலத்தில் மேரேஜ் என்ற டெர்மே தேவையில்லைன்னு யோசிக்கிற ஜென்ரேஷன்ல இருக்கோம்.. தனியாவே இருந்து லைஃப்ல அச்சீவ் பண்ணி நல்லா இருக்கிற வுமென்ஸும் நம்ம சொசைட்டியில் இருக்க தான் செய்யுறாங்க.. உனக்கு தெரியாததா ம்மா..”
” பொண்ணுங்க லைஃப்ல அச்சீவ் பண்ண ஆண் துணை இருந்தா தான் முடியும்ன்னு நான் சொல்லவே இல்லையே..!! ஒரு பையன் வந்தா தான் நீ இங்க வாழ முடியும்னு சொல்லல.. ஆனால் அந்த வாழ்க்கையோட அழகையும் என் மகளா நீ அனுபவிக்கனும்னு தான் ஆசைப்படுறேன்.. உங்கப்பா என்னோட இருந்த நாட்கள் எல்லாம் எத்தனை அழகானதுன்னு உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது நளினி.. என்னை தாங்கவே எனக்காகவே இந்த உலகத்தில் கடவுள் படைத்த ஜீவன் உங்க அப்பா….!! அந்த மாதிரி ஒரு உறவு உனக்கும் இருக்கனும்னு நினைகிறதில் என்ன தப்பு..? அதை நீயும் அனுபவிச்சா தான் தெரியும்…”
“எதுக்கு ம்மா..? இருந்தும் பாதியில் உன்னை விட்டுட்டு போயிட்டார்ல.. கொஞ்ச நாள் அவர் இருந்து கொடுத்த சந்தோஷத்தை விட அவர் இறந்த அப்புறம் அதில் இருந்து மீள நீ பட்ட கஷ்டம் தான் என் கண்ணில் தெரியுது..!! எதுக்கு ம்மா இந்த எமோஷ்னல் ட்ராவ்மா
எல்லாம்..?
என நளினி கூற அவளை ஆழமாய் நோக்கிய ஜெயாம்மா,
“அவர் இல்லைன்னு நான் ஒரு நாளும் நினைச்சதே இல்ல.. உன் உருவில் அவர் என்கூடவே இருக்கிறதா தான் நினைச்சுட்டு இருக்கேன்.. உன் சிரிப்பு, நடை, பாவனை எல்லாம் அவர் தான்.. அதனால் தானோ என்னவோ எனக்குன்னு ஒரு துணை மறுபடியும் தேடிக்கணும் தோனினதே இல்ல..” என்றவர் பெருமூச்சுடன்,
“இதெல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணா உங்க அப்பாவை நான் மிஸ் பண்றது நினைச்சு கவலை படுவேன்னு சொன்னதே இல்ல.. ஆனா அதெல்லாம் தப்புன்னு இப்ப புரியுது.. கல்லையும் மண்ணையும் பார்த்து பார்த்து உன்னோட பில்டிங்க்ஸ் மாதிரி மனுஷங்களும் எந்த எமோஷனும் இல்லாம இருக்கிறதே பெட்டர்ன்னு நினைக்கிற.. இனி நான் சொல்ல எதுவும் இல்ல..”
என்று எழுந்துக் கொள்ள அவரின் கைப்பிடித்து நிறுத்தியவள் சில நொடிகளின் மௌனத்தின் பின்,
“சரி.. நான் சம்மதிக்கிறேன்.. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஆனா சில கன்டிஷன்ஸ் ஓட தான்.. நான் சந்திச்சு பேசனும்.. நீங்க பார்க்கிற பையன் அதுக்கு கம்பரமைஸாகி வந்தால்… எனக்கும் சரின்னு பட்டால் மட்டும் தான் ஓகே..! இல்லைன்னா நெக்ஸ்ட் சாய்ஸ் தான்.. இந்த பையனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு யாரையும் சொல்லி கம்பெல் பண்ண கூடாது..”
என்று சொல்ல அவளை சந்தேகமாய் மேலும் கீழும் பார்த்தவர்,
“நீ வேணும்னே இடக்கு மடக்கா கன்டிஷன்ஸ் போட்டு எந்த பையனும் ஒத்து வரலைன்னா இதை காரணமா சொல்லியே நாட்களை ஓட்டிடலாம்.. என்னையும் சமாளிச்சா மாதிரி ஆகிடும்.. அப்படி எதுவும் ஐடியா இருந்தால் ப்ளீஸ் அதுக்கு நான் ஆளு இல்ல..”
என்று கண்டிப்பாய் கூற அவரை முறைத்தவள்,
“போதும் ஜெயாம்மா.. ரொம்ப பண்ணாத.. என்னை பத்தி தெரியும் தானே.. எதையும் குறுக்கு வழியில் செஞ்சுக்க பிடிக்காது.. செய்றேன்னு சொல்லிட்டால் என் வார்த்தையில் நான் உண்மையா தான் இருப்பேன்..”
என்று விறைப்பாக சொல்ல அப்போது தான் ஜெயாம்மா மனதிலும் நம்பிக்கை பூத்தது.
உண்மை தான்..!! எதையும் நேருக்கு நேர் அணுகவே நினைப்பாளே தவிர உள்ளொன்று புறமொன்று என இருக்க அவளுக்கு தெரியாது..!!
“என்னோட ஆசை எல்லாம் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. அவ்வளவு தான் நளினி.. மத்தபடி எப்படி வாழனும்.. உன் வாழ்க்கை அந்த பையனோட எப்படி இருக்கணும்னு முடிவு பண்றது எல்லாம் உங்க தனிப்பட்ட விஷயம்.. அதில் நான் தலையிட மாட்டேன்..”
என வாக்குறுதி கொடுத்தவர்,
“ஆனா.. நான் பார்த்திருக்க பையனை கண்டிப்பா உனக்கு பிடிக்கும் பார்..!! உன்னோட மைண்ட் செட்டிற்கு ஏத்த பையன் தான் அவர்...”
என்று உற்சாகமாய் சொல்ல அதிர்ந்து விழித்தவள்,
“பார்த்து இருக்க பையனா..?!? ஜெயாம்மா..!!!!!”
என பல்லை கடிக்க,
“இல்ல.. இல்ல நளினி.. நீ நினைக்கிறா மாதிரி இல்ல.. என் மனசில் ஒரு ஆசை இருந்தது அவ்வளவு தான்.. மத்தபடி நீ சம்மதிக்காம அதை பத்தி யோசிக்கவே கூடாதுன்னு தான் இருந்தேன்.. இப்பவும் உனக்கு பிடிச்சா மட்டும் தான்.. இல்லைனா வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம்..”
என அவசரமாய் விளக்கம் கொடுத்தார். அப்போதும் கண்களை சுருக்கி முறைப்போடு இருந்தவளை கட்டிப்பிடித்து,
“உன்னை கஷ்டப்படுத்தி இருந்தால் சாரி டா.. அம்மா எப்பவும் உன் நல்லதை மட்டும் தான் யோசிப்பேன்..” என்று சொல்ல வெகு நாளுக்கு பின்னான அன்னையின் அரவணைப்பு நெகிழ்வாய் இருந்தபோதிலும்,
என்று பிகு செய்ய அவரும் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய என இனிமையாய் மாறியது அத்தருணம்..!! ஆனால் அவர்கள் இவ்வாறு கொஞ்சி களிக்கும் கடைசி தருணமும் அதுவே என அக்கணம் அவர்கள் அறிந்து இருக்கவில்லை.
இரண்டு நாள் கழித்து அலுவலகத்தில் இருந்தவளுக்கு இடியாய் ஒரு அழைப்பு வந்தது ஜெயஸ்ரீ அவர்களுக்கு விபத்து நேர்ந்து விட்டது என்று..!!
விபத்து என்றும் எந்த மருத்துவமனை என்றும் மட்டுமே சொல்லி வைக்கப்பட என்ன நடந்திருக்கும் என புரியாமல் அடித்து பிடித்து வந்தவளை அங்கே கண்ட காட்சிகள் அதிர வைத்தது.
ஒரே வார்டில் வெவ்வேறு வயதுடைய மக்கள் காண சகிக்காத கோலத்தில் அடிப்பட்டு கிடக்க அவர்களுக்கு சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. எல்லாருக்கும் நேர்ந்தது ஒரே விபத்து தான்..!!
கட்சி மோதல் என்றார்கள்.. ஜாதி சண்டை என்றார்கள்.. தனிப்பட்ட முன்பகை என்றார்கள்.. காரணம் ஆயிரம் ஆயிரம் கூறியபோதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் ஒரு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்ததால் நிகழ்ந்த இந்த கொடூரத்தில் கதறிக் கொண்டிருந்த பல குடும்பங்களுக்கு பதில் சொல்ல யாருமில்லை.
அனைத்தையும் பார்க்க பார்க்க நளினியின் உடல் நடுங்க எந்த நிலையில் தன் ஜெயாம்மாவை பார்க்க போகிறோமோ என்ற பயத்தோடு அவர்கள் நடுவே தேடினாள்.
“பெரிதாக எந்த காயமும் ஆகிருக்க கூடாது கடவுளே..” என மனம் விடாது பிராத்திக்க யாரிடமாவது கேட்க வேண்டும் என்ற பிரக்ஞை இன்றி தானே தேட,
“நளினி..” என அப்போது அவள் முன் வந்து நின்றவன் தான் வினோதகன்..!!
தன்னை பெயர் சொல்லி அழைக்கும் அவன் யாரென்று தெரியாமலும் தன் ஜெயாம்மாவை
காணாத தவிப்பாலும் வார்த்தை வராமல் பேந்த பேந்தவென்று அவள் விழிக்க எதிரே நின்றவன் முகமோ அத்தனை வேதனையை தாங்கி இருந்தது.
தன் தொண்டையை செருமி,
“நளினி என் கூட வாங்க..” என்று அழைக்க,
“என்னோட அம்மா.. ஜெயஶ்ரீ.. எங்க இருக்காங்க தெரியுமா..?? அவங்களுக்கு இந்த மாதிரி.. இந்த மாதிரி எல்லாம் அடிப்படலை தானே.. நல்லா இருக்காங்களா..?”
என்று தவிப்பாய் அவள் கேட்கும்போது அவளின் பார்வையை சந்திக்கவும் அவனால் முடியவில்லை.
“கூட்டிட்டு போறேன்.. வாங்க நளினி..” என்று உடனே அங்கிருந்து நகர அவனை தொடர்ந்து வந்தவள் அந்த புதியவன் அழைத்து வரும் இடம் பிணவறை என புரியவும் கால்கள் வலுவிழக்க இதயம் தன் துடிப்பை நிறுத்தியது போல் அழுத்த,
“நோ.. நோ வே… நான் வர மாட்டேன்.. அப்படி இருக்க வாய்ப்பே இல்ல..” என கத்தி கூச்சலிட்டாள்.
“நளினி.. ப்ளீஸ்.. உங்க நிலைமை புரியுது.. மனசை தளர விடாதீங்க.. உள்ள வாங்க..”
என்று அழைத்தவன் அவள் ஒரு அடியும் எடுத்து வைக்காமல் சொன்னதே மீண்டும் மீண்டும் சொல்லவும் கைபிடித்து வலுக்கட்டாயமாக அவளை கூட்டிக் கொண்டு செல்ல அங்கே ஸ்ட்ரெச்சர்ஸில் தலை முழுவதும் குருதி வழிந்து உறைந்து சலனமின்றி கிடந்தார் ஜெயஸ்ரீ..!! நளினியின் உலகம் அக்கணமே ஸ்தம்பித்து தலைகீழாக மாறிவிட்டது. அதன்பின் நடந்த எல்லாமும் கனவு போல் தான் இருந்தது.
மருத்துவமனை சம்பிரதாயங்கள் முடித்து உற்றார் உறவினர்களிடம் தெரிவித்து அவரின் ஈமசடங்கு முடியும் வரை அனைத்திலும் உடனிருந்தான் வினோதகன்..!
“இதை செய்யனும் நளினி..”
“இதற்கு பாருங்க நளினி..”
“இதனை எப்படி செய்யலாம் நளினி..”
என வேறு யாரையும் அவளை தொந்தரவு செய்யவிடாமல் ஒவ்வொன்றிலும் தானே அவளிடம் கேட்டு செய்திட வந்திருந்த பலருக்கும் அவன் ஏதோ நெருங்கிய உறவு போல என்றே தான் தோன்றியது. ஆனால் யாரென்று கேட்கும் அதிகாரம் அங்கே யாருக்கும் இல்லை. கேட்க கடமைப்பட்டவளுக்கும் அந்த சிந்தனை எல்லாம் இல்லை.
அனைத்தும் முடிந்து நளினியிடம் ஆறுதல் கூறி கொஞ்ச கொஞ்சமாய் எல்லாரும் கலைந்து செல்ல கடைசியாய் இருந்ததும் அவன் மட்டும் தான்..!!
ஒரு ஸ்டிக்கி நோட் தாளில் தன் எண்ணை எழுதியவன்,
“அப்போ நானும் கிளம்புறேன்.. உங்களுக்கு எந்த உதவினாலும் என்னை கூப்பிடுங்க.. என் நம்பர்..”
என்று கூறி அங்கிருந்த கண்ணாடி ஒன்றில் அதனை ஒட்டிவிட்டு சென்றான்..!!
ஜெயாம்மா இல்லாத வீட்டின் வெறுமை நரகமாய் அவளை வாட்ட அழுது கரைந்து ஓய்ந்தவள் மீண்டும் தலை தூக்க சில நாட்கள் எடுத்தது. கொஞ்ச கொஞ்சமாய் தன்னை நிலைப்படுத்தி நிற்க நடந்தவையை எல்லாம் மீண்டும் நினைத்து பார்க்கும்போது அனைத்திலும் அவன் முகம் தான் இருந்தது.
“யார் அவர்..? அம்மாவுக்கு தெரிஞ்சவங்களோ..?”
என யோசித்தவள் அவன் ஒட்டிவிட்டு சென்ற தாளின் நினைவு வந்து அதன் அருகில் சென்று பார்க்க, ‘வினோதகன்’ என்ற பெயரோடு அவனின் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த நிமிடமே தொடர்பு கொண்டவள் அவனை நேரில் சந்திக்க வேண்டும்.. எங்கே.. எப்போது.. என்று கேட்க வினோதகனே அவளின் இல்லம் வருவதாக கூறியவன் மறுநாளே வந்து நினறான்.
“ரொம்ப தேங்க்ஸ் வினோதகன்.. நீங்க நிறைய உதவி பண்ணிங்க.. அந்த நேரத்தில் நீங்க செய்த உதவிகளை எப்பவும் மறக்க மாட்டேன்.. அன்ட் வெரி ஸாரி.. உங்களை யாருன்னு எனக்கு அடையாளம் தெரியல.. அப்போ.. அப்போ பேசும் நிலையில் நான் இல்ல.. யோசிக்கவும் இல்ல..”
என்ற நளினியின் மனம் மீண்டும் தடுமாற சட்டென்று சுதாரித்து,
“எங்க ரிலேட்டிவ்வா நீங்க..?? இல்லை ஜெயாம்மாவை பழக்கத்தில் தெரியுமா..?”
என்று கேட்க அவள் கொடுத்த காஃபியை ஒரு மிடறு குடித்து அவஸ்தையாய் அங்கும் இங்கும் பார்த்தவன்,
“ரிலேட்டிவ் எல்லாம் இல்லை நளினி.. பட் உங்க அம்மாவை தெரியும்.. இன்ஃபெக்ட் அவங்களோட கடைசி நிமிடங்களில் நான் கூட இருந்தேன்.. அன்னைக்கு அவ்வளவு பேசினாங்க.. அத்தனை சந்தோஷமா இருந்தாங்க.. நீங்க கல்யாணத்திற்கு சம்மதிச்சதே உங்களுக்கு கல்யாணமே நடந்திட்டா மாதிரி ஒரு சந்தோஷம் அவங்க கிட்ட பார்த்தேன்.. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இப்படி ஆகும்ன்னு நான் நினைச்சே பார்க்கல.. என்னாலயே இதனை ஜீரணிக்க முடியல நளினி..”
என்றபோது அவன் கண்கள் கலங்கிவிடும் போல் இருக்க தொண்டை குழி ஏறியிறங்கியது.
நளினியின் பார்வை வெறித்து இருக்க,
“கல்யாணம்..?!” என்று சொல்லும்போதே வெறுமையாய் ஒரு புன்னகை அவளிடம் தோன்ற,
“இதுக்காக தான் கல்யாணம் கல்யாணம்னு என்னை அவ்வளவு அவசரப் படுத்தினாங்க போல..”
என வலியோடு கூறியவளுக்கு என்ன பதில் கூறுவான்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய,
“ஸோ.. நீங்க தான் அந்த பையனா வினோதகன்..” என்றாள் அவள் எந்தவித பாவனையுமின்றி..
“உங்க கிட்ட இந்த மாதிரி ஒரு சுழ்நிலையில் நான் சொல்ல நேரிடும்ன்னு நினைக்கல.. ஆனா எனக்கு வேறு வழியும் இல்ல நளினி.. நான் உங்களை மேரேஜ் பண்ணிக்க விரும்புறேன்.. உங்க கன்டிஷன்ஸ் எதுவாக இருந்தாலும் அதை என் மனசார ஏற்கிறேன்..
என்னோட முடிவு உங்களுக்காக மட்டும் இல்ல.. உங்க அம்மா கடைசியா கண்மூடும் சமயம் உங்களை கடைசி வரை பத்திரமா பார்த்துப்பேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்.. அந்த வார்த்தைக்காகவும் தான்..
இது என்னோட முடிவு… எப்பவும் இதில் மாற்றம் இல்ல.. எனக்கு தெரியும் இப்ப நீங்க இதை பத்தி எல்லாம் யோசிக்கும் மனநிலையில் இல்லைன்னு..!! ஆனா எப்போ உங்களுக்கு இதை பேசனும்னு தோனுதோ அப்போ என்னை கான்டக்ட் பண்ணுங்க.. அதுவரை எந்த வகையிலும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்..”
என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு
எழுந்தவன் மென்மையாய் அவள் தலையில் கைவைத்து,
“பீ ஸ்ராங்க் கேர்ள்.. இதுவும் கடந்து போகும்..” என்ற மறுநொடி விலகி அங்கிருந்து கிளம்பிவிட அந்த சிறு செய்கையில் அவள் உணர்ந்த பெரும் ஆறுதலை திகைப்பாய் உள்வாங்கினாள்.
ஆனால் அன்று சென்றவனை அதன்பின் மீண்டும் நாட அவளுக்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆனது..!!
“என்ன நினைப்பான்..? எத்தகைய மனநிலையில் இருப்பான்.. இது தேவை தானா..” என பல தயக்கங்களுடன் தான் அவனை அழைத்தாள். ஆனால் அழைப்பை ஏற்றவுடனே,
“ஃபைனலி.. என்னை பற்றி நியாபகம் வந்திடுச்சா நளினி..” என அவன் உற்சாகமாய் கேட்பான் என்று எதிர்பார்க்கவே இல்லை.
“இல்ல வினோதகன்.. நீங்க அவசரப்பட்டு எந்த அசேம்ஷனும் பண்ணிக்க வேண்டாம்.. அன்னைக்கு இருந்த ஒருவித சிச்வேஷனில் நீங்க கன்டிஷன்ஸ் பத்தி எல்லாம் கேட்காம ஓகே சொல்லி இருக்கலாம்.. ஆனால் அப்படி சட்டுன்னு முடிவு எடுக்க கூடிய விஷயம் இல்ல இது.. முதலில் நான் சொல்றதை கேளுங்க..”
என நளினி பொறுமையாய் சொல்ல தானும் நிதானித்து,
“சரி.. சொல்லுங்க நளினி..”
என்றான்..
“வழக்கமா மேரேஜ் என்ற ரிலேஷன்ஷிப்ல நுழையும் பொண்ணுங்க அவங்க பார்ட்னருக்கு ஏற்ப தன் லைஃப் ஸ்டைல் முழுசா மாத்தி அவங்க சர்கம்டன்ஸை அடாப்ட் பண்ணிப்பாங்க.. ஆனால் என்னால என் சர்கம்டன்ஸை விட்டு மாற முடியாது வினோதகன்.. நான் இப்படி தான் எப்பவும் இருப்பேன்.. நீங்க தான் என்கூட வந்து இருக்க மாதிரி இருக்கும்..!!
மேரெஜ் என்ற டெர்ம்ல எனக்கு நம்பிக்கை கிடையாது.. ஆனால் ஜெயாம்மாவிடம் நான் சொன்னது சொன்னது தான்.. கல்யாணம் பண்ணிக்கிட்டால் என்னால முடிந்த அளவு அந்த உறவில் சரியா இருக்க தான் முயற்சி பண்ணுவேன்.. ஆனால் எந்த அளவுக்கு அது என் வகையில் வொர்க் அவுட் ஆகும் தெரியல.. நான் எதை மீன் பண்ணி சொல்றேன்னு உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்.. ஸோ என்னை கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு ரிஸ்க்கான விஷயம் தான்.. யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க..”
என்று சொல்லி வைத்து விட்டவளுக்கு இனம் புரியாத பதட்டம் தான்.! அதுவும் அதன்பின் அவன் மீண்டும் அவளை அழைக்கவே முயலாதது என்னவோ போல் ஆனது..! இருப்பினும்,
“இட்ஸ் ஒகே.. உன்னை சார்ந்து நீ யோசிக்கும்போது அவரோட விருப்பங்களை சார்ந்து யோசிக்கும் உரிமை அவருக்கும் இருக்கு தானே.. லீவ் ஹிம்..”
என்று மனதை தேற்றிக் கொண்டாள். ஆனால் அவனோ திடீரென்று ஒருநாள் தன் மொத்த குடும்பத்துடன் திருமணம் பேச வந்து நிற்பான் என நினைக்கவே இல்லை.
அடுத்தடுத்து எல்லாம் மின்னல் வேகத்தில் பேசி முடித்து வினோதகனின் சொந்த ஊரில் அவனின் சுற்றமும் நட்பும் சூழ அவர்கள் முறைப்படியே நளினி சார்ப்பில் அவளுடைய சில நண்பர்கள் மட்டும் கொண்டு வினோதகன் நளினியின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினான்.
மாலையும் கழுத்துமாய் இருவரும் நின்ற காட்சி தோன்றிய கணம் அவளுக்கு விழிப்பு தட்ட பட்டென்று எழுந்தமர்ந்தாள்.
பழைய நினைவுகளில் முழ்கி இருந்தவளை எப்போது தூக்கம் ஆட்கொண்டது என தெரியவில்லை. ஆனால் விடிந்ததும் உடல் அதன் வழமைப்படி விழித்துக் கொண்டது..!!
எல்லா நினைப்பையும் தூர வைத்துவிட்டு குளியலறை சென்று வந்தவள் அறையில் இருந்து வெளியே வர அனிச்சையாய் விழிகள் அவனிருக்கும் அறையை ஆராய்ந்தது.
“சூரியன் வரும் முன்னாடியே இவன் எழுந்து உட்கார்ந்திடுவானே.. இன்னுமா தூங்குறான்..” என்று யோசித்தவள் பின்,
என முகம் முழுவதும் புன்னகையோடு தன் கையில் இருந்த கப்பை அவளிடம் நீட்டி நின்ற வினோவை கண்டதும் வாழ்க்கை மீண்டும் ரிவர்ஸ் கீயர் போட்டு முதலிருந்து ஆரம்பிப்பது போல் கண்ணை கட்டியது.