ஒரு சிண்ட்ரெல்லா கதை 3
ரவியின் நடவடிக்கைகளோ, செயலோ, பார்வையோ எதுவோ ஒன்று மனதில் நெருடலைத் தோற்றுவித்திருக்க, வீட்டினரின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற யோசனையிலேயே ஆழ்ந்திருந்தாள் செளமியா.
இரண்டு நாட்களில் கலந்து பேசிவிட்டு பதில் சொல்கிறோம் என்று கூறிச் சென்றிருந்த மாப்பிள்ளை வீட்டார், அடுத்த தினமே, பெண் பிடித்திருக்கிறது, மேற்கொண்ட பேச நல்ல நாள் பார்த்து வருகிறோம் என்று செய்தி சொல்லியிருந்தனர்.
அந்த தின மாலையும், செளமியின் தாய் கலாவதி, இவளது சம்மதத்தைப் பற்றிக் கேட்டார். “என்ன தாண்டீ உன் மனசில நினைச்சிருக்க? அவங்க வீட்டில சம்மதம்னு நேத்தே ஃபோன் பண்ணி சொல்லிட்டாங்க. அடுத்து பேச வீட்டுக்கு எப்போ வரட்டும்னு கேட்கறாங்க? உன் விருப்பம் என்னன்னு சொன்னா அடுத்த முடிவெடுக்கலாம் செளமி” என்று வினவினார்.
“ம்மா, நான் கொஞ்சம் யோசிக்கணும். டைம் குடுங்க.”
“இதுல யோசிக்க என்ன இருக்கு செளமி. அந்த பையனை பிடிக்காம போக என்ன காரணம் இருக்க முடியும்?”
“அம்மா, நான் பிடிக்கலைன்னு சொன்னேனா? யோசிச்சு சொல்லறேன்னு தானே சொல்லறேன்”
“அடி, அப்படி இதில யோசிக்க என்ன பெரிய விஷயமிருக்குன்னு தான் நானும் கேட்கறேன்” என்று கலாவதி வாதாடத் துவங்க, “அட, விடேன் கலா அவளை. அவ தான் யோசிச்சு சொல்லறேன்னு சொல்லிட்டாளே.” என்று செளமியின் தந்தை சின்னசாமி மகளுக்காக பரிந்து கொண்டு வந்தார்.
“அம்மா, நான் ஃப்ரெண்ட்ஸ் கூட கோவில் போறேன். வந்து என் பதில் சொல்லறேன். அதுவரைக்குமாவது பொறுமையா இருங்க” என்று சொல்லிவிட்டு, தன் தோழிகள் ரம்யா மற்றும் சிந்துவுடன் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்றாள் செளமி.
சாமி தரிசனம் முடித்து பிரகாரத்தில் அமரவும், “செளமி மாப்பிளை வீட்டில இருந்து முடிவு சொல்லிட்டாங்களா?” என்று ஆர்வமுடன் வினவினாள் சிந்து.
“ம்ம், நேத்து கால் பண்ணி அப்பா கிட்ட பேசினாங்க சிந்து. அவங்களுக்கு பிடிச்சிருக்காம்.” என்று சற்றே கம்மிய குரலில் பதிலளித்தாள் செளமியா.
“நீ என்ன முடிவு பண்ணியிருக்க செளமி? உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா? ஒ.கே சொல்லப் போறியா” எனச் சற்றே பதட்டத்துடன் கேட்டாள் ரம்யா. அவளுக்கு செளமியின் முகவாட்டத்தை வைத்து அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற யூகம் இருந்தது. இருப்பினும் அவள் வாயாகவே சொல்லட்டும் எனக் காத்திருந்தாள்.
ரம்யா கோவிலுக்குக் கிளம்பும் போதே தன் அக்கா பவானியிடம் அறிவுரை கேட்டுக் கொண்டு தான் வந்திருந்தாள். “ரம்மி, உன் ஃப்ரெண்ட் செளமியா என்ன முடிவெடுக்கறான்னு தெரிஞ்சுகிட்டு அப்பறம்மா இந்த விஷயத்தைப் பத்தி சொல்லலாமா வேண்டாமானு முடிவெடுக்கலாம். அவளுக்கு மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லிட்டா, இந்த விஷயத்தை நாம சொல்லணும்னு அவசியம் இல்லை ரம்மி. ஒரு வேளை பிடிச்சிருக்கு , அவனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொன்ன, இந்த விஷயத்தை நீ சொல்லிடு. அவ முடிவெடுத்துக்கட்டும்” என்று பவானி சொல்லி அனுப்பியிருந்தாள்.
“செளமி என்ன முடிவெடுத்தாலும், இந்த விஷயத்தை பத்தி சொல்லிடலாம்னு தோணுது பவா.” என்றாள் ரம்யா.
“வேண்டாம். ரம்மி. இது சென்ஸிட்டிவ்வான விஷயம். அதுவுமில்லாம அவன் அப்படி பேசினான்னு காட்ட எந்த ஃப்ரூஃபாவது இருக்கா? தேவையில்லாம உன் மேல கெட்ட பேர் வந்துடும் ரம்மி” என்றாள் பவானி கவலையுடன்.
“என் மேல கெட்ட பேர் வர என்ன இருக்கு பவா? நான் எதுக்கு அவனைப் பத்தி தப்பா சொல்லணும்? எனக்கென்ன பைத்தியமா? இல்ல, இதெல்லாம் கற்பனை பண்ணிகிட்டு நானா சொல்லறேனா?”
“அப்படியில்ல ரம்மி, உன் டிரஸ்ஸிங் பத்தி சும்மாவே இவங்க வாய்க்கு வந்ததை பேசுவாங்க. டைட்டா டிரஸ் பண்ணறா, துப்பட்டா போட மாட்டேங்கறா, சிரிக்க சிரிக்க பேசறா, நிறைய பசங்க ஃப்ரெண்ட்ஷிப் இருக்குன்னு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு சின்ன விஷயத்தை பெருசாக்கிடுவாங்க. அதான் பயமா இருக்கு எனக்கு.”
“ஒருவேளை செளமி ஒ.கே சொல்லிட்டா. அப்போ என்ன பண்ணறது?”
“அவ ஒ.கே சொல்லிட்டா, ரெண்டு நாள் கழிச்சு, அவளை தனியா சந்திச்சு இப்படி நடந்துச்சுன்னு சொல்லிடு. சிந்து முன்னாடி கூட சொல்லாத. விஷயம் கேள்விபட்டு மேற்கொண்டு முடிவெடுக்கறது அவ பாடு. நான் உன் சேஃப்டிக்காக தான் பார்க்க முடியும். அதான் எனக்கு முக்கியம்” என்று சற்றே சுயநலமாக யோசித்து முடிவெடுத்திருந்தாள் பவானி. அவளுக்கு எங்கே ஊர்வாயில் தங்கை பலியாகிவிடுவாளோ என்ற கவலை இருக்கவே செய்தது.
தனக்கும் எந்த கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்ற அக்கறையின் காரணமாகவே பவானி அப்படிக் கூறுகிறாள் என்று உணர்ந்தபடியால், செளமி மாப்பிள்ளை பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள, ரம்யா பெரிதும் ஆர்வம் காட்டினாள்.
“எனக்கு என்ன முடிவெடுக்கன்னே தெரியலைடீ.. இதை வீட்டில சொன்னா புரிஞ்சுக்காம அம்மா திட்டறாங்க. எனக்கு அந்த மாப்பிள்ளையைப் பார்த்தா எந்த ஒரு ஃபீலுமே ஏற்படலை” என்று மெல்ல உரைத்தாள் செளமியா.
“செளமி, பொண்ணு பார்க்கற ஃபன்ஷன்லையே காதல், தொப்புன்னு தலை குப்புற விழுந்துடறது, கண்ணால பேசிக்கற அன்புலாம் பொங்கி வழியாதுடீ. போகப் போக தான் பிடிக்கும். அந்த பையன் பார்க்க நல்லா ஹேண்ட்சம்மா தானே இருக்கான். ரெண்டு பேர்த்துக்கும் நல்ல மேட்சிங்கா இருக்கும். அவனை வேண்டாம்னு சொல்ல உனக்கு ஏதாவது சாலிடான காரணம் இருக்கா சொல்லு? எதுவுமே இல்லை. பையன் வீட்டிலையும் பெருசா வரதட்சணை, நகைன்னு எதிர்பார்க்கலைன்னு சொல்லற? அப்பறம் இந்த மாப்பிள்ளையை கட்டிக்க உனக்கு கசக்குதாடீ” என்று சிந்து நல்லவகைகளைப் பேசுகிறேன் பேர்வழி என்று உளறத் துவங்க,
“ஏ, சிந்து, சும்மா இரு. செளமி என்ன முடிவுல இருக்கான்னு அவளே சொல்லட்டும். நீ கண்டதையும் பேசி குழப்பாத” என்று சிந்துவை அடக்கினாள் ரம்யா. எங்கே சிந்துவின் இந்த பிதற்றல் கேட்டு, செளமியின் மனம் மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது ரம்யாவிற்கு.
“செளமி, நீ யார் சொல்லறதையும் மனசில போட்டு குழப்பிக்காம, உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு” என்று செளமியின் மனம் என்ன எண்ணுகிறது என்று தெரிந்து கொள்ள முயன்றாள் ரம்யா. இரு தோழிகளின் பேச்சையும் கேட்டுக் கொண்டு சந்நிதியைப் பார்த்த படிக்கு அமைதியாக அமர்ந்திருந்த செளமி,பதில் சொல்லும் வேலையை அந்த அம்பாளின் மீது வைத்துவிட்டாள்.
“அம்மா, லோக ரக்ஷாம்பிகை. எனக்கு என்ன பதில் சொல்லணும்னு தெரியலை. ஆழ்மனசில இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு ஒரு குரல் சொல்லுது. வேண்டாம்னு சொல்ல உறுதியான காரணம் என்கிட்ட இல்லை. அதனால முடிவை உன்கிட்ட விடறேன். நீ சொல்லு, நான் என்ன பண்ணணும்?” என்று கர்பகிரகத்தை விட்டு கண்களை அகற்றாமல் வினவினாள் செளமியா.
எதனால் இப்படி எண்ணம் தோன்றியது என்று கூட அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. நிதானமாக கண்களை மூடிக் கொண்டு, “பதில் சொல்லு தாயே! உன் பதில் தான் என் முடிவு. அது என்னவா இருந்தாலும் நான் ஏத்துக்கறேன்” என்று சில நிமிடம் அமர்ந்திருக்க, அவள் அருகே யாரோ ஒரு பெண்மணி, “ஏ, அது வேண்டாம். எடுக்காத, கீழ போடு. வேண்டாம்னு சொல்லறேன்ல” என்று சத்தமாக கூறியது காதுகளில் விழுந்தது.
கண் திறந்தவளுக்கு, தன் குழந்தை எதையோ கீழிருந்து எடுக்க, அதை எடுக்காதே என்று சொல்லிபடிக்குச் நடந்த சென்ற அந்த தாயும் சேயும் தென்பட்டனர்.
“இதான் எனக்கான பதிலா?” என்ற கேள்வி செளமியின் மனதில் தோன்றிவிட, யோசனையுடன் அந்தக் குழந்தையை ஏறிட்டாள் செளமி. அதே நேரம், அந்த மூன்று வயது பெண் குழந்தையும் இவளைப் பார்த்து சிரித்தது.
இந்த சமிக்கையை தனக்கான பதிலாக செளமி மனதாற ஏற்றுக் கொண்டாள்.
“டீ, என்ன முடிவெடுத்திருக்கன்னு கேட்டா? எதுவும் சொல்லாம அமைதியா இருக்க?”என்று சிந்து , செளமியை உலுக்க, செளமியா, திடமான குரலில், “எனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லப் போறேன். இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுவேன்” என்று கூறியது கேட்டு திடுக்கிட்டாள் சிந்து.
“ஏ, என்னடீ சொல்லற? ஏன் இந்த மாப்பிள்ளைப் பிடிக்கலைன்னு கேட்டா என்ன சொல்லுவ?”
“ஏனோ மனசுக்குப் பிடிக்கலை. எதனால பிடிக்கலைன்னு எனக்கும் தெரியலை. ஆனா, இந்த மாப்பிள்ளை பத்தி நினைக்கறப்போ ஒரு நல்ல ஃபீல் உண்டாகலை சிந்து. பாசிடிவ் வைப்ஸ் உண்டாகலை. என்னவோ உறுத்தலாவே இருக்கு.”
“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டி உறுத்தலும். உனக்கு கல்யாணத்தை நினைச்சும், வீட்டை விட்டுப் போகணுமேன்னு நினைச்சும் பயமா இருக்குன்னு நினைக்கறேன். மத்தபடிக்கு இந்த மாப்பிள்ளையை எவளாவது வேண்டாம்னு சொல்லுவாளா? பார்க்க விஜய்.டி.வி சீரியல்ல வர்ற சித்தார்த் மாதிரி இருக்கான்.” என்று சிந்து படபடவென சொல்லிக் கொண்டே போனாள்.
“எ, சிந்து, பேசாம இரேன். அதான் அவளுக்குப் பிடிக்கலைன்னு சொல்லறா இல்லையா? மனசுக்குப் பிடிக்காதப்போ, அவன் எவளோ பெரிய பேரழகனா இருந்தாலும் திரும்பிப் பார்க்க கூடத் தோணாது. அவ சொல்ல வர்றதை புரிஞ்சுக்கப் பாரு” என்று சிந்துவை அடக்கினாள் ரம்யா. ரம்யாவிற்கு,செளமியின் முடிவை, அவள் வாயாலேயே கேட்ட பின்னர் பெரும் நிம்மதி தோன்றியிருந்தது.
“அப்பாடா, அன்னைக்கு நடந்த விஷயத்தைப் பத்தி நாம சொல்ல, அவசியம் இல்ல. அவளே பிடிக்கலைன்னு சொல்லிட்டா. ஒரு அயோக்கியன்கிட்ட இருந்து என் ஃப்ரெண்டை காப்பாத்திட்ட கடவுளே. நன்றி” என்று மனதினுள் மகிழ்ந்து போனாள் ரம்யா.
“உன் மனசுக்கு தோணற முடிவை எடுத்துட்டல்ல செளமி. விடு. மத்ததெல்லாம் யோசிக்காத. தைரியமா இரு. ஊர்ல என்ன வேற பசங்களா இல்லை.” என்று மகிழ்ச்சியுடன் பேசினாள் ரம்யா.
செளமியின் முடிவைக் கேட்டு ரம்யா மகிழ்ச்சியடைந்ததைப் போல, வீட்டில் மற்றவர்கள் ஆனந்தப்படவில்லை. முக்கியமாக கலாவதி செளமியின் பதிலைக் கேட்டு ரொம்பவும் கொதித்துப் போனார்.
“என்ன தாண்டீ நினைப்பு உன் மனசில. இந்த மாப்பிள்ளை வேணாம்னு சொல்ல உருப்படியா ஒரு காரணம் சொல்லு பார்ப்போம். எல்லாமே கூடி வர்ற நேரத்தில மனசுக்கு சரின்னு படலைன்னு உப்புசப்பில்லாத காரணம் சொல்லற?” என்று செளமி தன் பதிலை வீட்டில் சொல்லவுமே கலாவதி வெகுண்டு எழுந்தார்
“அம்மா, என் முடிவு என்னன்னு நீங்க கேட்டதால என் பதிலைச் சொன்னேன். எனக்கு மனசுக்கு நெருடலா இருக்கு. முழு திருப்தி ஏற்படலை. என்ன காரணம்னு கேட்டா எனக்குத் தெரியலை. ஆனா இந்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கலை.வேண்டாம். இதான் என் முடிவு” என்று திட்டமாகப் பேசிய செளமி, தன் அறைக்குள் செல்ல எத்தனித்த கலாவதி அவளை அங்கிருந்து நகர விடவில்லை.
“இந்தாடீ. உன் முடிவு தான் பெருசா? பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்? ஏதோ படிச்ச பொண்ணாச்சே அவளை கேட்டுட்டு பதில் சொல்லாம்னு நினைச்சிருந்தா ஒரேயடியா துள்ளற? இந்த பையனைப் பிடிக்கலைங்கறதுக்கு ஒரு காரணம் சொல்லுடி பார்ப்போம்”
“எனக்கு பிடிக்கலைங்கறே முக்கியமான காரணம் தான். புரிஞ்சுக்கோங்கம்மா” என்று நிதானத்துடன் பதிலளித்தாள் செளமியா.
“அவ தன பிடிக்கலைன்னு சொல்லிட்டாளே, விடுங்கம்மா” என்று சங்கர் மொழிய, தன் மகனும் கூட்டு சேர்ந்து கொண்டானே என்ற ஆதங்கம் ஏற்பட்டது கலாவதிக்கு.
“அவ சொல்லிட்டா போதுமா? நாம தானே நல்லது கெட்டது சொல்லணும்? என்ன நீங்களும் எதுவும் பேசாம வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? உங்க பொண்ணு பதிலுக்கு என்ன அர்த்தம்னு கேட்டு சொல்லுங்க” என்று அமைதியாக அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கணவர் சின்னசாமியிடம் கேட்டார் கலாவதி.
“கலா, அவ பிடிக்கலைன்னு சொல்லிட்டாள்ல, விடேன். இவன் ஒருத்தன் தான் இந்த உலகத்திலையே மாப்பிள்ளையா என்ன? விடு, அவ மனசுக்குப் பிடிச்ச மாதிரி வேற வரன் பார்க்கலாம்” என்று அவரும் மகளுக்குச் சாதகமாக சொல்லிவிட்டார்.
“இப்போ, அவங்களுக்கு என்ன பதில் சொல்லறது? என் பொண்ணு உங்க பையனை பிடிக்கலை, வேண்டாம்னு சொல்லிட்டான்னு சொல்லமுடியுமா? அவங்க ஏன் எதுக்குன்னு காரணம் கேப்பாங்களே, என்ன பதில் சொல்லறது சொல்லுங்க?” என்றார் கலா தன் கணவரிடம்.
“எதவையாவது சொல்லி சமாளி. இப்போதைக்கு கல்யாணம் பண்ணற ஐடியா இல்லைன்னு சொல்லு. மேல படிக்கணும்னு நினைக்கறான்னு சொல்லு, வேலைக்கு போக நினைக்கறான்னு சொல்லு, இல்லை, நேரம் சரியில்ல, அவளுக்கு 25 வயசில தான் குருபலன் வருதுன்னு குடும்ப ஜோசியர் சொன்னார்னு சும்மா ஏதாவது அடிச்சு விடு. உனக்கு சமாளிக்க சொல்லியா குடுக்கணும்?” என்று சின்னசாமி, கலாவதியின் பரபரப்பைப் போக்க இலகுவாகப் பேசினார்.
கலாவது அப்போதைக்கு சமாதானம் ஆனாலும், அடுத்த தினம் முழுவதும் பெண்ணின் தீர்மானத்தை மாற்ற இயலுமா என்று முடிந்த மட்டிலும் செளமியிடம் பேசிப் பார்த்தார். செளமி தன் முடிவில் திடமாக இருந்தாள். கலாவதியின் எந்த அறிவுரைக்கும் அவள் செவி சாய்க்கவில்லை.
அதனால் வேறு வழியில்லாமல், கலாவதி, மாப்பிள்ளை வீட்டினருக்கு அழைத்து, “பொண்ணு மேலே பி.எட் படிக்கணும்னு ரொம்ப ஆசைப்படறா. அதனால ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கறேன்னு சொல்லறா. சிரமத்துக்கு மன்னிச்சிடுங்க.” என்று பூசி மழுப்பியிருந்தார்.
இப்படியாக, செளமி, ரவீந்தரனின் திருமணப் பேச்சு ஒரு முடிவை அடைந்திருந்தது.