“சாப்பாடு கொடுக்க.. கை எப்படி வயித்துக்குள்ள போகும்..?”
“பாப்பா விளையாடாம உள்ளேயே எப்படி இருக்கும்..?”
“விளையாடாம இருந்தா பாவமில்லையா..? சீக்கிரம் வெளி எடுத்து விடுங்க..”
“பாப்பா எப்படி வெளியே வரும்..?” என நேரத்திற்கு ஒரு கேள்வி என கேட்டு வைக்க,
ரியான் சொல்லும் மொக்கையான பதிலில் சிரிப்பவளை.. பிள்ளைகளின் கண் மறைவில், ‘தண்டனை..’ என்ற பெயரில் கொஞ்சிக்கொள்வான் ரியான்.
அவனின் ஒரே குறை.. ‘ஒற்றை பிள்ளை..’ என்று டாக்டர் சொன்னது மட்டுமே.
மற்றபடி, ‘அமிழ்த்தினியாளை கையில் வைத்து தாங்கினான்..’ என்று சொல்வதை விட…
‘அவளை, அவளின் விரும்பத்தோடு வாழ அனுமதித்தான்..’ என்று தான் சொல்ல வேண்டும்.
பிள்ளையாய் மாறும் வேளையில் தாயாய் அரவணைத்து..
குமரியாய் தன்னை நாடும் போது அவளுக்கு இசைந்து..
தோழனாய் உலா வர துணையாகி..
அவள் ‘ராஜா..’ என அழைக்கும் போது.. தந்தையாய் அரண் அமைத்து காத்தான்.. தன் மனதுக்கினியாளை.
பிள்ளைகளையும் இனியாளையும் ஒற்றை ஆளாய் கவனித்து,
வேலையையும் பார்த்து.. என பம்பரமாய் சுழன்றவனை கண்டு..
தனம் தனது மூட்டை முடுச்சை கட்டிக்கொண்டு சம்யுக்தாவோடு உரிமையாய் இங்கேயே வந்து விட மட்டற்ற நிறைவு மகள்களுக்கு.
ரியான் அவரை ஆரம்பத்திலேயே அழைத்திருக்கலாம்.
ஆனால், ‘மருமகன் வீட்டில் தான் எப்படி..?’ என்ற தயக்கத்தை தாண்டி,
‘இது என் மகளின் வீடும் கூட.. நான் பார்க்காமல் யார் பார்ப்பார்..?’ என்று அவராக உணர்ந்து வர வேண்டும் என்றே.. அவரை தானாய் அழைக்காமல் இருந்ததாய் அவர் வந்ததும் ரியான் சொல்ல,
தனத்திற்கு எப்போதும் போல அவனின் செயலில் அத்தனை நிறைவு.
மலர்விழியும் அவ்வப்போது வந்து இனியாளுக்கு வேண்டியதை செய்து கொடுத்து பார்த்துக்கொள்ள ரியானுக்கு சற்று ஓய்வு கிடைத்தது என்றே சொல்லலாம்.
சந்தீப்பின் அப்பா ஆரம்பத்தில் முரண்பாடு கொண்டு பேசி திரிந்தாலும்,
தன் மகனின் பொருளாதார வளர்ச்சி.. அவரை சற்றே சாந்தமாக்கி யோசிக்க வைத்ததோ..?
இல்லை, ரியானுக்கு நடந்ததும் அவருக்கு தெரிய வந்திருக்க,
‘அன்று தான் பேசிய பேச்சால் வந்த விளைவோ..?’ என்ற குற்ற உணர்வோ..
ஏதோ ஒன்றால், இப்பொழுது எல்லாம் அவர் ரியானுக்கு செய்வதை தடுப்பதும் இல்லை. குறையாய் கடிவதும் இல்லை.
மாறாக மலர்விழி எதாவது செய்தது நன்றாக இருந்தால், “அதை கொண்டு போய்.. அவன்கிட்ட கொடுத்து.. அந்த புள்ளைக்கு கொடுக்க சொல்லு..” என்ற அளவில் வந்திருந்தார்.
அவரின் இந்த மாற்றமே போதும்.. என்பது சகோதரர்கள் இருவரின் எண்ணம்.
சென்றமுறை, ‘வளையல் போட ஆசை பட்டேன்..’ என சொன்னதை மனதில் கொண்டு,
ஏழாம் மாதமே சிறப்பாக மண்டபம் பிடித்து வளை பூட்டலை நடத்தினான் அவளின் ஆசை மணாளன்.
சரியாக அந்த நேரம் தனது வேலையை வெற்றிகரமாக முடித்து வந்திருந்தான் வெங்கடேஷ்.
ஆனாலும் பிள்ளை பிறந்த பிறகு தேதி வைக்க சொல்லி அவன் சதா கொஞ்சலாக கெஞ்ச, மறுப்பானா.. அவளின் ஆசை வெங்கீ..!!
இனியாளுக்கு திருமணமான நாள் முதல் தன் சதாவின் அன்றாட நடவடிக்கையை ஒப்புவிக்கும் கண்ணாடியாய் மாறி இருந்தவனுக்கு.. இந்த இடைப்பட்ட காலத்தில், காதலோடு.. சிறந்த புரிதலும் வந்திருந்தது.
‘இந்த பிரிவும் நல்லது தான்..’ என எண்ண வைக்கும் படியான.. அழகான காதல் தருணங்கள் அவர்களுக்குள்…
கை நிறைய கலர் கலர் வளையலோடு, தேர் போல அசைந்து வரும் மனைவியை.. கண்கள் மின்ன பார்த்து ரசிப்பதை கண்டு சம்யுக்தா எவ்வளவு கிண்டல் செய்தாலும் கண்டு கொள்ளாமல்,
வெங்கடேஷிடம், “பேபிக்கும் வளையல் பூட்ட ஆசை போல.. சீக்கிரம் நாள் பிக்ஸ் பண்ணிடலாமா..?” என்று கேட்க,
அவளுக்காக தானே.. அவன் திருமண நாளை தள்ளி வைத்திருக்கிறான். ஆசைகள் இல்லாமலா..?
கண்ணால், “என்ன.. ஓகே வா..?” என வினவ,
அதற்கு அவள் கெஞ்ச.. என அவர்களை திசை மாற்றிவிட்டு,
தன் வேலையை (அதாவது மனைவியை ரசிப்பதை) தொடர்வான் ரியான்.
டாக்டர் சொன்ன தேதிக்கு இரண்டு நாட்கள் இருக்க, பிரசவவலியில் துடித்தவளை கண்டு தானும் துடித்து போனவன்,
பிள்ளைகளை சம்யுக்தா வசம் விட்டுவிட்டு தனத்தை துணைக்கு வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
மருத்துவரிடம் முதல் பிரசவத்தில் நடந்த எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லியிருக்க,
“வாண்ட்டேடா சி செஷன் பண்ணியிருக்காங்கன்னா.. இந்த டைம் நார்மல் ஆக ச்சான்ஸ் இருக்கு.. எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம்..” என்றிருக்க,
இப்போது உட்சகட்ட பிரசவ வலியோடு அழுதவளுக்கு துணையாய்.. அவளின் கரத்தை தன் நடுங்கும் கரத்தால் பற்றிக்கொண்டு நின்றிருந்தான் ரியான்.
அனைவரையும் கலங்க வைத்து விட்டு விடியலின் பொழுது ரியான், அமிழ்தினியாள் வாழ்க்கையின் விடிவெள்ளியாய் வந்துதித்தான் அவர்களின் வாரிசு..
‘யாழ் இனியன்..’
பிறந்த பிள்ளையின் தொப்புள் கொடியை வெட்டி தன் கரத்தில் வாங்கிய ரியானின் கண்ணில் வழிந்த நீர் துளி மகனின் நெற்றியில் பட,