Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 33.1

“பையன்னா யாழ் இனியன், பொண்ணுன்னா யாழ் இனியாள்.. எப்படி.. நல்லா இருக்கா..?” என்றதும்,

“சூப்பர் ங்க.. ரொம்ப நல்லா இருக்கு. 



Advertisement

நல்ல தமிழ் பேரா வச்சிருக்கீங்க..!” என்று அவனை பாராட்டியவள், 

“உங்க பேரும்.. முகுந்த் பேரும்.. தான் நார்த் இண்டியன் போல.. ஃபீல் ஆகுது..” என குறைபட்டுக்கொண்டு,

Advertisement

Advertisement

“ஆமா.. அதெல்லாம் ரியான்..? 

பொண்ணு பேர் மாதிரி.. சுருக்கி கூட கூப்பிட முடியல..” என்று இத்தனை நாள் சந்தேகத்தை கேட்டவளை கண்டு நகைத்தவன்,

Advertisement

“ரியான்னா.. ‘சிறிய ராஜா’ ன்னு அர்த்தம். 

நான் பிறந்தப்போ என்னை என்னோட அப்பத்தாவும், அப்பாரும் தான் பார்த்துக்கிட்டாங்கன்னு ஏற்கனவே சொன்னேனே.. 

அப்போ அவங்க ‘ராஜா குட்டி..’ன்னு தான் சொல்லி கொஞ்சுவாங்களாம். 

ஏன்னா, எங்க அப்பா அரசு.. அன்பரசு.. அவரோட பையனும் ராஜாவாம். 

அதைக் கேட்டு என்னோட அம்மா.. “ராஜா குட்டி..” ன்னா என்னன்னு கேட்க, 

‘ஸ்மால் கிங்..’ ன்னு அப்பா விளக்கம் கொடுக்க, 

அதையே பேராக்கிட்டாங்க என்னோட அம்மா..” என்று சிரித்தவனின், 

‘பேருக்குப் பின்.. இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறதா..?!’ என்று வியந்தவள்,

“அப்போ முகுந்த்..?” என்று ஆர்வத்தோடு வினவ, 

“அது லாட் கிருஷ்ணாவோட பேர். 

எங்க வீட்டுக்கு அந்த கிருஷ்ணனே வந்திருக்காங்க.. ன்னு நான் வரும் முன்னமே.. என்னோட அம்மா அவனுக்கு வச்சிட்டாங்க..” என்றதும்,

“அது சரி.. அப்ப விட்டதை இப்ப புடிக்க பார்க்கறீங்க..?” என்று வார,

“கரெக்ட். இந்த தடவை நான் செலக்ட் பண்ண பேர் தான் என் குழந்தைக்கு..” என்றவனின் உல்லாமெல்லாம் உவகை ஊற்றெடுத்தது பெருமிதத்தால்.

அவன் பேசி முடித்ததும் சிறிது நேரம்.. அவன் நெஞ்சில் படுத்து அவன் மார்பு ரோமத்தை கரத்தால் அலைய விட்டபடி இருந்தவள்,

“என்னங்க.. நா உங்கள ராஜான்னு கூப்பிடவா..?” என்றாள் தயங்கி.

ஒரு நிமிடம், அவளை நிமிர்த்தி.. தன் விழியை பார்க்க செய்தவன், 

“உன்னோட அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணறையா அம்மூ..?” என்றிருந்தான், 

‘உன்னை நானறிவேன்..’ என்ற பதத்தில்.

“ம்ம்..” என்றவளுக்கு விழிகள் கலங்கி போனது. 

அதை மறைக்கும் விதமாய் அவன் நெஞ்சில் அழுத்தமாய் தன் முகத்தை புதைத்து கொண்டவள்,

“சின்ன வயசுல.. அப்பா என்னை அப்படி பார்த்துப்பாங்க. 

வேலை முடுச்சு வீடு வந்தா.. அவரோட மொத்த உலகமும் நான் தான். 

வெளியே போனாலும் அவர் தான் தூக்கிட்டு போவாங்க.

வெளிநாடு போனப்போ அவரை மிஸ் பண்ணாலும்.. வீடியோ கால்ல பேசிடுவாங்க. 

ஆனா அது எதுவும் இனி இல்லை ன்னு ஆன நாள்.. என்னால தாங்கவே முடியலங்க.

நான் என்ன தப்பு பண்ணேன்னு யோசிச்சு.. அவர் என்கிட்ட பேசிட மாட்டாரான்னு ஏங்கி, 

ஒரு கட்டத்துல அவர் இனி எனக்கு உரிமை இல்லைன்னு ஆனா அன்னைக்கு நான் பட்ட வேதனை..

அப்பா பாசத்தை உணராத வரை தெரியாதுங்க. 

ஆனா அதை ஆசை தீர அனுபவிச்சுட்டு, ஒருகட்டத்துல அது இல்லைன்னு ஆனா வரும் பாருங்க ஒரு வலி. அது ரொம்ப கொடுமை.

இப்போ எல்லாம் எனக்கு அந்த வலியே இல்லை. 

ஏன்னா, வெண்பாவை நீங்க எப்படி பார்த்துக்கறீங்களோ.. அதே மாதிரி என்னையும் நீங்க பேம்பர் பண்ணி.. என்னை அந்த ஏக்கத்துல இருந்து வெளியே கொண்டு வந்துட்டீங்க. 

ஆனாலும், மனசுல அப்பான்னா ‘ராஜா..’ ன்னு பதிஞ்சது மாறாது இல்லையா..?!

உங்களுக்குள்ள என் அப்பாவை தேடும் போது மட்டும்.. அப்படி கூப்பிடவா..?” என்று ஏக்கத்தோடு கேட்டவளை தன்னோடு இறுக்கி அனைத்தவன், 

“உன் விருப்பம் டா அம்மூ.

நீ, உன்னை நான் முதல் தடவை அம்மூ.. ன்னு கூப்பிட்ட உடனே, நீ சொன்னதுலையே புரிஞ்சிடுச்சு உன் அப்பா ஏக்கத்தை.. 

அதான் என்னையும் உனக்கு வெண்பாவுக்கு செய்யற மாதிரி செய்ய வச்சது. 

என்னோட பாலைவன வாழ்க்கையில நட்சத்திரமா வந்தவங்க பசங்கன்னா, 

அந்த பாலையில் தகிச்சு கிடந்தவனைக்கு குளிர்நிலவா வந்து குளிர்ச்சியை கொடுத்தவ நீ.. 

என் பாலையின் குளிர் நிலவு.. நீ..!!! 

இப்போவும் உன்னோட ஆசை என்னவோ.. அதை நான் செய்வேன்.. சரியா..? 

மனசுல எதையும் போட்டு உலட்டாம.. நிம்மதியா தூங்கு..” என தட்டிக்கொடுத்தவனும் ஒரு கட்டத்தில் நிம்மதியான உறக்கத்தை தழுவியிருந்தான்.

முதல் முறை கர்ப்பம் தரித்த போது தவற விட்ட எல்லாவற்றையும் இந்த முறை அனுபவித்து ரசினையோடு நகர்ந்தது ரியான் இனியாளின் வாழ்க்கை பயணம்.

குழந்தைகளுக்கு விசயத்தை சொன்ன அன்று, முகுந்த் ஆர்வமாக தாயின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் என்றால், 

வெண்பாவோ கேள்விக்கணைகளால் பெரியவர்களை திணறடித்தாள்.

“பாப்பா எப்படி வயித்துக்குள்ள போச்சு..?” 

“அதுக்கு சாப்பாடு யார் கொடுப்பா..?” 

“சாப்பாடு கொடுக்க.. கை எப்படி வயித்துக்குள்ள போகும்..?” 

“பாப்பா விளையாடாம உள்ளேயே எப்படி இருக்கும்..?” 

“விளையாடாம இருந்தா பாவமில்லையா..? சீக்கிரம் வெளி எடுத்து விடுங்க..” 

“பாப்பா எப்படி வெளியே வரும்..?” என நேரத்திற்கு ஒரு கேள்வி என கேட்டு வைக்க, 

ரியான் சொல்லும் மொக்கையான பதிலில் சிரிப்பவளை.. பிள்ளைகளின் கண் மறைவில், ‘தண்டனை..’ என்ற பெயரில் கொஞ்சிக்கொள்வான் ரியான்.

அவனின் ஒரே குறை.. ‘ஒற்றை பிள்ளை..’ என்று டாக்டர் சொன்னது மட்டுமே.

மற்றபடி, ‘அமிழ்த்தினியாளை கையில் வைத்து தாங்கினான்..’ என்று சொல்வதை விட…

‘அவளை, அவளின் விரும்பத்தோடு வாழ அனுமதித்தான்..’ என்று தான் சொல்ல வேண்டும்.

பிள்ளையாய் மாறும் வேளையில் தாயாய் அரவணைத்து.. 

குமரியாய் தன்னை நாடும் போது அவளுக்கு இசைந்து..

தோழனாய் உலா வர துணையாகி..

அவள் ‘ராஜா..’ என அழைக்கும் போது.. தந்தையாய் அரண் அமைத்து காத்தான்.. தன் மனதுக்கினியாளை.

பிள்ளைகளையும் இனியாளையும் ஒற்றை ஆளாய் கவனித்து, 

வேலையையும் பார்த்து.. என பம்பரமாய் சுழன்றவனை கண்டு.. 

தனம் தனது மூட்டை முடுச்சை கட்டிக்கொண்டு சம்யுக்தாவோடு உரிமையாய் இங்கேயே வந்து விட மட்டற்ற நிறைவு மகள்களுக்கு.

ரியான் அவரை ஆரம்பத்திலேயே அழைத்திருக்கலாம். 

ஆனால், ‘மருமகன் வீட்டில் தான் எப்படி..?’ என்ற தயக்கத்தை தாண்டி, 

‘இது என் மகளின் வீடும் கூட.. நான் பார்க்காமல் யார் பார்ப்பார்..?’ என்று அவராக உணர்ந்து வர வேண்டும் என்றே.. அவரை தானாய் அழைக்காமல் இருந்ததாய் அவர் வந்ததும் ரியான் சொல்ல, 

தனத்திற்கு எப்போதும் போல அவனின் செயலில் அத்தனை நிறைவு.

மலர்விழியும் அவ்வப்போது வந்து இனியாளுக்கு வேண்டியதை செய்து கொடுத்து பார்த்துக்கொள்ள ரியானுக்கு சற்று ஓய்வு கிடைத்தது என்றே சொல்லலாம்.

சந்தீப்பின் அப்பா ஆரம்பத்தில் முரண்பாடு கொண்டு பேசி திரிந்தாலும், 

தன் மகனின் பொருளாதார வளர்ச்சி.. அவரை சற்றே சாந்தமாக்கி யோசிக்க வைத்ததோ..?

இல்லை, ரியானுக்கு நடந்ததும் அவருக்கு தெரிய வந்திருக்க, 

‘அன்று தான் பேசிய பேச்சால் வந்த விளைவோ..?’ என்ற குற்ற உணர்வோ..

ஏதோ ஒன்றால், இப்பொழுது எல்லாம் அவர் ரியானுக்கு செய்வதை தடுப்பதும் இல்லை. குறையாய் கடிவதும் இல்லை. 

மாறாக மலர்விழி எதாவது செய்தது நன்றாக இருந்தால், “அதை கொண்டு போய்.. அவன்கிட்ட கொடுத்து.. அந்த புள்ளைக்கு கொடுக்க சொல்லு..” என்ற அளவில் வந்திருந்தார்.

அவரின் இந்த மாற்றமே போதும்.. என்பது சகோதரர்கள் இருவரின் எண்ணம்.

சென்றமுறை, ‘வளையல் போட ஆசை பட்டேன்..’ என சொன்னதை மனதில் கொண்டு, 

ஏழாம் மாதமே சிறப்பாக மண்டபம் பிடித்து வளை பூட்டலை நடத்தினான் அவளின் ஆசை மணாளன்.

சரியாக அந்த நேரம் தனது வேலையை வெற்றிகரமாக முடித்து வந்திருந்தான் வெங்கடேஷ்.

ஆனாலும் பிள்ளை பிறந்த பிறகு தேதி வைக்க சொல்லி அவன் சதா கொஞ்சலாக கெஞ்ச, மறுப்பானா.. அவளின் ஆசை வெங்கீ..!!

இனியாளுக்கு திருமணமான நாள் முதல் தன் சதாவின் அன்றாட நடவடிக்கையை ஒப்புவிக்கும் கண்ணாடியாய் மாறி இருந்தவனுக்கு.. இந்த இடைப்பட்ட காலத்தில், காதலோடு.. சிறந்த புரிதலும் வந்திருந்தது.

‘இந்த பிரிவும் நல்லது தான்..’ என எண்ண வைக்கும் படியான.. அழகான காதல் தருணங்கள் அவர்களுக்குள்…

கை நிறைய கலர் கலர் வளையலோடு, தேர் போல அசைந்து வரும் மனைவியை.. கண்கள் மின்ன பார்த்து ரசிப்பதை கண்டு சம்யுக்தா எவ்வளவு கிண்டல் செய்தாலும் கண்டு கொள்ளாமல்,

வெங்கடேஷிடம், “பேபிக்கும் வளையல் பூட்ட ஆசை போல.. சீக்கிரம் நாள் பிக்ஸ் பண்ணிடலாமா..?” என்று கேட்க,

அவளுக்காக தானே.. அவன் திருமண நாளை தள்ளி வைத்திருக்கிறான். ஆசைகள் இல்லாமலா..? 

கண்ணால், “என்ன.. ஓகே வா..?” என வினவ, 

அதற்கு அவள் கெஞ்ச.. என அவர்களை திசை மாற்றிவிட்டு, 

தன் வேலையை (அதாவது மனைவியை ரசிப்பதை) தொடர்வான் ரியான்.

டாக்டர் சொன்ன தேதிக்கு இரண்டு நாட்கள் இருக்க, பிரசவவலியில் துடித்தவளை கண்டு தானும் துடித்து போனவன், 

பிள்ளைகளை சம்யுக்தா வசம் விட்டுவிட்டு தனத்தை துணைக்கு வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவரிடம் முதல் பிரசவத்தில் நடந்த எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லியிருக்க, 

“வாண்ட்டேடா சி செஷன் பண்ணியிருக்காங்கன்னா.. இந்த டைம் நார்மல் ஆக ச்சான்ஸ் இருக்கு.. எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம்..” என்றிருக்க,

இப்போது உட்சகட்ட பிரசவ வலியோடு அழுதவளுக்கு துணையாய்.. அவளின் கரத்தை தன் நடுங்கும் கரத்தால் பற்றிக்கொண்டு நின்றிருந்தான் ரியான்.

அனைவரையும் கலங்க வைத்து விட்டு விடியலின் பொழுது ரியான், அமிழ்தினியாள் வாழ்க்கையின் விடிவெள்ளியாய் வந்துதித்தான் அவர்களின் வாரிசு.. 

‘யாழ் இனியன்..’

பிறந்த பிள்ளையின் தொப்புள் கொடியை வெட்டி தன் கரத்தில் வாங்கிய ரியானின் கண்ணில் வழிந்த நீர் துளி மகனின் நெற்றியில் பட, 

உதட்டை பிதுக்கி லேசாய் சிணுங்க ஆரம்பித்த பிள்ளையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவனின் உள்ளமெல்லாம் இன்ப வெள்ளமே..

ஒன்றுக்கு இரண்டு பிள்ளை பெற்ற போது பார்க்க யாருமின்றி அநாதையாய் கிடந்தவளை தாங்கவென சொந்தங்கள் மொத்தமாய் குவிந்துவிட, 

இதை தனக்கு தந்த.. தன் ரியானின் மீது இன்னமும் காதல் பெருகி போனது அவன் மனதை ஆள்பவளுக்கு.

இழப்புக்களின் வலியை மட்டுமே உணர்ந்து.. தனித்து.. தவித்து.. கிடந்தவனை சுற்றிலும், இன்பமும்.. இனிமையும்.. மட்டுமே நிறைந்திருக்க,

அதே இனிமையான மனதோடு, தனக்கு அதிஷ்ட தேவதையாய் இருந்தவளை.. தாரை வார்த்து வெங்கியிடம் ஒப்படைக்கும் நாளை உறுதி செய்தான் ரியான்.

மாசற்ற உள்ளங்களின் வாழ்த்தோடு.. அவர்களின் வாழ்வும் பல்லாண்டு சிறந்து வாழட்டும்.. என்ற வாழ்த்தோடு நாமும் விடை பெறுவோம்.

சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!