என்றும் இல்லாத திருநாளாய் அன்று விரைவாகவே விழிப்பு வந்திருந்தது மகதிக்கு. கொட்டாவியுடன் சோம்பல் முறித்தவள் அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தாள். எப்பொழுதும் அவளுக்கு முன்பாகவே எழுந்து விடுபவள் இன்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் இப்படி தூங்கி பல நாட்கள் ஆகிறது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகதி. தூங்கிக் கொண்டிருப்பவளின் செல்லத் தங்கை தான் மகதி. கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருக்கிறாள். மகதிக்கு அக்கா தீராநதி என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள். இவள் ஒரு வகை என்றால், தீராநதி இன்னொரு வகை.
பாசாங்கற்ற, நிலவு போன்ற முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்ததோ,இல்லை அது அவள் பார்க்கும் வேலையின் அயர்ச்சியா என்று பிரித்தறிய முடியாத வண்ணம் இருந்தது தீராநதியின் முகம். அவளின் சிரிப்பு தான் அவள் அடையாளம். ஆனால் அந்த அடையாளத்தை தொலைத்து விட்டாளோ என்று மகதி நினைக்காத நாளில்லை.
‘கடவுளே அக்காவை சீக்கிரம் பழையபடி மாத்திடு..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, வெளியே அவர்களின் அம்மா சாரதாவின் குரல் கேட்டது.
“எவ்வளவு நேரம் தூங்குவ மகதி..?” என்ற கண்டிப்புடனே அறைக்குள் வந்தார் சாரதா.
அவரை முறைத்த மகதி, “அதானே, உங்க கண்ணுக்கு நான் மட்டும் தான் தெரிவேன். பக்கத்துல பாருங்க, எப்படி தூங்கிட்டு இருக்கான்னு..” என்று சிலுப்பிக் கொண்டாள்.
“அவ எப்பவாவது தான் இப்படி தூங்குவா..! ஆனா, நீ எப்பவுமே இப்படித்தான்..” என்றார் சாரதா.
“நீ கூட ரொம்ப தேறிட்டம்மா..!” என்று மகதி சொல்ல,
அவள் பேச்சை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அருகில் தூங்கிக் கொண்டிருந்த தீராநதியை எழுப்பினார் சாரதா.
“நதி எழுந்திருமா..” என்று அவளைத் தொட்டு எழுப்பும் போது தான் தெரிந்தது, அவளுக்கு காய்ச்சல் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருப்பது.
‘என்ன இப்படி சுடுது..?’ என்று பதட்டமடைந்த சாரதா,
“ஏண்டி, நதிக்கு இப்படி காய்ச்சல் அடிக்குது. பக்கத்துல தூங்குன உனக்கு இது கூடவா தெரியலை. என்ன பொண்ணோ போ..” என்று மகதியை கடிந்து கொண்டார் சாரதா.
என்னம்மா சொல்றிங்க? நதிக்கு காய்ச்சலா..? அதுதான் இவ்வளவு நேரம் தூங்குறாளா..? என்ற மகதி தன் பங்குக்கும் நதியின் நெற்றியில் கை வைத்து பார்க்க, அவளுக்கும் அப்போது தான் தெரிந்தது.
“சாரிம்மா..! நான் அலுப்புல தூங்குறான்னு நினைச்சேன்..” என்று மகதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நதியை எழுப்பினார் சாரதா.
இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்தால் தீராநதி. தலை பாறாங்கல்லாய் கனத்தது. இமைகள் நெருப்பாய் எறிய முயன்று கண் விழித்தாள். அவள் முகத்திற்கு எதிராக சாரதாவின் கலவரமான முகம் தெரிய, என்னவோ ஏதோ என்று நினைத்தவள் பட்டென்று எழுந்தாள்.
“என்ன ஆச்சும்மா..? ஏன் உங்க முகம் இப்படி இருக்கு..?” என்றாள் தீராநதி.
“காய்ச்சல் நெருப்பா கொதிக்குது. ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா நதி..? நான் ஒரு கூறு கெட்டவ..? நீ வர்ற வரைக்கும் முழிச்சிருக்கணும்.. நேத்து கொஞ்சம் அசதியில தூங்கிட்டேன். மாத்திரையாவது போட்டியா நதி..?” என்றார் விடாமல்.
விடாமல் பேசும் சாரதாவை நிறுத்தும் வழி தெரியாமல் அப்படியே அமைதியாக இருந்தாள் நதி. சாரதாவின் குணமே அதுதான். மிகவும் வெகுளி. அந்த குடும்பத்தை விட்டால் அவருக்கு வெளி உலகம் தெரியாது.
“ஒவ்வொரு கேள்வியா கேளுங்கம்மா..! நேத்து, போன இடத்துல லேட் ஆகிடுச்சு. நான் வரும் போது நீங்க நல்லா தூங்கிட்டு இருந்திங்க. அதான் எழுப்பலை. நைட்டே ஒரு செட் மாத்திரை போட்டேன். இப்போ ஒரு செட் போட்டா சரியாகிடும். அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப் படுறிங்க..?” என்றாள் நிதானமாக.
“இப்ப என்னென்னமோ காய்ச்சல் எல்லாம் வருது. அதான் பயமா இருக்கு. நீ எதுக்கும் அப்பாவைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடு..” என்றார் சாரதா.
“ஹாஸ்பிட்டலா..? அதுக்கெல்லாம் டைம் இல்லம்மா. இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. ஒரு பெரிய பஞ்சாயத்து. அது முடிஞ்சாதான் நிம்மதியா இருக்கும்..” என்று பேசிக் கொண்டே போனவள்,
“ஆமா, ரிது என்ன பண்றா..?” என்றாள்.
“ரிது இன்னும் எழுந்திருக்கலை. நான் போய் டிபன் செய்றேன். நீ குளிச்சுட்டு வா நதி. ஹாஸ்பிட்டல் போகாம இன்னைக்கு ஆபீஸ் போக வேண்டாம். எந்த வேலையா இருந்தாலும் இன்னொரு நாள் பார்த்துக்கலாம்..” என்றார் சாரதா.
“அம்மா..! இது என்ன நம்ம சொந்த ஆபீசா..? கவர்மென்ட் ஆபீஸ். அங்க நம்ம இஷ்ட்டத்துக்கு வேலை செய்ய முடியாது..” என்றாள் நதி.
“அதுவும் அக்கா என்ன சாதாரண போஸ்ட்டா? ஒரு தாசில்தார் கிட்ட பேசிட்டு இருக்கன்ற நினைப்பு வேண்டாமா மம்மி உனக்கு..?” என்றாள் மகதி.
அவளைத் திரும்பி முறைத்தாள் நதி. ஆனால் அதையெல்லாம் மகதி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
“நரேன் எங்கம்மா..?” என்றாள் நதி.
“அவன் காலையில நேரத்துலையே எழுந்து படிச்சுட்டு இருக்கான். ஆனா, இந்த கழுதை தான் படிக்கிற மாதிரி தெரியலை..” என்றார் சாரதா.
மகதியும்-நரேனும் இரட்டையர்கள். தீராநதிக்கு பிறகு ஒரு குழந்தை போதும் என்று நினைத்திருக்க, இரட்டை குழந்தையாய் கிடைத்துவிட்டது சாரதாவிற்கு. அதிலும் அவருக்கு மகிழ்ச்சி தான்.
“அவன் படிக்கிறானா..? இல்லை படிக்கிற சாக்குல போனை பார்த்துட்டு இருக்கானான்னு எனக்குத் தான் தெரியும்.இங்க வந்தும் அவன் பில்டப் குறையலை. இந்த உலகத்துல நேர்மையா இருக்குறவங்களுக்கு காலமே இல்லை முருகா..” என்று புலம்பிக் கொண்டே சென்றாள் மகதி.
சாரதாவும் கீழே சென்று விட, சட்டென்று எல்லாமே மாறிப் போனதை போல் இருந்தது தீராநதிக்கு. எல்லாமே இருந்தும் ஏதோ ஒரு குறை. ஒரு முழுமை இல்லாத உணர்வு. எவ்வளவு தான் விரட்டியடித்தாலும், மீண்டும் மனதிற்குள் தஞ்சம் புகுந்து கொள்ளும் தனிமை உணர்வு. முக்காடு போட்டு மூடி வைத்தாலும், சில முழுமை பெறாத கற்பனைகள் இன்னமும் அவள் கண்களுக்குள் இருந்தனவோ என்னவோ? முற்று பெறாத வாக்கியங்களும், கேட்கப்படாத கேள்விகளும், வெற்றுக் காகிதமாய் அற்று போயிருந்த சில உறவுகளும், அவள் மனதிற்குள் சதிராட்டம் ஆடிக் கொண்டு தான் இருக்கின்றன.
உடல் ஓய்வுக்கு ஏங்க, உள்ளம் கடமையை நோக்கியே சென்றது. மெதுவாய் எழுந்து, குளித்து தயாராகி வந்தவள் நேராய் சாரதாவின் அறைக்கு செல்ல,
“வந்து முதல்ல சாப்பிடு நதி. சாப்பிட்டா தான் கொஞ்சம் தெம்பா இருக்கும்..” என்றார். அவர் பேச்சை தட்ட முடியாமல் இரண்டு இட்லியை கஷ்ட்டப்பட்டு முழுங்கியவள், சாப்பிட்டு முடித்த கையோடு மாத்திரையையும் போட்டுக் கொண்டாள்.
“இதென்ன பழக்கம்..? இப்படி நீயே மாத்திரை போடுறது? காய்ச்சலை சாதரணமா நினைச்சு விட கூடாது..” என்றார்.
“எனக்கு ரொம்ப முடியலைன்னா, நானே போய் ஊசி போட்டுக்கிறேன். நான் என்ன சின்ன பிள்ளையா..?” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே போன் வர,
“அம்மா..! நான் இப்ப போயே ஆகணும். நான் பார்த்துக்கிறேன்…” என்று பேசிக் கொண்டே கிளம்பிவிட்டாள்.
வெளியே அலுவலக கார் தயாராய் இருக்க, அதில் ஏறி அமர்ந்தவளுக்கு கொஞ்சம் அயர்ச்சியாகத் தான் இருந்தது.
தீராநதி தாசில்தாராய் வேலை பார்க்க போகும் முதல் ஊர். அவளுக்காக குடும்பமே அவளுடன் வந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பி விடுவார்கள்.
கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியான அந்த ஊரின் காவல் நிலையத்தின் முன்பாக, கூட்டமாக இருந்தது. அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று ஆறுமாதம் ஆகியும், இன்னமும் சில சிக்கல்கள் பிடிபடாமல் இருந்தான் குமரன்.
“சார் இப்ப என்ன சார் பண்றது..?” என்றார் ஒரு காவலர்.
“அது தான் ஒரு மண்ணும் புரியலை. என்ன ஊருடா இது..? ஒருத்தன் மேட்டுக்கு இழுத்தா ஒருத்தன் பள்ளத்துக்கு இழுக்குறான். இடையில நம்ம தாளியை அறுக்குறானுங்க. தூங்குறவனை கூட எழுப்பிடலாம். தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள எப்படி எழுப்புறது..?” என்ற குமரனின் முகத்தில் ஏகத்துக்கும் கோப ரேகைகள்.
அப்படி புலம்பும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தார் அந்த காவலர். பிறகு, வந்த நாளில் இருந்து அதிரடி காட்டியவன் அல்லவா? இப்போது அவன் சலிப்பாய் பேசுவது ஆச்சர்யமாகத்தானே இருக்கும்.
அந்த காக்கி உடையில் கம்பீரம் கலந்த மிடுக்கோடு இருந்த குமரனைப் பார்த்தால் உடனே பிடித்து விடும். கூடவே கொஞ்சம் பயமும் கலந்து விடும். வெட்டவா, குத்தவா என்ற அவனின் பார்வைக்கு பயந்தே பலர் பேசவே பயப்படுவர். இரவுப் பணியை முடித்தவன் இன்னமும் வீட்டிற்கு கூட செல்லவில்லை. அடுத்த வேலை வரிசை கட்டிக் கொண்டு நின்றது.
“இப்ப என்ன பண்றது ஏட்டையா..?” என்றான் அந்த காவலரைப் பார்த்து.
“சார் என்கிட்டே கேட்குறிங்க..? நாம என்ன சொன்னாலும் அவனுகளுக்கு புரியாது சார்..” என்றார்.
“அப்படியா சொல்றிங்க..?” என்று பேச்சை நிறுத்தியவன்,
“சார் வெளிய நிக்கிறது பொது ஜனம். நாம எதை செய்றதா இருந்தாலும் நிதானமா தான் செய்யணும்…” என்றார் அவர்.
“நிதானமா செய்யனும்ன்னா, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். கண்ணு ரெண்டும் தீயா எறியுது. நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன். நீங்க என்ன பண்றிங்க, நான் முக்கியமான வேலைல இருக்கேன். வர ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்ன்னு சொல்லிடுங்க..” என்றான் சாவகாசமாய்.
“என்ன பண்ணணுமோ பண்ணட்டும். எப்படி இருந்தாலும் இது இன்னையோட முடியற பிரச்சனை இல்லையில்லை..” என்றவன், அப்படியே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவாறே கண்களை மூடினான்.
இரண்டு நாட்களாக ஓய்வில்லாத வேலை. பிடித்து வந்த வேலை, இப்படியே போனால் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் கொஞ்சம் வரத் தொடங்கியிருந்தது.