அரைமணி நேரம் கண்ணை மூடியவனுக்குள் ஆயிரம் எண்ணங்கள் வந்து போக பட்டென்று எழுந்து விட்டான்.
“என்னாச்சு சார்..?” என்றார் அந்த காவலர்.
“வாங்க, வெளிய போய் பேசிப் பார்ப்போம். எஸ்.ஐ எங்க..?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே வெளியே வந்தான்.
‘இவரை புரிஞ்சிக்கவே முடியலையே’ என்று குழம்பியபடி உடன் சென்றார் அந்த காவலர்.
ஆண்களும், பெண்களுமாய் அந்த ஊர் மக்களில் முக்கால்வாசிப் பேர் அங்கு தான் அமர்ந்திருந்தனர்.
“சார், சாவகாசமாய் தூங்கி எந்திருச்சு வர்ற மாதிரி தெரியுது? நல்லா லம்ப்பா ஒரு அமௌன்ட்டை வாங்கியிருப்பாரு போல. அதான் ஆடி அசஞ்சு வர்றாரு..” என்றான் கூட்டத்தில் ஒருவன்.
அவனைப் பார்த்த குமரன்,
“எப்படி சரியா சொல்லிட்ட..?” என்றான் நக்கலாய்.
“நான் தான் சொன்னேன்ல. இந்த ஆளை நம்பாதிங்கன்னு..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குமரன் அறைந்த அறையில், அவன் காதில்,’ங்ஞொய்’ என்று சத்தம் கேட்டது.
“என்ன சார் பேசிட்டு இருக்கும் போதே அடிக்கிறிங்க..?” என்றான் கன்னத்தில் கை வைத்துக் கொண்டே.
“அடிச்சா, மரியாதை தானா வெளிய வருது பார்த்தியா..?” என்றான் அவன் சட்டைக் காலரை இழுத்துக் கொண்டே.
“உங்க எல்லாருக்கும் நான் சொல்ல வேண்டியதை தெளிவா சொல்லிட்டேன். மறுபடியும் எதையுமே யோசிக்காம நீங்க போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி இப்படி கூட்டத்தை கூட்டுறதால ஒரு பிரயோஜனமும் இல்லை..” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“எப்படி சார்..? புறம்போக்கு இடம் எல்லாத்தையும் வளைச்சுப் போட்டு, சோலார் பேணல் போட்டா, எங்க ஆடு, மாடு விளைச்சல் நிலம் எல்லாம் பாதிக்காதா..?உங்க எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு தான் இந்த வேலையெல்லாம் நடக்குது. இது எங்களுக்கு தெரியாம இல்லை..” என்றனர்.
“அந்த இடத்துல சோலார் பேணல் போடுறதுக்கு அவங்க கிட்ட முறைப்படி கோர்ட் ஆர்டர் இருக்கு. நீங்க அதைத் தடுக்கணும்ன்னா, நீங்களும் முறைப்படி கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு வாங்க. நாங்க உங்களுக்கும் சப்போர்ட் பண்றோம். அதை விட்டுட்டு, இப்படி மறியல் பண்றேன்,போராட்டம் நடத்துறேன்னு சொன்னா, எத்தனை பேரா இருந்தாலும் அப்படியே தூக்கி எப்ஐ.ஆர் போட வேண்டி வரும்..” என்றான் குமரன்.
“என்ன சார் மிரட்டுறிங்களா..? அவங்களுக்கு துணை போறதே உங்க டிப்பார்மென்ட் தான். புறம் போக்கு நிலத்தை அவங்க பேருக்கு பட்டா எப்படி மாத்தியிருக்க முடியும்? உங்க துணையில்லாம நடந்திருக்க வாய்ப்பேயில்லை..” என்றனர்.
“இதென்னய்யா வம்பா போச்சு..! உங்க ஊருக்கு தண்ணீர் வரலைன்னா போலீஸ் தான் காரணம், உங்க ஊருக்கு ரோடு போடலைன்னா போலீஸ் தான் காரணம்.. போற போக்கை பார்த்தா மழை வரலைன்னா கூட அதுக்கும் நாங்க தான் காரணம்ன்னு சொல்லுவிங்க போல..” என்றான் குமரன்.
“என்ன சார் கிண்டலா..?” என்றான் கூட்டத்தில் ஒருவன்.
“இப்பத்தான் தெரியுதா..? புறம்போக்கு நிலம் சம்பந்தப்பட்டது எல்லாமே ரெவன்யூ டிபார்ட்மென்ட். நீங்க போய் ஞாயம் கேட்க வேண்டியது ஆர்.டி.ஓ, தாசில்தாரை. அதை விட்டுட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்தா நாங்க என்ன பண்ண முடியும். பிரச்சனை வந்தா தூக்கி உள்ள வைப்போம். பாதுகாப்பு கேட்டு வந்தா பாதுகாப்பு கொடுப்போம். சட்டம் ஒழுங்கை தான் நாங்க பார்க்க முடியும்..” என்றான் குமரன்.
“அவங்க வேலை பார்க்குறதுக்கு நீங்க தான சார் பாதுகாப்பு கொடுக்குறிங்க? அதுக்கு நீங்க பொறுப்பில்லையா..?” என்றனர்.
“கண்டிப்பா நாங்க பொறுப்பில்லை. அவங்ககிட்ட கோர்ட் ஆர்டர் இருக்கு. நாங்க பாதுகாப்பு கொடுக்குறோம். நீங்களும் போய் ஸ்டே ஆர்டர் வாங்கிட்டு வாங்க, உங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்குறோம். இந்த விஷயத்துல எங்களால இதை மட்டும் தான் பண்ண முடியும். நீங்க உங்க கோரிக்கையை இங்க வைக்க கூடாது. நீங்க போக வேண்டிய இடம் தாசில்தார் ஆபீஸ்..” என்றான் முடிவாய்.
“நாம எங்கயும் போக வேண்டாம். ரோட்டை மறிச்சு உட்கார்ந்தா, கலெக்டர் ஆபீசே இங்க வரும்..” என்றான் கூட்டத்தில் இருந்த வில்லங்கமான ஆள் ஒருவன்.
குமரன் ஏதோ கோபமாக பேசப் போக,
“சார் ஒரு நிமிஷம் சார்” என்றார் ஒரு காவலர். யோசனையுடன் உள்ளே சென்றான் குமரன்.
“என்னன்னு சொல்லுங்க..?” என்றான்.
“சார் எனக்கென்னமோ இதுல தாசில்தார்க்கும் பங்கு இருக்குமோன்னு தோணுது சார். அவங்க கையெழுத்து இல்லாம எப்படி சார் பட்டாவை மாத்த முடியும்..?” என்றார்.
“எது எப்படியோ அவங்ககிட்ட எல்லாமே சரியா இருக்கு. இரண்டு கை மாறி மூணாவதா தான் இவங்க கைக்கு வந்திருக்கு. எதையும் முழுசா தெரியாம பேசக் கூடாது ஏட்டையா..?” என்றான் குமரன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனுக்கு அழைப்பு வர, பேசிவிட்டு வைத்தவனின் முகம் எரிச்சலில் காணப்பட்டது.
“என்னாச்சு சார்..?”
“ம்ம்..! தாசில்தார்க்கும் நாம பாதுகாப்பு கொடுக்கணுமாம். அவங்களுக்கும் கொலை மிரட்டல் வந்திருக்காம்..” என்றான் கடுப்புடன்.
“சார் பேசாம நீங்களே தாசில்தார்கிட்ட பேசுங்க சார். இந்த பிரச்னைக்கு தீர்வு அவங்ககிட்ட தான் இருக்கு. இல்லைன்னா, அவங்க இங்க வந்து பேச்சு வார்த்தை நடத்தனும்..” என்று அந்த காவலர் சொல்ல,
“இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த தாசில்தார் வராங்களாம். பார்ப்போம் என்ன பேசி முடிப்பாங்கன்னு. இந்த லேண்ட் இஷ்யூஸ் வந்தாலே தலைவலியா இருக்கு..” என்ற குமரனுக்குள் அப்படி ஒரு சலிப்பு.
குமரனுக்கு அவன் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது. எரிச்சலுடன் போனை எடுத்தவன்,
“வரும் போது வருவேன். இப்போ போனை வைங்க” என்றவன், அவர் பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்து இறங்கினாள் தீராநதி. இளம் தளிர் பச்சை நிறத்தில் அவள் கட்டியிருந்த கட்டன் புடவை, அவ்வளவு சோர்விலும் அவளை கம்பீரமாய் காட்டியது.
அவளைப் பார்த்த கூட்டத்தினர் சலசலக்க, அவளைப் பின்தொடர்ந்து ஆர்.டி.ஓவும் வந்து சேர்ந்தார்.
“சார் மொத்த ரெவன்யு டிபார்ட்மென்ட்டும் வந்துட்டாங்க சார்..” என்றார் அந்த கான்ஸ்டபிள்.
“வரட்டும்…” என்று சாவகாசமாய் சொன்னவன், கையில் இருந்த கோப்பில் கவனமாயிருந்தான்.
“இன்ஸ்பெக்டர் எங்க..?” என்று உதவியாளரிடம் கேட்டபடி உள்ளே வந்தாள் தீராநதி.
“இன்ஸ்பெக்டர் குமரன் உள்ள தான் மேம் இருக்காரு..” என்றார் அவர். வேகமாய் நடந்து கொண்டிருந்த அவளின் கால்கள் சற்று தள்ளாட்டம் கண்டதோ?
“என்னாச்சு மேம்..?” என்றார் அந்த உதவியாளர்.
“ஒண்ணுமில்லை..” என்றவள் எதையும் முகத்தில் காட்டாமல் சென்றாள்.
“சார், தாசில்தார் மேடம் வந்துட்டாங்க..!” என்றவுடன் சட்டென்று நிமிர்ந்தான். எதிரில் அவன் சற்றும் எதிர்பார்க்காத தீராநதியைப் பார்த்தவனின் முகம் சற்று இறுகி மீண்டதோ?
“ஹலோ இன்ஸ்பெக்டர்..” என்றாள் நதி.
“வாங்க மேடம்..! உட்காருங்க” என்றான் குமரன்.
“வெளிய அவங்களோட கோரிக்கை என்னன்னு சொன்னாங்களா..?” என்றாள்.
“எங்ககிட்ட எப்படி மேடம் சொல்லுவாங்க. சம்பந்தப்பட்டவங்ககிட்ட தான சொல்லுவாங்க. நாங்க வெறும் சட்டம் ஒழுங்கு மட்டும் தான் மேடம்..” என்றான். அந்த மேடம் என்ற வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் இருந்ததைப் போல் உணர்ந்தாள் நதி.
“சட்டம் ஒழுங்கை பாதுகாக்குறது தான் உங்க டியூட்டி சார். ஐ மீன், எந்த அசம்பாவிதமும் நடக்காம முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டியது உங்க பொறுப்பு..” என்றாள்.
“அது எங்களுக்கும் தெரியும் மேடம். நீங்களும் கொஞ்சம் சரியா இருந்தா நல்லா இருக்கும். உங்க உதவி இல்லாம இவ்வளவும் நடந்திருக்க வாய்ப்பில்லை..” என்றான் குமரன்.
“சாரி மிஸ்டர் குமரன். நான் இங்க மாற்றலாகி வந்து ஒரு வாரம் தான் ஆகுது. இந்த இஷ்யூ ஒரு வருஷமா நடக்குது. இதுக்கு முன்னாடி இருந்த தாசில்தார் டிரான்ஸ்பர்க்கு கூட இது தான் காரணமுன்னு நினைக்கிறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் நான் நேர்மையா தான் இருக்கேன். இனியும் அப்படித்தான்..” என்றாள் பட்டென்று.
“நேர்மையான ஆபீசர்ஸ் எல்லா டிப்பார்ட்மென்ட்லயும் இருக்காங்க மேடம். ஆனா வெளிய தான் தெரிய மாட்டாங்க..” என்றான் குமரன்.
அருகில் இருந்த உதவியாளரிடம் திரும்பிய நதி,
“எல்லாரையும் ஒரே இடத்துல ஆர்கனைஸ் பண்ணுங்க. இங்க ஏதாவது கல்யாண மகால் இருந்தா இன்னமும் பெட்டர். அவங்க சார்பா அவங்க கோரிக்கைகளை சொல்றதுக்கு முக்கியஸ்தர்களை வர சொல்லுங்க. அந்த ஊரோட வி.ஏ.ஓ, ஊர் தலைவர், கவுன்சிலர் இப்படி யாருமே மிஸ்ஸாகக் கூடாது..” என்றாள் உத்தரவாய்.
“ஓகே மேடம்..!” என்றவர் உடனே அந்த பணிகளில் ஈடுபட,
“உங்க டிப்பார்ட்மென்ட் ஹையர் ஆபீசர்ஸ் இருந்தாலும் நல்லா இருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்துல சப்-கலெக்டரும் வந்துடுவார்..” என்றாள்.
“எல்லாமே முடிவு பண்ணி தான் வந்திருப்பிங்க போல மேடம்..” என்றான் குமரன்.
“இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு இன்ஸ்பெக்டர்? இது தானே என்னோட டியூட்டி.” என்றாள் புரியாமல்.
“உங்களுக்கு போக போக புரியும் மேடம். இந்த வேகமெல்லாம் இங்க செல்லாது. கொஞ்சம் விவேகமாக இருந்தாத்தான் முடியும்” என்றான்.
“சொல்றதை புரியிற மாதிரி சொல்லுங்க இன்ஸ்பெக்டர்” என்றாள் எரிச்சலுடன்.
“போகப் போகப் புரியும் மேடம்..!” என்றவன்,
“ஏட்டைய்யா, மேடம்க்கு ஒரு காபி சொல்லுங்க..” என்றவன், தன்னுடைய வேலையில் மூழ்கினான். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த நதி அவன் மீதிருந்த பார்வையை விலக்கவேயில்லை. அவள் பார்வை தன் மீது இருப்பது புரிந்தாலும், குமரனும் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
“மேடம் காபி எடுத்துக்கோங்க..” என்று ஒருவர் நீட்ட, அதை வாங்கிப் பருகியவளுக்கு, கொஞ்சம் தேவலையாய் இருந்தது.
“சார் உங்களுக்கு..” என்று நீட்ட,
“எனக்கு காபி பிடிக்காது..” என்றான் குமரன்.
அவன் சொல்லில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று இடறினாலும், அதை அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு போனில் அழைப்பு வர, பேசிக் கொண்டே நகர்ந்து விட்டாள்.
“சார், இந்த மேடம் கொஞ்சம் சரியில்லை சார்..” என்றார் அந்த காவலர்,குமரனிடம்.
“எதை வச்சு சொல்றிங்க?” என்றான் குமரன்.
“உங்களையே வச்சு கண்ணு வாங்காம பார்க்கிறாங்க சார். இவங்க ஏதோ திட்டம் வச்சிருக்காங்க சார்..” என்றார்.