வாணிலா அறையில் இருக்கும் சோபாவில் தலையை குனிந்து அமர்ந்திருந்தான் கோவர்த்தன். அவன் திருமணத்திற்கு போட்டிருந்த கருப்பு நிற கோட்டை கூட இன்னும் கழட்டியிருக்கவில்லை. அங்கிருந்து உண்ணாமல் கூட அவசரமாக கிளம்பி வந்திருந்தான். கன்னத்தில் ஒரு பக்கம் சுட சுட வாங்கிய அடியின் அடையாளம் அப்பட்டமாய் தெரிந்தது. முகம் வெகு தவிப்புடன் இருக்க, கைகளை பிசைந்துக்கொண்டு அமர்திருந்தான்.
அவனுக்கு வெகு அருகில் மூக்கை உறிஞ்சும் சத்தம் நொடிக்கு நொடி கேட்டுக்கொண்டே இருந்தது. அதோடு கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி சூட்கேஸில் ‘டோம்’ டோம்’மென வீசிக்கொண்டிருந்தாள் வாணிலா.
அங்கே அவன் முத்தமிட்டதும் மின்சாரம் தாக்கியதை போல அவள் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது. அவனை பிரயத்தனப்பட்டு தன்னிடம் இருந்து பிரித்தவள் முழு விசைக்கொண்டு ஒரு அறை கொடுத்து, அடுத்த நொடி விடுவிடுவென கிளம்பிவிட்டாள்.
டேக்சி பிடித்து அவள் வீட்டுக்கு வர, காரை எடுத்துக்கொண்டு பின்னாலேயே வந்தான் அவன்.
வீட்டுக்கு வந்தவள் நொடிக்கூட வீணடிக்காமல் பொருட்களை மூட்டை கட்ட ஆரம்பித்துவிட்டாள். அதோடு அழுகை வேறு!!! காரணமே இல்லாமல் அழுகை! தேம்பி தேம்பி அழும் பெண்ணை தவிப்பாய் பார்த்தவன், “நிலா’ம்மா” என்று அருகே வர, “கொன்றுவேன், போய்டு” என்று கத்திவிட்டாள்.
அவள் பின் அவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் அவன் பேசுவதை கொஞ்சமும் செவிமடுக்கவே இல்லை. கேட்டு கேட்டு பார்த்தவன் செய்வதறியாது சோபாவில் சோர்வோடு அமர்ந்துவிட்டான்.
அள்ளி கொட்டிய பொருட்களோடு மூடியை அழுத்தி மூக்கை உறிஞ்சிக்கொண்டே ஜிப்பை போட அவள் திண்டாடிக்கொண்டிருக்க, மீண்டும் ஒரு முயற்சியாய், “நிலா…” என்று ஆரம்பித்தான்.
ஜிப்பை பாதியிலேயே விட்டவள், பால்கனியில் வைத்திருந்த துணி ஸ்டேண்டில் இருந்து காய்ந்த துணிகளை பரபரவென உருவ ஆரம்பித்தாள். கோவர்த்தனால் வெறுமென பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அடித்தாலும் சரி என பின்னே சென்று பால்கனி வாயிலில் வழி மறித்து நின்றுவிட்டான்.
“நிலா… எவ்ளோ சாரி சொல்லிட்டேன், நீ ஏன் இப்படி பிடிவாதமா இருக்க?” என்று கேட்டிட, அவனை இடித்துக்கொண்டு போக பிடிக்காமல் பால்கனி கம்பியை பற்றிக்கொண்டே அவனுக்கு முதுகுக்காட்டி நின்றுவிட்டாள் வாணிலா. கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துக்கொண்டு தான் இருந்தது.
அவள் அமைதியில் தைரியம் கொண்டு அவன் அருகே போக, “கிட்ட வராதே, அப்படியே கீழ குதிச்சுடுவேன்” என்றாள் திரும்பியும் பாராமல். அவனுக்கு நொடியில் கோப நரம்புகள் சீண்டப்பட்டன.
‘ஏன்? நான் அவளை தொட்டால் என்னவாம்? கீழே கூட குதிப்பாள், ஆனால் நான் தொடக்கூடாதா?’ என்று தோன்ற, அந்த நேரம் காதலன் மோட் டியாக்டிவேட் ஆகி, வைத்தியன் மோட் ஆக்டிவேட் ஆகியது.
எத்தனை பிடிவாத பைத்தியங்களை அநாயாசமாக கையாண்டிருப்பான்? அவன் வாங்காத அடியா? அர்ச்சனையா? இவளெல்லாம் அவனுக்கு ஒரு விஷயமே இல்லை.
கெஞ்சிய வரை போதும் என்று மிஞ்ச ஆரம்பித்து விட்டான்.
“இங்க பாரு நிலா” என்று அவன் ஆரம்பித்ததிலேயே அவள் அழுகை டக்கென நின்றுவிட்டது. அவன் குரலும் சத்தமும் இதுவரை அவள் கேட்டேயிராதது. அவள் விசும்பல் நின்றவுடன், அதே குரலில், “நம்ம ஊருல இருந்தப்போ, நம்மகிட்ட யாராது ‘வணக்கம்’ சொன்னா நீ என்ன பண்ணுவ?” என்றான்.
பதில் சொல்லாமல் அவள் பக்கவாட்டாக பார்வை வைக்க, “எனக்கு பதில் சொல்லு… என்னவோ நான் தப்பு பண்ணுன மாறி பீல் ஆகுது” என்று சத்தம் போட, ‘அப்போ நீ செஞ்சது என்ன சரியா?’ என்று மூக்கு விடைத்தது அவளுக்கு. ஆனாலும் அழுத்தமாய் நிற்க, “ஐ நீட் ஆன்சர் வாணிலா” என்றான் கடினமாய்.
அவன் கடின குரலிலும், ‘வாணிலா’ என நீட்டி முழங்கியதிலும் புதிதாய் கண்ணீர் முணுக்கென எட்டிப்பார்த்தது. அதோடே, “வணக்கம் சொல்வேன்” என்றாள் குரல் தேய.
“ஹான்… த சேம் வே… ஒருத்தர் வந்து ‘ஹலோ’ ன்னு கை நீட்டுனா என்ன செய்வ?” என்று கேட்டிட, “நானும் கை குடுப்பேன்!” என்றாள் முனகலாய்.
“வொய்?” அவன் கேட்டதும், “ஏன்னா? மேனர்ஸ்! அவர் குடுக்குறப்போ எப்படி நம்ம குடுக்காம இருக்க முடியும்?” என்று கேட்டவள் தன்னை மீறி அவனை நோக்கி திரும்பி விட்டாள்.
அவன் தடுமாறாமல் அவள் கண்களை சந்தித்து, “ஏன் குடுக்கணும்? அவன் கை நீட்டுனா? நீ போய் தொடுவியா அவனை!” என்று கண்ணை விரித்து அவன் கேட்டவிதம், கை குலுக்குவது கூட தவறோ என தோன்ற வைத்து விட்டது அவளை. எல்லாம் ஒரு நொடி தான். தலையை உலுக்கியவள், “நீ கன்பியூஸ் பண்ற! கை பிடிக்கிறது எல்லாம் தப்பு இல்ல” என்றாள்.
“ஆங்… ஆங்… முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் கையை பிடிக்கிறது தப்பு இல்லன்னு நீ சொல்ற! நல்லா தெரிஞ்ச ஒருத்தருக்கு முத்தம் குடுத்தது தப்பு இல்லன்னு நான் சொல்றேன், சிம்பிள்!” என்றுவிட்டான்.
அவன் வாதத்தில் வார்த்தை இழந்தாள் வஞ்சி.
‘யோசிக்குறா… யோசிக்குறா… கேப் விடாத!’ கோவர்த்தன் மூளை அவனுக்கு அலர்ட் கொடுக்க, “நம்ம ஊருல அத்தனை கலாச்சாரத்தோட கட்டுக்கோப்போட வாழும்போதே, முன்னபின்ன தெரியாதவன் கையை பிடிக்கிறது சகஜனம்ன்னு நினைக்குற உனக்கு, ‘நுடிட்டி இஸ் லீகல்’ன்னு பல மடங்கு அட்வான்ஸ் கல்ச்சர்’ல இருக்க நாட்ல ஒரு முத்தம் தப்பா தெரியுதா?” என்றான். அவளுக்கு என்னவோ பரீட்சை நேரத்தில் படித்த கேள்வியின் விடை பாதியில் மறந்துப்போன உணர்வு.
“ஸீ… கட்டிப்பிடிக்கிறது, முத்தம் குடுக்குறது எல்லாம் அன்போட வெளிப்பாடு. அதைக்கூட புரிஞ்சுக்காம இப்படி அநாகரீகமா நடந்துக்குற?” என்றவன் அத்தோடு விடாமல், “என்னோட ஆசையை நீ நிறைவேத்தனும்ன்னு நினைச்ச உன் மனசு, அன்பு… அது தான் எனக்கு உன்னை கிஸ் பண்ணனும்குற உணர்வை தூண்டுச்சு… அதைத்தாண்டி நீ அழகா இருக்க, வளைவு நெளிவா இருக்க, கிட்ட வந்தாலே கட்டிக்கணும் அப்படி எல்லாம் ஒன்னும் தோனல எனக்கு…” என்றான். அவன் சொல்வதை நிதானமாய் கேட்டாலே ‘இல்லை இல்லை என்றே இருக்கு என்கிறான்’ என்பது புரிந்திருக்கும். அவள் தான் குழப்பத்தில் கலங்கி நிற்கிறாளே!!!
படுபாவி அத்தோடு விட்டானா?!
“மனசை படிச்ச மருத்துவனுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை’ன்னு” என்றுவிட்டு, “இதுக்கு மேலையும் இங்கிருந்து போவன்னா, போய்க்கோ! என் அன்பு ஒரு அனாதை ன்னு நான் முடிவு பண்ணிக்குறேன்” என்றவன் விறுவிறுவென தனது அறைக்குள் நுழைந்துவிட்டான்.
அவளை விட்டு நகர்ந்து வந்ததும் தான் மூச்சை இழுத்து விட்டு தளர்ந்து அமர்ந்தான் அவன். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவிட்டு வந்துவிட்டான். இதையும் மீறி அவள் வெளியேறினால், மிஞ்சல் வேண்டாம், கெஞ்சலுக்கே போவோம் என்ற ‘ப்ளான் பி’ திட்டம் உருவாக, மறுபுறம், ‘ஓவரா பேசிட்டோமோ?’ என்ற ஐயம் வேறு!
அவன் அதே போல எண்ணங்களில் மூழ்கி நேரம் தெரியாமல் அமர்ந்திருக்க, தயங்கி தயங்கி அவன் அறைக்குள் வந்த நிலா பார்த்தததோ அவனது சீரியஸ் முகத்தை தான். கோவமாய் பேசிவிட்டு போனவன் இன்னுமே கோவமாய் தான் இருக்கிறான் போல என்று நினைத்து வெகுவாய் தயங்கினாள்.
அவள் வந்தது கூட தெரியாமல் அவன் இருக்க, “சாரி” என்றாள் மெல்ல. அந்த சத்தத்தில் திடுக்கென திரும்பியவன், உடனே ‘சரி’ என்பதா? இல்லை கொஞ்சம் முரண்டு பிடிப்பதா என்று தெரியாமல் குழம்பி தடுமாற, “நான் இன்னும் இந்த ஊர் கல்ச்சர்’க்கு எல்லாம் செட் ஆகல. எனக்கு கிஸ் குடுத்தது ரொம்ப பெரிய தப்பா தான் தோணுது… இனிமே அப்படி பண்ண வேண்டாம், சரியா?” என்றாள்.
முகம் சுருக்கி முறைத்தவள், “ரொம்ப பண்ணாதீங்க” என்று சொல்ல, “ஒண்ணுமே பண்ணலைங்க” என்றான் அவன். அப்படியே அடுத்தடுத்த நாட்கள் பட்டும் படாமலும் ஓடியது.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா என்பது போல, இருவராலும் மற்றவர் மீது உரிமையை கொட்டாமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் அவர்கள் உறவு இயல்புக்கு மாறியது. வீட்டுக்கு சென்றதும் மோதிரத்தை தருகிறேன் என்றவள் அதை பற்றி அதன்பின் பேசவே இல்லை. அவளே பேசாதபோது அவன் பேசுவானா என்ன? மோதிரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளாத குறையாக பாதுகாத்தான் விரலோடு.
முன்பு போல அவளை தேவையின்றி உரசுவதில்லை அவன். தெரியாமல் கை பட்டால் கூட, நூறு சாரி சொல்லி பத்தடி தள்ளி அவன் போக போக தான், அவனை இழுத்துக்கட்டிக்கொள்ள வேண்டும் என்றே தோன்ற ஆரம்பித்தது அவளுக்கு. ஒருவேளை அதற்காக தான் அப்படி செய்தானோ அந்த வைத்தியன்!?
முன்பு எல்லை மீறிய குறும்பு பேச்சுகளும் பார்வைகளும் இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தன. அவள் தான் உண்மையில் தவித்துப்போனாள். பெண்களுக்கு காதலிப்பதை விட ஃபலர்ட் (flirt) செய்வது தான் அதிகம் பிடிக்கும் என ஆய்வு தகவல் சொல்கிறதாம். அவளும் பெண்தானே!? அவள் மட்டுமென்ன விதிவிலக்கா? அவனது சில்மிஷ பேச்சுக்கள் அவளையும் ஈர்க்கும் தான். சமீபமாய் அதெல்லாம் மிஸ் ஆக, கேட்கவா முடியும்? ஏன் அப்படி பேச மாட்டேன் என்கிறாய் என?
ஆனாலும் அவனை மீறி சில முறை வந்துவிடுவது உண்டு தான்.
“ஹே கோ… உனக்கு என்கிட்டே என்ன ரொம்ப பிடிக்கும்?” அவள் கேட்டபோது, “எதை கேக்குற?” என்றான்.
“ம்ம்ம்… என் பீச்சர்ஸ் (features)”
“அதுவா?”
“ம்ம்ம் சொல்லு… உனக்கு எது ரொம்ப பிடிச்சுருக்கு?” முகத்தை அங்கும் இங்கும் சாய்த்து சீராக்கி, அவன் பதிலுக்காக அவள் காத்திருக்க,
“கருப்பு புள்ளி வச்ச ரெண்டு பால்…” அவன் சொன்னதும், அவள் கண்கள் மும்மடங்காய் விரிந்து தன் அதிர்ச்சியை அப்பட்டமாய் காட்ட,
“இதோ… எப்படி விரியுது பாரு! ஐ லவ் யுவர் ஐஸ்!” என்றான் ரசனையாய்.
விரிந்த கண்கள் சட்டென சுருங்க, ‘உப்ப்’ என மூச்சுவிட்டவள், “கண்ணையா சொன்ன?” என்று சந்தேகமாய் கேட்க, “ஆமா, நீ வேற என்ன நினைச்ச?” என்றான், சிரிப்பை விழுங்கி.
“ஒன்னும் இல்ல” என்றவள் எழுந்து ஓடியே விட்டாள். சத்தமின்றி குலுங்கி சிரித்தான் அவன்.
இப்படியாக அவர்கள் நாட்கள் சுவாரஸ்யமாய் ஓட, வாணிலாவுக்கு தெரியாமல் அவள் அப்பா கோவர்த்தனிடம் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருந்தார். அவளிடம் இதை சொல்லலாம் என நினைக்கும்போதெல்லாம் அந்த பேச்சை அவள் வளரவே விட மாட்டாள்.
அவளுக்கு பிடித்தம் இல்லை என்று தெரிந்தும், பேசி சண்டையிட அவனுக்கு தைரியம் இல்லை.
அதுபோல ஒருநாள், வாணிலா அறையில் இருந்தநேரம் அவள் தந்தை அழைத்திருந்தார். வெகு நாட்கள் ஆகிப்போனதால் அவள் மனம் கேட்காமல் அழைப்பை எடுக்க, “எப்படி கண்ணு இருக்க?” என்றார் அவள் அப்பா நைந்த குரலில்.
“இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” அவள் குரல் உணர்வின்றி வந்தது.
“மருந்து என்னம்மா மருந்து? உன் முகத்தை பார்த்துட்டா போதும். அப்பாக்கு தெம்பு வந்துடும்” அவர் கெஞ்சலாய் சொல்ல, “வரது கஷ்டம், இப்போதானே இங்க வந்துருக்கேன்” தன்மையாய் மறுத்தாள்.
“அப்பாக்காக ஒருக்க வாயேன் கண்ணு” அவர் கெஞ்சல் கூட, இவளுக்கு மறுக்கவே சங்கடமாய் இருந்தது. ஆனாலும் போக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. மீண்டும் அவள் திடமாய் மறுக்க, அங்கே ஃபோன் நொடியில் கரம் மாறியது.
“பெத்தவன் இத்தனை கெஞ்சுறாறே… மனசு கரையுதா உனக்கு? இங்க வந்தா தான் என்னவான்டி உனக்கு?” காஞ்சனா பொரிய ஆரம்பித்தார். அப்படியே வைத்துவிடலாம் என்று தான் தோன்றியது அவளுக்கு.
“உன் அக்கா புருஷனுக்கு இப்போ வேறொரு இடத்துல ஜம்முன்னு கல்யாணம் முடிஞ்சு போச்சு தெரியுமா உனக்கு?” அவர் சொல்ல, இங்கே வாணிலாவின் ரத்தம் அழுத்தம் ஏற ஆரம்பித்தது.
“ஒழுங்கா பெட்டி படுக்கையை கட்டிட்டு இங்க வந்து சேரு” என்று கண்டிப்பாக சொன்னார் காஞ்சனா. பக்கத்தில், ‘மிரட்டாம பேசு காஞ்சனா’ என ஜெயமோகன் சொல்வதும் இவளுக்கு கேட்டது.
“என்னால வர முடியாது” திடமாக சொன்னாள் அவள்.
“எங்களால நேர்ல வர முடியாதுங்குற திமிர்ல தானே பேசுற நீ? முடியாம கிடக்குற அப்பனை பாக்க கூட வராம அங்க என்னடி செய்ற?”
“நான் என்ன செஞ்சா உங்களுக்கு என்ன?” திடமாக பேச நினைத்தாலும் குரல் கமறியது அவளுக்கு.
“கண்டிக்க ஆள் இல்லன்னு நீ ஆடுற ஆட்டம் தெரியாதுன்னு நினைச்சியா? எவனோ ஒருத்தனோட கூத்தடிச்சுட்டு இருக்க! ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னை அவன் துண்டு துண்டா வெட்டி குப்பைல வீசப்போறான்… பாத்துட்டே இரு” காஞ்சனா கத்த,
“வாயை மூடுங்க, சும்மா உளறாதீங்க” என்றாள் வாணிலா.
“என்ன உளருறேன்? நீ அங்க ஒரு ஆம்பளையோட தானே தங்கிருக்க? என்ன தெரியாதுன்னு நினைச்சியா? இப்படி தான் உன்னை வளர்த்ததா நாங்க?”
பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அவள். அந்த இடைவெளியில், “பொய் சொல்லி சமாளிக்கலாம்ன்னு நினைக்காத… அந்த பையன் கூட உங்க அப்பா தினம் பேசிக்கிட்டு தான் இருக்காரு… உன்னை பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியும்” அவர் சொல்ல, “இங்க குடு நீ!” என ஃபோனை வாங்கிவிட்டார் ஜெயமோகன்.
வாணிலா திக்பிரம்மை பிடித்ததை போல நின்றாள்.
அதற்குள், “அம்மாடி, உன்னை காணாத துக்கத்துல கோவமா பேசுறாம்மா இவ… நீ இதெல்லாம் மனசுல வச்சுக்காத… என்ன? வச்சுடுறேன்டா” என்றவர் போய்விட்டார். அவள் தான் அதை கூட உணராமல் அப்படியே நின்றிருந்தாள்.
அவள் அறைக்குள் வேகமாய் வந்த கோவர்த்தன், “சுட சுட பூரி ரெடி!” என்று சொல்ல, அவனை வெறும்பார்வை பார்த்தவள், “என் அப்பா கூட டெய்லி பேசுறியா கோ?” என்றாள். இப்போது கண்ணை விரித்து திணறி நிற்பது அவன் முறை.
அவன் பார்வையிலேயே உண்மை தெரிந்தாலும், “சொல்லு” என்றாள் வாணிலா.
“அது…. ஆமா!!!” அவன் மெல்லமாய் சொல்ல, “ஏமாத்திட்டீல?” என்றாள் குரல் உடைய!
கண்கள் கலங்கி, குரல் கமறி அவள் கேட்ட வார்த்தைக்கு பிறகு… இதற்கு அவள் நான்கு அறை கூட விட்டிருக்கலாம் என்று எண்ண வைத்தது அவனை.