வாணிலாவுக்கு பக்கென்று ஆனது. அதோடு விட்டாளா அவள்? அவன் இடது கன்னத்தில் பஜக்கென்று ஒன்று வைத்து ஏதோ சொல்ல, இரு கைகளிலும் ஏந்தியிருந்த தட்டுகளை சற்று தள்ளிப்பிடித்து பேலன்ஸ் செய்தவாறே இவனும் ஏதோ கொஞ்சிகொண்டிருந்தான். அப்படி தான் அவள் கண்களுக்கு தெரிந்தது.
அடுத்த இரு நிமிடங்களில் அவள் அருகே வந்தவன் ஒரு தட்டை கொடுத்துவிட்டு உள்ளுக்குள் வந்து அமர, அவள் உம்மென்று அமர்ந்திருந்தாள். புட் ஸ்டிக் குத்தி வைத்திருந்த ‘பின்சொஸ் டி டோர்டிலா’ ஒன்றை எடுத்து வாயில் வைத்தவன், “ம்ம்ம்… யம்மி!” என்று அவளை பார்க்க, அவள் உணவை சீண்டக்கூட இல்லை.
“சாப்பிடுங்க நிலா…!” அவன் சொல்லியும் அவள் அப்படியே இருக்க, “இது பிடிக்காதா உங்களுக்கு?” என்றான் சந்தேகமாய்.
அவனை ஒரு பார்வை பார்த்தவள், “இப்டி தான் பப்ளிக்’ல கொஞ்சிக்குவீங்களா?” என்றாள் கடுப்பாய்.
“கொஞ்சுனேனா? நானா?”
“நடிக்காதீங்க டாக்டரே! இப்போ வந்தாலே ஒருத்தி… யார் அவ? அவ ஆளும் ட்ரெஸ்ஸும்! எல்லாமே தெரியுற மாறி ஒரு ட்ரெஸ்ஸு… இதுக்கு எதுக்கு அதை போடணும்?” முகத்தை சுளித்துக்கொண்டு சொன்னாள்.
“ஓ… லூசியா’வா? அவங்க என்னோட எக்ஸ் பேஷன்ட்! ரொம்ப நாளுக்கு அப்புறம் பாத்தோம்… இப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கேன்னு சொன்னாங்க. எனக்கு தேங்க்ஸ் சொன்னாங்க! நானும் அவங்க ஹெபினஸ்’ஸ ஷேர் பண்ணிக்கிட்டேன்!” சொல்லிவிட்டு இன்னொரு துண்டை அவன் சுவைக்க,
“பேஷன்ட்’ன்னா? டாக்டரை இப்படி தான் கட்டிப்புடிச்சு முத்தம் குடுப்பாங்களா என்ன?” அப்போதும் அவள் கன்வின்ஸ் ஆகவில்லை.
“நீங்க வெளிநாடு வந்து ஆறு மாசம் தானே ஆச்சு… போக போக பழகிடும்” சிரித்துக்கொண்டே சொன்னான்.
“வாய்ப்பே இல்ல” உறுதியாய் மறுத்தவள் உண்ண ஆரம்பிக்க, “நீங்கக்கூட என் பேஷன்ட் தானே?” என்று குறும்பாய் கேட்டான் அவன். எதற்காக கேட்கிறான் என உடனே புரிய, ஒன்றுமே சொல்லாமல் முறைத்தாள். அவளை பார்க்காமலேயே முறைக்கிறாள் என்று புரிய, சிரித்துக்கொண்டு ‘சாரி’ என்றான்.
“இன்னைக்கு நீங்க சரியே இல்ல…!” அவள் சொல்ல அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
அந்த வார இறுதி இப்படிப்போக அடுத்த வார இறுதிக்கு வாணிலாவை தன் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தான் கோவர்த்தன். அத்தனை சீக்கிரம் அவள் தலையாட்டிவிடவில்லை. வெகுவாக தயங்கினாள்.
அதோடு, “அன்னைக்கு சொன்னீங்க தானே? வயது பொண்ணு வீட்டுக்கு வயசு பையன் வரக்கூடாதுன்னு… இப்போ எதுக்கு என்னை கூப்புடுறீங்க?” என்று!
அவன் லாஜிக்கை கண்டு வியந்தவள், சம்மதம் சொல்ல யோசிக்க, “ரொம்ப யோசிக்காதீங்க… அங்க நான் மட்டும் இல்ல… என் வீடுல பேயிங் கெஸ்ட் எல்லாம் இருக்காங்க. ஸோ ப்ரீ’யா வாங்க” என்று அழைக்க, அதன்பிறகு அவள் தயங்கவில்லை.
சனிக்கிழமை இரவு உணவு வேளையில், அவன் வீட்டு வாசலில் சென்று நின்றாள்.
கதவை திறந்தவன் பளிசென்ற புன்னகையுடன் வரவேற்றான்.
“அட்ரெஸ் கரெக்ட்டா காட்டுச்சா?”
“எஸ்!” என்றவள் அவன் பெரிய வீட்டை தான் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு பெரிய குடும்பமே தாராளமாய் தங்கும் அளவுக்கு மிகப்பெரிய வீடு.
“ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்… டின்னர் ரெடி ஆகிடும்” என்றவன் கிச்சனுக்குள் சென்றுவிட்டான். பாதி வேலையில் வந்திருப்பான் போல, அவசரமாய் ஓடினான். அந்த ஆளை முழுங்கும் சோபாவில் அசௌகர்யமாய் அமர்ந்திருந்தவள் கண்கள் வீட்டை தான் சுற்றியது.
கோவர்த்தனை தனியே பார்த்தவரை அவன் இத்தனை வசதியானவன் என்று தெரியவில்லை. இப்போது வீட்டை பார்க்கையில் அவன் நிதிநிலைமை புரிய, சற்றே ஒதுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது அவளிடம்.
வீட்டில், கண்படும் பெரிய சுவர் ஒன்றில் ஒரு பெரிய புகைப்பட சட்டம். அன்று மருத்துவமனையில் வைத்து அவளிடம் காட்டிய அவனுடைய குடும்ப புகைப்படம் தான் அது. அமர்ந்த இடத்தில் இருந்தே பார்வையிட்டாள்.
கிச்சனின் தானியங்கி கண்ணாடி கதவுகள் திறக்க, அதிலிருந்து வெளியே சிரித்தபடி வந்த கோவர்த்தன், “சாப்பிடலாமா?” என்று கேட்க, ‘ம்ம்ம்!’ என்றாள்.
வெள்ளை நிறத்தில் பைஜாமா போன்ற பருத்தி உடை அவனை அந்த வீட்டில் பளபளப்பாய் காட்டியது. நேரே டைனிங் ஏரியாவுக்கு அழைத்து சென்றவன், “எனக்கு எப்பவும் பால்கனில தரையில உட்காந்து சாப்பிட தான் பிடிக்கும். இன்னைக்கு தான் டைனிங் டேபிள்” என்றதும், “அங்கேயே சாப்பிடலாமா?” என்றாள் அவள்.
கொஞ்சம் இந்த வசதிகளை விட்டு தள்ளி நின்றால் சகஜமாய் இருக்க முடியுமே என்ற எண்ணம்!
“ஆர் யூ ஸுர்?” என்றவன், உடனே உணவு பாத்திரங்களை பால்கனியில் கொண்டு சென்று அடுக்கினான். வாணிலாவும் அவனுக்கு உதவ, அவன் கைவண்ணத்தில் உருவான சுவையான உணவு அவள் தொண்டைக்குழியில் இறங்கியது.
“எப்படி இருக்கு?” ஆவலாய் கேட்டான்.
“நல்லா இருக்கு” என்றவள், “நீங்க நல்லா சமைப்பீங்கன்னு ஏற்கனவே எனக்கு தெரியும்” என்றாள்.
“இஸ் இட்? எப்படி?”
“உங்க அம்மா சொன்னாங்க!” என்று சிரித்தவள், அன்று அவன் அம்மா சொன்னதை அப்படியே சொன்னாள்.
சங்கடமாய் சிரித்தான் அவன்.
“பேயிங் கெஸ்ட் இருக்காங்கன்னு சொன்னீங்க? யாரையும் காணோம்?” அவள் கேட்க, “இப்போ ஒருத்தர் தான் இருக்காரு. வெளில போயிருக்கார். மீதி மூணு பேரு பொண்ணுங்க. வெகேஷன்க்கு போயிருக்காங்க” என்றதும், “பொண்ணுங்களா?” என்று வாயை பிளந்தாள் அவள்.
“இயா!” இலகுவாய் சொன்னவன், அவள் தட்டில் குறைந்ததை பார்த்து மீண்டும் வைக்க, “பொண்ணுங்க கூட இருக்கீங்களா?” என்றாள் அதிர்ந்த பார்வையுடன்.
“ஹலோ? எல்லாருக்கும் தனி தனி ரூம் இருக்கு… நம்ம ஊருல லைன் வீடு பார்த்துருக்கீங்கள்ள? அது மாறி தான் இதுவும்!”
“இருந்தாலும்….” என்றவளுக்கு மூன்று பெண்களுக்கு மத்தியில் அவன் இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.
“நீங்க இருக்க வீடுக்கு எவ்ளோ ரெண்ட்?” அவன் கேட்க, அவள் சொன்ன தொகையை கேட்டு உண்மையாகவே அதிர்ந்தான் அவன்.
“நீங்க என்ன லூசா? ஒரு ஆளுக்கு இவ்ளோ வாடகை குடுத்து தங்குவாங்களா?”
“எனக்கு இங்க வந்தப்போ யாரோடவும் பழக இஷ்டம் இல்ல. தனியா வீடு பாத்தேன். பெசிலிட்டி அண்ட் சேப்டி எல்லாம் இருக்க மாறி தேடுனதுல இதான் கிடைச்சுது”
அவனுக்கும் அவளது நிலை தெரியும் தானே… அதனால் அதிகம் அதை பேசாமல், “இப்போ நார்மல் தானே? நீங்களும் பேயிங் கெஸ்ட்டா போய்க்கலாமே? நிறைய மிச்சமாகும்” என்றான்.
அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “உங்களுக்கு ஓகே’ன்னா இங்க கூட ஒரு ரூம் ப்ரீ’யா இருக்கு. கம்மி ரெண்ட் தான். நீங்க என் பிரன்ட்’ங்குறதால மூணு வேளைக்கும் சுவையான தமிழ் புட் ப்ரீ… எப்படி என்னோட ஆஃபர்?” என்றான். அவன் இதையெல்லாம் பேச வேண்டும் என முன்கூட்டியே நினைத்திருக்கவில்லை. பேச்சுவாக்கில் வந்துவிட்டது. ஆனாலும் இப்போது அவள் வந்துவிட்டால் போதுமே என்ற ஆவல்.
அவன் திடுமென இப்படி வீட்டுக்கே அழைக்க, ‘இங்கேயா? இவனோடவேவா?’ என்று திகைத்துத்தான் போனாள்.
“அதெல்லாம்….” அவள் மறுக்க ஆரம்பிக்கும்போதே, “நோ நோ நோ… உடனே ஒன்னும் சொல்ல வேணாம். யோசிச்சு சொல்லுங்க” என்று நிறுத்திவிட்டான்.
பதிலே சொல்லாமல் இருந்தால் கூட தேவலாம். மறுத்துவிட்ட பின் திரும்ப சம்மதிக்க வைப்பது கடினம் என்று தான் தோன்றியது.
பேச்சை மாற்ற வேண்டி, “எப்பவும் இங்க தனியா உட்காந்து வானத்துல இருக்க நிலாவை பார்த்துட்டே சாப்புடுவேன். இன்னைக்கு ‘வாணிலா’ கூடவே சாப்புடுறேன்” என்று மந்தகாசமாய் அவன் சிரிக்க, அவன் பேச்சில் லஜ்ஜையுற்றவள், “ப்ச்…. கோ!!!!” என்று மிரட்டலாய் சிணுங்கினாள்.
அவள் பாவனைகளை, அவள் மறைக்க முற்படும் வெட்கத்தை ரகசியமாய் ரசித்தவனோ,
“நீங்க என்னை ‘கோ’ன்னு சொன்னாலும், நான் உங்களை ‘வான்’னு தான் சொல்லுவேன்!” என்றான் ஆசையாய்.
அவன் கண்கள், ‘வந்துவிடேன்’ என்று ரகசிய தூது விட்டது!!!