பவித்ரா அவ்வீட்டின் வெளியே இருந்த பெயர் பலகையில் கைவைத்து, ‘எ லவ் வீடு’ என வாசித்தபோது, வித்தகன் அந்த வீட்டை தன் கண்களால் அளவெடுக்க ஆரம்பித்திருந்தான்.
“உள்ள போலாமா? இல்ல யாரும் இருப்பாங்களா?” என்ற பவித்ராவின் குரலில் திரும்பியவன், “தெரியல” என்றான் மொட்டையாய்.
அவளும் அதற்குமேல் அவனை துருவவில்லை. இந்த காட்டுக்குள் வீடிருப்பதே அரிது! அதிலும் இப்படியொரு அழகியலில் அமைந்த வீடென்றால்…? அந்த ஆச்சர்யம் அவளுக்குள்ளும் இருந்தது.
வரவேற்ப்பாய் இருபுறமும் இருந்த தோட்டத்தை கடந்து மூன்று படிகள் ஏறி வாசலை அடைந்து அந்த நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கதவின் மேலே வித்தகன் கை வைத்தபோது, உள்ளிருந்து யாரோ அதை இழுத்ததை போல ஒரு நொடி சடாரென குலுங்கி நின்றது. திடீரென அது ஏற்ப்படுத்திய அதிர்வில் பவித்ரா பயந்தவளாய் வித்தகனை நெருங்கிக்கொள்ள, வெளியே காட்டாத பயத்துடன், “ஒன்னும் இல்ல!” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
‘இந்த வீட்டுக்குள் போக தான் வேண்டுமா? இல்லை இப்படியே சிறுது நேரம் கடத்திவிட்டு பொழுது புலர்ந்ததும் சென்றுவிடலாமா? என்ற எண்ணம் அவனுக்கு உதயமாக, அவன் வந்தபோதே மணி மூன்று என்று தெரிந்தவனுக்கு எப்படியும் இப்போது ஐந்தை கடந்திருக்கும் என்றே தோன்றியது. ஆனாலும் சூரிய கதிர்கள் எட்டிப்பார்த்ததற்க்கான அறிகுறிகளே அங்கில்லை.
அவன் அதை ஆராய்ந்துக்கொண்டிருக்கும்போதே பவித்ராவின் கரங்கள் அந்த கதவுகளின் மீதிருந்த வேலைப்பாடுகள் மீது படிய, அவளது மெல்லிய தொடுகைக்கே அந்த கனமான கதவுகள் விலகிக்கொண்டன. அவள் அதை ஆச்சர்யமாய் பார்க்க, வித்தகனுக்கு ‘திக் திக்’ என்றானது.
“நான் ஒண்ணுமே பண்ணல… அதுவே ஓபன் ஆகிடுச்சு!” என்றாள் ஆச்சர்யத்துடன்.
பாதியளவு திறந்திருந்த கதவுகள் என்னை மேலும் திற’ என்று உத்தரவிடுவதை போல இருந்தது அவனுக்கு. எதுவுமே தெரியாமல் இதற்குள் நுழைவது என்பது வேறு! ‘இதை’ பற்றிய செவிவழி செய்திகள் தெரிந்து அதை ஆராயவும் உறுதிப்படுத்தவும் வந்தவனுக்கு இப்போது இதற்குள் பிரவேசிப்பது கொடும் கனவாக தோன்றியது.
யோசனை எல்லாம் அவனுக்கு தானே!? அவளுக்கு இல்லையே! இருப்பக்க கதவுகளையும் வெகு பிரயத்தனப்பட்டு தம்க்கட்டி அகல திறந்து உள்ளே நுழைந்திருந்தாள் பவித்ரா.
இவனுக்கு அவள் பின்னே நுழைவது தான் இருக்கும் ஒரே வழி! சுற்றிலும் பார்த்தான். அதே காடு! அதே இருட்டு! சலனமற்ற சூழ்நிலை.
அரைத்து அப்பிய அஞ்சனத்தின் நடுவே தெளித்த சுண்ணாம்பு கீற்றென இவ்வீடு!
ஒருநிலையாய் மனதை தேற்றி வீட்டுக்குள் நுழைந்தான்.
“வீட்ல யாராவது இருக்கீங்களா? ஹலோ….?” பவித்ரா நாலாபுறமும் குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
உள்ளே வந்தவன் தோளில் சுமந்து வந்த பையை கீழே இறக்கினான். நிமிர்ந்து வீட்டை ஒருமுறை பார்க்க ஆரம்பித்தான். அந்தகால அரண்மனை போன்ற அமைப்பு! ஆனால் சிறிய அளவில்.
வீட்டின் தரையில் இருந்து தாழ்வாரம் வரை, சுவரில் இருந்து தூண் வரை அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடுகளில், நின்று கவனிக்கும் கலைவனப்பில் இருந்தது. மாசுமருவற்று இந்த வீட்டை பராமரிக்க வேண்டுமென்றால் இதற்கென ஊழியர்கள் இங்கே இருந்து தானே ஆக வேண்டும்?!
மணியை அறிந்துக்கொள்ள மொபைலை இயக்கினான். நேரத்தை பார்த்த அவன் கண்கள் இயல்பை விட மும்மடங்காய் விரிந்தது.
ஏனெனில், நேரத்தை ‘மூன்று மணி’ என்று காட்டியது அவன் அலைபேசி.
கடிகாரமாய் இருந்தாலும் வேலை செய்யவில்லை போல என்றெண்ணி மனதை தேற்றலாம். ஆனால் இதுதான் அலைபேசி ஆயிற்றே! மொபைலில் அத்தனையும் சரிவர இயங்கும்போது, கடிகாரம் மட்டும் தன் இயக்கத்தை நிறுத்துமா என்ன?
அப்படியென்றால்…!? நிமிர்ந்து அந்த வீட்டை ஒருமுறை ஆழமாய் பார்த்தான். திடீரென அவ்வீட்டிற்கு குருதி வழியும் கண்களும், கூர்முனை நகங்கள் கொண்ட கைகளும், ஓநாயின் வெறிக்கொண்ட பற்களும் தோன்றி, அவனை அப்படியே வாரி எடுத்து துண்டு துண்டாய் பிய்த்து போடுவதை போன்றதொரு பிரமை…!
ஆம்… பிரமை! அந்த பிரமைக்கே மூச்சடைத்தது அவனுக்கு.
இன்னும் ஏதேதோ சிந்தனைகள் அவனுக்குள் ஊடுருவ, அந்நேரம் வாசல் கதவுகள் ‘படார்’ என ஒரு நொடியில் சாற்றிக்கொண்டன. தேக்கை விட கனமான அக்கதவுகள் சடாரென சாற்றிக்கொண்டதில் நெஞ்சுக்கூடே ஒரு முறை நின்று துடிப்பதை போல இருந்தது அவனுக்கு. அவனுக்கே அப்படி என்றால், அந்த பெண்?
“நீ எதுக்கு இந்த வந்த?” என்ற ஒரே கேள்வி தான் ஒரே நேரத்தில் இரு தரப்பில் இருந்தும் வில்லென பாய்ந்து வந்தது இவர்களிடம்.
வித்தகனிடம் கோபத்தை எதிர்ப்பார்த்துதான் சம்யுக்தா வந்திருந்தாள். அவனுக்கு இதுபோன்ற அதிகப்பிரசங்கி செயல்கள் எல்லாம் அறவே பிடிக்காது என்று நன்றாய் தெரியும் அவளுக்கு. ஆனாலும் ஏதோ ஒரு உந்துதல்…
அவன் போகும் இடத்திற்கு அவளையும் ‘போ’ போவென்று உந்தித்தள்ளிக்கொண்டிருந்தது. அதன் விளைவாய் அவன் நண்பனிடம் நயமாய் பேசி அவர்கள் போகும் இடத்தின் அடையாளங்களை பெற்றுக்கொண்டு, ‘தனியே அனுப்பவே மாட்டேன்’ என்று பிடிவாதம் செய்த தந்தையை, ‘தாயில்லா பொண்ணு ஆசைப்பட்டு கேட்குறேன்… நான் பாவம் இல்ல’ அது இதென்று ஏதேதோ பேசி கெஞ்சி கொஞ்சி மிஞ்சி தான் பிரம்ம பிரயத்தனத்தில் இங்கே வந்து நிற்கிறாள் அவள்.
ஆனால் எதற்கு? அப்படி எதற்கு இங்கே வர வேண்டும் என்று தோன்றியது என்று கேட்டால் அவளுக்கே அது புரியாத புதிர் தான்!
‘வித்தகனுடன் இருக்க வேண்டும், அவனுடம் நேரம் செலவிட வேண்டும்’ என்பதெல்லாம் எப்போதுமே அவளுக்கு பிடித்த காரியங்கள் ஆயினும், இந்த பத்து நாள் பிரிவை கூட தாங்காமல் இந்த அத்துவான காட்டுக்குள் அவனை தேடி ஓடி வருவது எல்லாம்… “சம்திங் ஸ்ட்ரேன்ஜ்”