“டேய் வைஷு கோவமா பேசுவாங்க ஆனா மனசு நல்ல மனசுடா. இப்டி எல்லாம் யோசிக்காத” கவலையோடு மருமகளிடம் பேசினார்.
“த்தை. அவ சும்மா கிண்டல் பண்ணுறா. இதுக்கு ஏன் இப்டி பயப்புடுறீங்க. கெழவி வாயாலேயே உன்ர அண்ணன் மவ இந்த மருமவளா ஆகிபோட்டுடாத-னு இன்னைக்கு நைட் குள்ள சொல்ல வைக்கிறேன்”
சப்தேமெடுத்து தோழியிடம், “மிஸ்டர் காட்டுப்பூச்சி”
“சொல்லுங்க பாவா..” – ஷெர்லின்
“நம்ம ஆயுதம் எல்லாம் ரெடியா?” – வைஷ்ணவி
“பக்கா பாவா” – ஷெர்லின்
“சூப்பர். பாலோ மீ” படையெடுத்து இருவரும் சேர்மதாயின் அறைக்குள் சென்று கதவை அடைத்து உள்ளே தாங்களும் உள்ளே அடைந்தனர்.
ஆனால் செல்லும் வழியில் கார்த்தியை தாண்டி சென்றவள் மறவாமல் அவனுக்கு மட்டும் தெரியும் வகையில் கண்ணடித்து செல்ல சமையலுக்கு இதயம் பயத்தில் நொடி நின்று வேகத்தை கூட்டியது.
வயதான பெண்மணிக்கு எந்நேரமும் துணையாய் இருக்க அவருக்கென்று அந்த சிறிய அறையில் ஒரு சிறிய தொலைக்காட்சியை சுவற்றில் மாட்டி தனியாக கேபிள் டிவி கனக்சன் ஒன்றையும் வாங்கி அவருக்கு தேவையானவற்றை அந்த அறையிலேயே ஏற்பாடு செய்திருந்தார் சுப்பிரமணி.
வைஷ்ணவி ஷெர்லின் இருவரும் உள்ளே நுழைந்த பொழுது ஏதோ ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருக்க இவர்கள் இருவரையும் கவனித்தும் கவனிக்காமல் இருந்தவர் இரு பக்கமும் தோழிகள் இருவரும் வந்தமர்ந்து நாடகத்தை பார்க்க சிறிது நேரத்தில் அந்த நாடகத்தில் வந்த கதாபாத்திரத்தை பார்த்து வாயை பிளந்த வைஷ்ணவி,
“அப்பப்பா. இப்டி எல்லாமா ஒரு பொண்ணு இருக்கனும்?”
“ஆமா இந்த கூறுகெட்டவ எதுக்கு இப்டி ஊமையா இருந்து கெடக்கணும்?” – சேர்மத்தாய் துணைக்கு ஆள் கிடைக்க பேச துவங்கினார்.
“ஆனாலும் மாமியார் இப்படியா அமைதியா இருக்கனும் மருமகளை தலைக்கு மேல ஆட விட்டு?” வைஷ்ணவி அதிர்ச்சியோடு கன்னத்தில் கை வைத்து தொலைக்காட்சியில் கவனமானாள்.
“ஆடி தீத்திருந்தா கூட தான் விட்டுபோட்ருக்கலாமே. இவ அவுக குடும்பத்தையே ரெண்டாக்கி வீட்டுக்காரரையும்ல தனியா கூட்டிட்டு போய்ட்டா. சண்டாளி” கிழவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது.
“அப்டியா பண்ணினா?”
வைஷ்ணவி இன்னும் ஆச்சிரியமாக பாவனையில் கேட்க, “இதெல்லாம் என்ன சாதாரணம் தான். சிலர் உருட்டி மிரட்டி பையனையே கல்யாணம் பண்ணிக்குறாளுக” ஷெர்லின் கடைக்கண்ணால் தோழியை சாடினாள்.
“இப்போ தான் நியாபகம் வருது. என்னோட ப்ரன்ட் ஒரு பொண்ணு, இந்த ரெண்டு தெரு தள்ளி தான் வீடு”
‘இது யார் எனக்கு தெரியாம?’ ஷெர்லின் வைஷ்ணவியை உன்னிப்பாய் பார்த்தாள்.
“அவளுக்கு ஒரு அண்ணன். இவளை விட அஞ்சு வயசு பெரியவன். சொந்தத்துலையே பொண்ணு பாக்கணும்னு சொல்லி அவங்க அம்மாவோட தம்பி மகளை கல்யாணம் பண்ணி வச்சாங்க பாருங்க…”
‘குமரி ஏதோ பிளான் போட்டுட்டா’ – மனதில் ஷெர்லின் “நாங்க கூட கல்யாணத்துக்கு போனோம். என்ன ஷெரூ?” இவள் முறைத்த குறைப்பில் வைஷ்ணவி கதையை தொடர்ந்தாள்.
“எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்தது. நாள் ஆக ஆக தான் தெரிஞ்சது அந்த பொண்ணோட உண்மையான ரூபமே. சொந்தத்துல பொண்ணு எடுத்தா குடும்பத்தை அலுங்காம பாத்துப்பா-னு நெனச்சங்க. ஆனா வந்த ஒரே மாசத்துல குடும்பத்துல அத்தனை பிரச்சனை, சண்டை. தொட்டா குத்தம், நின்னா குத்தம்-னு சொந்த அத்தைனு கூட பாக்காம ரொம்ப கொடும பண்ணிட்டாங்க” – வைஷ்ணவி
“அடி ஆத்தி… மருமக மாமியாரை நச்சரிக்கிறாளா?” தாடையில் கை வைத்து அதிர்ச்சியோடு கேட்டார் சேர்மத்தாய்.
‘ம்ம்ஹ்ம். அவளே ஒரு ஊர் புளுகுணி. இந்த தாய் கெழவி அவ என்ன சொன்னாலும் அப்டியே நம்புது. கூறு கெட்டது’ – ஷெர்லின் மனம்
“முப்பத்தி ஓராவது நாள் புருஷன கூட்டிட்டு வேற வீடு போய்ட்டாாா…” – வைஷ்ணவி
“அட பாதகத்தி. நம்பி உள்ள விட்டதுக்கு இப்டி எல்லாமா பண்ணுனா? ஆள் யாருனு கை காட்டிப்போடு என்ட்ட… ஆஞ்சுபோடுறேன் ஆஞ்சு”
“அதெல்லாம் விடுங்க. சரி தனியா போயாவது நிம்மதியா இருந்தாங்களா? பொறந்த கொழந்த ஊனமா போச்சு” வயதான பெண்மணி ஆடியே போனார்.
“அட பாவத்த… ஆனாலும் இது அந்த குடும்பத்துக்கே பெரிய வருத்தமாச்சே” – சேர்மத்தாய்
“சும்மாவா சொன்னாங்க சொந்தத்துல பொண்ணு எடுத்தா பொறக்குற குழந்தைக்கு ஏதோ ஒரு குறை வரும்னு. இப்போ அந்த குடும்பமே நிம்மதி இல்லாம இருக்கு. அந்த அண்ணன் வேற நல்ல மாதிரி. மொதல்ல உங்க பேரான பாத்ததும் அந்த அண்ணன் தான் நியாபகத்துக்கு வந்துச்சு… ஹ்ம்ம் என்ன பண்றது. சரி நாங்க கெளம்புறோம்”
என்றவள் ஏதோ மறந்ததாய் நடித்து ஷெர்லின் கையிலிருந்த அந்த வெற்றிலை உரலை அவர் கையில் கொடுத்து, “இது இந்த ஊர் ஜமீன்தார் யூஸ் பண்ண வாங்குன உரலு-னு எங்க ஆச்சி சொல்லும். ஆனா ஏதோ ஒரு காரணத்துக்கு எங்க பரம்பரைக்கு வந்துடுச்சாம். ரொம்ப நாளா அப்டியே இருக்கு. இனிமே இத யார் யூஸ் பண்ண போறோம்னு தான் உங்களுக்கு எடுத்துட்டு வந்தேன். சரி வரேன்” நல்ல பிள்ளையாய் நடித்து வந்தவளின் நடிப்பில் ஷெர்லின் கூட அசந்து தான் போனாள்.
வீட்டை விட்டு வெளியில் வந்ததும், “எப்பா டேய் இது உலக மகா நடிப்புடா சாமி” தலையில் கை வைத்து கார்த்திக் வீட்டின் வாயிலிலேயே அமர்ந்துவிட்டாள் ஷெர்லின், “இனிமே உன் சவகாசமே எனக்கு வேணாம்டி சாமி. இனி நீ யாரோ நான் யாரோ”
தப்பித்தோம் பிழைத்தோம் என்று போனவளை, “ஏய் ஷெர்லின் பேபி…”
“போடி குள்ள நரி. டோரா பஜ்ஜில எனக்கு குள்ள நரி தான் நீ புடிக்கும்னு சொன்னப்ப எல்லாம் நம்பள. அப்போ புரியல… இப்போ புரியுது”
“அது கெளவிய நம்ம பக்கம் இழுக்க சொன்னேன்டி” தெருவின் முனையில் நின்று புலம்பிய தோழியை என்ன தடுத்தும் நிறுக்க முடியவில்லை வைஷ்ணவியால். ஓடிவிட்டாள் அந்த குழந்தை.
“ஒரே வாரத்துல வாங்கி காட்டுறேன். அப்டி அவனையே கால் பண்ண வச்சிட்டா. ஒரு வாரம் மதியம் நீ எனக்கு கடைல சாப்பாடு வாங்கி தரணும்” அவளும் கார்த்தி மேல் உள்ள நம்பிக்கையில் பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டாள்.
மறுநாள் காலை வைஷ்ணவி மாடியில் நின்று பல் துலக்கும் நேரம், “அரை கிலோ போதுமா மா?” உள்ளே இருந்து அவனுக்கு வந்த பதில் அவளுக்கு கேட்கவில்லை.
“சரி ம்மா. ஈரல் சேத்து எடுத்துட்டு வர்றேன்” என்றவன் கையில் ஒரு பையோடு பனியன், முட்டி வரை இருந்த ஒரு டிரௌசர் போட்டு நடந்து செல்வதை பார்த்தவள் மின்னல் வேகத்தில் கீழே சென்று அன்னையிடம்,
“ம்மா கறி எடுத்தாச்சா?”
“ம்ம்ம் மட்டன் எடுத்தாச்சு”
“சரி காசு தா நான் ஈரல் வாங்கிட்டு வர்றேன்”
“என்ன இன்னைக்கு ரொம்ப தான் அக்கறை? ஈரலும் வாங்கியாச்சு” – மஹேஸ்வரி
“சுவரொட்டி வேணும். வாய் பேசாம காசு தா ஆத்தா” கண்ணனுக்குத் தெரிந்த பணத்தை எடுத்து வீட்டை விட்டு ஓடிய மகளை தலையில் அடித்து கடந்தார் அன்னை.
“இவளுக்கு வேகமா கல்யாணம் பண்ணி வைங்க. தொல்லை தாங்கல” வாத்தியாரோ அந்த வேளையில் தானே இருந்தார் அதனால் அமைதியாக கைபேசியில் மேட்ரிமோனி அப்பில் வரனை தேடும் தேடலில் மீண்டும் மூழ்கினார்.
நான்கு தெரு தள்ளி இருந்த கறிக்கடைக்கு விரைந்த வைஷ்ணவி கார்த்திக்கை தேட அவன் அங்கே தான் மற்றொரு மூலையில் ஆண்கள் நிற்கும் இடத்தில் நின்றிருந்தான்.
“அண்ணே ஒரு சுவரொட்டி” குரல் கொடுத்து அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் குறு குறு பார்வையில் அவனுக்கும் உடல் கூச தன்னை சுற்றி பார்த்தவன் வைஷ்ணவியின் வருகையை எதிர்பார்க்கவில்லை.
அவன் தன்னை பார்த்ததும் மெல்லிய புன்னகையோடு இரு புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்க சங்கடமாக தலையை குனிந்தவன் வெட்டிய கறி தன் கைக்கு வரும் வரை தலையை தூக்க கூட இல்லை.
‘எதுக்கு இத்தனை வெக்கம்?’ நொந்த வைஷ்ணவி கறி கடை பாயை அவசர படுத்தினாள், “அண்ணே வேகமா தா… வேகமா தா” என்று.
கார்த்தி கிட்ட தட்ட சென்றிட அந்த பரபரப்பில், “வெட்டி வை வந்து வாங்கிக்கிறேன்” என்றவள் வேக வேகமாக கார்த்தி பின்னால் நடக்க துவங்கினாள்.
ஞாயிற்று கிழமை நேரமாதலால் கடையை ஒற்றிய இடத்தில் கூட்டம் அதிகம் இருக்க அதை தாண்டி இருந்த வயல்வெளிகள் ஒட்டிய சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.
“கார்த்திக். நில்லுங்க” வைஷ்ணவி கத்தி அழைக்க அவன் வேகம் கூடியது எரிச்சலில். அவன் தந்தை காலை நடைப்பயிற்சி சென்று வரும் வழி இதுவே, நேரமும் கூட இது தான் என்று கோவம் மண்டி கிடந்தது கார்த்திக்கு.
“யோவ் சமயலு…” வேகத்தை கூட்டியவனுக்கு நிகராக தானும் ஓட வேண்டி இருந்தது.
“ஏங்க இந்த ஆஸ் கலர் டீ-ஷர்ட் உங்களுக்கு அழகா இருக்கு” சற்று குரலில் வலிமையை கூட்டி வைஷ்ணவி பேச அவனது வேகம் சற்று குறைந்தது அவள் பிடிவாதத்தால்.
சிரிப்போடு அதை கவனித்தவள், “ஏங்க நான்வாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீக்க போயிட்டே இருக்கீங்க” குரலை சற்று உயர்த்தி அவன் பின்னால் ஓடுவது போல் சற்று வேகத்தை கூட்டினாள்.
தன்னை விடாமல் துரத்துபவளின் பிடிவாதத்தை உணர்ந்தவன் சுற்றிலும் எவரும் இல்லை என்று உறுதி செய்து அவள் புறம் திரும்பி, “எதுக்கு வைஷ்ணவி இப்டி ரோட்டுல வச்சு சத்தமா பேசுறீங்க? யாராவது பாத்துட்டா தப்பா இருக்கும்” நிதானமாக எடுத்துரைத்தான் கார்த்திக்.
“பாக்கட்டும்ங்க… நான் என்ன யார்கிட்டையோவா பேசுறேன்? உங்ககிட்ட தான பேசுறேன் இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?” அவனை நோக்கி மேலும் முன்னேறி வந்தாள் வைஷ்ணவி.
அதில் மிரண்டவன் எவர் கண்ணிலும் படக்கூடாதென்று, “தப்பா நினைக்க ஆயிரம் இருக்கும்ங்க. நான் வர்றேன்” என்றவன் திரும்பி நடக்க அவனை நோக்கி பின்னாலே மீண்டும் வேகமாக தங்கள் தெருவை தொடும் முன் அவனிடம் பேசிவிட வேண்டும் என்று ஓடினாள்.
தூரத்தில் வண்டியில் நின்று கைபேசியில் இவர்களை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த வைஷ்ணவியின் சகோதரன், கார்த்தி கண்ணில்பட இதை சாக்காக வைத்து தப்பிக்க எண்ணி, “உங்க அண்ணன் அங்க நிக்கிறாங்க ஒழுங்கா மாட்டிக்காம போய்டுங்க”
“அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு ஏன் பயப்புடுறீங்க… சுண்டக்கா பய…”
மீண்டும் தன் காரியத்திற்கு தாவினாள் “எங்க வர்றிங்க? எப்ப வர்றிங்க? நைட் பதினோரு மணிக்கு மேல மாடிக்கு வர்றிங்களா நானும் வெயிட் பண்றேன்… நாம சைகை பாஷையிலேயே பேசலாம்” இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் பிரேக் அடித்தாற்போல் நின்றிட அவன் பின்னே இதழ்களில் சிரிப்பை அடக்கி முகத்தை அப்பாவியாய் நடித்தாள் வைஷ்ணவி.
“அதெல்லாம் முடியாது தப்புங்க. ப்ளீஸ் இப்டி ரோட்டுல, மொட்டை மாடில-னு சத்தமா கூப்ட்டு பேசாதீங்க” கிட்ட தட்ட கெஞ்சினான் கண்களை சுருக்கி.
இப்பொழுது இதழ்களில் இருந்த சிரிப்பை மறைக்காமல் வெளிப்படையாக காட்டியவள் உள்ளுக்குள், ‘அப்டி வா வழிக்கு என் செல்ல கல்லமிட்டாய்…’ எண்ணி, வெளியில்,
“ஓ உங்களுக்கு கூச்சமா இருக்கா? பிரச்சனை இல்ல” என்றவள் இந்த சம்பவத்திற்காகவே பல நாட்களாக தயாராக வைத்திருந்த ஒரு துண்டு காகிதத்தை, அவன் கையிலிருந்த பையில் போட்டு, “அந்த பேப்பர்ல என்னோட போன் நம்பர் இருக்கு. நீங்க என்ன பன்றிங்கனா டான்னு பதினோரு மணிக்கு கால் பண்றீங்க ஓகேவா?” கட்டளையை சிரிப்புடன், சிறு கண்டிப்புடன் கூறினாள்.
“கண்டிப்பா மாட்டேன். உங்க அம்மாகிட்ட வந்து பேச போறேன்” என்றான் சற்று கோவமாக.
அவளோ அதே சிரிப்புடன், “மிஸ்டர் கடலைமிட்டாய் என் அம்மாகிட்ட எல்லாம் நான் பெர்மிஷன் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு. உங்க பெர்மிஷன் மட்டும் தான் பாக்கி”
கண் சிமிட்டி நக்கலாய் அவனை விட்டு வீட்டை நோக்கி முன்னேறியவள் திடீரென நின்று, “இங்க பாருங்க… போன் பண்ணலன்னு வைங்க தெருவே அதிரும்…” என்ற எச்சரிக்கையோடு ஓடியவள் இன்னும் தொலைபேசியில் மூழ்கியிருந்த சகோதரனின் பின்னந்தலையில் விளையாட்டாக ஒரு அடியை வைத்து வீட்டிற்குள் சென்று மகிழ்ச்சியாக நுழைந்துகொண்டாள்.
அதன் பிறகு அவளைத் தவிர்க்கவே பார்த்துப் பார்த்து கீழும் மேலும் சென்று வந்தவன், இரவு உணவு உண்டு தன்னறையில் சென்று படுத்தவனுக்கு அவள் எச்சரிக்கை தான் வந்து கண் முன் படமாகியது. தலையணையை எடுத்து அழுத்தி மூடினாலும் பலன் பூஜ்யம் தான்.
அவள் எப்பொழுதும் அவனுக்கு அழைக்கும் windchime மணியை அடித்து எச்சரிக்கை விடுக்க அவன் கண்டுகொள்ளவே இல்லை.
‘டிங் டாங்… டிங் டாங்’
‘போயும் போயும் சாத்தான்கிட்ட மாட்டுவியாடா கார்த்தி’ தலையணையை வைத்தே அடித்தவன் இன்னும் கொஞ்சம் முயன்று மணியை வேண்டும் என்றே பார்க்காமல் படுத்திருந்தவனுக்கு வெற்றியைத் தந்தது போல் தூக்கம் வரக் கண்களை மூடிய அடுத்த நொடி அதிரடியான இசை கேட்க முதலில் உதறித் தள்ளியவன் அடுத்து வந்த வரிகளில் பதறினான்.
மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளங்கட்டி
அர்ரார்ரா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க…
அடித்துப் பிடித்து எழுந்தவன் தன்னுடைய அறையிலிருந்து பால்க்கனி வந்தவன் கண்களுக்கு தங்கள் எதிர்வீட்டு மாடியின் திண்டில் கையில் ஒரு ரிமோட்டுடன் கால் மேல் கால் போட்டு இவன் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவி தான் தெரிந்தது.
கதவைத் திறந்து வந்த கார்த்திக், “ஏங்க” தங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மனிதர் சத்தம் கேட்டு வைஷ்ணவியின் இல்லத்தைப் பார்ப்பதைப் பார்த்து மெதுவாக அவளை அழைத்தான்.
அவளோ காதில் வாங்காமல் அவன் அழைத்ததும் இன்னும் ஒலியைக் கூட்ட ஸ்பிக்கரின் பலம் நன்றாக இரவின் அமைதியைக் கிழித்து மொத்த தெருவையும் எழுப்பியது.
“ஏங்க வைஷ்ணவி…” விட்டால் நிச்சயம் அழுதிருப்பான்.
“ஏலா என்ன பண்ற இந்த சாமம் தான் உனக்கு பாட்டு கேக்க தோணுமா? பக்கத்து வீட்டுல இருந்து சண்டைக்கு வருவாங்கலா”
அவர்கள் வீட்டில் கீழிருந்து வைஷ்ணவி சகோதரன் அவளை அதட்ட, “டேய் போய் தூங்குடா” இவள் அடங்காதவன் என்று விட்ட உறக்கத்தைத் தொடர சென்றான்.
‘அட கிறுக்கா…’ உள்ளே சென்றவனை நினைத்து தலையில் அடித்தான் கார்த்திக்.
ஆடுரார்ரா நாக்கமுக்க… நாக்கமுக்க…. நாக்கமுக்க…. நாக்கமுக்க….
நாக்கமுக்க…. நாக்கமுக்க…. நாக்கமுக்க….
ஆடுரார்ரா நாக்கமுக்க…. நாக்கமுக்க…. நாக்கமுக்க…. நாக்கமுக்க….
நாக்கமுக்க…. நாக்கமுக்க…. நாக்கமுக்க….
“ஏங்க போன் பன்றேங்க. பாட்ட ஆப் பண்ணுங்க ப்ளீஸ்” என்றான் கார்த்திக் கெஞ்சலாக. அவளோ மீண்டும் கண்டுகொல்லாமல் இன்னும் ஒலியை அதிகரித்தாள்.
அவளின் எண்ணம் உணர்ந்தவன் எதற்கும் இருக்கட்டும் என்று சேமித்து வைத்திருந்த எண்ணில் அழைக்க அவன் எண்ணை பார்த்ததும் கார்த்தியை திரும்பி பார்த்து சிரித்தவள், பாட்டை நிறுத்தி, இவர்கள் வீட்டை பார்த்திருந்த மக்களை பார்த்து,
“இன்னைக்கு தான் ஸ்பீக்கர் வாங்குனேன். அது தான் டெஸ்டிங்…” என்று அவர்களுக்கு விளக்கமளித்து இன்னும் அவன் எண்ணை எடுக்காமல் வெளியில் வைத்திருந்த ஸ்பீக்கரை தன்னுடைய அறையில் வைத்து அதன் பிறகே மெதுவாக அழைப்பை ஏற்றாள்.
அழைப்பை எடுத்ததும் அந்த பக்கம் கார்த்திக்கிடம் பெரு மூச்சு, “ஏங்க இந்த ஆர்ப்பாட்டம்?”
“எனக்கு தூக்கம் வருதுங்க கார்த்திக். நாளைக்கு வெள்ளன கூப்புடுங்க. குட் நைட்” விருப்பமே இல்லாமல் பேசியவன் இணைப்பையும் துண்டித்தாள்.
‘டிங் டிங் டிங்…’ காதில் மணியடிக்க கைப்பேசியையும் அவள் அறையையும் மாறி மாறி பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.