நால்வரும் நாலாப்பக்கமாய் அமர்ந்து பல நிமிடங்கள் கடந்திருந்தது. அப்போது கேட்ட அந்த குரலுக்கு பிறகு எந்தவித சத்தமும், அரவமும், அச்சுறுத்தும் அமானுஷ்ய ஐட்டங்களும் நடக்காமல் இருக்க, வித்தகனை தவிர மீதி மூவரின் இறுக்கமும் தளர்ந்திருந்தது. மனதை கவ்வியிருந்த பயம் அகண்டிருக்க, சற்று ஆசுவாசமாய் அவர்கள் இளைப்பாறும்போது தான், சிந்தனை அந்த வீட்டை தாண்டி பயணித்தது.
பிரஷாந்துக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. பயத்தில் ஏதேதோ பேசிவிட்டிருந்தான் பவியை. நல்லாய், சக்கரைக்கட்டி போல பேசும்போதே, ‘நீ வேண்டாம் போடா’ என்பவள், இப்போது வெளிப்படையாகவே ஸ்திரமாய் தன்னை விரட்டி அடிப்பாளே!!!
‘ஐயோ நான் என்ன பண்ணுவேன்!? எப்படி அவளை கரெக்ட் பண்ணுவேன்!?’ என உள்ளுக்குள் அழுதபடி எதிரே இருந்தவளை அவன் பார்த்துக்கொண்டிருக்க, அவன் அருகே ஒரு அசைவு. நெஞ்சுக்கூட்டில் சுரீரென்ற உணர்வு. கண்களை திருப்பி பார்க்க ஒரு நொடி போதுமா? ஆனால், அதை செய்ய தான் தைரியம் வரவில்லை. பற்களை இறுக்கமாய் கடித்துக்கொண்டு கண்களை அங்கும் இங்கும் திருப்பாமல், எதிரே இருக்கும் இருவரை கண்கொட்டாமல் அவன் பார்த்துக்கொண்டிருக்க, இப்போது ஏதோ ஒன்று அவனை நெருங்கி வந்தது.
வாய் திறந்து பவியை அழைக்கக்கூட அவனுக்கு மூச்சு வரவில்லை. ஏதோ கதையில் சொல்வார்களே, செத்ததை போல நடித்தால் கரடி முகர்த்து பார்த்துவிட்டு போய்டும் என்று! அப்படி நினைத்துக்கொண்டான் போலும்! மூச்சை தம்க்கட்டி அவன் அமர்ந்திருக்க, “ப்…ர…ஸூஊஊஊ” என அவன் காதுக்குள் மெல்லமாய் அழைத்தாள் சம்யுக்தா.
அந்த குரலில் சட்டென திரும்பியவன், “த்தூ… நீயா?” என்றான் ஆசுவாசத்துடன்.
முறைத்தவளோ, “பின்ன இந்த வீட்டுக்குள்ள கிளியோபேட்ராவும், மர்லின் மன்றோ’வுமா வருவாங்க?” என்றாள்.
“ப்ச்… போர் அடிக்குது! எவ்ளோ நேரம் தான் பேசாமையே இருக்கிறது!” பாவம் போல சொன்னவளை நன்றாக திரும்பி அமர்ந்து பார்த்தவன், “நீ என்ன டூருக்கா வந்துருக்க? கொஞ்சம் கூடவா பயம் இல்ல?” என்றான் ஆச்சர்யமாய்.
“இருக்கு தான்! ஆனா, அதைவிட நம்பிக்கை இருக்கு!” என்றவள், “நான் என்ன முன்ன பின்ன தெரியாதவங்க கூடவா இருக்கேன்?” என்று கேட்டுவிட்டு, எதிரே இருந்த வித்தகனை காட்டி, “இதோ என் ‘ஜி’ இருக்காரு! இன்னும் கொஞ்ச நேரத்துல என்கிட்ட இருந்து மெசேஜ் இல்லன்னதும் என் அப்பா இங்க கிளம்பி வந்துடுவாரு! பிறகென்ன பயம்!?” என்றாள் தோளை குலுக்கிக்கொண்டு.
“கரெக்ட்டா வருவாரா? ரூட்டு மாறி போய்டமாட்டாருல?” என்றான் அவன் சந்தேகத்துடன்.
“அதெல்லாம் வந்துடுவாரு! என் பேக்’லயும், இதோ நான் போட்டுருக்குற செயின்லையும் ஜி.பி.எஸ் இருக்கு! அது நான் இருக்க இடத்தை அக்குரேட்டா சொல்லும்!” என்றதும், வாயை பிளந்தான் அவன்.
“நீ சொல்றதெல்லாம் பார்த்தா, சமூகம் பெரிய இடம் போலயே!” என்றவன் கேட்க, “எஸ். ஆர். ப்ரொடெக்ஷன்ஸ் ராஜசேகர் கேள்விபட்டுருக்கியா?” என்றாள் சம்யுக்தா.
“கேள்விபட்டு…ருக்கி…யா…வா? அவர் இப்போ சமீபமா ப்ரோடியூஸ் பண்ணிருக்க படத்துல நான் ஒரு சாங் கொரியோக்ராஃ பண்ணிருக்கேன் தெரியுமா? நெக்ஸ்ட் மந்த் படம் ரிலீஸ்!” என்றான் காலரை தூக்கிவிட்டு பெருமையுடன்.
“ம்ம்ம்!” வியந்ததை போல உதட்டை பிதுக்கியவள், “அந்த ராஜசேகர் என்னோட அப்பா தான்! எஸ். ஆர் ப்ரொடெக்ஷன்ஸ்’ல ‘எஸ்’ ஸ்டேன்ஸ் ஃபார் ‘சம்யுக்தா’ அண்ட் ‘ஆர்’ ஸ்டேன்ட்ஸ் ஃபார் ‘ராஜசேகர்’… அண்ட் சோ…! தட்ஸ் மீ…! தி கிரேட் ‘சம்யுக்தா ராணி ராஜசேகர்’” என்றாள் வெகு பந்தாவாய்.
அவள் அடையாளம் கேட்டு பிரஷாந்தின் வாய் பிளந்தபடியே இருந்தது. சில நொடிகள் தான்! பின், சட்டென சிரித்தவன், “பார்ரா… கொஞ்சம் விட்டா அந்த ப்ரொடெக்ஷன் ஹவுசே என்னுது தான்னு சொல்லுவ போலயே!” என்றான் சிரித்துக்கொண்டே.
புருவம் உயர்த்தி முறைத்தவள், “இல்லம்பியா நீ!?” என்றாள். அவள் தெளிவில் அவன் சிரிப்பு நிற்க, “நிஜமா சொல்றியா?” என்றான் நம்பமாட்டாது.
அவள் ஒன்றும் சொல்லாமல், மொபைலில் தந்தையுடன் எடுத்த செல்ஃபீ ஒன்றை அவனுக்கு காட்ட, நன்றாக ஜூம் செய்து பார்த்தவனோ, இப்போது மொபைலை நீட்டிவிட்டு சற்று தள்ளி அமர்ந்தான்.
அதில், “ப்ச்!” என்றவள், “இதுக்கு தான் நான் யாருன்னு சொல்றதே இல்ல! ஜி’க்கு கூட காலேஜ் முடிக்குற வரைக்குமே தெரியாது நான் யாருன்னு! இப்போகூட என் பேரு தான் எல்லா இடத்துலயும் இருக்கும்! முகம் காட்ட மாட்டேன்!” என்றாள் சோகமாய்.
அவள் சோகமாய் பேசுவது அவன் கண்டவரையில் அவள் இயல்புக்கு ஒத்துவராது இருக்க, சட்டென கேலிக்கு தாவியவன், “முகம் காட்டாம தான் ஒன் மில்லியன் ஃபாலோவர்ஸ்’ஸு! இன்ஸ்டா’ல பேமஸா?” என்றான்.
அவன் கேலி வேலை செய்ய, “ஏய், அது நான் யாருன்னு யாருக்கும் தெரியாம வரது! இதே நான் ப்ரொடியுசர் பொண்ணுன்னு தெரிஞ்சா, அப்படி ஃப்ரீ’யா வீடியோ போட முடியுமா? சும்மா சும்மா என்னை எல்லாத்துக்கும் என் அப்பாவோட கனெக்ட் பண்ணி கன்டென்ட் வீடியோ போட்டுட்டு இருப்பானுங்க! ஆனா, இப்போ…. நான் ஃப்…..ரீஈஈஈ பர்ட்!” என்றாள் உற்சாகமாய்.
அவள் பேசுவதை கேட்டு சிரித்துக்கொண்டே திரும்பியவனுக்கு, வித்தகனும் பவித்ராவும் அருகருகே அமர்ந்து பேசுவது தெரிய, தன்னையறியாது ஒருவித கோவம் வேகமாய் உள்ளே எழுந்தது. அதிலும், பவித்ரா அவனிடம் சிரித்துக்கொண்டு எதையோ சொல்ல… சுந்தரா ட்ராவல்ஸ்’சில் எலியை கண்டதும் மாறும் வடிவேலும் முகம் போல, ரெட் லைட் எப்பெக்டில் ஜொலித்தது.
அதை கண்ட சம்யுக்தா, “ஏய் ப்ரஷு… என்ன ஆச்சு!?” என்று தோளை உலுக்க, அவன் எதிரே இருந்தவர்களை கண் காட்டினான். பார்த்தவளோ, “புரியல… என்ன?” என்று மீண்டும் கேட்க, பட்டென ‘ஆங்க்ரி மோட் ஆஃப்’ ஆகி அவளிடம் திரும்பியவன், “அவன் உன் ஆளு தானே?!” என்றான் கேள்வியாய்.
“ஜாலியா?” என்று கேட்டவள், சிரிப்பை அடக்கி, “கொஞ்சம் உன் காதை கூர்மையாக்கி, அவங்க என்ன பேசுறாங்கன்னு நீயே கேளு!” என்றாள் இலகுவாய்.
அவனும் அவள் சொன்னதை போல அவன் காதை கூர்மையாக்கி, அவர்கள் பேச்சை கவனிக்க, வித்தகன் பவித்ராவிடம், “பொயட்ரி இஸ் எ ஸ்பாண்டேனியஸ் ஓவர்ப்லொவ் ஆஃப் பவர்புல் ரியாக்ஷன்ஸ் ரிகலக்டட் இன் ட்ரான்க்குலிட்டி’ அப்படின்னு வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொல்லிருக்காரு!” என்றான்.
(poetry is a spontaneous overflow of powerful reactions recollected in tranquility)
இருவரின் பேச்சையும் கேட்ட பிரஷாந்த், “அய்யய்ய!” என முகம் சுளிக்க, “சொன்னேன்’ல? எப்பவும் நம்ம ஜோடி மேல வைக்குற நம்பிக்கையை விட, அதுங்க, எதுக்கு சரி பட்டு வரும்… எதுக்கு சரிப்பட்டு வராதுன்னு நமக்கு தெளிவா தெரிஞ்சுருந்தாலே போதும்… லைஃப் இஸ் ஜிம்பிள்!” என்ற சம்யுக்தாவை, “தெய்வமே! எங்கயோ போயிட்டீங்க!” என்று பிரஷாந்த் கும்பிட, அவளும் ‘மூக்குத்தியம்மன்’ நயன்தாரா போல அருள் பாலித்தாள்.
“இல்ல… நீங்க சொன்ன ‘கோட்’ தான்! அப்படியே ‘காப்பி’ அடிக்காம, திருடுறது தான் ஒரு முதிர்ச்சியடைஞ்ச பொயட் செய்யுற வேலைன்னு அவர் சொல்றது அப்படியே எங்களை மாறி பாடலாசியருக்கு கூட பொருந்துதுல!? அதான் சிரிச்சேன்!!”
அவளும் மென்னகையுடன், “அந்த கால ‘பொயட்ஸ்’… இந்த கால ‘பாடலாசிரியர்கள்’” என்று சொல்ல, ஆமோதிப்பாய் தலையசைத்தான் வித்தகன்.
இருவரிடமும் சற்று அமைதி நிலவ, “ஹா…. அப்புறம்…. சாரி!” என்றாள் பவி தயக்கத்துடன்.
“ஐயோ… ஐயோ… என் ஆளு கையை பிடிக்குறானே உன் ஆளு!!! நான் கூட பிடிச்சதே இல்லையே!” வாயில் அடித்துக்கொண்டு பிரஷாந்த் சொல்ல, சம்யுக்தா முறைத்துப்பார்த்ததில் ‘கப்சிப்’பென வாயை மூடிக்கொண்டான்.
வித்தகனுக்கும் பவித்ராவுக்கும் இடையே அமைதி சில நிமிடங்கள் நிலவியது. என்னதான் இயல்புபோல பவித்ராவிடம் உரையாடினாலும், மனதுக்குள் அந்த வீட்டில் இருந்து எப்படி வெளியேறுவது? எப்படி தப்பிப்பது? என்று எண்ணங்கள் ஒருபுறம் ஓட தான் செய்தது.
அவன் அமைதியை கண்ட பவித்ரா, “ரொம்ப பேச மாட்டீங்களோ?” என்றாள் கேள்வியாய்.
“ஹான்… இல்ல பேசுவேன்! தேவைக்கு மீறி வராது!” என்றான் இன்முகமாய்.
அவள் சிரிக்க, அதே கேள்வியை தான் அவனும் அவளிடம் இப்போது கேட்டான்.
“பேசுவேன்! ஆனா, புது ஆளுங்கக்கிட்ட டக்குன்னு ஜெல் ஆக லேட் ஆகும்!” என்றதும், “ஓ… இண்ட்ரோவெர்ட்’டா?” என்றான்.
“இல்ல… ஆம்பிவர்ட்” என்று சொல்ல, “புரியலையே!” என்றான் அவன்.
“இப்போ இன்ட்ரோவர்ட்’ன்னா, நெருக்கமானவங்கக்கிட்ட கூட அளந்து தான் பேசுவாங்க! அதே, எக்ஸ்ட்ரோவர்ட்’ன்னா யாரு என்னன்னு தெரியாதவங்கக்கிட்ட கூட அன்லிமிடட்’டா பேசுவாங்க!” என்று சொன்ன பவியின் கண்கள் எதிரே இருந்தவனை பார்க்க, அதே நேரம் வித்தகனும் எதிரே இருந்தவளை தான் பார்த்தான்.
(introvert; extrovert; ambivert)
பிரஷாந்தின் முதுகில் ஒரு அடி வைத்துவிட்டு சம்யுக்தா என்னவோ சொல்ல, கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அவள் பேச்சிற்கு பலிப்புக்காட்டி சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.
இருவரும் சில நொடிகள் அவர்களை வெறித்தனர். ‘எக்ஸ்ட்ரோவர்ட்’ என்ற வார்த்தைக்கு முழு உதாரணம் அந்த இருவருமே! என்ற எண்ணம் தான் இந்த இருவருக்கும்!
பின்பு, “ஆனா, ‘ஆம்பிவர்ட்’ அப்படி இல்ல… பழகுற வரைக்கும் தான் அமைதியா தெரிவாங்க… இதே நெருங்கி பழகிட்டா, ரொம்ப கலகலப்பான ஆளுங்க!” என்று பவி சொல்ல, “ம்ம்ம்… இன்ட்ரஸ்டிங்! நிறைய விஷயம் சொல்றீங்க!” என்று பாராட்டியவன், “என்ன பண்றீங்க நீங்க!?” என்றான்.
“நான் என் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரு ஸ்போகன் இங்க்லீஷ் கோச்சிங் சென்டர் வச்சுருக்கேன்! டிரெக்ட் கிளாசஸ் எடுப்போம்! ஆன்லைன் கோச்சிங் கூட இருக்கு!” என்றதும், “ஓ!” என வியந்தவன், “அதான் இங்க்லீஷ் மேல பற்று அதிகமா இருக்கோ!” என்றான்.
“இங்க்லிஷோ தமிழோ… எந்த மொழியையும் தப்பா பேசக்கூடாதுன்னு நினைப்பேன்! பொதுவா, என் வேலைல தப்பை சரி செஞ்சே பழகிடுச்சா!? அதனால, யார் தப்பா பேசுனாலும் ஆட்டோமேடிக்கா கரெக்ட் பண்ணிடுவேன்!” என்றான் சிறு சலிப்புடன்.
இங்கே இருவரின் அர்த்தமுள்ள பேச்சுக்கள் அழகாய் நீள, அங்கே இருவரின் அர்த்தமற்ற வம்பு பேச்சுக்கள் வடிவாய் வளர்ந்தது.
நால்வரின் உரையாடல்களும் சட்டென நின்றுப்போனது, திடீரென ஒலித்த கடிகார சப்தத்தில்.
முதலில் அதிர்ந்து காதை பொத்திய சம்யுக்தா, சத்தம் நின்றதும், “ஹே… இட்ஸ் ஃபோர் ஓ கிளாக்! இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா வந்துடுவாரே!” என உட்கார்ந்த வாக்கில் குதிக்க, மீதமிருந்த மூவரின் கண்களும் அந்த கடிகாரத்தை விட்டு நீங்கவில்லை.
அவர்களின் நிலைத்த பார்வையை உணர்ந்து திரும்பிப்பார்த்த சம்யுக்தாவின் கண்களுக்கு கடிகாரம் அதே ‘மூன்று’ மணியை காட்ட, விரிந்த கண்களுடன் வாயை பிளந்தவள், “ஹையோ… பேட்டரி வீக்கான கடிகாரம் போல ஜி!” என்று வித்தகனிடம் சொல்லிவிட்டு தன் பைக்குள் குடைந்து சற்று முன் வைத்த, தன் மொபைலை எடுத்தாள்.
பெரும் நம்பிக்கையோடு எடுத்து பார்த்தவளுக்கு, அதுவும் ‘மூன்று’ மணியையே காட்ட, முதன்முதலாய் அவளுக்கு நெஞ்சுக்கூடு திக்கென அடைத்துக்கொண்டது.
ஆனாலும், விடாத நம்பிக்கையுடன், “ஹே ப்ரஷு! உன் ஃபோன்ல மணி என்ன?” என்று கேட்டுக்கொண்டே அவன் புறம் திரும்ப, அவனோ, ஏற்கனவே கையில் மொபைலை வைத்துக்கொண்டு சிலையாகி நின்றிருந்தான்.
எட்டிப்பார்த்தவளுக்கு, அவன் அலைபேசியையும் மூன்று மணியோடு தேங்கி நிற்ப்பது தெரிய, மூச்சே உறைந்தது.
அந்நேரம், “வெல்கம்…!!!” என்ற அதே குரல். தூக்கி வாரிப்போட்டது நால்வருக்கும்!
தன்னால் கால்கள் தடுமாறி நால்வரும் ஒரே இடமாய் வந்து நிற்க, “வெல்கம் டு எ லவ் வீடு!!!” என்று கரகரத்து எல்லா பக்கமும் எதிரொலித்தது அக்குரல்!
அதன்பின் எந்தவித ஓசையும் இல்லை. சில நிமிடங்களுக்கு பிறகே அந்த அதிர்வில் இருந்து எல்லோரும் மீள, அப்போது, பலமாய் மூச்சிரைக்க, இழுத்துக்கொள்ள ஆரம்பித்தது சம்யுக்தாவிற்கு.
அந்தமாதிரி சூழ்நிலையில் அவள் அப்படி மூச்சுக்கு தவிக்க, பிரஷாந்துக்கும் பவித்ராவுக்கு பயந்து வந்தது. ஆனால், வித்தகன் இதற்கு பழகியவன் போல வேகமாய் அவள் பைக்குள் இருந்து அந்த ‘பஃப்’பை எடுத்து அவளுக்கு கொடுக்க, இரண்டு மூன்று முறை வாய்க்குள் அதை வைத்து அடித்த பிறகு தான் அவளுக்கு சுவாசம் சற்றே சீரானது.
அதன்பின்னோ, வித்தகனை கட்டிக்கொண்டு, “ஜி… ஜி… பயமா இருக்கு ஜி! போய்டலாம்! என்னை எப்படியாது இங்கிருந்து கூட்டிட்டு போங்க ப்ளீஸ்!” என அவள் கதற ஆரம்பிக்க, “ஒன்னும் இல்ல சம்மு… போய்டலாம்” என அவளை ஆறுதலாய் அணைத்து சிறுப்பிள்ளைக்கு சொல்வதை போல சொல்லிக்கொண்டிருந்தான் வித்தகன்.
இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த பவித்ரா பயத்தில் உறைந்து நிற்க, பிரஷாந்தோ, “ஜி… என்ன நடக்குது இங்க?! பயமா இருக்கு! மணி ஏன் மூனை தாண்டி போகல!? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? சொல்லுங்க” என்றான் நடுங்கிய குரலில்.
அவனை ஒரு பார்வை பார்த்த வித்தகன், ஒன்றும் சொல்லாமல், சம்யுக்தாவை அணைத்து தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்க, “எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க!” என்ற பிரஷாந்த், வீட்டை சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு,
“நம்ம இங்கிருந்து உயிரோட வெளில போக வாய்ப்பு இருக்கா? இல்லையா?” என்றான் திகில் குரலில்.
தன்னியல்பாய் பவித்ரா பிரஷாந்தின் புறம் வந்து அவனோடு ஒட்டிக்கொள்ள, வித்தகனை இன்னும் கெட்டியாய் அணைத்துக்கொண்டாள் சம்யுக்தா.
“சொல்லுங்க ஜி! முடியுமா? முடியாதா?” என்றவன் மீண்டும் கேட்க, “முடியும்!” என்றான் வித்தகன், மிக மெல்லிய குரலில்.
உடனே மூவரின் கண்களும் பிரகாசமானது.
“என்ன பண்ணனும் அதுக்கு? என்ன வழி? சொல்லுங்க!” பிரசாந்த் பரபரப்பாய் கேட்க, அவனை நிதானமாய் பார்த்தவன்,
“பயப்பட கூடாது” என்றான்.
“வாட்?” பவித்ரா குழப்பமாய் விழிக்க, “பயப்படக்கூடாது!” என்று இன்னமும் அழுத்தி சொன்னவன், “இங்க என்ன நடந்தாலும்… ‘எ..ன்…ன’ நடந்தாலும் நம்ம பயத்தை மட்டும் வெளில காட்டக்கூடாது!” என்றான் அழுத்தமாய்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த வீட்டின் விளக்குகள் அணைந்து, மொத்த வீடும் இருள் சூழ்ந்தது.