வீட்டின் அருகே உள்ள சிவன் கோவிலில் தான் மகாலட்சுமியும், வைஷ்ணவியும் அமர்ந்திருந்தனர். வந்து சில நிமிடங்கள் ஆகியது. அமைதியாக இருளை வெறித்து அமர்ந்திருந்த மகாலட்சுமிக்கு ஏதோ மனம் பாரமாக இருக்கும் உணர்வு.
உடன் வந்த வைஷ்ணவி பிரதோஷத்தினை முன்னிட்டு கொடுத்த சுண்டலையும், தயிர் சாதத்தையும் இரண்டு கைகளில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து வெற்றி பெற்று வந்த வீராங்கனை போல் கர்வத்துடன் மகாலட்சுமிக்கு அருகில் அமர்ந்து அவர் கையில் ஒரு தொன்னையை திணித்து,
“நீங்க சாப்பிடுங்க உங்க பையனுக்கு குடுக்க வேணாம்” என்றவள் குரலில் ஒரு செல்ல கோவம் இருந்தது.
தான் என்ன பேசினாலும் சிரிக்கும் மஹாலக்ஷ்மி இன்று எந்த எதிர்வினையும் காட்டாமல் இருக்க, “என்ன ஆச்சு த்தை…” அவர் கையை குலுக்கி கேட்டாள்.
மௌனமாக ஒரு கவரை கொடுத்தவர், “கார்த்திக்கு விசா வந்துடுச்சு”
“போடு சக்க… எப்போ வரும்னு எதிர்பாத்துட்டே இருந்தேன்”
அவருடைய மனநிலைக்கு மாறாக வைஷ்ணவி துள்ளலுடன், “சாமிகிட்ட வச்சு வாங்குனீங்களா?”
வைஷ்ணவியை முறைத்தவர், “வைஷு,” மனமே இல்லாமல் இருந்தவரின் உணர்வை புரிந்தவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்று இறைவன் காலடியில் வைத்து மன நிறைவுடன் மீண்டும் மஹாலக்ஷ்மி கையில் கொடுத்தாள்.
“இந்தா பாருங்க மாமியாரே… முதல் தடவ வெளிநாடு கெளம்புறாங்க. மூஞ்சிய தூக்கி வச்சேன், முகரைய தூக்கி வைப்பேன்னு பிடிவாதம் பிடிச்சீங்க அப்றம் நமக்குள்ள சண்டை தான் வரும்”
“நீ என்ன அவன் என்ன பண்ணாலும் சரினு வந்து நிக்கிற?” – மஹாலக்ஷ்மி
“அவர் என்ன தப்பு பண்ணார்னு நான் அவருக்கு எதிரா நிக்க சொல்றிங்க?” மஹாலக்ஷ்மியின் மௌனம் அவளை மேலும் தொடர வைத்தது.
“உங்க விருப்பபடி தானே மதுரைல தான் இருந்த நல்ல வேலைய விட்டுட்டு இங்க வந்து வேற வேலை பாக்க நினைக்கிறார்? அப்போ ஒரு ஆறு மாசம் அவரோட சந்தோஷத்துக்காக வெளிய அனுப்பி வந்ததுல என்ன கொறஞ்சு போய்ட போகுது? என்னமோ ரொம்ப தான் ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க”
“அப்டி இல்ல வைஷுமா…”
“எப்படி இருந்தாலும் நீங்க யோசிக்கிறது நினைக்கிறது எல்லாம் தப்பு தான். பொம்பள புள்ளைங்களே இந்த காலத்துல வீட்டுல அப்பா அம்மா சொன்ன பேச்ச கேக்குறது இல்ல, இதுல உங்க பையன் இவ்ளோ தூரம் இருக்குறதே பெருசு, அதையும் நீங்க தேவையில்லாதது யோசிச்சு நீங்களே கெடுத்துக்காதிங்க த்தை”
“என் பையன பத்தி தெரியும் தான் வைஷ்ணவி ஆனா இங்க இல்லாத என்ன வேலை அவனுக்கு அங்க பெருசா கெடச்சிட போகுதுன்னு போறான்? எங்க சமைச்சாலும் சமையல் ஒன்னு தானே?”
“சமையல் ஒன்னு தான் ஆனா மனுஷங்களோட ருசியும் பழக்கமும் இடத்துக்கு இடம் மாறும்ல த்தை. இங்க நூறு ஐநூறுன்னு சமைப்பார். அங்க போனா ஆயிரம் ரெண்டாயிரம்-னு சமைப்பார். நாளுக்கு நாள் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். நாளுக்கு நாள் ஒவ்வொரு புது மனுஷங்களோட பழக்கம் வரும்.
பத்து பேர் கிட்ட பேசுறப்ப இந்த மாதிரி ஹோட்டல் ஆரமிக்க போறேன் அந்த பக்கம் வந்தா கண்டிப்பா வரணும்னு ஒரு இன்விடேஷன் போட்டு வச்சா நல்லா இருக்கும். வாய் வார்த்தைல படிக்கிறத விட அனுபவம் பெருசு மாமியாரே. ஜாலியா அனுப்பி வைங்க உங்க மகன” பெரிய சொற்ப்பொழிவை முடித்துவைத்தாள் வைஷ்ணவி.
“அப்ப இங்க இருக்குற இந்த ஹோட்டல் வேலை எல்லாம் யார் பாத்துக்குவாங்க?” – மஹாலக்ஷ்மி
“அதுக்கு தான் நான் இருக்கேனே… அந்த நாய் சேகர் என்ன பண்ணாலும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி ஒழுங்கா வேலை வாங்கிட மாட்டேன்? அடுத்து உங்க வீட்டு கேட் பாக்க ஆள் வேணும், லைட் பாக்க ஆள் வேணும்னு கதை சொல்ல வேணாம் மாமியாரே”
அவள் பதிலில் சிரித்தவர், “சொல்லலைடி யம்மா… போதுமா?”
“ம்ம்ம் சரி சரி வரப்ப உங்க மகன நல்ல சென்ட் பாட்டில் வாங்கிட்டு வர சொல்லுங்க”
“நீயே அத சொல்லிக்கோ அவன்கிட்ட பேச சொல்லியா உனக்கு தரணும்?”
“உங்க மகன்கிட்ட நான் பேச மாட்டேன்” என்றவள் எழுந்து நின்று மஹாலக்ஷ்மி கையிலிருந்த கூடையையும் வாங்கிக்கொள்ள தரையில் கை ஊன்றி எழுந்தவர்,
“நீ பேச மாட்டேன்னு சொன்னா மட்டும் என்னால நம்ப முடியல வைஷு மா… அப்றம் உன்கிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்ல மறந்துட்டேன் பாரு… அத்தை அஸ்வினி நம்ம வீட்டுக்கு மருமகளா வர்றதுல உனக்கு விருப்பமா-னு என்கிட்ட இன்னைக்கு காலைல கேட்டாங்க. நான் பேச விருப்பம் இல்ல அத்தை நம்ம கார்த்தியோட குணத்துக்கு அந்த பொண்ணு சரியா வருமான்னு தெரியல்னு சொன்னேன். ஒடனே அத்தையும் அப்ப இனி இந்த பேச்சு வேணாம் மருமகளே-னு போய்ட்டாங்க”
வைஷ்ணவிக்கு பெருமையாய் இருந்தது தான் அன்று பற்ற வைத்த நெருப்பின் ஜுவாலை நன்றாக வேலை செய்துள்ளதாக எண்ணி உள்ளுக்குள் குதூகளித்தாள்.
“இனி கார்த்தி ஊருக்கு போனதும் பொறுமையா உன்ன பத்தி அவர்கிட்ட பேசி அப்றம் அத்தைகிட்ட பேசுறேன்” வெட்க சிரிப்புடன் சரி என்றவள் மன நிறைவுடன் வீட்டிற்கு வந்தாள்.
அடுத்து வந்த நாட்கள் வேகமாக செல்ல இன்னும் இரண்டு நாட்களில் கார்த்தி சவூதி செல்ல வேலைகள் எல்லாம் அந்த வீட்டில் நடந்தது. ஆறு மாதம் அங்கு இருந்தாலும் அங்கிருக்கும் நாட்கள் மொத்தமும் அவனுக்கு உண்பதற்கும் தாங்கும் இடமும் மொத்தம் இலவசம் என்றான பிறகு துணிகளை எடுத்து வைக்கவே கடந்த ஒரு நாட்களை கார்த்தி கடத்தியிருந்தான்.
சகோதரி ஒரு பெரிய பட்டிலையலையே அண்ணனானவிடம் கொடுத்திருக்க சிரிப்புடன் அதையும் வாங்கி வருவதாக கூறினான். ஆனால் வைஷ்ணவி அன்று இரவு கார்த்தியை மிரட்டி கைபேசியில் அழைக்க வைத்த நாளில் இருந்து இது வரை ஒரு முறை கூட அவனிடம் பேசவில்லை.
அன்றும் அவளே தூக்கம் வருவதாக கூறி சென்றுவிட, அவளது இந்த நடவடிக்கையை பார்த்த கார்த்திக்கு தான் ஆச்சிரியமாக போனது. என்ன பிடிவாதம், அழுத்தம் இந்த பெண்ணிடம் என்ற கோவம் வந்தாலும் அடுத்து அவள் செய்ததில் குழம்பி தான் போனான்.
இப்பொழுதெல்லாம் அவனே அவளை முடிந்த மட்டும் தள்ளியே வைத்தாலும் அவளும் வந்து அவனை சீண்டுவதில்லை ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. சைட்டில் கூட கார்த்தி இருந்தால் அவனை கண் எடுக்காமல் கண்களாலேயே ரசிப்பவள் அவன் பக்கமே போவதில்லை.
கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்தில் மழை அதிகம் பொழிவதால் கட்டிட வேலை தடைபட்டு போக வைஷ்ணவி, கார்த்தி இருவரும் அவரவர் வீட்டில் முடங்கி தான் போயினர். அமைதிக்கு பின் வரும் புயலோ என்று கூட கார்த்தி யோசித்துவிட்டான். அவன் கவனிக்காமல் போனது அவன் அவளை அதிகம் கண்காணித்தது.
வைஷ்ணவிக்கு அவனை கண்களில் கண்டால் போதும் அவனிடம் காதலை திணிக்கவும் விருப்பம் இல்லை, தன்னுடைய எண்ணங்களை அவனுள் விதைக்கவும் ஆசை எழவில்லை. அவனுடைய ஆராய்ச்சி பார்வை அவள் மேல் அதிகம் விழுந்ததை சிறு புன்னகையுடன் கடந்துவிட்டாள்.
“வைஷ்ணவி வீட்டுல தெண்டமா தானே இருக்க ரெண்டு சமையல் செய்ய வேண்டியது தானேடி… மாமியார் உன்ன நல்லா கொமட்டுலையே குத்துவாங்கடி அப்ப தெரியும் இந்த அம்மாவோட அருமை தெரியும்”
மழைக்கு சுட சுட இஞ்சி டீயும் வெங்காய போண்டாவும் உள்ளே சண்டித்தனம் செய்யாமல் செல்ல வைஷ்ணவிக்கு அதை ஊதி ஊதி சாப்பிட மட்டுமே வேலையாகி போனது.
“ஒரே ஆளா நான் எவ்ளோ தான் வேலை பாக்குறது? ஒரு துணி காய போடுறது இல்ல, பாத்திரம் விளக்குறது இல்ல, துணிக்கு சோப்பு கூட போட மாட்டிக்கிற. தோ இப்போ நீ சாப்புடுறதுக்கும் நான் தான் கடைக்கு போகணும். உன்ன பெத்ததுக்கு ரெண்டு கழுதையை பெத்து வளத்திருந்தா சுமையாவது கொறஞ்சிருக்கும்”
“இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்ல மம்மி ரெண்டு கழுத்தை வாங்கி தரவா அப்பாகிட்ட சொல்லி?” – வைஷ்ணவி
“எதுக்கு?? ஒண்ணுக்கே சோறு போட முடியல தெண்டமா இருக்கு. இதுல இன்னும் ரெண்டு எல்லாம் என்னால முடியாது”
மஹேஸ்வரி மகள் கையில் ஒரு கட்டைப்பையும் பணத்தையும் திணித்தவர், “அண்ணாச்சி கடைல மளிகை ஜாமான் வாங்கிட்டு வா. லிஸ்ட் பைக்குள்ள இருக்கு”
“மோவ் மழை பெய்யிது எப்படி போவேன்?”
“நடந்து போற எனக்கும் மழை பெய்யும். வண்டில தான் உன் அண்ணன் ரெயின்கோட் இருக்குலடி அத போட்டுக்கோ”
“மாட்டேன் என்னோட சின் சான் ரெயின்கோட் போட்டு தான் போவேன்”
முடிவாய் அன்னை கூறிவிட வேறு வழியே இல்லாமல் தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்து வீட்டை விட்டு சற்று தள்ளி இருக்கும் மளிகை கடைக்கு சென்றவள் லிஸ்டை அந்த கடைக்காரரிடம் கொடுத்து மழையை வேடிக்கை பார்த்து நின்றுவிட்டாள்.
மொத்தமும் இயற்கையோடு இணைந்து வாழும் அந்த பகுதியில் வீடுகளாகட்டும் கடைகளாகட்டும் எல்லாம் சற்று தள்ளி தள்ளி சுற்றிலும் ஒரு மரம் செடியாவது வைத்திருப்பார்கள். அப்படி தான் இந்த கடையும் சற்று வயல்கள் இருக்க கடைக்கு அருகில் ஓரிரு வீடுகள் மட்டும் தான் இருந்தது.
கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் வயல்களையும் அதை தாண்டி கம்பீரமாய் நிற்கும் அழகு மலைகளையும் கண்கொட்டாமல் ரசித்து நின்ற வைஷ்ணவி மனதில் அந்த குளிர் காற்றை தாண்டிய ஒரு இதம்.
அதை இன்னும் ரெட்டிப்பாக்க அந்த சமயம் மழையில் சொட்ட சொட்ட நனைந்து உடல் நடுங்க இரு சக்கர வாகனத்தை கடினப்பட்டு தள்ளியபடியே வந்து நின்றவன் கடைக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தி மக்கள் சிலர் நின்றிருந்த இடத்தில் தானும் வந்து நின்றான்.
அவன் கவனிக்க தவறியது அவனுக்கு பின்னால் நின்ற வைஷ்ணவியை. ஆனால் அவளுக்கு தான் உள்ளுக்குள் சிறகு இல்லாமல் பறந்த உணர்வு.
அலாதியான இன்பத்துடன் அவனது வெட வெடக்கும் உடலுக்கு பின்னால் நின்று அவனுக்கே உரிய வாசனையை அந்த ஈர உடையை தாண்டி முதல் முறை வைஷ்ணவி உணர உடல் மொத்தமும் நடுங்கியது. அந்த உணர்விலிருந்து மீள முடியாமல் அவனை விட்டு தள்ளி நின்றுவிட்டாள் பெண்ணவள். நேரம் கடக்க மழையின் தீவிரம் சிறிதும் குறையவில்லை.
கைபேசியும் வீட்டில் இருக்க வைஷ்ணவி நிம்மதியாக அவனையும் இயற்கையையும் ரசிப்பதில் மூழ்கி இருந்த சமயம் கார்த்தியின் கைபேசி ஒலித்தது.
“சொல்லுங்க ம்மா”
“…”
“இல்ல மா வாங்கிட்டேன். அந்த பக்கம் மழை இல்லனு நெனச்சு வந்தேன் இங்க நல்ல மழை. வண்டில பெட்ரோல் வேற தீந்துபோச்சு”
“…”
“சரி ம்மா மழைல நனைய மாட்டேன்” அன்னையின் அக்கறை உத்தரவில் கார்த்தி மெல்லிய சிரிப்போடு பேச, அவனின் அந்த சிரிப்பே அவளை இதமாகியது ஏதோ தன்னிடம் அவள் காதலில் பேசி சிரிப்பது போல்.
“…”
“வேணாம் ம்மா.. நானே மழை நின்னதும் வந்துடுவேன்”
“…”
“சரி ம்மா” என இணைப்பை துண்டித்தவனை பார்த்து தாம் ஏன் தன்னுடைய அன்னையிடம் இவ்வளவு நல்ல பிள்ளையாக இல்லை என்ற கேள்வி தான் எழுந்துகொண்டு இருந்தது வைஷ்ணவிக்கு.
தலையை எதார்த்தமாக கடையை சுற்றி திரும்பியவன் பார்வை வைஷ்ணவியோடு ஒரே நேர் கோட்டில் மோதி நிற்க அவளை அங்கு எதிர்பார்க்காத கார்த்தி அதிர்ச்சியில் நிற்க வைஷ்ணவியோ தான் அவனை கண் சிமிட்டாமல் பார்த்த பார்வையை பார்த்துவிட்டானோ என்ற பீதியில் வேகமாய் மீண்டும் மழையை பார்த்தாள்.
அவள் பார்வையை திருப்பவும் அவனும் வேறு பக்கம் பார்க்க வைஷ்ணவி தன்னுடைய வாகனத்தை எடுத்து செல்லும் வைஷ்ணவியையும் அவள் அணிந்திருந்த உரையையும் பார்த்த கார்த்திக்கு சிரிப்பு தான் வந்தது.
கார்த்தி பசியில் அங்கு இருந்த ஒரு சாக்லேட் ஒன்றை வாங்கி ருசிக்க, கடையில் இருந்த ஒரு சிலர் மழை விடுவதாக தெரியவில்லை என்று மலையோடு சென்றனர்.
கார்த்தி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரம் சென்று தான் நடந்து வந்து பெட்ரோலை வாங்க வேண்டும் அல்லது தந்தையை அழைக்க வேண்டும். எதற்கு அவருக்கு வீண் சிரமம் என்று மழை நிற்பதற்காக காத்திருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் வைஷ்ணவி வண்டி மீண்டும் கடையை நோக்கி வர அவளை பார்த்தவன் இப்பொழுதும் அமைதியாகவே இருக்க, “அண்ணே பொருள் எல்லாம் கட்டியாச்சா?”
“அப்பயே ஆச்சு வைஷ்ணவி. இந்தா ரசீதையும் உள்ளேயே தான் வச்சிருக்கேன்” என்றார்.
“அண்ணே ஒரு ஹெல்ப் அத மட்டும் வண்டில வக்கிரீங்களா?”
அவள் கேட்க அவர் யோசிக்காமல் எடுத்து வண்டியில் வைக்க அந்த மூட்டையை ஒரு பெரிய பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடியவள் வண்டியின் சீட்டை திறந்து தான் வாங்கி வந்த ஒரு பாட்டில் பெட்ரோலையும், சகோதரனின் ரெயின்கோட்டையும் விரைந்து சென்று கார்த்தியின் வாகனத்தில் வைத்து மீண்டும் மலைக்கு ஒதுங்குவது போல் கடைக்கு முன்னே சென்று நின்றுகொண்டாள்.
அவள் செய்வதை வியப்போடு பார்த்த கார்த்தி அவள் கூற வரும் செய்தியை உணர்ந்து முதலில் ரெயின் கோட் எடுத்து அணிந்தவன் பிறகு வண்டியில் பெட்ரோலை ஊற்றி வாகனத்தை உயிர்ப்பிக்க, அதற்காக காத்திருந்தவள் வேலை முடிந்த கணக்கில் தன்னுடைய வாகனத்தில் வீடு நோக்கி செல்ல அவளை தொடர்ந்து வந்த கார்த்தி வீட்டிற்குள் வைஷ்ணவி செல்லவும்,
“ஏங்க வைஷ்ணவி” மெல்லிய அழைப்போடு அவள் இல்லத்தின் வாசலில் வந்து தயக்கத்துடன் இருநூறு ரூபாய் தாளை அவளிடம் நீட்டினான்.
“எதுக்கு இது?” சற்று காட்டமாய் புருவத்தை உயர்த்தி வைஷ்ணவி கேட்க,
“பெட்ரோல்க்குங்க” என்றான் அவன்.
அவளோ தன்னுடைய பர்ஸை திறந்து ஐநூறு ரூபாய் தாளை அவனிடம் நீட்டினாள்.
அவள் செயல் விளங்காமல் விழித்தவனிடம், “அன்னைக்கு டீ வாங்கி தந்தது, கோவிலுக்கு கூட்டிட்டு போனது, டிபன், குற்றாலம் டூ செங்கோட்டை ஆட்டோ செலவே இல்லாம கூட்டிட்டு வந்ததுக்கு இத வாங்கிக்கோங்க, நானும் அத வாங்கிக்கிறேன்” அவன் கையிலிருந்த பணத்தை கண் காட்டி வைஷ்ணவி சொல்ல அவன் கை தானாக கீழ் இறங்கியது.
“ரெயின் கோட் நாளைக்கு தர்றேங்க” என்றவன் பாதி தூரம் சென்று மீண்டும் திரும்பி, “தேங்க்ஸ்” என்ற மெல்லிய புன்னகையோடு வீட்டிற்குள் மறைய வைஷ்ணவிக்கு பெரிய மூச்சே அப்பொழுது தான் வந்தது.
அவனிடம் எதையும் எதிர் பார்த்து செய்த காரியம் இல்லை, வாகனத்தை சிரமத்தோடு அவன் தள்ளி வந்ததும் அதன் எடையை தாங்காமல் கையை அவன் உதறியதையும் கவனித்து தான் தானே சென்று அவள் பெட்ரோல் வாங்கி வந்தது.
அதை தாண்டி அவனுக்கு தேவைப்படும் இடைவெளியை கொடுக்க முடிவெடுத்து தான் சில நாட்கள் அவனிடம் பேச கூட யோசித்தது. அதன் பலனாய் தான் வீட்டிற்குள் சென்றவனை கண் இமைக்காமல் பார்த்து நின்ற வைஷ்ணவிக்கு இன்ப பரிசாய் வாசலில் நின்று அவன் மீண்டும் ஒருமுறை அவளை பார்த்து சென்ற அந்த மந்திர பார்வை.
என்ன அந்த கண்கள் நினைத்தது என்று பகுத்தறியும் பகுத்தறிவு இல்லாமல் போனது அவள் பிழையா இல்லை பார்வையில் புதிர் வைத்து பேசும் அவன் கண்கள் மீது தவறா என கேள்வி கேட்டே ஓய்ந்தது அவள் உள்ளம்.
ஆனால் வைஷ்ணவி அவன் சிறு அசைவில் கூட சொக்கி கிடப்பவள் இன்று மீண்டும் மீண்டும் கிடைக்கும் அவன் பார்வையில் மொத்தமும் சொக்கி போய் நின்றுவிட்டாள்.
“யோவ் கடலைமிட்டாய்… நீ என்னமோ பண்றயா என்ன” அவளது செல்ல அதட்டல் அவன் சென்ற திசைக்கு வலிக்காமல் பயணித்தது.