கதிரவனின் வெளிச்சமும் இதமான வெப்பமும் பூமியை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான இளங்காலைப் பொழுது.
பறவைகள் இன்னிசை கச்சேரியுடன் தங்களின் அணிவகுப்பை கூட்டில் இருந்து உணவு தேடிச் செல்ல நடத்திக் கொண்டிருந்தன. புதிதாக பூத்த மலர்கள் தென்றல் பேச்சைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தன.
அலாரம் அடித்த முதல் சத்தத்திலே கண் விழித்தாள் சுஜிதா. உடனே அவள் கைகள் நீண்டு அலாரத்தை நிறுத்தியது. அந்த அலாரம் சத்தம் தூங்கிக் கொண்டிருந்த புவியின் காதிலும் விழுந்தது தான். ஆனால் அவனால் கண்களைத் சுத்தமாக திறக்க முடியவில்லை.
அலாரம் அடித்ததும் முதல் சத்தத்திலே இவளால் எப்படி எழ முடிகிறது என்ற கேள்வி வந்தது புவிக்கு. அதற்கு விடை கூட தெரியாமல் தூங்கிப் போனான்.
பாரிவேந்தன் மல்லிகா தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். அவர்களின் மூத்த மகன் தான் புவியரசன். வயது முப்பத்தி நான்கு. ‘வேந்தன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்’ என்ற கடையை பரணியுடன் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறான். பரணி அவனுக்கு மாமா முறை. அவனும் அந்த குடும்பத்தில் ஒருவன் தான்.
கடையில் உதவிக்கு ஆட்கள் இருந்தாலும் பொட்டலம் போடுவது முதல் கல்லா பெட்டி வரை அனைத்து வேலைகளையும் புவி தயங்காமல் செய்வான். நல்ல உழைப்பாளி, எல்லாரும் மதிக்கும் வகையில் இருக்கும் முதலாளி. மனதில் இருக்கும் அன்பைக் காட்ட அவனுக்கு தெரியவே செய்யாது. யாரிடமும் கலகலப்பாக பேசத் தெரியாதவன்.
அவனுக்கு அடுத்து இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்ததால் சிறு வயதிலே படிப்பை நிறுத்தி விட்டு குடும்பத்துக்காக தந்தையுடன் சேர்ந்து உழைத்தான்.
வயது முப்பத்தி நான்கு என்றாலும் இப்போது இருபத்தி ஒன்பது போன்ற தோற்றத்தில் தான் இருப்பான். அவனை பேரழகன் என்றும் சொல்லலாம் பேராண்மைக்காரன் என்றும் சொல்லலாம். பறந்து விரிந்த தோள்களும் நெடுநெடுவென இருக்கும் உயரமும் கட்டுமஸ்தான உடல் அமைப்பும் அவனுக்கு தனி கம்பீரத்தைக் கொடுத்தன.
கோதுமை நிறமும், ஒளி பொருந்திய கண்களும், கூரான நாசியும், சிவந்த அதரங்களும் பார்க்கும் பெண்களை வாயைப் பிளக்க வைக்கும் பேரழகன். அவனது மனைவி சுஜிதா. அவன் தான் வேண்டும் என்று பிடிவாதமாக அவனை மணந்தவள். அவர்களுக்கு பவித்ரா என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்கிறது. திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகி இருந்தாலும் இப்போது வரை அவள் மனதில் இருக்கும் காதல் அவனுக்கு தெரியாது. இனிமேலும் தெரியுமா என்று கூட தெரியாது.
சுஜிதா வயது இருபத்தி எட்டு. அனைவருக்கும் பிடிக்கும் என்ற வகையில் இருக்கும் அமைதியான பெண். பொறுமையின் சிகரம், காலையில் எழுந்ததில் இருந்து அவளது ஓட்டம் ஆரம்பமாகி விடும். இடையில் அவளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. காலை டீ, டிபன், குழந்தைக்கு ஊட்டுவது, மற்றவர்களுக்கு பரிமாறுவது, அனைவரின் துணிகளையும் ஒரே ஆளாக துவைத்து அதை மாடியில் சென்று காயப் போடுவது, மதிய சமையலுக்கு காய் கறிகளை அறிவது, சமையல் செய்வது, கணவனுக்கு கொடுத்து அனுப்புவது என்று அவள் வேலைகள் காலையில் ஆரம்பிக்கும்.
அதற்கு பிறகும் பெரியவர்களை உண்ண வைப்பது, பேருக்கு நாலு பருக்கையை வாயில் தள்ளுவது, காய்ந்த துணிகளை எடுத்து வந்து மடித்து அந்த அந்த இடத்தில் அடுக்கி வைப்பது என வேலை இருந்து கொண்டே இருக்கும். இதை முடிக்கும் போதே மாலை நான்கு ஆகி விடும்.
அதற்கு மேல் வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்கள் சாப்பிட ஏதாவது நொறுக்குத் தீணி செய்ய ஆரம்பிப்பாள். ஐந்து மணி ஆனதும் அனைவருக்கும் டீ போடுவது, பவித்ராவுக்கு சின்னதாக பாடம் சொல்லிக் கொடுப்பது, பின் அவளுக்கு கார்ட்டூன் சேனல் போட்டு அவளை டிவி பார்க்க வைத்து விட்டு இரவு உணவை சமைக்கச் செல்வது, கிடக்கும் பாத்திரங்களை கழுவி போடுவது, எல்லாருக்கும் பால் ஆற்றிக் கொடுப்பது, பிள்ளையை உறங்க வைப்பது என அவள் வேலைகள் நீண்டு கொண்டே இருக்கும்.
இரவு பதினொரு மணிக்கு தான் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வருவான் புவி. அவ்வளவு வேலையையும் செய்து சோர்ந்து இருப்பவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் குளிக்கச் செல்வான். பெருமூச்சோடு அவனுக்காக சூடான தோசை சுட ஆரம்பிப்பாள். அவன் குளித்து முடித்து வந்ததும் அவனுக்கு பரிமாறுவாள்.
“நீ சாப்பிட்டியா?”, என்று அவனும் கேட்க மாட்டான். “நான் சாப்பிடலை”, என்று அவளும் சொல்ல மாட்டாள். அவன் சாப்பிட்டு முடித்ததும் மிச்சம் இருக்கும் உணவை வயிறுக்குள் அடைத்து விட்டு கிடக்கும் பாத்திரங்களை விலக்கி வைப்பாள்.
ஓய்வுக்கு அவள் உடல் கெஞ்சும் தான். ஆனால் இப்போது அந்த பாத்திரங்களை விளக்கி வைக்க வில்லை என்றால் காலையில் அவளுக்கு எந்த வேலையும் ஓடாது. அதனாலேயே சிரமம் பார்க்காமல் செய்து விடுவாள். பன்னிரெண்டு மணிக்கு தான் படுக்கச் செல்வாள். அது வரை டிவி பார்த்துக் கொண்டிருக்கும் புவி அவள் தூங்கச் சென்ற பின்னர் தான் அறைக்குச் செல்வான். நடுவில் பவித்ரா படுத்திருக்க அவளுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் புவியும் சுஜியும் படுத்திருப்பார்கள். அன்று முழுவதும் வேலை செய்த அசதியில் இருவருக்குமே சீக்கிரம் உறக்கம் வந்து விடும்.
காலையில் மீண்டும் சுஜியின் வேலை ஆரம்பித்து விடும். பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்பாள். ஒரு நாளில் அவளுக்கு என்று ஐந்து நிமிடம் சேர்ந்தார்ப் போல அவள் செலவு செய்வது குளிப்பதும், தலைக்கு எண்ணைய் வைப்பதும் தான். தலையை பின்னி பின்னல் போட கூட அவளுக்கு நேரம் இருக்காது. என்ன தான் அவள் தலை முடியை கவனிக்காமல் விட்டாலும் அதுவோ வஞ்சனை இல்லாமல் வளர்ந்து காடு போல கிடந்தது.
அவள் ஒரு கடவுள் வடிவமைத்த மனித இயந்திரம். இந்த நான்கு வருடங்களில் பழுதடையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. எப்போது அது தன்னுடைய இயக்கத்தை நிறுத்துமோ? அது கடவுளுக்கு தான் வெளிச்சம். வேலை செய்வது கஷ்டமாக இருந்தாலும் சில நேரம் சாய்ந்து கொள்ள தோளைத் தேடும். மனது ஏமாற்றத்துடன் இறுகிக் கொள்ளும்.
பெற்றவர்கள் நடத்தி வைத்த திருமணம் தான் இவர்களுடையது. ஆனால் அவளைப் பொறுத்த வரை காதல் திருமணம். எல்லாருக்கும் போல் இயல்பாய் தொடங்கிய திருமண வாழ்க்கை எந்த நிமிடம் திசை மாறியது என்று அவளுக்கு தெரியாது. எதனால் இப்படி இருக்கிறோம் என்றும் அவளுக்கு தெரியாது. திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில் அவளுடைய முகம் பார்த்து புவி பேசியது மிக மிக குறைவு. உலகத்தில் ஐம்பது சதவீதம் பெண்கள் சூழ்நிலைக்கேற்ற படி தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சுஜியும் ஒருத்தி
அவனுக்கு ஏதாவது தேவை என்றால், எதையாவது கேட்க வேண்டும் என்றால் மட்டுமே அவளிடம் பேசுவான். ஒரு வேளை அவனுடைய மனதுக்கு பிடித்த பெண்ணாக அவள் இருந்திருந்தால் நன்றாக பேசியிருப்பானோ என்னவோ என்ற மிகப் பெரிய கேள்வி அவள் மனதில் பல முறை எழும். ஆனால் அதற்கு அவள் விடை தேடியதில்லை.
முதலில் சில பல ஏமாற்றங்கள் இருந்தாலும் இப்போது சுஜி அவனை இயல்பாக ஏற்க பழகியிருந்தாள். அவனுடைய முகம் பார்த்து அவனுடைய தேவை அறிந்து நடக்க பழகிக் கொண்டாள்.
அவன் மீது அவளுக்கு ஒரு காலத்தில் காதலும் மயக்கமும் அந்த அளவுக்கு இருந்தது. அதே காதல் இப்போது அவன் மீது இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது ஆனால் அவள் உலகம் அவனைச் சுற்றியும் குழந்தையைச் சுற்றியும் எப்போதோ சுழல ஆரம்பித்து விட்டது.
“இதை இப்படிச் செய்யாத, எத்தனை தடவை சொன்னாலும் கேக்குறது இல்லை”, என்று எப்போதும் அவளை கரித்துக் கொட்டும் மாமியாருக்கும் அவள் பழகிக் கொண்டாள். மாமியாருக்கு மகனையும் அந்த குடும்பத்தையும் தாங்க வேண்டும். அதற்காக மருமகளை வேலைக்காரி போல தான் எண்ணுவாள். அதுவும் சுஜிக்கு பழகிப் போன ஒன்று.
இந்த வாழ்க்கை அவளுக்கு பிடித்திருக்கிறதா என்ற கேள்வியை அவளிடம் கேட்டால் அதற்கு பதில் அவளுக்கு தெரியாது என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளும் அவன் அவளை ஆசையாக வெளியே அழைத்துச் சென்றது கிடையாது. அவளிடம் முகம் கொடுத்து பேசியது கிடையாது. சேலை, நகை, ஒரு முழம் பூ என வாங்கிக் கொடுத்தது கிடையாது. அவளுக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது என்று கூட அவனுக்கு தெரியாது.