அவளுடைய வீட்டில் வாங்கிக் கொடுப்பவைகளை தான் இப்போது வரை உபயோகப் படுத்துகிறாள். இவ்வளவு வருடங்கள் ஆன பிறகும் அவளுடைய பிறந்த வீட்டில் இருந்து தான் அவளுக்கு செய்கிறார்கள்.
எல்லாமே அவளுக்கு பழகிப் போன ஒன்று தான் என்றாலும் அவள் மனதில் சிறு வெற்றிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தைப் போக்க வேண்டிய அவளுடைய கணவனோ அவளை அந்த வீட்டில் இருக்கும் பொருள் போல தான் பாவித்தான்.
சில நேரம் அவனை நினைத்து அவளுக்கு சலிப்பு தட்டும். ஒரு அன்பான வார்த்தை இல்லை. அனுசரணையாக செய்கை இல்லை என்று ஏங்கிப் போவாள்.
வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் இது தான் புவியின் உடை. அவனை அதிகம் இந்த உடையில் தான் பார்க்கலாம். மாநிறத்தில் ஆறடி உயரத்தில் இருந்தவனுடைய கம்பீரம் எப்போதும் அவளை ஈர்க்க தான் செய்யும். ஆனால் அவளுடைய அழகு அவனை ஈர்க்க வேண்டுமே? அவள் அழகு என்று அவன் ஒரு முறையாவது சிந்தித்திருக்கிறானா என்று அவளுக்கு தெரியாது.
ஆனால் எப்போதும் அவன் நினைவு அவளுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். “இன்னைக்கு அவங்களுக்கு பிடிச்ச வத்த குழம்பு வச்சிருக்கேன். கூட கொஞ்சம் சாப்பிடுவாங்க?”, என்று தான் அவளது சிந்தனை போகும். இதுவும் காதலில் ஒரு விதம் தான் என்று அவளுக்கு யார் சொல்வது?
அவள் அந்த வீட்டில் வேலைக்காரி போல தான். போல என்று இல்லை. உண்மையிலே வேலைக்காரி தான். அதைப் பொறுத்துக் கொண்டாலும் அவன் பார்வை அவள் பக்கம் திரும்புவதே இல்லை என்பதை தான் அவளால் தாங்க முடியாது. வீட்டில் இருந்த மற்றவர்களிடம் இருந்து அவளுக்கு மரியாதையும் கிடைப்பதில்லை.
அவனும் மனைவிக்கு மரியாதையை வாங்கித் தந்ததில்லை. அவன் அவளை மதித்தால் தானே மற்றவர்கள் மதிப்பதற்கு? ஒரு சன்னியாச முனிவர் போல தான் அவன் வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் புவியும் அப்படி கிடையாது. அனைவரிடமும் அளவாக பேசுபவன் இப்போதெல்லாம் அமைதியின் சிகரமாகி விட்டான். அவளிடம் மட்டும் அல்ல. யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு அவனை வதைத்துக் கொண்டிருந்தது.
மனைவியிடம் மனது விட்டு பேசியிருந்தால் அது சரியாகி இருக்குமோ என்னவோ? ஆனால் அவளை நெருங்கி பேச அவனுக்குள் இருந்த தயக்கம் இப்போது வரை அப்படியே தான் இருக்கிறது.
புவியின் மூத்த தங்கை ரோஹினியாகட்டும், அவனுடைய தம்பி மகேஷ் ஆகட்டும் இப்போது வரை சுஜியை அண்ணனின் மனைவி என்றோ, அண்ணி என்றோ நினைக்க மாட்டார்கள். அப்படி அழைக்கவும் மாட்டார்கள்.
“ஏய்”, என்று தான் பெரும்பாலும் அவளை அழைப்பது. எதற்காக இப்படி ஒரு திருமணத்திற்கு சம்மதம் சொன்னோம் என்று பல முறை நினைப்பாள் சுஜி? அவள் சம்மதம் சொன்னதுக்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அவள் அடி மனதில் இருந்த காதல் அதைச் சொல்ல வைத்தது.
படுக்கை அறையில் கூட இருவரும் தனித்தனி தான். அவர்களுடைய அறையில் இருந்த பெரிய கட்டிலில் அவன் படுத்திருப்பான். அவன் அருகில் அவர்களது குழந்தை. குழந்தைக்கு மறுபுறம் அவள். இது தான் அவர்கள் வாழ்க்கை. குழந்தை உருவானது தனிக் கதை. குழந்தை வருவதற்கு முன் இருவருக்கும் இடையே ஒரு ஆள் படுக்கும் அளவுக்கு இடைவெளி இருக்கும்.
அன்று இரவு அடுப்படியை ஒதுங்க வைத்து விட்டு அவள் அறைக்குள் வரும் போது மணி இரவு பதினொன்று முப்பது. எப்போதும் அந்நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் புவி அன்று சீக்கிரமே உறங்கி விட்டான். காலை ஐந்து மணிக்கு சுஜி எழுந்து விட வேண்டும் என்பதால் கட்டிலில் படுக்கப் போனாள். தலையைத் திருப்பி தூங்கும் கணவனையும் மகளையும் பார்த்தாள்.
அப்பாவின் மீது காலைப் போட்டு படுத்திருந்தது அந்த சின்ன சிட்டு. அவன் கைகள் அணைவாக மகளைப் பிடித்திருந்தது. அதை பார்த்து புன்னகை புரிந்தவள் கணவன் அருகில் வந்தாள். விலகி இருந்த போர்வையை அவனுக்கு சரி செய்து விட்டு அவன் முகம் பார்த்தாள்.
ஒரு வித அழுத்தத்துடன் படுத்திருந்தான். அவனுடைய முன்னுச்சி முடியைக் கலைக்க ஆசை எழுந்தது. அவனது ரோமம் படர்ந்த மார்பில் தலை சாய்ந்து உறங்க ஆசை வந்தது. ஒரே ஒரு நாளைத் தவிர அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவனது கன்னத்திலாவது முத்தம் கொடுக்க வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டு மறுபக்கம் வந்து படுத்துக் கொண்டாள். அந்த நினைப்பில் அவளுக்கே படபடப்பாக இருந்தது. அவனைப் பற்றி எண்ணிக் கொண்டே சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
அடுத்த நாள் காலை எப்போதும் போல் அவள் வேலைகள் ஆரம்பித்தன. எழுந்து வெளியே வந்தவள் முத்தம் தெளித்து பெருக்கி விட்டு குளிக்கச் சென்றாள்.
அவள் குளித்து முடித்து வரும் போது பால்காரன் வந்து விட்டான். பின் பாலை காய்த்து தனியே எடுத்து வைத்தாள்.
இனி ஒவ்வொருவரும் எழுந்து கொள்ளும் போது அவர்களுக்கு ஏற்றவாறு பூஸ்டோ, புருவோ, மிளகு மஞ்சள் போட்ட பாலோ கொடுக்க வேண்டும்.
ஒரு அடுப்பில் பருப்பை வேக வைத்தவள் மற்றொரு அடுப்பில் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் காயை போட்டு வதக்கினாள். சிறிது நேரத்தில் சாம்பார் தயாரானது. பின் தேங்காய் சட்னி கொஞ்சம், தக்காளிச் சட்னி கொஞ்சம் வைத்தாள். இதை முடிக்கும் போது மணி ஏழு ஆகியிருந்தது.
அப்போது குளித்து முடித்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான் புவியரசன்.
அவன் உட்கார்ந்த மறு நிமிடம் அவன் முன் தட்டை வைத்து அதில் நான்கு இட்லியை வைத்து கெட்டியாக இருந்த இரண்டு சட்னிகளை வைத்தவள் சாம்பாரை அவன் முன்னே நகர்த்தி வைத்தாள்.
மற்றவர்கள் போல சாம்பாரை கலக்கி எல்லாம் ஊற்ற மாட்டான். அவனுக்கு தண்ணீராக இருக்க வேண்டும் என்பதால் மேலோட்டமாக எடுத்துக் கொள்வான். அவன் தேவை போல எடுத்துக்கட்டும் என்று எண்ணி வைத்து விட்டாள்.
இதெல்லாம் இத்தனை நாட்களில் அவனைப் பற்றி அவள் புரிந்து வைத்திருந்தவைகள். அசால்ட்க்காக அவன் இட்லிகளை உள்ளே தள்ளிக் கொண்டிருக்க அவன் தட்டில் ஒரு இட்லி மட்டும் மீதம் இருக்கும் போது மேலும் இரண்டு இட்லி வைத்தாள்.
அதையும் அவன் சாப்பிட்டு முடிக்க அதற்கு மேல் அவள் வைக்க வில்லை. அவளுக்கு தான் தெரியுமே? அவன் அளவு அவ்வளவு தான் என்று.
தட்டை அப்படியே வைத்து விட்டு அவன் கை கழுவ எழுந்து செல்ல அந்த தட்டை எடுத்துக் கொண்டு அடுப்படிக்குச் சென்றாள். அவன் கை கழுவி விட்டு வெளியே வரும் போது அவன் மீது மோதி விலகி நின்றாள்.
அதற்கு அவளும் “சாரி”, என்று சொல்ல வில்லை, அவனும் “பாத்து வர மாட்டியா?”, என்று கேட்க வில்லை. நிற்கும் அவளிடம் இருந்து விலகி அவன் வெளியே செல்ல இவளும் சமையல் அறைக்கே சென்று விட்டாள்.
தங்களின் அறைக்குள் சென்ற புவி கிளம்பி முடித்து பர்சை எடுக்க அப்போது தான் அவனின் தேவதை லேசாக அசைந்தாள். அதைக் கண்டவன் புன்னகையுடனே அவளை நெருங்கி “அம்மு குட்டி எந்திச்சிட்டீங்களா?”, என்று கேட்டான்.
“அப்பா”, என்ற படி அவள் மழலை மொழியில் அழைக்க அந்த குட்டிப் பூச்செண்டை அப்படியே கையில் தூக்கி வைத்துக் கொண்டான். அவன் சட்டை கசங்கி விடுமே என்றெல்லாம் அவனுக்கு எண்ணமே இல்லை.
அவன் சட்டைப் பையில் இருந்த பேனாவை கையில் எடுத்து பார்த்தவள் “அம்மா”, என்று அன்னையைத் தேட அவள் தாயை தேடுவது புரிந்து “அம்மா கிட்ட போகலாமா டா குட்டி?”, என்று கேட்டான்.
“ம்ம், அம்மா”, என்றாள் அவள்.
“சரி போகலாம்”, என்று சொல்லி அவன் தூக்கி கொண்டு வெளியே வர அவர்களைக் கண்டதும் அவசரமாக அவர்களை நெருங்கிய சுஜி “பாப்பு, எத்தனை தடவை சொல்லிருக்கேன். அப்பா கிளம்பும் போது தூக்கச் சொல்லக் கூடாதுன்னு? சட்டை கசங்குது பாரு”, என்று சொல்லிக் கொண்டே அவளை வாங்க கையை நீட்டினாள்.
“என் அப்பாவை நான் தூக்கச் சொல்லுவேன்னு சொல்லு அம்மு”, என்று மகளைப் பார்த்து சொன்னவன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டே அவளிடம் கொடுத்தான்.
குழந்தையை வாங்கும் போது அவளுடைய கைகள் அவன் மேல் உரசியது தான். ஆனால் அதைப் பற்றிய எண்ணம் இருவருக்குமே இல்லை..